Tuesday, April 22, 2008

Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

Savithri Kannan Article: ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

ராஜீவ் கொலைவழக்கு; மறைக்கப்பட்ட உண்மைகளும், மறுதலிக்கப்படும் உரிமைகளும்

-சாவித்திரிகண்ணன்

''ரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இது''

''ஈழப்பிரச்சினைக்கு ஒரு விடிவு நெருங்கிவிட்டது.''

''ஈழம் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரப்போகிறது,''

''உலக வரலாற்றிலேயே இல்லாத அதிசய நிகழ்வு''

இப்படி ஊடகங்களால் ஊதி பூதாகரப்படுத்தப்பட்டது பிரியங்கா-நளினி சந்தித்த நிகழ்வு. பிரியங்கா இந்தியாவின் பிரதமருமல்ல, நளினி இலங்கையின் அதிபருமல்ல. ஒரு அமைச்சராகவோ, குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ கூட இல்லாத ஒரு பெண்மணி, தன் தந்தையின் கொலை தொடர்பாக கைதாகி சிறையிலிருக்கும் மற்றொரு பெண்ணை சந்தித்ததை சரித்திரத்தையே மாற்றப்போகும் சாகஸச் செய்தியாக்கின ஊடகங்கள்!!

விற்பனை போட்டிகளால் விவஸ்தையை பறிகொடுத்தன ஊடகங்கள்!

நேரு குடும்பத்தின் வாரிசு என்பதைத் தவிர எந்த அரசு பதவியிலும், இயக்கப் பொறுப்பிலும் இல்லாத பிரியங்காவுக்கு ஊடகங்கள் தந்த முக்கியத்துவம் இன்னும் மன்னர்கால அடிமை மனோபாவங்களிலேயே மக்களை ஆழ்த்திவைக்க ஊடகங்கள் காட்டும் ஆர்வத்தை விளக்குவதாகவே இருந்தது.

நளினியின் ஆயுள் தண்டனை என்பது பத்து ஆண்டுகளைக் கடந்து 17ஆண்டுகளாக சட்டத்திற்கு புறம்பாக அரசியல் காரணங்களுக்காக நீடிக்கப்பட்டு வருவது பற்றியோ, அவருடன் கைதாகி விடுதலையான அவருடைய தாயும், சகோதரரும் கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை வீடுகளில் கூட வாழ உரிமையின்றி அலைகழிக்கப்டுகிறது பற்றியோ இதுநாள் வரை சிறிதும் அக்கரை காட்டாத ஊடகங்கள் இப்போது நளினி-பிரியங்கா சந்திப்பையடுத்து நளினியை உலகத்தலைவிகளில் ஒருவராக சித்தரிக்கும் அளவுக்கு சென்றுவிட்டன. அவரது குடும்பத்தாரை வலைவீசித் தேடத்தொடங்கினர்.

கிடைத்த ஓரிரு செய்திகளில் நூல்பிடித்து கற்பனைகளை விரியவிட்டு விருப்பப்படி கதை அளந்தனர். ஊடகங்களை பொறுத்தவரை ஊகங்களை செய்தியாக்கி ஒரு வார கால பரபரப்பு செய்துவிட்டு ஓய்ந்து விடுகின்றன.

ஆனால் இந்த நேரத்தில் நாம் சில உண்மைகளை உரக்கப்பேசுவது உகந்ததாயிருக்கும் என நினைக்கிறேன்.

பொதுவாக மக்கள் பலரிடமும் நிலவும் சந்தேகங்கள் சில;

''அவ்வளவு பெரிய தலைவர் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளிகளான இவர்களுக்கு இன்னும் ஏன் தூக்குதண்டனையை நிறைவேற்றவில்லை?''

''உடனே தூக்கில் போடாமல் தாமதப்படுத்துவதன் காரணம் என்ன?''

''ஒரு வேளை காங்கிரஸ் கட்சியிலேயே வேறு சிலரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா?'' ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு சுமார் 17 ஆண்டுகளாகியும் இதுபோன்ற சில கேள்விகளுக்கு மக்களிடம் பதிலில்லை.

இதற்கு பதில் வேண்டுமெனில் நாம் வழக்கு பற்றிய சில உண்மைகளை பார்க்க வேண்டும்

ராஜீவ்காந்தியை மனிதவெடிகுண்டாகச் சென்று கொன்றது தனு. அவரை இயக்கியவர் சிவராசன், அவர்களோடு இருந்த இன்னொரு பெண் சுபா. இந்த மூவரையும் பிடித்து விசாரிக்க முடியவில்லை.

அவர்கள் சயனைடு அருந்தி இறந்துவிட்டனர். தனுவும், சிவராசனும், சுபாவும் உயிர்போனாலும் பரவாயில்லையென்று சில உண்மைகளை தங்களோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இவர்களைத் தவிர ராஜீவ் கொலைக்கு சூத்திரதாரியாக இருந்திருக்கலாம் என்று சி.பி.ஐ அறிவித்த பிராபாகரன் , பொட்டு அம்மான் உளிளிட்ட பனிரெண்டு பேர் பிடிபடவில்லை.

ஆக, ராஜீவ் கொலையின் மிக முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டவர்களை சி.பி.ஐ யால் நெருங்கக் கூட முடியவில்லை. இந்நிலையில் பிடிப்பட்ட 26 பேரை விசாரித்த வகையில் இவர்கள் மேற்படி இறந்தவர்கள் மற்றும் பிடிபடாதவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதை உறுதியாகச் சொல்லமுடிந்ததேயன்றி கொலையில் சம்பந்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம்.

கொல்லப்பட்டவரோ நாட்டின் முன்னாள் பிரதமர் . அதுவும் நேரு குடும்பததிலிருந்து வந்த தலைவர். அவரை கொன்ற வர்களையும் உயிரோடு பிடிக்கமுடியவில்லை. அதற்கு சூத்திரதாரியானவர்களாக கருதப்படுபவர்களையும் நெருங்க முடியவில்லை என்ற சூழலில் இந்த வழக்கு விசாரணை 1991 தொடங்கி 98வரை நடந்தது.

''என்னப்பா இது? இன்னும் விசாரணை, விசாரணை என்று தனிக்கோர்டில் ரகசியமாக நடந்து கொண்டிருக்கிறது? ஆனால் தீர்ப்பு வந்த பாடில்லை?'' என இந்தியா முழுமையிலும் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து 1998-ஜனவரி 28-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதில் ஒரே போடாக' 'கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்குமே தூக்கு தண்டனை' என்று தீர்ப்பாகியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு தவறானது என சுட்டிக்காட்டப்பட்டு 19பேர் விடுதலையானார்கள்.

மற்ற ஏழுபேரில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஆகியோருக்கு தூக்கு என்றும் , ரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை என்றும் அறிவிக்கபட்டது. (பிறகு நளினியின் தூக்குதண்டனை, சோனியாவின் சிபாரிசினால், தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநரால் ஆயுள் தண்டணையாக்கப்பட்டது) இதிலும் கூட அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட சான்றுகளின் படியும், சாட்சிகளின் படியும் இவர்களில் யாருக்குமே ''ராஜீவ்காந்தியை கொல்ல ஒரு சதி தீட்டப்பட்டிருக்கிறது ''என்பது இறுதி வரை தெரியவில்லை... என்பது தான் உறுதிப்படுகிறது!

பிறகு ஏன் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு எப்படி எந்த வழிமுறையில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கினாலே போதுமானது என கருதுகிறேன். மேற்படி தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் தடாசட்டத்தின்படி கைதாகி, தடா சட்டத்தின் படி ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

தடா சட்டத்தின்படி குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் ஒன்றை மட்டுமே வைத்து தீர்ப்பு கூறிவிடலாம்! சாட்சிகள் தேவையில்லை! குற்றத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை. மாறாக தங்களை நிரபராதி என நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு.

எனவே இந்த சட்ட வழிமுறைகளின் படி என்ன நடந்திருக்கிறது என்பதை நாம் யூகித்துவிடமுடியும்! குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் காவல்துறை நிர்ப்ந்தம் செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்டையாக வைத்து தான் உச்சநீதிம்னறம் மேற்படி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆழுள் தண்டனைகளை அறிவித்தது.

இதே நீதிமன்றம், 'ராஜீவ்காந்தி கொலை என்பது பயங்கரவாதச் செயலாக கருதமுடியாது' என்ற கருத்தையும் கூறியுள்ளது. இந்த வகையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தனிப்பட்ட ஒரு பெண் ஒரு சிலரோடு சேர்ந்து செய்த பழிவாங்கும் முயற்சியாகவும் இதனை கருதலாம் என நாம் பொருள் கொள்ள முடியும்.

ஆனால் இந்த கொலைக்குப் பின்னணியில் விடுதலைபுலிகள் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை இந்திய அரசு, புலானாய்வுத்துறை, நீதிமன்றம் போன்றவை உறுதியாக நம்பின. எனவே இப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதின் மூலம் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துவதாக தீர்ப்பு அமைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் மீது ஒரு அழுத்தமான சந்தேகம் கொண்டுள்ளது.'விடுதலைப்புலிகள் இலங்கையைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கினால், அதன் எதிர்வினையாக தழிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சக்திகள் தனித்தமிழ்நாடு கோரக்கூடும். அதற்கு விடுதலைப்புலிகளும் உதவக்கூடும்' என்பதே அது! இந்திய அரசை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதமாகிவிட்டது இந்தி சந்தேகம்.

இந்திய அரசின் பார்வையில் விடுதலைப்புலிகள் இயக்கம் வில்லனாகிப்போனது. இந்தச்சூழலில் ராஜீவ் கொலைக்கான உண்மையான குற்றவாளிகள் இறந்து விட்ட நிலையில், ''யாருக்குமே தண்டனையில்லை?'' என்ன தான் விசாரணை செய்தீர்கள் ?'' என்ற கேள்வியைத் தவிர்க்கவே இந்த ஏழு பேருக்கும் தூக்கு தண்டனையும், ஆயுள் தணடனையும் வலிந்து தரப்பட்டுள்ளது.

மேலும் ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசின் வெவ்வேறு புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை என்பதும், உண்மையை கண்டறிவதற்கான ஒத்திசைவை உருவாக்க முடியவில்லை என்பதும் மற்றொரு மறுக்க முடியாத உண்மை!

இந்த சூழலில் தான் ஏழுபேர் ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சட்டத்திற்கு அப்பபாற்பட்டு, மனித தார்மீக நெறிமுறைகளுக்கு முரணாக பதினேழு ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் வாடி வதங்குவது கொடுமையிலும் கொடுமையாகும். தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த நிலையில் இன்றா?நாளையா? என்று தெரியாமல் மரணபயத்திலேயே ஆழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் நிலையோ கொடுங்கோன்மையின் உச்ச பட்சமாகும். இவர்களுக்காக இந்தியா முழுமையிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கொடுக்கும் குரல்கள், முயற்சிகள் யாராலும் பொருட்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த உண்மைகளை வெளிப்படுத்தவோ, ஒத்துகொள்ளவோ இந்திய அரசியலில் ஒரு இணக்கமான சூழல் இல்லை.

விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டி அரசியலைக் காட்டி தி.மு.க வை மிரட்டுவதற்கு தனக்கு கிடைத்துள்ள சிறந்த ஆயுதமாக ராஜீவ் கொலை வழக்கை அ.தி.மு.க கையாள்கிறது. "சில யதார்த்தமான உண்மைகளைப் பேசினால் விடுதலைப் புலிகள் ஆதரவு சாயம் பூசப்பட்டுவிடுவோமோ..." என்ற பயம் தி.மு.கவிற்கு!

"ராஜீவ்காந்தி குடும்பத்தின் மீதுள்ள விசுவாசத்தை பறைசாற்றுவதற்கு அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படட்டவர்களை விடுதலைப் புலிகளை தீவிரமாக எதிர்கக வேண்டும்" என்ற ஒற்றை கொள்கை தவிர ஒன்று மறியாத தமிழக காங்கிரஸ்..

"இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்களில் பொங்கிஎழுவது, அதன் வழி அரசியல் ஆதாயம் தேடுவது..." என்பதைத் தவிர வேறு விவரங்களில் அக்கரையில்லாத பாஜ.க!

ஆக, கட்சிகளும், பரப்பரப்பை மட்டுமே செய்தியாகும் ஊடகமனோபாவமும் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் உண்மைகளை மக்கள் உணர்வதற்கு பெரும் தடையாகிவிட்டன. இநதச் சூழலில் தடுக்கப்பட்ட உண்மைகளை தானே முன்முயற்சி எடுத்து கண்டறியும் நோக்கத்துடன் பிரியங்கா, நளினியைச் சந்தித்திருக்க கூடும் என்று யூகிக்கலாம் அவ்வளவே!

ஒரு வேளை பிரியங்கா பல யதார்த்தங்களை, உண்மைகளை தரிசிக்க நேர்ந்தாலும் கூட ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட அரசியல் மாயையை கலைக்கும் விதத்தில் அதை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வாரா என்பது சந்தேகம் தான்!

Saturday, April 5, 2008

பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்

-சாவித்திரி கண்ணன்

இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா?

ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும் நிர்வாக வசதிற்கேற்ப ஐந்தாக பிரிக்கலாம் என்ற திட்டத்தை ஆதரித்தார்.

அதன்படி இந்தியாவை வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்தியபகுதி, தட்சிணப்பிரதேசம் என ஐந்தாக பிரிப்பது பலவகைகளிலும் அனுகூலமாயிருக்கும் என்றார்.

ஆனால் இந்தியா முழுக்க அதிகாரத்திற்காக தவம் கிடந்த அரசியல்வாதிகளும், மொழிஉணர்வாளர்களும் மொழிவழிமாநிலம் தேவையென்று பெரும்போரட்டத்தில் இறங்கினர்.

வங்கம்,வங்க மக்களுக்கே,

பஞ்சாப் பஞ்சாபியருக்கே,

ஆந்திரா தெலுங்கர்களுக்கே,

என்ற குரல்கள் தீவிரமடைந்தபோது நேரு, ''மொழி வழி மாநில கோரிக்கையாளர்களுடன் தெருச்சண்டைக்கும் தயார்'' என்றார். தமிழகத்திலும் ம.பொ.சி போன்றவர்கள் காங்கிரஸிற்குள்ளேயே தீவிரமாக மொழிவழி மகாணத்திற்காக அணிதிரட்டியபோது காமராஜரும், ராஜாஜியும் அதனை எதிர்த்தனர்.

அன்றைய சென்னை ராஜதானியிலே ஆந்திராவின் பெரும்பகுதிகளும், மலையாள பிரதேசங்களும், கர்நாடகாவின் கணிசமான பகுதிகளும் இருந்தன.''அந்த நிலை அப்படியே தொடர்ந்திருக்க கூடாதா?'' என்று வரலாற்றை திரும்பி பார்த்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

மொழிவழி மாநில பிரிவினைக்கு உடன்பட்டதால் சுதந்திரமடைந்த பின்பு சுமார் பத்தாண்டுகள் எல்லை பிரச்சினைகளுக்கே எல்லா ஆற்றலும், கவனமும் வீணடிக்கப்பட்டது.

அடுத்ததாக 60களில் தொடங்கி ஆற்று நீர் பிரச்சினை அல்லோலகலப்படுகிறது. இது இன்றும் தீர்ந்த பாடில்லை.

முல்லை பெரியாறு பிரச்சினை வட தமிழகத்தை பாலைவணமாக்கி கொண்டுள்ளது. காவேரி பிரச்சினையோ தீர்வுக்கே உட்படாமல் திசைமாறிப் பயணப்பட்டுவிட்டது.

ஒகேனக்கல் தண்ணீரில் கூட்டுக்கூடிநீர்திட்டம் என்பது கர்நாடகம் நமக்களிக்கும் கவேரி தண்ணீரை கடலில் வீணடிப்பதற்கு மாற்றாக குடிதண்ணீருக்குப் பயன்படுத்தும் திட்டம் தான்!

பெரும்மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலெல்லாம் தமிழகத்திற்கு கிடைக்கும் காவேரி நீரில் கணிசமான அளவு கடலில் வீணாகிறது. ஏற்கெனவே திருச்சி, தஞ்சை போன்ற மாவட்ட மக்களுக்கெல்லாம் காவேரி நீரே குடிநீராகி தாகம் தீர்த்து கொண்டுள்ளது.

வறட்சியில் வாடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு இப்போது 1334 கோடியில் திட்டமிட்டிருக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பது முப்பதாண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருக்கவேண்டிய ஒன்றாகும்!

இப்போது தமிழகத்தின் தலையாய பிரச்சினையே பக்கத்து மாநிலங்கள் காட்டும் பகை உணர்வை சமாளிப்பதாகிவிடட்டது.

தேசிய இனங்குளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கேட்க முடிந்தவர்கள் அதற்கேற்ப தங்களை தகுதிபடுத்திக்கொள்ளவில்லை.

''சுதந்திரம் பெறுவதற்கே இந்தியர்களுக்கு இன்னும் தகுதிபிறக்கவில்லை...'' என்று 1947-ல் அறுதியிட்டு சொன்னாரே பெரியார் ஒருவகையில் அது சரிதானோ என்றும் நினைக்கத்தோன்றுகிறது.

''என்னிடம் அனுமதி கேட்டு ஏன் செயல்படவில்லை'' என்கிறது கர்நாடக தரப்பு.

''1998-ஆம் ஆண்டு பெங்களுரு குடிநீர் திட்டம் தயாரானபோதே தமிழகமும் தன்பங்குக்கு காவேரி நீரில் குடிநீர்திட்டங்களை செயல் படுத்திக்கொள்ளலாம் என இரு மாநிலமும், மத்திய அரசும் இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே!'' என்பது தமிழகத்தின் வாதம்!

மேலும் ஒகேனக்கல் என்பது தமிழகத்திற்கானது என்று சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்ளப்பட்டு இதுநாள் வரை உரிமை அனுபவித்து வரும்சூழலில் ஓட்டு அரசியல் இந்தியதேசிய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும் வகையில் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

முதலில் தேர்தல்கள் முக்கியமா? தேசியம் முக்கியமா? என்று தேசிய கட்சிகள் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் நாட்டுக்கு நல்லது.

கர்நாடத்தில் ஒருவேஷம், தமிழகத்தில் ஒருவேஷம் என்று போட்டுக் கொண்டு இனியும் காலந்தள்ள முடியாது.

2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதல்வர் தரம்சிங் ஒகேனக்கல் பிரச்சினையை கையில் எடுத்தார். தேர்தல் முடிந்ததும் கைவிட்டார். இப்போது பா.ஜ.கவின் எடியூரப்பாவால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

'தமிழர்மீது துவேஷம்' என்பது கர்நாடக அரசியலில் கதாநாயக அந்தஸ்து கோரும் அரசியல்வாதிகளால் கனல் மூட்டிவளர்க்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு தமிழகத்திலிருந்து வரும் பேருந்துகளை அடித்துநொறுக்குவது, தமிழ்திரைப்படங்கள் ஓடும் திரையரங்குகளை தாக்குவது, தமிழ் தினசரி அலுவலகங்களை தாக்குவது, தமிழ்சங்கத்தை தாக்குவது, தமிழ்சேனல்களை முடக்குவது என தறுதலையாய் தாண்டவமாடுகிறது.

இதன் எதிர்வினை தமிழகத்திலும் ஆரம்பித்துவிட்டது. கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் சில ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள்ளன.

கன்னடபள்ளிகள் மீதான தாக்குதல்,கன்னட சேனங்களின் தடை, தமிழ்திரைப்பட கலைஞர்கள் ஒருநாள் உண்ணாவிரதம் போன்றவற்றால் பரஸ்பர பகை உணச்சிகளே மேலோங்குகின்றன.

ஆனால் இப்போது நாம் திட்டவட்டமாக ஒரு தீர்வை எடுத்தாக வேண்டும். தேசியத்தை கட்டிக்காக்க முடியாவிட்டால் அந்த தேசிய கட்சிகளில் தமிழர்கள் அங்கத்தினர்களாக தொடர்வதில் அர்த்தம் தான் என்ன?

மார்ச் 20ந் தேதி எடியூரப்பா ஒகேனக்கல் வந்து பிரச்சினை ஏற்படுத்திய போது, ''அவரை சந்தித்து உண்மை நிலையை விளக்குவோம் ''என்ற தமிழக பா.ஜ.க வினரால் இன்றுவரை அதை செயல்படுத்தமுடியவில்லை

அகில இந்திய தலைமையும் இந்த அநியாயத்தை வேடிக்கைபார்க்கிறது. அதேபோல் திமிழககாங்கிரசார் தமிழக சட்டமன்றத்திலும் பத்திரிக்கைகளிலும் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிகின்றதேயன்றி கர்நாக காங்கிரஸாரிடமோ , டெல்லி தலைமையிடமோ உண்மைகளை உரத்துச்சொல்ல முடியல்லை.

இது தான் கம்யூனிஸ்டுகளின் நிலைமையும்!

அரசியல் பிழைப்பாகி போய்விட்டது என்றால், அரசியல்வாதிகளிடமிருந்து பிழைத்துக் கொள்வது பற்றி மக்கள் யோசிக்கவேண்டியதாகிவிடும்

Saturday, March 22, 2008

ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!

- சாவித்திரி கண்ணன்

அரசாங்கமே அறிவித்துவிட்டது.

ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதாக! இது உண்மையாகக் கூட இருக்கலாம்! ஆனால் ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசின் மரியாதைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சர்வ உண்மையாகும். மார்ச் 20ந்தேதி குமுதம் ரிப்போர்ட்டரில் புஷ்கின் ராஜ்குமார் எழுதிய கட்டுரை நடிகர் ரஜினிகாந்த் திருவள்ளுர் மாவட்டம் ஆரணிபகுதியில் கன்னிகைபேர் கிராமத்தில் சுமார் 9 ஏக்கர் நிலத்தை சந்தை மதிப்புபடி சுமார் இரண்டேகால் கோடிக்கு வாங்கியதாகவும், ஆனால் பதிவுகட்டணம் கட்டும் போது கிட்டத்தட்ட அதில் பங்கில் ஒரு பங்கையே நிலத்தின் மதிப்பீடாக காண்பித்து மிகக்குறைந்த பதிவுகட்டணத்தை கட்டியதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் விதிமுறைகளுக்கு மாறாக பதிவுத்துறை அதிகாரியே ரஜினிகாந்த் வீட்டிற்குச்சென்று பதிவு செய்து விட்டு ஆனால் ரஜினிகாந்த் நேரடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் வந்து கையெழுத்து போட்டதாக பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குமுதம் ரிப்போர்ட்டர் சுட்டிக்காட்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து இச்செய்தி பல தினசரிகளிலும் வெளியானது. ஆகவே இப்பிரச்சனையில் விசாரணை செய்து உண்மையறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தப்பட்டதாகவே தகவல் இல்லை. விசாரணைக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு விஸ்வரூப செல்வாக்கு கொண்டவரல்லவா அவர்? அவரிடம் விளக்கம் கேட்டிருந்தால் அவருடைய லட்சோபலட்சம் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்ற தயக்கம் தமிழக அரசின் தலைமைக்கு இருந்திருக்கலாமோ என்னவோ!

இப்படி விசாரணைக்கே அவரை உட்படுத்த தயங்குபவர்களை அவர் ஏதேனும் வில்லங்கம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்த துணிவார்களா? என்பதே மக்களின் மனதில் மேலோங்கி நிற்கிறது. சந்தை மதிப்புபடி சுமார் 2 கோடி சொச்சத்திற்கு சொத்துவாங்கிய ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி குறைந்த பதிவு கட்டணத்தை காட்டியுள்ளார்.

இந்நிலையில் தான்வாங்கிய உண்மையான சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு கட்டணம் ஒன்பது சதவிகிதத்தை ரஜினிகாந்த் கட்டியிருக்க வேண்டும் என நாம் கருதுவது சற்றே அதிகபட்ச எதிர்பார்ப்பாகத் தான் தோன்றுகிறது. எனினும் ரஜினிகாந்த் பற்றி சமூகத்தில் ஊடகங்களாலும், பல செல்வாக்கான முக்கியஸ்தர்களாலும் கட்டமைக்கப்பட்ட 'மிகவும் உண்மையான மனிதர்' என்ற பிம்பம் மக்களை அவர் நியாயமானவராக நடந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தந்திருப்பது தவிர்க்கவியலாதது. ஏனெனில் இரண்டுவிதத்தில் இது பாதகமான செயல்.

ஒன்று- 'கணக்கில் வராத பணம் என்பது கறுப்புபணம்' என்ற வகையில் கூடுதலாக ரஜினி கொடுத்த பணத்திற்கும், வாங்கிய பணத்திற்கும் இது பொருந்தும்.

மற்றொன்று- கறுப்பு பணம் கைமாறும் போது அரசாங்கத்திற்கு சென்றிருக்க வேண்டிய வரி இழப்பு.

ஆயினும் சட்டப்படி ரஜினிகாந்த் அரசின் வழிகாட்டுதல் மதிப்புபடி பதிவு கட்டணம் கட்டியுள்ளார்.... என்பதை மறுக்க முடியாது. சந்தை மதிப்புக்கேற்ப நான் வாங்கிய சொத்தின் மதிப்பிற்குரிய பதிவு கட்டணத்தையே முறையாக கட்டுவேன் என்பது ஒருவரின் தார்மீக நெறிமுறை, மனசாட்சி சம்பந்தப்பட்ட விவகாரமே தவிர அரசாங்க பிரச்சனையல்ல.

ஆனால் இந்த விவகாரம் உரிய முறையில் அரசாங்கத்தால் விசாரிக்கப்படவில்லை என்பதைப் போலவே கடைசி வரை இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் தன்நிலை விளக்கம் தராததும் கவனத்திற்குரியதாகும்.

இதில் சம்பந்தப்பட்ட பணத்தைவிடவும் மிகவும் பாதிப்புக்குரிய அம்சம் ரஜினிகாந்த் நேரிலே செல்லாமல் செய்யப்பட்ட பதிவை நேரில் சென்று செய்ததாக அரசே அறிவித்த அவலம். சட்டத்தில் ஒருவர் நேரிடையாக பதிவுத்துறை அலுவலகத்திற்கு செல்லாமல், அதிகாரிகளே சம்பந்தப்பட்டவரின் இல்லம் வந்து கையெழுத்து பெறுவதற்கான சில அரிய விதிவிலக்குகள் உள்ளன. அப்படியிருக்க ரஜினிகாந்த் நேரடியாக பதிவு அலுவலகம் செல்லாததை பெரிய குற்றமாக கருதக்கூட வாய்ப்பில்லை. ஆனால் நடக்காத ஒன்றை நடந்ததாக பதிவு செய்வது தண்டிக்கப்படவேண்டிய குற்றம். ரஜினிகாந்த் நேரில் வந்து கையெழுத்திட்டார் என்று துணிந்து பதிவு செய்த அதிகாரி தண்டிக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் ரஜினிகாந்தின் அனுசரணையோடே இந்த குற்றம் நடந்திருப்பதால் அவரை தண்டிப்பது ரஜினிகாந்தின் தவறை வெளிச்சம் போட்டதாகிவிடும்... என்று அரசாங்கம் அரண்டுபோய் ஒரு தனிநபருக்காக அப்பட்டமாக ஊர்உலகறிய பொய் விளக்கம் தருகிறது.

'வாய்மையே வெல்லும்' என்பது தமிழக அரசின் அரசாங்க சின்னத்துடன் பொறிக்கப்பட்ட வாசகம். இந்த அரசு 'வாய்மையே வெல்லும்' என்பதை வெறும் வாசகமாக வைத்துக்கொண்டு தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டது தமிழக அரசு.

இந்நிலையில் ரஜினிகாந்த் மிகவும் நேர்மையானவர். திரையில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர். நிஜவாழ்வில் நடித்தறியா உண்மையான மனிதர். ஆன்மீகவாதி... என்று ஊடகங்களால் சலிப்பே இல்லாமல் பரப்பப்பட்ட சங்கத்தின் நினைவுக்கு வருகிறது.

"ரஜினிகாந்தை போன்ற நேர்மையானவர் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அரசியலே தூய்மையாகும். ஊழல் இருக்காது. நல்லாட்சி கிடைக்கும்..." என்று ஓயாமல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியும், எழுதியும் வருகிற துக்ளக் ஆசிரியர் 'சோ' இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்த மாட்டார். ஏனெனில் மேற்படி குற்றம் செய்தது கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ இல்லை என்ற போது அவர் இதில் அக்கரை காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன?

Friday, March 21, 2008

ஒகேனக்கலும், ஓட்டு அரசியலும்

-சாவித்திரி கண்ணன்
மிழகத்தின் 'நயாகரா' என்று தயங்காமல் சொல்லிவிடலாம்...! அவ்வளவு இயற்கை பேரழிவில் மிகுந்த ஒகேனக்கலை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
தமிழ் இலக்கியங்களில் 'புகைநற்கல்' என பன்நெடுங்காலமாக குறிக்கப்பட்டு வரும் இந்த பேரெழில் பிரதேசம் காலப்போக்கில் பெயர் திரிபடைந்து ஒகேனக்கல் ஆனது. பாறைகள் சூழ்ந்த பிரதேசத்தில் உச்சி மலையிலிருந்து வெண்பஞ்சு மேகம் போல் விழும் நீர்திவலைகளின் அழகை அர்த்தப்படுத்தும் விதத்திலே வைக்கப்பட்ட பெயர்தான் புகைநற்கல். புகை என்பதை ஓகை என்பதாக ஒலிவடிவம் தந்து, 'நற்கல்' என்பதை 'நக்கல்' என்பதாக பேச்சு வழக்கில் மாற்றி ஒகை நக்கல் என்பதாகி பின்பு ஒகேனக்கல் என்ற பெயரே நிலைத்து விட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கூத்தபாடி ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ஒகேனக்கல் அமைந்துள்ளது. கர்நாடகத்திலிருந்து பாயும் காவேரி நீர் கர்நாடக எல்லையிலிருந்து பல கிலோ மீட்டர்களைக் கடந்து பாறைகளில் முட்டி மோதி, தாவி பிரவகித்து மலைகளிலிருந்து பாயும் இந்த இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை சுற்றுலா பிரியர்களின் சொர்க்கபூமி எனலாம். ஆனால் இதன் முக்கியத்துவத்தை இத்தனை ஆண்டுகளில் தமிழக அரசு சரியாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. குற்றாலத்திலிருந்து இணையாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய இவ்விடம் கற்காதவனின் கையில் கிடைத்த காவிய தூலைப் போல கடந்த காலங்களில் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு சிறப்பு நிதி மூலம் இந்த சிங்கார பிரதேசத்தில் சில சுற்றுலாவளர்ச்சிப் பணிகளை சுறுசுறுப்பாகத் தொடங்கிய ஆண்டு 2005. பெரிய அருவிகளில் குளிப்பவர்களுக்கு பாதுகாப்பாக கம்பிவேலியையும், வேடிக்கை பார்ப்பவர்கள் விழுந்துவிடாதிருக்க இரும்பு வேலியையும், சிற்றருவியில் குளிப்பவர்கள் உடைமாற்றுவதற்கான கட்டிடத்தையும் கட்டும்போது கர்நாடக வனத்துறையினர் அதிரடியாய் வந்து ஆட்சேபம் தெரிவித்தனர்.
தமிழக அதிகாரிகள் எல்லை வரைபடங்களுடன் தகுந்த விளக்கம் தந்ததும் ஆட்சேபம் தெரிவித்தவர்கள் அமைதியாய் திரும்பினர். ஆனால் அப்போது கர்நாடக சட்டபேரவைக்கு தேர்தல் நெருங்கி கொண்டிருந்த நேரத்தில் அன்றைய காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கர்நாடக முதல்வர் தரம்சிங் திடீரென்று ஆவேச அறிக்கை வெளியிட்டார். "ஒகேனக்கல் மற்றும் அதை சார்ந்த 370 ஏக்கர் நிலம் கர்நாடகத்திற்குரியது. அதை தமிழகம் ஆக்கிரமித்துள்ளது. அதை மீட்காமல் விடமாட்டேன்." என்றார் தரம்சிங்.
ஒகேனக்கல் கர்நாடகத்திற்கானது என்ற பிரச்சனையோ, கருத்தோ இது நாள் வரை இல்லாத நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வராயிருக்கும் ஒருவருக்கு தமது மாநில எல்லை குறித்த தெளிவோ, அறிவோ இல்லாமலிருக்க முடியும் என்று நம்பவும் முடியவில்லை.
அப்படியொரு சந்தேகம் திடீரென்று தோன்றினாலும் அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெற்று முடிவெடுக்க முடிந்த இடத்தில் அவர் இருந்தார். எனினும் அடாவடித்தனமாக அன்று தரம்சிங் எல்லை பிரச்சனையை கையில் எடுத்தார். இது கர்நாடகமக்களிடம் தனக்கொரு கதாநாயக அந்தஸ்த்தை பெற்றுத்தரும் என தரம்சிங் நம்பியதே இதற்கு காரணமாயிருக்ககூடும்.
ஆனால் பல இனங்களை, மொழிகளை பேசுவோர் ஒருங்கிணைந்து வாழ்கின்ற இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் குறுகிய இனவெறி அரசியல், அதுவும் மற்ற இனத்தவர் மீது பகை காட்டும் அரசியல் பயங்கரவாதத்திற்கு இணையானது. இந்த தீய அரசியலை கையிலெடுப்பவர்களை ஒரு தேசியகட்சியை தலைமை தண்டிக்கும் இல்லை, குறைந்தபட்சம் கண்டிக்கவும் இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சியோ தனக்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விவகாரம் போல் அன்று அமைதி காத்தது.
அன்று தரம்சிங் கையிலெடுத்து, தேர்தல் முடிந்ததும் கைவிட்ட எல்லை அரசியலை இன்று கையிலெடுத்துக் கொண்டார் எடியூரப்பா. அன்று காங்கிரஸ், இன்று பாரதீய ஜனதா. கட்சியும், ஆட்களும் வேறுபட்டுள்ளனர். ஆனால் காரணம் ஒன்றே ஒன்று தான். அது தேர்தல் அரசியல். நெருங்கி வந்து கொண்டிருக்கும் தேர்தல்!
தன்னுடைய சேவைகளாலோ, திறமைகளாலோ, தியாகங்களாலோ மக்களிடம் செல்வாக்கு பெற ஏதுமற்ற இன்றைய அரசியல் தலைமைகள் குறுக்கு வழியில் பெயரும், செல்வாக்கும் பெறுவதற்கு இது போன்ற இனப்பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.
தமிழகத்தில் தர்மபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் கடும் குடிநீர் பற்றாக்குறையை களையும் நீண்ட கால கனவுத்திட்டம் நிதர்சனமாகவிருக்கும் ஒரு தருணத்தில் அதை தடுத்து நிறுத்துவேன் என்கிறார் எடியூரப்பா. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் 1330 கோடி செலவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ந்தேதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதற்கு கர்நாடகத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பது எடியூரப்பா வைக்கும் குற்றச்சாட்டாகும்.
தமிழகத்திற்கு கர்நாடகம் அனுமதித்துள்ள குறைந்தபட்ச காவேரி நீரை எந்தெந்த வழிகளிலெல்லாம் விரையமாவதை தடுத்து மக்கள் நலனுக்கு பயன்படுத்துவது என்பது தமிழக அரசின் உரிமை. இதில் கர்நாடகத்திற்கு கடுகளவும் பாதிப்பில்லை என்ற நிலையில் எடியூரப்பாவின் தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இது குறித்து சன் தொலைகாட்சியில் நேர்காணல் தந்த தமிழக பா.ஜ.கவின் முக்கியஸ்தரான குமாரவேல், "பா.ஜ.க தேசிய கட்சி என்றாலும் அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டிய கட்சியாகவுள்ளது... அந்த வகையில் கர்நாடக பா.ஜ.க தலைவர் சில தவறான தகவல்களின் அடிப்படையில் ஒகேனக்கல் வந்து உரிமை கோரியிருக்கலாம்.. ஆயினும் அவரைச் சந்தித்து நாங்கள் முறையான விளக்கம் தருவோம்" என்றார். இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றோரும் எடியூரப்பாவைச் சந்தித்து விளக்கம் தர உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.
முதலாவதாக எடியூரப்பா கர்நாடகமக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் ஒகேனக்கலை தமிழகத்திலிருந்து பறிக்க வேண்டும் என்றோ, தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டங்களை சீர் குலைக்க வேண்டுமென்றோ கர்நாடக மக்கள் எண்ணுவதற்கு எந்த முகாந்திரமில்லை. இப்படியொரு எண்ணத்தை அரசியல்வாதிகளே வலிந்து மக்களிடம் உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இரண்டாவதாக உண்மை என்பது ஒன்று தான். அது தமிழகத்திற்கு ஒன்றும், கர்நாடகத்திற்கு வேறொன்றுமாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு முன்னாள் முதல்வர் உண்மையறியாமல் களத்தில் இறங்கி போராடும் அளவுக்கு முட்டாளாக இருக்கமுடியாது.
எனினும் காங்கிரஸ் கட்சிக்காரர்களைப்போல் கண்டுகொள்ளாமல் விடாமல் எடியூரப்பாவை சந்தித்து விளக்கம் தருவோம் என்ற அளவுக்காவது தமிழக பா.ஜ.க சொன்னது ஒரு வகையில் முன்னேற்றம் என ஆறுதல் மட்டுமே அடையலாம். அதேசமயம் இப்படி ஊடகங்களுக்கு சமாதானம் சொல்வதைத் தவிர்த்து அடுத்த எடியூரப்பாவை சந்தித்து பேசியிருக்கலாம். ரயிலிலே சென்றால் கூட ஆறுமணிநேரபயணத்தில் அங்கே சென்று எடியூரப்பாவை சந்தித்து விட முடியும்.
மார்ச் 16ந்தேதி எடியூரப்பா வந்து போனதைத் தொடர்ந்து மார்ச் 20ந்தேதி மீண்டும் பா.ஜ.கவின் கர்நாடக மாநில விவசாய அணியைச் சேர்ந்த 500பேர், 'ஒகேனக்கலை கர்நாடகத்தில் சேர்க்க வேண்டும்' என்று ஒகேனக்கல் வந்து போராட்டம் நடத்திச் சென்றுள்ளனர். (தமிழக பா.ஜ.கவினர் இன்னும் எடியூரப்பாவை சந்தித்த பாடில்லை).
இதை ஒகேனக்கலில் வாழும் கன்னட மொழிபேசுபவர்களே ஏற்கவில்லை என தெரியவருகிறது. ஏனெனில் இது முற்றிலும் நியாயமற்ற, அரசியலுக்காக நடத்தப்படும் போராட்டம் என்ற கருத்து கர்நாடகமக்களுக்கே உள்ளது. ஒகேனக்கலில் கன்னடநடிகர் ராஜ்குமாரின் ஏராளமான படங்களுக்கான படப்பிடிப்பு தமிழக அரசின் அனுமதியுடன் தான் நடந்துள்ளது. அங்கு நடக்கும் பரிசில் (படகு) பயணங்களின் மூலம் பென்னகரம் ஊராட்சிக்கு லட்சக்கணக்கில் வருமானம் வருகிறது. இந்த உல்லாச பரிசில் பயணத்தில் கர்நாடக மக்கள் பலரும் தினசரி வந்து மகிழ்ந்து சென்று கொண்டுள்ள ஒரு சுமுகச் சூழல் இன்றும் தொடர்கிறது.
தரம்சிங்கும், எடியூரப்பாவும் மேற்கொண்டது ஒரு கீழ்த்தரமான அரசியல் யுக்தி. இது ஜனநாயகத்தின் பெயரிலான தீவிரவாதமாகும். இவர்களைப் போன்றவர்களை உடனடியாக கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தால் தான் அந்த கட்சிகள் தேசியத்திற்கு உண்மையான கட்சிகளாயிருக்க முடியும்.

Thursday, March 13, 2008

எப்படி ஏற்பட்டது மின்சாரத்தட்டுப்பாடு?

- சாவித்திரி கண்ணன்

மின்தடை ஏற்பட்டால் ஏற்படும் எரிச்சலைவிட அதிக எரிச்சலாக உள்ளது மின்சார பற்றாக்குறை தொடர்பாக அரசியல் கட்சிகள் விடுக்கும் அறிக்கைகள்! "மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " என்கிறார்.

ஜெயலலிதா

சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல் விட்டது தான் இப்போதைய மின்சாரதட்டுப்பாட்டுக்கு காரணம்" என்கிறார் ஆற்காடு வீராச்சாமி.

இந்த இருவருமே பல உண்மைகளை மறைத்து, மக்களை திசைதிருப்பவே அறிக்கை யுத்தம் நடத்துகின்றனர். மின்சார உற்பத்தியில் தமிழகம் எப்போது மிகை மாநிலமாக இருந்தது...? அதுவும் ஜெயலலிதா ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் மின்உற்பத்திக்காக தொலைநோக்குத்திட்டங்கள் எவ்வளவு போடப்பட்டது?

அதே போல் அ.தி.மு.க வைத் தவிர்த்து, கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி செய்த சுமார் 14 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?

மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்குமே ஒரே விடை, இரு கழகங்களின் ஆட்சிகளிலுமே தமிழகம் மெல்ல, மெல்ல இருளுக்குள் தள்ளப்பட்டது என்பது தான்!

கருணாநிதி ஆட்சியிலிருந்த காலகட்டத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி யிலிருந்த காலகட்டத்திலும் சரி தமிழக மின்உற்பத்தி சுமார் 10 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது. அதே சமயம் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகாலத்திலும் சுமார் 120 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் ஆட்சி செய்த கால கட்டத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி இப்போதைய காலத்தைப் போல் இவ்வளவு வேகமான விஸ்வரூப வளர்ச்சியை காணவில்லை. ஆனால் உலகமயம், மற்றும் தாராளமயத்தின் தாக்கத்தால் தடையற்ற அந்நிய முதலீடுகளும், தொழிற்சாலைகளின் பெருக்கமும் அதிகரிக்கும் நேரத்தில் இரு கழகங்களுமே மின் உற்பத்தியில் அக்கரை காட்டாமலிருந்துவிட்டனர்.

காரணம் இது தான்; மின் உற்பத்தியக்கான திட்டங்கள் என்பவை காலங் கனிந்து பயன்தரக்கூடியவை. அதாவது இப்போது முதலீடு செய்தால் குறைந்தது ஆறேழுவருடங்கள் கழித்துதான் அறுவடை செய்யலாம். அப்போது ஆட்சி மாறிவிட்டிருப்பின் அது அந்த ஆட்சிக்கு பெயர் தந்துவிடுமே....

ஆகவே, இப்படிப்பட்ட மக்கள் நலன், நாட்டுமுன்னேற்றம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களையே யோசிக்கக்கூடாது. உடனடியாக மக்கள் பலனடைந்து அதன் காரணமாக ஓட்டு வாங்கக்கூடிய இலவசங்களை அள்ளி இறைக்கும்' திட்டங்களுக்கே நிதியை திருப்பிவிடலாம்' என்பதே இரு கழகங்களின் நடைமுறையாக இருந்துள்ளது. இது மட்டுமல்ல, மின் வாரியத்தில் 'ஷாக்' அடிக்கும் படியான ஊழல்களும், நிர்வாக சீர்கேடுகளும் வேறு மலிந்துவிட்டன. இதன் விளைவாக உற்பத்தியாக வேண்டிய மின்சாரமே கூடதடைபட்டுள்ளது.

நீர்மின்சக்தி மூலம் தமிழகம் பெற்றுக்கொண்டிருந்த 2184 மெகாவாட்டில் தற்போது சுமார் 400 மெகாவாட் தடைபட்டுள்ளது. அதே போல் அனல் மின் நிலையங்கள் மூலம் அடைந் திருக்க வேண்டிய இலக்கு 2970 மெகாவாட், ஆனால் அதில் இப்போது 550 மெகாவாட் தடைபட்டுள்ளது.

'அடுத்த மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி சமாளிப்பேன்' என்று சொல்லும் ஆற்காடு வீராச்சாமி இருக்கிற மின்உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்படாமல் சீரழிந்துவருவதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் அவருக்கோ எப்போதும் முதலமைச்சரின் நிழல்போல அவரை பின்தொடர்வதற்கே நேரம் போதவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்ற தலையாய பிரச்சனையில் தலையிடுவதற்கு அவருக்கு எங்கே நேரம் கிடைக்கிறது? அதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது அவர்களின் பாடு... என்பதே அமைச்சரின் அணுகுமுறையாக உள்ளது.

ஆனால் அதிகாரிகள், இருக்கும் வாய்ப்புகளுக்குள் இருந்துதான் இயங்க முடியும். அவர்களால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. உதாரணமாக கடந்த 17 ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது

எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை? கூடுதலாக மின் உற்பத்திக்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில் அதை குறைக்க வேண்டியதுதான் காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா, ஆற்காடு வீராச்சாமி இரு வருக்குமே உள்ளது.

இது மட்டுமல்ல, அரசாங்கம் முதலீடு செய்தபோது குறைந்த செலவில் பெறமுடிந்த மின்சாரத்தை தனியார் கைகளுக்கு தாரைவார்த்து அதை எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு போனபோதிலும் இரு கழகங்களும் இறுமாப்பு கொள்ளலாம்.

தனியார் மின்உற்பத்தி செய்ய தாராள சலுகைகளை அள்ளித்தந்தது தமிழக அரசு, அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அதிக விலை தந்து வாங்கிய வகையில் அடைந்ததோ அபார நஷ்டம்.

தனியார் மின் உற்பத்தியில் இறங்ககாத காலகட்டம் வரை நமது மின்வாரியம ஒரு பற்றாக்குறையற்ற வாரியமாகவே பரிமளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தந்த நிர்பந்தங்களால் தமிழக மின்வாரியம் இன்று 3000 கோடி பற்றாக்குறையில் மூழ்கிவிட்டது. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு தமிழகமக்களின் மின்தேவையில் தனியார் நிறுவனங்கள் தந்த மின்சாரத்தின் மூலம் வெறும் 9 சதவிகிதத்தை மட்டுமே ஒப்பேற்ற முடிந்துள்ளது.

இந்தச் சூழலில் அமைச்சர், "வணிக ரீதியில் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்தில் இந்த மின்சாரம் கிடைத்துவிடும் என அறிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமே இல்லை, வெறும் சவடால்தான். என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்

இலவச கலர் டெலிவிஷன்களுக்கு பலநூறுகோடி செலவழிக்க முடிந்த தமிழக அரசுக்கு பல்வேறு வகையிலும் அடிப்படை, அத்தியாவசிய தேவையாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்ய மனமில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது.

"வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்வெட்டு குறைவுதான். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தவேண்டும்..." இப்படியெல்லாம் சொல்வது அவமானகரமானது, என்பதைக்கூட உணராதவர்கள் தான் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளனர்.

உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தில் அலட்சியம் காட்டுபவர்களை வாழும் தலைமுறைமாத்திரமல்ல, வருங்காலத் தலைமுறையும் மன்னிக்காது.

Monday, March 10, 2008

சூதாட்டமாகும் கிரிக்கெட்

சாவித்திரிகண்ணன்
முன்னுரை
இந்தியாவில்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். சோறு, தண்ணீர், தூக்கத்தை மட்டுமல்ல கடமையையும் துறந்து கிரிக்கெட்டே கதி என்று உழலும் கோடானகோடி ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா. அந்த கிரிக்கெட் விளையாட்டின் பின்ணனியில் என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை அப்பாவி ரசிகர்கள் பலர் அறிவதில்லை. அந்த அறியாமைதான் சிலரது பண அறுவடைக்கு ஆயுதமாகிப்போனது. உண்மை என்னவென்பதை எப்போதுமே உணராத வண்ணம் ரசிகர்களை கிரிக்கெட் வெறியில் தொடர்ந்து வீழ்த்தி வைத்திருக்கும் ஒரு சாதூரியமான சதிச்செயல் ஒரு சங்கிலி தொடர்போல இங்கே சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி தோல்விகள் அதன் ரசிகர்களை அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்குகிறது. இப்போதும் கூட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஈட்டிய அபாரவெற்றியும் கோலாலப்பூரில் இந்திய ஜுனியர் கிரிக்கெட்அணி கொண்டுவந்த வெற்றியும் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயினும் அவர்கள் இதயத்தில் சில சங்கடங்களால் எழுந்த சலனங்கள் ஓயவில்லை.
விளையாட்டு, விளையாட்டாக இல்லாமல் அது சில விரும்பதாகாத வழிமுறைகளில் வியாபாரமாகவும், அதையும் மீறி சில சமயங்களில் சூதாட்டமாகவும் அவதாரம் எடுக்கிறதே என்பதுதான் கோடானகோடி ரசிகர்களின் குமுறல். சமிபத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்விட்டு விலைபேசி வாங்கப்பட்ட சம்பவம் என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் சறுக்கல். இலைமறைவு காய்மறையாக கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் அதிகாரப்பூர்வமாக அரங்கேறுகிறதோ என்றொரு கலக்கம்.கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சமூக பிரக்ஜையுள்ள எவருக்குமே ஒரு விளையாட்டு சூதாட்டமாக மாறுவதில் தார்மீக கோபம்எழுவது தவிர்க்கமுடியாது. இதை நாம் அனுமதிக்க ஆரம்பித்தோம் என்றால் விளையாட்டில் மட்டுமல்ல சமூகத்திலும் பல சரிவுகளை ஏற்படுத்திவிடும். இதை சற்றே ஆழமாகவும்,அகலமாகவும் நாம் விவாதிப்போம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்று மகாகவி பாரதியார் பாடிய வரிகள் தான் நினைவுக்கு வந்தது. இனி இவர்களை விளையாட்டு வீரர்கள் என்று எழுதுவதோ, அழைப்பதோ வெட்கமாக இருக்கிறது. சுதந்திரகாற்றை சுவாசிப்பது தானே வீரர்களுக்கான தனிப்பெருமை! அவ்வப்போது அடிமைகளாய் தன்னைத்தானே அடகு வைத்துக் கொள்வது என்பது எதன்பெயரால் நடந்தாலும் அது விளையாட்டுமில்லை, வீரமுமில்லை.
அடிமை இந்தியாவில் சுடர்விட்டு எரிந்த சுதந்திரதாகமும், சுயமரியாதை உணர்வும் விடுதலை பெற்ற இந்தியாவில் விடைபெற்று சென்று கொண்டிருக்கிறதா? சுதந்திர இந்தியாவின் அறுபது ஆண்டுகால அனுபவ படிப்பினை அடிமை வாழ்க்கையையே இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்களோ என ஐயப்படவைக்கிறது.
பிப்ரவரி-20-ல் மும்பையிலுள்ள ஹில்டன் டவரில் ஒளிவுமறைவற்ற ஒரு வியாபாரம் அரங்கேறியது. அங்கே கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் விலைபேசி விற்கப்பட்டனர். அவர்களை ஏலம் கேட்டு எடுத்தனர் கோடீஸ்வரர்கள்...! தொலைகாட்சிகளில் இந்த காட்சிகள் உலகமெங்கும் ஒளிபரப்பானது. விக்கித்துப் போயினர் விளையாட்டு ரசிகர்கள்..! இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன ஆட்டக்காரர் மகேந்திரசிங் தோனி. அவரது விலை ஆறுகோடி. அடுத்த ஆட்டக்காரர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்டுரூ சைமண்ட்ஸ். அவரது விலை 5.4கோடி, இப்படி படிப்படியாக ஒவ்வொரு ஆட்டக்காரரின் பெயரும், விற்கப்பட்ட விலையும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட போது அதிர்ந்தது ரசிகர்களின் நெஞ்சம். அதுவும் இந்தியவீரர்கள் மட்டுமின்றி இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு ஆட்டக்காரர்களும் இந்த ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்தியாவிலுள்ள எட்டு மாநகரங்களின் பெயரில் கட்டமைக்கப் பட்ட அணியில் ஏன் வெளிநாட்டுவீரர்கள் இடம்பெறுகின்றனர் என்பதெல்லாம் சாதாரண ரசிகர்களைப் பொறுத்தவரை புரிந்துகொள்ள முடியாத குழப்பமாகவே இருந்தது.
இப்படியாக சுமார் 3000 கோடிரூபாய்க்கு கிரிக்கெட் அணியும், ஆட்டக்காரர் களும் விலைபோயுள்ளனர்... என்ற செய்தி திகைப்பையும், திகிலையும் ஒரு சேரத்தந்தது. ஏன் இப்படி ஏலம் போடுகிறார்கள்? எதற்காக இவ்வளவு விலைகொடுத்து ஆட்டக்காரர்கள் வாங்கப்படுகிறார்கள்? இப்படி அதிக விலைகொடுத்து ஆட்டக்காரர்களை வாங்குபவர்களுக்கு என்ன பலன்? போன்ற கேள்விகள் பாமரமக்களின் நெஞ்சை குடைந்தன.
இதற்கு ஒரே வரியில் விடை அளிப்பதென்றால், 'இனி இந்தியாவில் கிரிக்கெட்டின் பெயரால் நடக்கப்போவது விளையாட்டல்ல, வியாபாரமுமல்ல, விபரீத சூதாட்டமே!'
அப்படியானால் இதுவரை நடந்தது விளையாட்டில்லையா? என்றால் அது விளையாட்டு வியாபரமாக விஸ்வரூபமெடுத்தபோதே அது கொஞ்சம், கொஞ்சமாக சூதாட்டாக பரிணாம வளர்ச்சி கண்டது. இது வரை தெரிந்தும் தெரியாமலும் நடந்த சூதாட்டம் இப்போது அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே அரங்கேறிவிட்டது. அவ்வளவு தான்!இப்படியொரு நிலை கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் சாத்தியமானது எப்படி என்பதை சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டியுள்ளது.
கிரிக்கெட் வந்த வரலாறு
முதலாவதாக கிரிக்கெட் என்பது இந்த மண்ணுக்கான விளையாட்டல்ல. இது ஒரு அந்நிய விளையாட்டு. அடிமை இந்தியாவில் இங்கிலாந்துக்காரர்களால் இறக்குமதி செய்யப்பட்டது. நாம் அந்நியர்களை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றினோம். ஆனால் அவர்கள் தந்த மெக்காலேயின் அடிமைகல்வி தொடங்கி பல சீரழிவு கலாச்சாரங்கள் வரை நம்மிலிருந்து நீக்கமுடியாமல் நீக்கமற நிறைத்துக்கொண்டோம். நமது பாராளுமன்றம், நீதிமன்றங்கள் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் நீட்சியே இன்னும் தொடர்கிறது. அதிகார மையத்திலிருந்த ஆட்களை மாற்றிக்கொண்டு அதன் அம்சங்களை மட்டும் அப்படியே உள்வாங்கி கொண்டோம். ஆயினும் இதில் நாம் வெள்ளைக்காரர் களைப் போல் வெற்றி பெறவில்லை ஜனநாயகத்தை சாத்தியப்படுத்துவதி லாகட்டும், நிர்வாகத்தை நடத்துவதிலாகட்டும்...
சரி இந்த விவாதத்தை பிறகு வைத்துக்கொள்வோம்.
பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைகளை வேலைவாங்கிக்கொண்டு சோம்பேறியாய் சுற்றித்திரிந்த பிரிட்டிஷ் கனவான்கள் பொழுதை போக்குவதற்காக இங்கே விளையாடியதுதான் கிரிக்கெட்! இதனால் தான் இன்று வரை கிரிக்கெட் உலக விளையாட்டாக உருமாறமுடியாமல் காலணி ஆதிக்க நாடுகளில் மட்டுமே காலூன்றிய விளையாட்டாகவுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளெல்லாம் பொழுதைத்திருடும் கிரிக்கெட்டை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. ஆனால் உலகில் எங்குமில்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டும்இதற்காக மவுசு பெருகியது எப்படி? என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய அவசிய கேள்வியாகும்.
அந்நிய ஆட்சி அகன்ற பிறகும் கூட 1960கள் வரை இந்தியாவில் கிரிக்கெட், கனவான்களின் விளையாட்டாகவே கருதப்பட்டது. வசதிபடைத்த நகரவாசிகள் மட்டுமே கிரிக்கெட் சங்கங்கள் அமைத்து ஆடிவந்தனர். ஒரு காலத்தில் சொத்துரிமை உள்ளவர்கள், படித்தவர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அங்கீகாரம் பெற்றிருந்ததைபோல கிரிக்கெட் விளையாட்டும் மேல்தட்டு மற்றும் ஓரளவு நடுத்தர வர்கத்தின் ஆர்வத்திற்கும், ரசனைக்கும் உரியதாயிருந்தது. அன்றைய கிரிக்கெட் வீரர்களான லாலாஅமர்நாத், முஷ்டாக்அலி, சந்திரசேகர், பிரசன்னா, விஜேஹசாரே... போன்றவர்கள் தெருவில் நடந்து போனாலோ, கடைகளில் பொருள் வாங்கச் சென்றாலோ தெரிந்து கைகுலுக்குபவர்கள் சொற்பமே.
ஆனால் 1970 களுக்குப் பிறகு தான் இதற்கு ஓர் ஏறுமுகம் ஏற்பட்டது. கவாஸ்கரின் காலத்திலிருந்து அல்லது அதற்கும் சற்றே முன்பிருந்து தான் கிரிக்கெட் வீரர்கள் மெல்ல, மெல்ல கனவுலக நாயகர்களாக கட்டமைக்கப் பட்டனர்.
கதாநாயகர்களாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்;
கிரிக்கெட் பிறந்த இங்கிலாந்திலே கூட இல்லாத வகையில் இந்தியாவில் தான் கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக பார்க்காமல் அதை ஒரு வெறித்தனமாக மாற்றும் போக்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது.
எப்பொழுது தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமானதோ, எப்போது கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி பள்ளி, கல்லூரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டதோ, அப்போது முதல் இந்த தீமைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது எனலாம்.
கிரிக்கெட் நடக்கும் ஸ்டேடியங்களுக்கு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து அரசாங்கமே இந்த சீரழிக்கும் மாயையை சீர்தந்து அரங்கேற்றியது.
ஊடகங்களிலும் கிரிக்கெட் தொடர்பான செய்திகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. இந்தியாவில் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், கபடி போன்ற விளையாட்டுகளுக்கில்லாத முக்கியத்துவம் கிரிக்கெட்டிற்கு தரப்பட்டது.
எந்த ஒரு கலைக்கோ, விளையாட்டிற்கோ, அல்லது தனிநபருக்கோ கட்டமைக்கப்படும் பிரமைகளும், மாயைகளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சதியை சாத்தியப்படுத்த நடக்கும் முயற்சிகள் என்பதே சரித்திரம் சொல்லும் சாட்சியமாகும்.கிரிக்கெட்டிலும் அது தான் நடந்துள்ளது.
கிரிக்கெட் போட்டிக்கு மக்களின் பெரும் கவனம் திரும்பிய பிறகு அந்த கவனத்தை தங்களுக்கும் திசைதிரும்பிக்கொள்ள அரசியல் வாதிகள் தொடங்கி தொழில்அதிபர்கள், திரைநட்சத்திரங்கள் வரை திட்டமிட்டனர். பெரிய மனிதர்களிடமிருந்த இந்த சின்ன பலஹீனங்களை பி.சி.சி.ஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் சரியாகவே பயன்படுத்திக்கொண்டது.
இப்படிப்பட்டவர்களுக்கு வி.வி.ஐ.பி பாஸ் தந்து குஷிபடுத்தியது. இதனால் பி.சி.சி.ஐ யின் அத்துமீறல்களும், அதிகாரதுஷ்பிரயோகங்களும் கேட்பாரில் லாமல் வளர்ந்து விஷவிருட்சமானது. காலப்போக்கில் அரசியல்வாதிகளுக்கு பி.சி.சி.ஐயின் மீது ஆசை பிறந்தது.
ஒருதினப்போட்டிகளால் உயர்ந்த செல்வாக்கு
1975-ல் ஐந்துதினப்போட்டி என்பது ஒரு தினப்போட்டியான போது ரசிகர்களின் ஆர்வம் வெறியாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதிகாலையிலேயே கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முன்பு காத்துக்கிடந்து டிக்கெட்டுகள் வாங்கிபார்க்கும் ரசிகர்கள், ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலவழிக்கும் ரசிகர்கள் என பல்கி பெருகினர். டெலிவிஷனில் போட்டிகளைப்பார்க்கவும், ரேடியோவில் நேரடி வர்ணங்களை கேட்டு ரசிக்கவும், டெலிவிஷன் ஷோரூம்களின் முன் நின்று மந்தைகள் போல் மாய்ந்து மாய்ந்து ரசிக்கவுமாக மதிப்புமிக்க நேரங்கள் விரயமாயின. ஒரு வகையில், வளரும் நாடான இந்தியாவின் உண்மையான சமூகபிரச்சனைகளில், அரசியல் முறைகேடுகளில் மக்களின் கவனம் திரும்பாமல் திசைதிருப்பப்பட்டதில் அரசியல்வாதிகள் அகம் மகிழ்ந்தனர். தேசபக்தியை கிரிமினல் அரசியலுக்கு தேசிய கட்சிகள் சில கையாண்டதைப்போல, கிரிக்கெட்டிலும் தேசபக்தி தோற்றம் காட்டி பண அறுவடை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஆட்டக்காரர் சைமண்ட்ஸ் ஆண்ட்ருவை நம்மவர்கள் விலைகொடுத்து வாங்கி ஹைதராபாத் அணியில் விளையாட தேர்ந்தெடுத்திருப்பதின் மூலம் இந்த தேசபக்தி மாயையின் திரைவிலகிவிட்டது. இந்த சைமண்ட்ஸ்தான் நமது இந்திய வீரர் ஹர்பஞன்சிங் மீது குரங்கு என திட்டியதாக குற்றம் சுமத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட ஹர்பஞன்சிங்கிற்கு ஆதரவாகவும் சைமண்ட்ஸ்க்கு எதிராகவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எப்படிஎப்படியெல்லாம் போராட்டம் நடத்தினர். ஒருமுறை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நமது மத்திய அமைச்சர் சரத்பவார் விருது கொடுத்தபோது அதை அலட்சியத்துடன் பெற்றுக்கொண்டு சரத்பவாரை மேடையிலிருந்து தள்ளினர் ஆஸ்திரேலிய வீரர்கள். இதை தொலைகாட்சியில் அன்று பார்த்த அனைத்து இந்தியர்களும் கொதித்தனர்.
கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் டிக்கெட் மூலமாக கிடைக்கும் பெரும் தொகையைத் தவிர்த்து பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அபரிமிதமான ஸ்பான்சர் பணம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குள் ஊழல் பெருக்கெடுத்தோட வழிவகுத்தது.
ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுப்பது, போட்டிகளை நடத்துவது என எல்லாவற்றிலும் திறமையும், நேர்மையும் திருடுபோனது. 1980களில் மொத்தம் நடந்த 155 ஒரு தினப்போட்டிகளில் 86 போட்டிகளில் இந்திய அணிதோற்றது. ஒரு சில போட்டிகளில் ஆரம்பநிலையிலேயே தகுதி இழந்து வெளியேறியது. இந்தியமக்கள் தொகையில் இரண்டு சதவிகிதமேயுள்ள இலங்கை அணியிடம் பல முறை வெற்றியை பறிகொடுத்தது. ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகளிடம் அதிர்ச்சிதரத்தக்க, வெட்ககரமான தோல்விகளைக்கண்டது.
போதைக்கு அடிமையானவர்கள் அது எவ்வளவு தான் கெடுதியானது என்று தெரிந்தாலும், அதைவிடமுடியாது தவிப்பதைப்போல கிரிக்கெட் ரசிகர்களும் நமது அணி எவ்வளவு கீழ்தரமாக 'பெர்பார்மன்ஸ்' தந்தபோதிலும், கிரிக்கெட்டை வெறுக்க முடியாதவர்களாக கட்டுண்டு கிடக்கின்றனர்.
இது தான் கிரிக்கெட் சூதாடிகள் பலம் பெறுவதற்கு வாய்ப்பானது. 'புக்கீஸ்' எனப்படும் 'பெட்டிங்' நடத்தும் சூதாடிகள் கிரிக்கெட்டில் சட்டபூர்வமாக, அதிகாரபூர்வமாக புரளும் பணத்தைவிட பல மடங்கு அதிகப் பணத்தை சம்பாதித்தனர்.சூதாட்டத்தில் மேன்மேலும் பணம் அள்ள கிரிக்கெட்டின் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாகவே இவர்கள் விஸ்வரூபமெடுத்தனர்.
இத்தகைய ஒரு அபாயகரமானபோக்கை தடுத்துநிறுத்தும் தார்மீகபலம் வெளிப்படாத ஒரு வெற்றிடமாகப் போனது நமது அரசியலும், சமூகமும்!
இது தவிர கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டக்காரர்கள் பெறும் சம்பாத்தியத்தைகாட்டிலும் பல மடங்கு அதிக சம்பளத்தை கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குத் தரும் விளம்பர நிறுவனங்களின் மறைமுக மற்றும் நேரடி தலையீடுகளும் எந்த போட்டிக்கு எந்த வீரர் செல்லலாம் என்பதை தீர்மானித்தன.
ஆக, கிரிக்கெட் ஆட்டமானது பணமுள்ளவர்கள் ஆட்டிவைக்கும் பதுமையாகிப்போனது. அதாவது இந்தியாவில் கிரிக்கெட் என்பது சூதாடிகளின் புகலிடமாக பரிணாம வளர்சசி பெற்றது.
இருபதுக்கு 20 க்கு கிடைத்த அபார வரவேற்பு;
தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானயுகத்தில் நேரம் என்பது அரிதானதாகிவிட்டது. ஐந்து நாள்போட்டி, ஒரு நாளாக சுருங்கியதைப்போல ஒரு நாள் போட்டியே மூன்று மணிநேர போட்டியாக, ஒரு மாலைநேர சந்தோஷமாக சுருக்கப்பட்டது. இதற்கு கிடைத்த அபார வரவேற்பு பி.சி.சி.ஐ யின் பிசினஸ் திட்டமிடலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. ரவுண்ட் ராபின் முறையில் இருபதுக்கு-20, போட்டிக்கு திட்டமிட்டு பணத்தை அள்ள அடித்தளம் போட்டது, பி.சி.சி.ஐ.
இந்தியாவின் பிரிமீயர் லீக் உருவானதன் பின்ணணி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தில்லுமுல்லுகளுக்கு உடன்பட மறுத்ததால் கபில்தேவ் தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட கபில்தேவ் திறமையிருந்தும் புறக்கணிக்கப்பட்ட இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இந்தியன் கிரிக்கெட் லீக்{ICL}என்ற ஒன்றை ஜீ டிவியின் சுபாஷ்சந்திராவோடு இணைந்து தொடங்கினார். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக தனது சேனலில் ஒளிபரப்பி வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பாக சுபாஷ்சந்திராவும் இந்தியன் கிரிக்கெட் லீக்கிற்கு அடித்தளம் போட்டார். இந்த இருவரின் கூட்டிணைவிற்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது.
''ஐ.சி.எல் ஐ பொறுத்தவரை அதற்கு பணம் தான் பிரதானம்" என பி.சி.சி.ஐ குற்றம் சாட்டியது. பி.சி.சி.ஐ க்கும் அது தான் பிரதானம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பி.சி.சி.ஐ க்கும் பணத்தை தவிர வேறெதுவுமே பிரதானம் இல்லை என்பது உலககோப்பையில் தகுதிசுற்றில் கூட கலந்துகொள்ள வாய்ப்புபொறாத இந்திய அணியின் வங்கதேசத்துடனான படுதோல்வியில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. எனவே கபில்தேவ் களத்தில் இறங்கினார், ''இந்தியன் கிரிக்கெட் லீக் மூலம் கிரிக்கெட்டில் தரமும், கிரிக்கெட் வீரர்களின் தரமும் உயர்த்தப்படும்'' என உத்திரவாதமளித்தார்.
இதை இப்படியே விட்டால் இந்திய கிரிக்கெட்டை கபில்தேவ் கபளிகரம் செய்துவிடுவார் என கலவரமடைந்தது பி.சி.சி.ஐ. உலககோப்பை படுதோல்விக்குப் பிறகு பற்பல புதிய கட்டுபாடுகளைக் கொண்டுவந்தது. ஏதோ கட்டுக்கோப்பான நிறுவனம் போல் தன்னைக்காட்டிக்கொள்ள முயன்ற பி.சி.சி.ஐ இறங்கி வந்தது. கபில்தேவ் வசம் செல்பவர்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தியன் பிரிமியர் லீக்கை {ஐ.பி.ல்} சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்படுத்தியது பி.சி.சி.ஐ.
நமது பி.சி.சி.ஐ. தான் உலகத்திலேயே மிகப்பணக்கார விளையாட்டு நிறுவனம். இது தன்னுடைய வருமானத்தில் 26% ஆட்டக்காரர்களுக்கு அள்ளித்தருகிறது. தற்போது ஒரு நாள் போட்டியில் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ36,000 தருகிறது. எனவே பி.சி.சி.ஐ. யின் பின்ணணியில் உருவான இந்தியன் பிரிமியர் லீகிற்கு அனைத்து ஆட்டக்காரர்களும் ஆதரவளித்தனர். முன்னாள் ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் ஐ.பி.எல்லுக்கு ஆஸ்தான ஆலோசகரானர்.
சுனில் கவாஸ்கர் காலத்தில் ஐந்து நாள் போட்டிக்கு அன்றைய தினம் ஆட்டக்காரர்கள் பெற்ற மொத்த தொகையே ரூபாய் 2,000 ரூபாய் தான்! ஆனால் அதே ஆட்டக்காரர்கள் இன்று ஓய்வூதியாக பி.சி.சி.ஐ யிடமிருந்து பெறுவதோ மாதமாதம் ரூ35,000. எனவே கவாஸ்கர், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் ஐ.பி.ல் அணியின் தேர்வுக்கு உதவ முன்வந்துவிட்டனர்.
கிரிக்கெட்டில் சூதாட்டம் நுழைந்தது எப்போது?
கிரிக்கெட் சூதாட்டம் இன்று உலகந்தழுவி வளர்ந்துள்ளது. எனினும் இதன் தாயகம் இந்தியா தான்! ஆரம்பகாலங்களில் மிகச்சிறிய அளவில் ரசிகர்கள் தங்களுக்குள் பெட்டிங் கட்டுவது ஒரு ஆர்வக்கோளாறாக மட்டுமே அறியப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரு நண்பர்களுக்கிடையிலோ, உறவினர்களுக்கிடையிலோ, ஒரே இடத்தில் வசிப்பவர்கள், அல்லது வேலைபார்ப்பவர்களுக்கிடையே தங்கள் அபிமான கிரிக்கெட் வீரர்களைப்பற்றிய நம்பிக்கையின் உறுதிப்பாடாக நடந்தேறியது.
ஆனால் இது ஒரு பிரம்மாண்டமாக விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்தது 1980களின் ஆரம்பத்தில் தான்! 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்றுவந்தது ஏதோ ஒரு உலகமகாசந்தோஷமாக இந்திய மீடியாக்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு, கிரிக்கெட் மீது மக்களிடம் பிரம்மையையும், பிரேமையையும் ஒரு சேரக்கட்டமைக்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பானபோது, ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டமாயையை காசு பணம் சம்பாதிக்க கையிலெடுத்தனர் வியாபாரிகள். இது சாதாரண மனிதர்களை பெரும் பணக்காரர்களாக, கோடீஸ்வரர்கள் நிலைக்கு உயர்த்தியது. கம்யூட்டர், இண்டெர்நெட், செல்போன் போன்ற விஞ்ஞான வளர்ச்சிகள் இந்த 'பெட்டிங்' விஸ்வரூபமெடுக்க பெருந்துணையாகியது.
டெல்லியில் ஒரு வங்கியின் சாதாரண ஊழியராக இருந்தவர் முகேஷ்குமார் குப்தா. இவர் கிரிக்கெட் சூதாட்டத்திற்குள் நுழைந்தார். கிடுகிடுவென பெரும் உயரத்தை எட்டினார். யாருக்கும் சந்தேகம் வந்துவிடாதபடி ஒரு நகைக்கடை ஆரம்பித்து ஒரு நகைவியாபாரியாக சமூகத்தில் வஙம் வந்தார். இவர் 1988தொடங்கி 1997 வரை சுமார் பத்தாண்டுகள் பல கிரிக்கெட் போட்டிகளில் புக்கீஸ் என்றழைக்கப்படும் கிரிக்கெட் தரகராக களம்கண்டு ஒரு மிகப்பெரும் மரியாதைக்குரிய செல்வந்தர் நிலையை அடைந்து பிறகு விலகிக்கொண்டார். இவரைப் போல மற்றொரு கிரிக்கெட் தரகரான சஞ்சிவ்சாவ்லா பெட்டிங்கில் அள்ளிய பணத்தைக்கொண்டு லண்டன் மாநகரில் 'செட்டி'லாகிவிட்டார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் சூதாட்டம் நடந்துவந்துள்ளபோதிலும் அதிகாரபூர்வமாக இதில் முதலில் அகப்பட்ட விளையாட்டு வீரர்கள் அசாரூதினும், அஜய் ஜடோஜாவும் தான்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கதாநாயகனாக வலம் வந்த அசாருதின் 15,500 ரன்கள் குவித்த வகையில் ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகவும், இந்திய அணியின் காப்டனாகவும் அறியப்பட்டிருந்தார். அதேபோல் அஜய் ஜடோஜாவும் சிறந்த பேட்ஸ்மேனா. ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருந்தார். இவர்களோடு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மனோஜ்பிரபாகர், இந்திய அணியின் பிசியோ தெரபிஸ்டான டாக்டர். அலி இரானி மற்றும் அஜய்சர்மா போன்றோரும் இந்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ யால் விசாரிக்கப்பட்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். அசாருதினும். அஜய்சர்மாவும் வாழ்நாள் முழுக்க கிரிக்கெட்டிலிருந்து விலக்கிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் 2000 ஆண்டு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகள் உருவாக்கியது.
இதில் சி.பி.ஐ இயக்குநர் பி.மாதவன் தாக்கல் செய்த 162 பக்க புலனாய்வு விபரங்கள் பல திரைமறைவு உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. அதுவும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் தரகர் முகேஸ்குமார் குப்தா கொடுத்த வாக்குமூலங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களைத் திறந்தது.
நமது அசாருதின் மூலமாகத்தான் தரகரான முகேஸ்குமார் குப்தாவிற்கு தென் ஆப்ரிக்க காப்டன் ஹன்சிகுரோனி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். நமது முன்னாள் ஆட்டக்காரரான மனோஜ்பிராபகர் மூலமாகத்தான் சர்வதேச விளையாட்டுவீரர்களான முன்னாள் மேற்கத்திய அணியின் காப்டன் பிரைன்லாரா, முன்னாள் இங்கிலாந்து அணிகாப்டன் ஸ்டீவார்ட், ஆஸ்திரேலியன் பாட்ஸ்மேன் டீன்ஜோன்ஸ், முன்னாள் இலங்கை அணி காப்டன் அர்ஜுனா ரணதுங்கே மற்றும் அரவிந்தசில்வா போன்றோர் கிரிக்கெட் தரகர் எம்.கே.குப்தாவிற்கு அறிமுகமாகியுள்ளார். இப்படியாக எட்டு நாட்டு கிரிக்கெட் அணியினர் நமது இந்திய கிரிக்கெட் தரகரின் தொடர்பில் பணம் பெற்றுள்ளனர்.
1994-ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மாட்சில், 'தீவிரம் காட்டவேண்டாம்' என்பதாக சுமார் இரண்டரைகோடி ரூபாய் தந்ததாக எம்.கே குப்தா கூறியுள்ளார்.
பாகிஸ்தானூடனான கிரிக்கெட் போட்டியை தேசபக்த கண்ணோட்டத்தில் தீவிரமாக எடுத்துக்கொண்டு லட்சக்கணக்கில் பெட்டிங் கட்டிய ரசிகர்களின் பணத்தை, ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவதன் மூலம் தான் அபகரிக்கமுடியும். அதனால் அதற்கு அனுசரணையாக ஆட்டக்காரர்கள் உடன்பட்டால் கணிசமான பணம் தருகிறேன் என கிரிக்கெட் தரகர்முன்வந்த பெரிய தொகையில் ஆட்டக்காரர்கள் விழுந்துவிட்டனர்.
இப்படி கிரிக்கெட் வெற்றியை தேசத்தின் பெருமையாகவும், கிரிக்கெட் தோல்வியை நாட்டின் அவமானமாகவும் கருதும்படி கிரிக்கெட் ரசிகர்களை தூண்டிய பல்வேறு அணுகுமுறைகளும், உணர்ச்சிபோக்குகளும் சூதாடிகளுக்கு பணத்தை கொள்ளை கொள்ளவே பயன்பட்டுள்ளது.
தாங்கள் கதாநாயகனாக நினைத்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கறைபடிந்தவர்கள் என அறிய நேர்ந்தபோது அப்பாவி ரசிகர்கள் நெஞ்சம் குமுறினர். இதை ஒரு சூதாட்டக்குற்றமாக கருதி சுலபமாக மன்னிக்க முடியவில்லை. 'இது மிகப்பெரும் தேசத்துரோகம், நாட்டின் கௌரவத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி' என்பதாகவே அன்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதினார்கள்.
இப்படியாக இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் குரேனேவ் தொடங்கி பல நாட்டு வீரர்களையும் இந்திய ரசிகர்கள் விலைபேசி ஆட்டுவித்துள்ளனர்.
அதாவது, இதன்மூலம் இந்திய வீரர்கள் ஜெயிப்பதையும், தோற்பதையும் கிரிக்கெட் தரகர்களும், அவர்களிடம் புரளும் பலகோடி ரூபாய் பணமும் தான் தீர்மானித்துள்ளது, அந்த விளையாட்டு வீரர்களின் திறமையல்ல... என்பதே கடந்த கால விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட உண்மை.
இப்படி சட்டவிரோதமான, பல கோடி புரளும் ஒரு சூதாட்டத்தை வெற்றிகரமாக நடத்த மும்பையின் நிழல்உலக தாதாவான இப்ராஹிம் தாவூத் தரகர்களுக்கு உதவியுள்ளார் என்பதும் சி.பி.ஐ விசாரணையில் வெளிவந்த உண்மைகளாகும். இந்தியகிரிக்கெட் ஆட்டக்காரர்களை மட்டுமின்றி பாகிஸ்தான் ஆட்டக்காரர்களை பணம்பேசி பணியவைக்கவும் இப்ராகிம்தாவூத் துணைபோயுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற விசாரணையில் அந்நாட்டு அணியின் 'மாலிக்' வாழ்நாள் முழுக்க கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டதும், வாசிம் அக்ரம் அபராதம் விதிக்கப்பட்ட தும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களை அவமானத்தில் ஆழ்த்திய சம்பவங்களாகும்.
இந்தியாவில் சி.பி.ஐ தனதுவிசாரணை முடிவில், "இவ்வளவு பெரிய ராக்கெட், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் அன்றைய பி.சி.சி.ஐ தலைவர் ஏ.சி.முத்தையா, சி.பி.ஐ உண்மைகள் வெளியான நாளில், "கிரிக்கெட் வரலாற்றில் இன்று மோசமான நாள்" என்று வர்ணித்தார். 'அன்று மட்டும் தானா...?'
சூதாடி பணம் கண்டவர்களால் சும்மா இருக்க முடியாது. இப்படியெல்லாம் உண்மைகள் வெளிவந்தாலும் அவர்கள் வெவ்வேறு ரூபங்களில் தங்கள் சித்துவிளையாட்டுகளை அரங்கேற்றவே செய்தனர். கிரிக்கெட்டிலுள்ள மாயைகளும், மயக்கங்களுமே மேற்படி சதிச்செயல்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கிகொடுக்கிறது. இப்போது வெளிநாட்டு ஆட்டக்காரர்களே இந்தியாவின் எட்டு அணிகளிலும் எட்டுபேர் வீதம் இடம் பெற்றுள்ளனர். இது இவர்களை அணுகமுடியாத தூரத்திலிருந்த 'புக்கீஸ்'களுக்கு அருகிலேயே நிற்க வைத்ததைப்போலாகும். "இன்றைக்கு இந்தியாவில் கிரிக்கெட் மட்டுமே முதலீடு செய்து லாபமீட்டும் ஒரு விளையாட்டாக உள்ளது. ஆகவே தான் அதில் நான் பணம் போட்டுள்ளேன்" என கல்கத்தா அணியை 294கோடிக்கு வாங்கியுள்ள நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணையின் போது கிரிக்கெட் தரகர் எம்.கே.குப்தா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "ஒரு லாபகரமான தொழிலாக இருக்குமென்று விளையாட்டாக கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்து நுழைந்தேன். ஆனால் அது என்னை சூதாட்டத்திற்கு திசைமாற்றிவிட்டது என்பதே கசப்பான உண்மை."
அன்று கசப்பான உண்மையாக கண்டறியப்பட்டதைத்தான் இன்று தங்களுக்கு இனிப்பான உண்மையாக்கிகொள்ள இறங்கியுள்ளனர் சிலர்.
பேராசையின் விளைவு பேர வியாபாரம்
உலகிலேயே வேறெந்த நிறுவனங்களைக்காட்டிலும் மிகப்பணக்கார நிறுவனமான பி.சி.சி.ஐ.2006-2007ஆம் நிதியாண்டில் ஈட்டிய நிகரலாபம் 652கோடி!
2007-2008ஆம் ஆண்டிற்கான அதன் இலக்கு 862கோடி.
இப்படி சில நூறு கோடிகளை மட்டுமே லாபம் பார்த்துக்கொண்டிருப்பது சில்லறைத்தனமானது. நம்முடைய போட்டியை வைத்து புக்கீஸ்கள் ஆயிரம் கோடிகளுக்கு மேல் அள்ளிச்செல்லும் போது நாம் ஏன் இன்னும் பணத்தை அள்ள முடியாது? அதற்கு என்ன செய்யலாம் என திட்டமிட்டனர் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள்.அதிலும் பி.சி.சி.ஐயின் துணைத்தலைவர் லலித்மோடி துடிப்பாக களத்தில் இறங்கினார்.
அப்போது இருபதுக்கு-20க்கு கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கொண்டு எப்படி அறுவடை நடத்தலாம் என விவாதிக்கப்பட்டதின் விளைவே, எட்டு அணிகள் உருவாக்கப்பட்டதும், அணிகளும், ஆட்டக்காரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுமாகும். எட்டு அணிகளின் மொத்த விற்பனை மூலம் இந்தியன் பிரிமியர் லீக்கிற்கு ரூபாய் 2839 கோடி பணம் கிடைத்துள்ளது. இனிநடத்தப்படும் போட்டிகளுக்கு ரூ 6818கோடிகான ஒப்பந்தத்தை ஐ.பி.எல் போட்டுள்ளது. ஆக, ஒரே ஆண்டில் தன்னுடைய லாபத்தை பல மடங்கு அதிகரித்துக்கொண்டது பி.சி.சி.ஐ.
ஆட்டக்காரர்களுக்கு கிடைக்கும் அபார வருமானங்கள்
பற்பல வெற்றிகளை குவித்தாலும் இலங்கை, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சாதாரண மனிதர்களாக சகஜமாக நடமாடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சாதுர்யமான சந்தைப்படுத்தலின் மூலம் கிரிக்கெட் வீரர்கள் வேறெவர்களையும் விட, அதாவது மிகப்பெரிய தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களை விட அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இப்போது ஏலம் மூலமாக ஆட்டக்காரர்களுக்கு அளிக்கப்படும் பணம் என்பது இருபதுக்கு-20 எனப்படும் சுமார் 16 ஆட்டங்களுக்கானது மட்டுமே. அதாவது மொத்தம் சுமார் 48 மணி நேரம் விளையாடுவதற்காகவே ஒவ்வொரு வீரருக்கும் 40லட்ச ரூபாயிலிருந்து 6கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டது. தவிர ஒரு நாள் போட்டிகள் துலிப், புச்சிபாபு, விஜய்ஹாசாரிய என பல போட்டிகளில் கிடைக்கும் ஊதியங்கள் தனியாகும். ரஞ்சித் போட்டிக்கான பரிசுத்தொகை 50 லட்சம்.
இதெல்லாம் போக இவர்கள் அபாரமாக ஜெயிக்கும் போது அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அள்ளித்தரும் பரிசுத்தொகை பல லட்சம்.
இப்படியாக விளையாட்டுகளில் கிடைக்கும் பணம் ஒரு புறமிருக்க விளம்பரங்களில் தோன்றுவதன் மூலமும் பலகோடி ரூபாய் பணத்தை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பெறுகிறார்கள். உதாரணதத்திற்கு சச்சின் டெண்டுல்கரின் ஒர் ஆண்டிற்கான விளம்பர வருமானம் 100கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்! ஒரே ஒரு விளம்பரத்தின் மூலம் தோனி பெறும் தொகை சுமார் ஒருகோடி!{பூச்சிகொல்லி மருந்தை கலந்து மக்களின் நலன்களுக்கு கேடு செய்யும் பெப்சி, கோகோகோலா போன்ற நச்சுபானங்களை மக்களிடையே பரப்பும் நாயகர்கள்}
அலட்சிய படுத்தப்படும் மற்ற விளையாட்டு வீரர்கள்
இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு தரப்படும் மிதமிஞ்சிய முக்கியத்துவமும், அளவுக்கு மீறிய பொருளாதார ஆதரவும் ஹாக்கி, கால்பந்து, பேட்மிட்டன், வாலிபால், தடகளம்,வில்வித்தை,கேரம்,கபடி... போன்ற பல தளங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை சோர்வடைய வைத்துள்ளது.
இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் செப்டம்பர் 2007-ல் இந்திய அணி உலககோப்பையை வென்று வந்த போது மும்பையில் அவர்களுக்கு பிரம்மண்டமாக வரவேற்பு ஊர்வலம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பித்த நிகழ்வாகும். அப்போது கிரிக்கெட் ீரசிகர்களின் கனல்மூட்டி வளர்க்கப்பட்ட மோகத்தீயில் தாங்களும் குளிர்காயும் குயுக்தியுடன் மத்திய அமைச்சர்களும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட் முதல்வர்களும் பரிசுத்தொகையை அள்ளித் தந்த போது அதற்கு முன்னதாக ஆசிய கோப்பையை வென்ற ஹாக்கி அணியை மத்திய அரசோ, மாநில முதல்வர்களோ கண்டுகொள்ளாதது ஏன்? என குமுறி வெடித்த ஹாக்கி வீரர்கள் 'நாங்கள் என்ன அநாதைகளா? ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என உண்ணாவிரதம் இருந்தனர்.
பல விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெயர்வாங்கித்தந்து இந்தியாவிற்கு உலக அரங்கில் ஒரளவு மதிப்பை தேடித்தந்த தேசிய விளையாட்டான ஹாக்கிவீரர்களுக்கே இந்தகதி என்றால் மற்ற விளையாட்டு வீரர்களின் நிலையை சொல்வதற்கே வார்த்தைகள் இல்லை.
நமது நாட்டில் திறமையிருந்தும் சிபாரிசில்லாமல் முன்னுக்கு வருபவர்கள் அபூர்வம். அப்படியே அவர்கள் வந்து உலக அளவிலான போட்டிக்கு தேர்வானால் அவர்கள் பயணச்செலவின்றி படும் அவஸ்தைகள் சொல்லிமாளாது.
இவ்வளவு பணம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியம், கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணத்தின் ஒரு பகுதியை வசதி வாய்ப்பில்லாத மற்ற விளையாட்டுகளுக்கோ, வீரர்களுக்கோ இது வரை வழங்க முன்வந்ததில்லை. {இப்போது எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களையடுத்து கிரிக்கெட் வாரியம் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் மற்ற விளையாட்டுகளுக்கு தருவோம் என அறிவித்துள்ளது.இப்படி சூழல் நிருபந்தத்தின் காரணமாக முன்வந்த சொற்ப பணத்தால் பி.சி.சி.ஐ தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளது.}
இதற்கு மிகச் சமீபத்திய உதாரணங்கள் பிரான்சில் நடந்த சர்வதேச கேரம் போட்டியில் வென்று சாதனை புரிந்த ரிக்ஷா தொழிலாளியின் மகள் இளவழகி நாடு திரும்பியபோது அவரை வரவேற்கவோ, பாராட்டி பரிசு தரவோ நாதியிில்லை. அகில இந்திய மல்யுத்த போட்டிகளில் பதக்கம் வென்ற புருஷோத்தமன் என்ற இளைஞர் வறுமை காரணமாக உலக நாடுகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இப்படி மற்ற விளையாட்டுகளை அலட்சியப்படுத்துவதால் தான் நம்நாடு தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெறுவதில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை தட்டி வர முடியவில்லை.
ஒரு சின்னஞ்சிறிய தீவு நாடான டிரினிடாட்-டொபக்கோ என்ற நாடு கூட உலககோப்பை இறுதிபோட்டியில் தகுதிபெற்று ஜெர்மனியில் நடைபெற்ற 32 நாடுகளுக்கிடையிலான உலக கோப்பை இறுதிப்போட்டியில் தேர்வு பெற்றது. இந்த நாடடின் மக்கள் தொகை வெறும் 13 லட்சம் தான்! ஆனால் 110 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்திய நாடோ உலககோப்பை இறுதிப்போட்டிகளில் இதுவரை தகுதிபெறக் கூட தன்னை தயார்படுத்திக்கொள்ள விில்லை.
யாருக்கும் வெட்கமில்லை
'அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி, ஊமைச்சனங்களடி' என்பற்கேட்ப விற்பனைப் பண்டங்களைப் போல் விளையாட்டு வீரர்கள்{?} விற்கப்பட்டதற்கு, விலைபேசப்பட்ட விளையாட்டு ஆட்டக்காரர்கள் தரப்பிலும் சரி, விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் தரப்பிலும் சரி யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதிக விலைக்கு விற்கப்பட்ட மகேந்திரசிங் தோனியின் பெற்றோர்கள், ''அதிக விலைக்கு எங்கள் மகன் விலைபோயிருப்பது சந்தோஷத்தை தருகிறது. சந்தேகமேயில்லை இது பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்...'' என புளகாங்கிதப்பட்டு கொண்டனர்.
பெயர் பெற்ற ஆட்டக்காரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்றோர் நல்ல வேளையாக விலைபேசப்படவோ, விற்கப்படவோ இல்லை என்று ஒரு சிலர் ஆறுதல் பட்டுக்கொண்டனர். ஆனால் மேற்படி இந்த வீரர்கள் தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் எந்த ஆட்டக்காரர் அதிக விலைக்கு வாங்கப்படுகிறாரோ அவரைக்காட்டிலும் 15 சதவிகிதம் அதிகம் விற்கப்பட்ட வர்களாக அர்த்தப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பைக் கண்டு கொஞ்ச, நெஞ்ச ஆறுதலும் பொசுங்கி விட்டது. ஆக,'நேர்வழியில் சோரம் போவதை விட கொள்ளைப்புற வழியாக போனால் தேவலை' என்று இவர்கள் கருதினர் போலும். ஆனால் ஏலம்விட்டான பிறகு தாங்கள் பிரநிதித்துவப்படுத்தும் மாநிலத்தில் உள்ள முன்னணி ஆட்டக்காரர் அவ்வளவு ஒன்றும் அதிகவிலை போகவில்லை... வெட்கத்தை விட்டு நாமே விலைபோயிருக்கலாம்' என இந்த ஐந்து 'ஐகான்' வீரர்களும் கருதியதாகவும் ஒரு செய்தி அடிபடுகிறது. 'அட கர்மமே...' என்று தான் கதறத் தோன்றுகிறது!
பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பலன் என்ன?
கிரிக்கெட் அணியையும், வீரர்களையும் வாங்கியவர்கள் ஏதோ சில ஆயிரங்களையோ, லட்சங்களையோ தந்துபெறவில்லை. ஒவ்வொரு அணியும் சில நூறுகோடிகளுக்கு விலைபோயுள்ளது.
மும்பை அணியை முகேஷ் அம்பானி 439 கோடிக்கும்,
பெங்களூர் அணியை விஜயமல்லையா 438 கோடிக்கும்,
ஹைதராபாத் அணியை டெக்கான் கிரானிக்கள் நிறுவனம்420 கோடிக்கும்,
சென்னை அணியை இந்தியா சிமெண்ட்ஸ்357கோடிக்கும்,
டெல்லி அணியை ஜி.எம்.ஆர் குருப் 330கோடிக்கும்,
மொஹாலி அணியை நடிகை ப்ரித்திஜிந்தா 298கோடிக்கும்,
கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக்கான் 294கோடிக்கும்,
ஜெய்ப்பூர் அணியை எமர்ஜிங் மீடியா 263கோடிக்கும்,
ஏலம் எடுத்துள்ளனர்.
அணிகளுக்கு செலவழித்த பணம் தவிர்த்து வீரர்களை ஏலம் எடுத்த வகையிலும் ரூபாய் 144 கோடியை செலவழித்துள்ளனர்.
மேற்படி ஏலம் எடுத்தவர்கள் தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் நடிகர் நடிகையர். இவர்கள் விளையாட்டிற்கு அள்ளித் தரும் புரவலர்களல்ல. எந்தப்பணத்தை எங்கே முதலீடு செய்தாலும் அதை பல மடங்கு திருப்பி எடுக்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். அதுவும் சினிமா நட்சத்திரங்களோ நடித்தாலும் சரி, பொது நிகழ்ச்சிக்கு வந்துபோவதானாலும் சரி எல்லாவற்றுக்கும் பெரும் தொகையை எதிர்ப்பார்ப்பார்கள். (வர்த்தக ரீதியாக வெற்றிகான வேறெந்த விளையாட்டுகளைக் காட்டிலும் கிரிக்கெட் சரியாக இருக்கும் என்பதாலேயே அதில் நுழைந்துள்ளேன் என நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்).அதுவும் மேற்குறிப்பிட்ட இவர்களில் எவரும் இதுவரை இந்த நாட்டின் அடிப்படை பிரச்சனைகளில் அக்கரையோ, ஈடுபாடோ காட்டியவர்களில்லை.எனில் இவர்கள் இவ்வளவு பணத்தை அள்ளி இறைத்திருப்பதின் மர்மம் என்ன? விளையாட்டுகளின் போது பெறப்படும் ஸ்பானசர்களில் மட்டுமே போட்ட இவ்வளவு பணத்தையும் திருப்பி எடுத்துவிட முடியுமா? சாத்தியமா?
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் குப்தாவின் குமுறல்;
பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்டையில் கிரிக்கெட் அணிகளும், ஆட்டக்காரர்களும் விற்பனை பண்டம்போல் விலைபேசி வாங்கப்பட்டதற்கு இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் குருதாஸ் குப்தாவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது சலீம் மட்டுமே .
குருதாஸ் குப்தாவின் அறிக்கையில், 'இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பிற்கும், அதன் அணிகளை கோடிக்கணக்கில் ஏலம் எடுத்தவர்களுக்கும் எங்கிருந்து பணம் வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப் படவேண்டும்' என்று கோரியுள்ளார். இது மிகவும் அர்த்தமுள்ள, அவசியமான கோரிக்கையாகும். மேலும் அவர் 20-20 எனும் கிரிக்கெட் போட்டிகள் மிகப்பெரிய சூதாட்டம். இப்போட்டிகளை அடிப்படையாக வைத்து பல கோடி ரூபாய் சூதாட்டம் நடத்தப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் இந்த சூதாட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது..." என்று கூறியுள்ளதை சமூக அக்கறையுள்ளவர்கள் யாரும் அலட்சியப்படுத்திவிடமுடியாது. இந்த அறிக்கையை மேலும் ஆராய்ந்தால் கிரிக்கெட்டில் பெட்டிங் நடத்தும் புக்கீஸ்களுக்கும், கிரிக்கெட் அணியையும், ஆட்டக்காரர்களையும் விலைபேசி வாங்கியுள்ளவர்களுக்கும் உள்ள உறவுகள், தொடர்புகள், .. போன்றவைளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியுள்ளது.
ஏனெனில் அதிகாரபூர்வமாக கிரிக்கெட்டில் புழங்கும் பணத்தைவிட அதிகாரபூர்வமற்ற வகைகளில் பெட்டிங் நடத்தும் புக்கீஸ்களிடம்தான் பல ஆயிரம் கோடி புரள்கிறது. இதற்கு முன்பே இவர்கள் தங்கள் அபரிமிதமான பணவலிமையால் அணிகளையும், ஆட்டக்காரர்களையும் அந்தரங்கமாக விலைபேசியதன் மூலம் சில அவமானகரமான தோல்விகளுக்கு காரணமானவர்களாக பேசப்பட்டதையும், விவாதிக்கப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்காக இந்தியன் பிரிமியர்லீக் அமைப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்தியுள்ளது எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனசாட்சி இல்லாத ஆட்களின் அவமானத்திற்குரிய முயற்சி'' என்றும் குருதாஸ் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
சூதாடிகளை அரசாங்கமே அங்கீகரிக்கிறதா?
இந்தியாவில் முக்கியமான பல விளையாட்டுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் - விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் மட்டும் எல்லையற்ற அதிகாரத்துடன் இந்திய கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் அனுமதிக்கப்படுவது ஏன்? உண்மையில் விளையாட்டிற்கு சுதந்திரம் அவசியம் என்று கருதியதால் கூட இவ்வாறு தனிவாரியத்திற்கு கிர்க்கெட் தாரை வார்க்கப்பட்டிருக்கலாம் என நாமும் நம்புவோம். ஆனால் எந்தவித தார்மீக கட்டுப்பாடோ, சுயகட்டுப்பாடோ இல்லாத ஒரு விளையாட்டு அமைப்பு தன்னை 'இந்திய கட்டுப்பாட்டு வாரியம்' என்ற பெயரில் அடையாளப்படுத்திக்கொள்வது விசித்திரம். ஒரு வேளை இவர்களது கட்டுப்பாடு என்பது வாரியத்திற்குள் நேர்மை மற்றும் திறமைகள் நுழைந்துவிடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.இந்த வகையில் அந்த பெயருக்கு உள்ள அர்த்தத்தை அவர்கள் நியாயப்படுத்தவே செய்கிறார்கள்.
விளையாட்டு போட்டிகளில் நடக்கும் வில்லங்கள்
முன்பெல்லாம் விளையாட்டில் உண்மையான அக்கரை கொண்டவர்கள், பழிக்கு அஞ்சுபவர்கள் கிரிக்கெட் வாரிய பதவிகளில் இருந்தனர். ஆனால் இப்போதோ பெரும்பணம் செலவழித்தும், ஏடாகூடமானவழி களைக்கையாண் டும் பலர் பதவிகளை கைப்பற்றுவதால் கிரிக்கெட் போட்டிகளில் கீழ்த்தரமான செயல்கள் நடக்கின்றன. இந்தப்பதவியிலுள்ள சிலர் போட்டி என்று அறிவிக்கப்பட்டதும் கையூட்டாகக் கிடைக்கும் கமிஷன்களிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
வி.ஐ.பிக்களும், ரசிகர்களும் உட்காரும் சேர் ஒப்பந்தம்,
விளையாட்டு நிலவரத்தை கவரேஜ் செய்யும் டெலிவிஷன் ஒப்பந்தம்.
விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் ஒப்பந்தம்
ஒளிவெள்ளத்தில் மிதக்கவைக்கும் மின்சார ஒப்பந்தம்
வாகன நிறுத்தங்களில் வசூலிக்கும் ஒப்பந்தம்
போட்டிகளுக்கான டிக்கெட் அச்சிடும் ஒப்பந்தம்
விளம்பரம் செய்யும் நிறுவங்களுடனாண ஒப்பந்தம்
சமையல் மற்றும் தின்பண்டங்களுக்கான ஒப்பந்தம்
என வகைகளிலும் கமிஷன் பெறுகிறார்கள்.
வி.வி.ஐ.பிக்கள், முக்கியஸ்தர்களுக்காக பெவிலியன், பெவிலியன் டெரஸ், A ஸ்டாண்ட் போன்றவை பெரும்பாலும் 60சதவிகிதம் காம்ளிமெண்டரிக் கென்றே ஒதுக்கப்படும். சில அற்பர்கள் இதையும் விற்று சொந்தமாக பணம் பண்ணி விடுகின்றனர்.வாலண்டரியர்களுக்கென வழங்கப்படும் பேட்சுகளைக் கூட பணம் வாங்கிக்கொண்டு தரும் அளவுக்கு கீழ்த்தரமானவர்களும் உள்ளனர் இந்த போக்கினைக் கண்டு அசோசேஷனினும், போர்டிலும் உள்ள பண்பாளர்கள், நல்லவர்கள் வெறுப்புற்று ஒதுங்கிவிடுகின்றனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசேசியன் பருவம் தவறி மழைக்காலத்தில் பொறுப்பில்லாமல் போட்டிகளை ஏற்பாடு செய்து பிறகு மழையால் ரத்து செய்து நான்கு போட்டிகளில் ரசிகர்களிடம் பெற்ற டிக்கெட் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் கரைபுரண் டோடுகிறது. ஒவ்வொரு போட்டி நடக்கும் போதிலும் ஒவ்வொரு காண்டி ராக்டை ஏலம்விடுவதிலும் கணக்கில்வராத பணம் கைமாறி நிர்வாகிகள் பலரை கோடீஸ்வரர்களாக, குபேரர்களாக மாற்றியுள்ளது. எனவேதான் பி.சி.சி.ஐயின் தேர்தல்கள் ஒரு மாநிலத்தில் நடத்தப்பெறும் மாபெரும் தேர்தல்களைப்போல் மிகப்பெரிய முஸ்திபுகளுடன் நடந்தேறும். இந்த தேர்தல்களில் கரைபுரளும் கரன்சி களையும், ஆடம்பரமான விருந்துகளையும், ஆள்கடத்தல் மற்றும் அடிதடிகளையும், சொல்லக்கூசும் அநாகரீகமான அணுகுமுறைகளையும் கவனிக்கும்போது தேர்தல்களில் வெற்றிபெறத் துடிப்பவர்களின் நோக்கம் வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது. எனவேதான் இதில் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல்வாதிகளான சரத்பவார், அருண்ஜேட்லி, திக்விஜய்சிங், அரசியல் பின்புலமுள்ள தொழிலதிபர் ஜக்மோகன் டால்மியா போன்றவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவின் விவசாய அமைச்சராக இருப்பவர் சரத்பவார். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பசி, பட்டினி, கடன்தொல்லைகளால் சுமார் ஒன்றரைலட்சம் விவசாயிகள் தற்கொலைசெய்துள்ளனர். நாள்தோறும் தற்கொலைசெய்து கொண்டுமுள்ளனர். ஆனால் இதிலெல்லாம் அக்கரைகாட்டி ஆக்கபூர்வமாக செயலாற்ற தவறிய விவசாய அமைச்சர் சரத்பவார் சதாசர்வகாலமும் கிரிக்கெட் வாரியத்தின் பவர் பாலிடிக்ஸ்சிலேயே தீவிரம் காட்டி சர்வவல்லமையுடன் வலம்வருகிறார். மத்திய அரசின் காபினெட் அமைச்சர் அந்தஸ்த்து மற்றும் அதிகாரத்தை விடவும் கிரிக்கெட் வாரியத்தலைவர் பதவி தந்துள்ள புகழும், பணமும், செல்வாக்கும் அதிகம் என்று கருதுகிறாரோ? என்னவோ அமைச்சர்?
கிரிக்கெட் வாரியமா? கிரிமினல் வாரியமா?
'எங்கெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் என்குரல் ஒலிக்கும்' என்பதாக நீதிபதி கிருஷ்ணய்யர் அநீதி தலையெடுக்கும் போதெல்லாம் அதிகாரவர்க்கத்தை எச்சரிக்கை செய்வார். அதைப்போலவே இப்போதும் அறிக்கை தந்துள்ளார்.'' சரித்திரம் படைத்து ஒற்றுமையை வளர்த்த இந்த மிக உயர்ந்த விளையாட்டுப் புதையலான கிரிக்கெட் கீழ்த்தரமான முறையில் இழிவுபடுத்தப்பட்டு வணிகச் சூதாட்டத்திற்காக பணத்திற்கு அடிமையாக் கப்பட்டுள்ளது. கவர்ச்சிப் பொருள்களைப்போல தங்களை ஏலம்விட அனுமதித்ததன் மூலம் இந்திய வீரர்கள் ஒரு சிறந்த விளையாட்டுக்கு அழியாத அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்" என்று கவலைப்பட்டுள்ள கிருஷ்ணய்யர், "இன்று வீரர்கள் ஏலம் விட்டது போல், நாளை அமைச்சர்கள், எம்,பிக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல துறைகளில் கற்றறிந்தோரும் ஏலம் விடப்படலாம்..." என எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் ஆர்வம் காட்டும் அனைவருமே மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செவிசாய்த்து, செயல்பட வேண்டிய எச்சரிக்கை மணியோசையை இது!
மூன்றாண்டுகளுக்கு முன்பு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு கார்பரேட் நிறுவனங்கள் சில எம்,பிகளுக்கு காசு தந்தனர் என்பதும் அதில் அந்த எம்,பிக்களின் பதவி பறிபோனதையும் நாம் அறிவோம். 'இனி ரகசியமாக பணம் தந்தால் தானே பிரச்சனை இனி நேரடியாகவே எம்,பிக்களை ஏலம் விட்டு விலைக்கு வாங்கலாம்' என்று கார்பரேட் நிறுவனங்கள் முயற்சிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்...? அதையும் கூட,'பாராளுமன்ற வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என கார்பரேட் நிறுவனங்கள் கரன் சிகளை வீசிஎறிந்தால் விலைபோகமாட்டோம் என்று வீரியத்தோடு கூற எத்தனை அரசியல்வாதிகள் தார்மீகபலம் பெற்றுள்ளனர்...?
நீதிபதியை அவமதித்த வாரியம்
சிலவருடங்களுக்கு முன்பு ஜக்மோகன் டால்மியா பி.சி.சி.ஐ தலைவராக இருந்த போது பெரும் பிரச்சனை உருவானது. தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள்உருவாயின. இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் அவர்களை நேரில் சென்று விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டது. நீதிபதிமோகன் சென்னை யிலிருந்து மும்பை பி.சி.சி.ஐ அலுவலகம்சென்றார். அலுவலகத்தை பூட்டி வைத்து நீதிபதி மோகன் உள்ளே வராதவாறு அவமானப்படுத்தியது பி.சி.சி.ஐ.
நீதிமன்ற உத்தரவையும், நீதிபதியையும் இப்படி பகிரங்கமாக அவமதித்த பி.சி.சி.ஐ மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதெல்லாம் நீதிமன்றங்களே நெருங்கமுடியாத அளவு வானாளவிய அதிகாரம் கொண்டதாக பி.சி.சி.ஐ செயல்படுகிறதோ என்ற பிரமைகளைத் தான் உருவாக்குகிறது.
விற்கப்பட்டதால் ஏற்படும் விபரீதங்கள்
'சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கிரிக்கெட் சூதாட்டத்தில் புழங்குகிறது' என்ற புகார்கள் உள்ளன. இந்திய அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கிய பணம் ரூ 34,400கோடி, கிராமபுற மக்களின் மருத்துவத்திற்கு ஒதுக்கிய தொகை ரூ12,050கோடி.ஆக இந்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கும்பணத்தைவிடகிரிக்கெட்டில் புரளும் பணம் மிக அதிகம். கிரிக்கெட் வெறியர்கள்,கிரிக்கெட் பைத்தியங்களை மையப்படுத்தியே இந்த சூதாட்டம் இயங்குகிறது. டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொருவர் ஆட்டத்திற்கும், பெர்பாம்மன்சுக்கும் இவர்கள் பெட் கட்டுகிறார்கள். இப்படி பெட்டிங்கில் ஈடுபடுபவர்கள் சிலநூறு, சில ஆயிரங்கள் என்ற எல்லைகளைக் கடந்து சில லட்சங்கள் என்று விரிவடையும்போது, புழங்குகிற பணமும் சில பல ஆயிரம் கோடிகளை மீறி லட்சம் கோடியை எட்டிவிடுகிறது. இந்த அபரிமிதமான பணத்தால் சூதாடிகள் தான் சுகபோக வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களை அனுசரித்துப்போகும் ஆட்டக்காரர்களும், அதிகார மையங்களுமே ஆதாயமடைகிறார்கள். இதனால் விளையாட்டுத்துறைக்கு எள்ளளவும் லாபமில்லை என்பது மாத்திரமல்ல. விளையாட்டுத்துறையின் வீழ்ச்சிக்கே இந்த பணக்குவியல் பயன்படுகிறது.
ஏழைநாடு என்று சொல்லப்படுகிற இந்தியாவில் இப்படிப்பட்ட பகற்கொள்ளைகள் விளையாட்டின் பெயரால் விபரீதத்தை நிகழ்த்திக் கொண்டுள்ளன.
நமது நாட்டிலுள்ள 1,30,000 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக்கொண்டு செயல்படும் அவலநிலையில் உள்ளன. இந்தியாவில் பல கோடிக்குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று படிக்கவியலாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர். இப்படியாக சூதாடிகளிடம் போய்ச் சேர்ந்துள்ள இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயை கல்விக்கு திருப்பினால் இந்தியாவிலுள்ள அனைத்து பள்ளிகளிலுமே ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட்டு, அதிக பள்ளிகள் உருவாக்கி, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை சாத்தியப்படுத்திவிடலாம்.
விளையாட்டு ஆர்வலர்களின் வேதனை
உழைப்பில்லாமல், சிரமமில்லாமல் பலகோடி சம்பாதிப்பதற்கு சாத்திய மிருக்கிறது என்றால் இளைய தலைமுறையினருக்கு உழைப்பதில் ஆர்வம் ஏற்படுமா? விலைபேசப்படுவதும், விற்பனைக்கு ஆளாவதும் கௌரவமான அணுகுமுறையாகக் கருதப்படுமானால் சுயமரியாதையற்ற, பேராசை கொண்ட இளந்தலைமுறை வளர்ந்துவிடும். மேலும் இப்போது விளையாட்டுவீரர்களை சுலபத்தில் அணுகி பேரம் பேசும் வாய்ப்பு 'புக்கீஸ்'களுக்கு எளிதாக ஏற்பட்டுவிடும். இது விளையாட்டு வீரர்கள் மனதில் சஞ்சலத்தை உருவாக்கி சரிவுகளுக்குமே வழி சமைக்கும். விளையாட்டுகளம் என்பதே சமத்துவமானது. அங்கே,ஏற்றத் தாழ்வுகளின்றி ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை அர்பணிப்புடன் ஆற்றவேண்டும். இந்நிலையில் ஒருவருக்கு ஆறுகோடி ரூபாய் அளவுக்கு முக்கியத்துவம் என்பதும் மற்ற சிலருக்கு 40லட்சம் அளவிற்கே முக்கியத்துவம் என்றும்ஏலம் எடுத்து தீர்மானிிப்பது விளையாடுபவர்களுக்கிடையே வேற்றுமைகளை வளர்த்து விடும். விளையாட்டு என்பதே ஆனந்தமானது, ஆரோக்கியமானது என்பது மாறி அது வெறும் பணத்திற்கானது என்றானால் சச்சரவுகள் தான் அரங்கேறும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். இந்த நேரத்தில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் உல்மர் மர்மமான முறையில் திடீரென கொல்லப்பட்டதற்கு புக்கீஸ்களின் பின்னணி இருக்கிறது என்று பேசப்பட்டது நினைவுக்கு வருகிறது.
தீர்வுகளைத்தேடும் திசைவழியில்
இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது அரசாங்கமே தலையிடமுடியாத இரும்புகோட்டையாக உள்ளது. பெரும் பணமுதலைகளின் சங்கமமான இந்த சாம்ராஜ்யத்தில் மக்கள் பணம் மலைபோல் குவிகிறது. இதற்கு முறையான கணக்கு வழக்குகள் உள்ளதா என்று மத்திய அரசு இதுவரை மேற்பார்வை செய்ததில்லை. பலபெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை முறையாக ஆடிட்செய்து வருடாவருடம் பத்திரிகைகளில் பிரசுரிப்பதைப் போல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை ஒருமுறை கூட தங்கள் வரவு செலவு கணக்கை பற்றி மூச்சுவிட்டதில்லை.
வெளிப்படைத்தனமில்லாத செயல்பாடுகளால் தனது நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். எனவே கிரிக்கெட் பண ஆதிக்க சக்திகளின் கைகளிலிருந்து பறிக்கப்பட்டு மக்கள் கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும். வங்கிகள் தேசியமாக்கப்பட்டதுபோல, போக்குவரத்து துறை அரசுமயமாக்கப்பட்டதுபோல இந்திய கிரிக்கெட் வாரியமும் அரசுடமையாக்கப்படவேண்டும்.
அல்லது
சூதாடிகளின் பாதுகாப்பான புகலிடமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்ட. கிரிக்கெட்டை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்.
இப்படி சமூக விரோத சக்திகளின் கூடாரமாவதைவிடவும்,
ஏகபோக வர்த்தமாகவும், ஏலம்விடப்படும் அடிமைவர்த்தமாகவும் மாற்றமாகி நிற்பதைவிடவும்,
அரசியல் சக்திகளின் கைப்பாவையாக இருப்பதை விடவும்,
கிரிக்கெட்டே இல்லாமல் போவதால் நாட்டுக்கு என்ன இழப்பு வந்துவிடப்போகிறது.?
ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாறிவிட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கலைக்கப்படவேண்டும். சில காலமாவது பெரிய கிரிக்கெட் விளையாட்டுகள் நிறுத்தப்பட்டாலாவது நிலைமை சீரடையுமா என முயற்சித்து பார்க்கலாம். சமூகவிரோத சக்திகளுக்கு துணைபோவதை தடுக்கமுடியாத பட்சத்தில் கிரிக்கெட் விளையாட்டையே தடைசெய்வதில் ஒன்றும் தவறில்லை.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி அந்தந்த மாநில கிரிக்கெட் அசோஷியன் வரை குவிந்துள்ள பல்லாயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றி அந்த பணத்தில் அனைத்து விளையாட்டுகளும் தழைத்தோங்கச்செய்யலாம். 'விளையாட்டு என்பது சூதாட்டமல்ல' என்பதை நிருபிக்கவேண்டிய காலநிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இதைக்கண்டும் காணாமல் அலட்சியப்படுத்துவது நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும் அளவிட முடியாத அழிவைத்தந்துவிடும். மதுப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாரத் தைப்போல, சிகரெட் பீடி, புகையிலை போன்ற தீயபழக்கங்களுக்கு எதிரான பிரச்சாரத்தைப்போல, கிரிக்கெட்வெறி மற்றும் விளையாட்டு சூதாட்டத்திற்கும் எதிரான பிரச்சாரம் இன்று தவிர்க்க முடியாத அவசியமாகிறது.
விற்கப்பட்ட வீரர்கள் ஏலம்போன தொகை
சென்னை அணி
டோனி(இந்தியா) ரூ.6கோடி
ஜேக்கப் ஓரம்(நியூசிலாந்து) ரூ.2.7கோடி
அல்பி மோர்கள்(தென்ஆப்பிரிக்கா) ரூ.2.7கோடி
சுரேஷ்ரெய்னா(இந்தியா) ரூ.2.6கோடி
முரளிதரன்(இலங்கை) ரூ.2.4கோடி
ஹைடன்(ஆஸ்திரேலியா) ரூ.1.5கோடி
பிளமிங்(நியூசிலாந்து) ரூ.1.4கோடி
மைக்ஹஸ்ஸி(ஆஸ்திரேலியா) ரூ.1.4கோடி
பார்த்திவ் பாட்டேல்(இந்தியா) ரூ.1.3கோடி
ஜோகிந்தர் சர்மா(இந்தியா) ரூ.90லட்சம்
நிதினி(தென்ஆப்பிரிக்கா) ரூ.80லட்சம்
பெங்களூர் அணி
டிராவிட்(இந்தியா, முத்திரை வீரர்)
கல்லீஸ்(தென்ஆப்பிரிக்கா) ரூ.3.6கோடி
கும்பிளே(இந்தியா) ரூ.2கோடி
கேமரூன் ஒயிட்(ஆஸ்திரேலியா) ரூ.2கோடி
ஜாகீர்கான் (இந்தியா) ரூ.1.8கோடி
மார்க் பவுச்சர் (தென்ஆப்பிரிக்கா) ரூ.1.8கோடி
பிராக்கன்(ஆஸ்திரேலியா) ரூ.1.3கோடி
சந்தர்பால் (வெஸ்ட்இண்டீஸ்) ரூ.80லட்சம்
வாசிம் ஜாபர்(இந்தியா) ரூ.60லட்சம்
கொல்த்தாஅணி
கங்குலி _இந்தியா, முத்திரை வீரர்)
இஷாந்த் ஷர்மா (இந்தியா) ரூ, 3.8கோடி
கிறிஸ்கெய்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.3.2கோடி
மெக்கல்லம்(நியூசிலாந்த்) ரூ2.8கோடி
டேவிட்ஹஸ்ஸி(ஆஸ்திரேலியா) ரூ 2.5கோடி
சோயித் அக்தர் (பாகிஸ்தான்) ரூ 1.7கோடி
முரளிகார்த்திக் (இந்தியா) ரூ1.7கோடி
ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) ரூ 1.6கோடி
அகர்கர்(இந்தியா) ரூ1.4கோடி
உமர்குல் (பாகிஸ்தான்) ரூ60லட்சம்
தைபு(ஜிம்பாப்வே) ரூ.50லட்சம்
டெல்லி அணி
ஷேவாக்( இந்தியா,முத்திரைவீரர்)
கவுதம் கம்பீர் (இந்தியா) ரூ2.9கோடி
மனோஜ் திவாரி(இந்தியா) ரூ.2.7கோடி
முகம்மது ஆசிப் (பாகிஸ்தான்) ரூ.2.6கோடி
வெக்டோரி(நியூலாந்து) ரூ.2.5கோடி
தினேஷ் கார்த்திக் (இந்தியா) ரூ.2.1கோடி
சோயிப் மாலிக்(பாகிஸ்தான்) ரூ.2.கோடி
மெக்ராத்(ஆஸ்திரேலியா) ரூ.1.4கோடி
டிவில்லியர்ஸ(தென்ஆப்பிரிக்கா) ரூ.1.2கோடி
தில்ஷான்(இலங்கை) ரூ.1கோடி
மகரூப்(இலங்கை) ரூ.40லட்சம்
ஐதராபாத் அணி
சைமண்ட்ஸ்(ஆஸ்திரேலியா) ரூ.5.4கோடி
ஆர்.பி.சிங்(இந்தியா) ரூ3.5கோடி
ரோகித்சர்மா(இந்தியா) ரூ.3கோடி
கில்கிறிஸ்ட்(ஆஸ்திரேலியா) ரூ.2.8கோடி
அப்ரிடி(பாகிஸ்தான்) ரூ.2.7கோடி
கிப்ஸ(தென்ஆப்பிரிக்கா) ரூ2.3கோடி
லட்சுமண்(இந்தியா) ரூ1.5கோடி
ஸ்டைரிஸ்(நியூசிலாந்து) ரூ.70லட்சம்
சமந்தா வாஸ்(இலங்கை) ரூ.80லட்சம்
நுவான் சோய்சா(இலங்கை) ரூ.80லட்சம்
சமரசில்வா(இலங்கை) ரூ.40லட்சம்
ஜெய்ப்பூர் அணி
முகம்மது கயூப்(இந்தியா) ரூ.2.6கோடி
சுமித்(தென்ஆப்பிரிக்கா) ரூ.1.9கோடி
யூசப் பதான்(இந்தியா) ரூ.1.9கோடி
வார்னே(ஆஸ்திரேலியா) ரூ.18கோடி
முனாப் பட்டேல்(இந்தியா) ரூ.1.1கோடி
யூனிஸ்கான்(பாகிஸ்தான்) ரூ.90லட்சம்
லாங்கர்(ஆஸ்திரேலியா) ரூ.80லட்சம்
அக்மல்(பாகிஸ்தான்) ரூ.60லட்சம்
மொகாலி அணி
யுவராஜ் சிங்(இந்தியா முத்திரை வீரர்)
இர்பான் பதான்(இந்தியா) ரூ.3.7கோடி
பிரெட்லீ(ஆஸ்திரேலியா) ரூ.3.6கோடி
சங்கக்கரா(இலங்கை) ரூ.2.8கோடி
ஸ்ரீசாந்த்(இந்தியா) ரூ.2.5கோடி
பியூஷ் சாவ்லா(இந்தியா) ரூ.1.6கோடி
ஜெயவர்தனே(இலங்கை) ரூ.1.1கோடி
சர்வான்(வெஸ்ட் இண்டீஸ்) ரூ.90லட்சம்
கேடிச்(ஆஸ்திரேலியா) ரூ.80லட்சம்
ரமேஷ் பவார்(இந்தியா) ரூ.68லட்சம்
மும்பை அணி
தெண்டுல்கர்(இந்தியா,முத்திரை வீரர்)
ஜெயசூர்யா(இலங்கை) ரூ.3.9கோடி
ஹர்பஜன் சிங்(இந்தியா) ரூ.3.4கோடி
ராபின் உத்தப்பா(இந்தியா) ரூ.3.2கோடி
பொல்லாக் (தென்ஆப்பிரிக்கா) ரூ.2.2கோடி
மலிங்கா(இலங்கை) ரூ.1.4கோடி
போஸ்மேன்(தென்ஆப்பிரிக்கா) ரூ.70லட்சம்
பெர்னாண்டோ(இலங்கை) ரூ.60லட்சம்

Thursday, February 28, 2008

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்

ஊடக வரலாறு

எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகார மையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின.

அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக விரும்பிவெளிபடுத்தும் செய்திகளின்றி வேறெந்த செய்திகளையும் மக்கள் தெரிந்துகொள்ள வழியில்லை. நாற்சந்தியில் முரசைரைந்து நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட அரசு செய்திகளும், வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட கல் வெட்டுகளும் மட்டுமே அன்றைய தினம் மக்கள் அறிந்து கொள்ள முடிந்த செய்திகளாயிருந்தன.

'நவீன நாகரிகத்தின் சின்னம்' என்றும், 'பிறரிடமிருந்து கற்றுக்கொண்ட தந்திரம்' என்றும் பாரதியாரால் அர்த்தப்படுத்தப்பட்ட பத்திரிக்கை தொழில் சீனாவில் வேர்விட்டது, ஜெர்மனியில் உருப்பெற்றது, இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது.

17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கில செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. 17ஆம் நூற்றாண்டின் இறுதி காலக்கட்டத்தில் அமெரிக்காவிலும் செய்திதாட்கள் வெளிவரத்தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்கு பிறகே, 1780ல் முதல் செய்திதாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான 'ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கியின்' 'பெங்கால்கெஜட்' அந்தாளில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது.

முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்திதாட்கள் வெளிவந்தன முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் மாசத் தினசரிதை. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையை சேர்ந்த ஞானபிரகாசம்இந்த தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுப்பட்டு வரும் மூத்த பத்திரிக்கையாளர் அ.ம.சாமியின் 'விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள்' என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர்.'தின மாதச்சரிதை' விடுதலை இயக்கப்போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்ததாக தகவல் இல்லை. ஆனால் சுதேசிமித்தரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப்போராட்டங்களுக்கு வித்தூன்றியது என்ற தகவல்கள் இப்போது தான் வெளியாக ஆரம்பித்துள்ளன.

1831ல் வெளியான 'தமிழ் மேகசின்' தமிழின் முதல் இதழ் என்றும்,. 1856ல் வெளியான தினவர்த்தமானியே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் டாக்டர் மா.பா.குருசாமி.

ஆயினும் சுதேசிமித்திரனுக்கு முன்பே 'சேலம் சுதேசாபிமானி' என்ற மாதமிருமுறை இதழை1877லிருந்தே சே.ப.நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார்.இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு.மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழுக்குரியது. 1881 களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும், மலினப்பட்டு கையுட்டுப்பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணிர் கொண்டு வரமுடியம் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்திச் சொன்னவர் நரசிம்மலு.

1800களின் பிற்பகுதியலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. வேறெந்த இந்திய மொழிகளிலும் இவ்வளவு அதிகமான இதழ்கள் வெளியாகியிருக்குமா....? என்பது கேள்விக்குறி. அதே சமயம் மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவீததிற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொதுவிவகாரங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை.

இதனால் பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் பாடு,படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும்கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழ் பத்திரிக்கை படிப்பதை காட்டிலும் ஆங்கில பத்திரிக்கையில் தான் ஆர்வம்காட்டியுள்ளனர். எனவே மக்களை பத்திரிக்கை படிக்கவைக்க மன்றாடிபார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்து போன பத்திரிக்கைகள் அநேகம்.

பத்திரிக்கைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிலிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒருபைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகபடுத்தி 1000 பிரதிகளை தொட்ட பத்திரிக்கை ஜி.சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட 'சுதேசமித்திரன்' தான். சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ்மக்களால் இது தலையில் வைத்து போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்பாடுகளை சந்தித்த போதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகபடுத்தி கொண்டது.

காங்கிரஸ் பேரியக்கத்தின் எண்ணங்களை, நோக்கங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் மகத்தான பங்குபணி ஆற்றியது இவ்விதழ். ஜி.சுப்பிரமணிய ஐயர் முற்போக்கு வாதியாக, முன்னோடியாகத் திகழ்ந்தவர். விதவைப்பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகி கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிக்கையின் பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பலர் இடர்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிக்கையை தன் கூட்டாளி வீரராகவாச்சரியிடமே விட்டுவிட்டார்.

தி ஹிந்து பத்திரிக்கை ஜி .சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரனையாக மாறியது. ஆங்கில அரசின் அடக்குமுறைசட்டங்களால் சிறைசாலைக்கு சென்று மனச் சிதைவுகளுக்கு ஆளானார் ஜி.சுப்பிரமணிய ஐயர். சுதந்திர வேட்கையில், சுதேசாபிமானத்தை சாதரண மக்களிடம் சரியாக எடுத்துசென்ற சமூக கடமையை செய்த ஜி. சுப்பிரமணிய ஐயர் தான், மதுரையிலுள்ள பள்ளிகூடத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாரதியாரை சென்னைக்கு அழைத்து சுதேசிமித்திரனின் துணைஆசிரியராக்கி, பாரதியாரை இந்த பாருக்கே அறிமுகம் செய்தார்.

பற்றிக்கொள்ளும் நெருப்பு போல பத்திரிக்கைதளத்தில் கருத்துகளை பரப்பியவர் பாரதியார். சுதேசகருத்துகளை பரப்புவதே சுவாசமாக்கி கொண்ட பாரதியார் சுதேசமித்தரத்திரனை சுதந்திர வேட்கைகான போர்வாளாக மாற்றினார். ஆயினும் அவரது அதித ஆற்றலுக்கு சுதேசமித்திரன் மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. அவரது கவிதைகளை பிரசுரிப்பதற்கு சுதேசமித்திரன் ஆசிரியர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு 'சக்கரவர்த்தினி' மகளிர் மாத இதழின் ஆசிரியராக சமரசமற்ற கருத்துப்போர் நடத்தினார் பாரதியார்.

மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட 'இந்தியா' இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு ஆண்டு 1907. அந்த ஆண்டில் தான் இந்திய தேசிய காங்கிரஸானது தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாக பிளவப்பட்டது. தீவிரவாதிகளின் அணியில் இருந்த பாரதியார் திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு தீப்பிழம்பாக இந்தியாவில் கட்டுரைகளை எழுதினார். இதனால் இந்தியா இதழை அசிட்டவரான சீனிவாசனை ஆங்கில அரசு கைது செய்து ஐந்து வருடம் சிறையில் அடைத்தது. பாரதியார் தப்பிச்சென்று பாண்டிச்சேரியில் அடைக்கலமானார். பாண்டிச்சேரியிலிருந்து கொண்டே இந்தியா இதழை மூன்றாண்டுகள் மும்மரமாகக் கொண்டு வந்தார் பாரதியார். அந்நாளில் 'இந்தியா' இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள் தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழும் குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.

பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஷ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டு சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்தாருக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்குகுறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார். 'கார்டூன்' எனப்படும் கருத்து சித்திரத்தை தமிழ் பத்திரிக்கையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா இதழ். எப்படி இந்த கருத்து சித்திரத்தை ரசிக்கவேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் கூடவே வர்ணித்து எழுதினார் பாரதியார்.

இந்தியா இதழோடு 'பாலபாரதம்' என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார் தான். புதுச்சேரி புகழிடம் தானே என்றில்லாமல் 'விஜயா' என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தது எழுதிகுவித்தார் பாரதியார். இது புதுவையில் வெளியான முதல் நாளிதழாகும். பிறகு சூரியோதயம் என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான கர்மயோகியின் தமிழ் பதிப்புக்கும் பாரதியார் ஆசிரியராக இருந்தார். இப்போது இலவசமாக வழங்கப்படும் இதழ்களைப் போல அன்றே இலவசமாக விநியோகப் பட்ட இதழின் பெயர் தர்மம். இதிலும் ஆசிரியர் பொறுப்பேற்று தர்மயுத்தம் நடத்தினார் பாரதியார். பாரதியின் வெற்றி பெறாத முயற்சிகளாக முளையிலேயே அழிந்தது 'அமிர்தம்' என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், 'சித்திராவளி' என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தை பரப்ப எண்ணிய இதழும்!

பாரதியார் சுமார் 18 ஆண்டுகளே பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளார். இந்த குறுகிய காலகட்டத்திலேயே அவர் ஈடிணையற்ற சாதனையாளராக சகலவிதங்களிலும் முத்திரை பதித்துள்ளார். அவர் எழுதிய காலகட்டங்களில் தமிழ்நாட்டில், இந்தியாவில், சர்வதேச நாடுகளில் நிகழ்ந்த பெரும்பான்மையான நிகழ்வுகளை ஊன்றி கவனித்து விமர்சித்துள்ளார்.

நிரந்தரமாக ஒரே இதழில் பணியாற்ற முடியாமை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிக்கைகளில் எழுதுவது, பற்பல புதிய யுத்திகளை இதழியலுக்கு கொண்டுவந்தது. லட்சிய நோக்கத்தோடு பத்திரிக்கை நடத்தி தொடரமுடியாமல் துவண்டது,அப்படியும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு புதிய இதழ்கள் கொண்டுவர முயன்று முடியாமல் போனது.... என எண்ணற்ற இன்னல்களை பத்திரிக்கை அனுபவத்தில் பார்த்தவரான பாரதி மீண்டும் சுதேசிமித்திரனிலேயே வந்து சேர்ந்துவிட்டார்.

பாரதியாரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணியசிவா 'ஞானபானு', 'பிரபஞ்சமித்திரன்' என்ற இதழ்களை நடத்தி தீப்பிழம்பென சுதேசியத்தையும், தமிழையும் ஒருங்கே பரப்பினார். "உறங்கி கிடக்கும் தமிழ்சாதியாரை அறிவாகிய சாட்டையால் அடித்து எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உண்டு பண்ணி முன்னிலையில் கொண்டுவருவதே இப்பத்திரிக்கையின் நோக்கம்" ஞானபானுவின் 1915ஜூன் இதழில் பிரகடனப்படுத்தினார். கூடவே சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார்.

தென்நாட்டுத் திலகராக மக்களை தட்டி எழுப்பிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஞானுபானு'வின் ஆசிரியப் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான 'விவேகபாநு'விலும் இலங்கையிலிருந்து வெளியான வீரகேசரியிலும் தொடர்ந்து எழுதிய வ.உ.சி பத்திரிக்கை தொடஙுகும் முயற்சிகளில் ஈடுபட்டு அந்த எண்ணம் ஈடேறாமல் விட்டுவிட்டார்.

திரு.வி.கல்யாணசுந்தரனாரின் 'தேசபக்தன்' இதழ் 1917முதல் வெளியானது. தெருவெங்கும் தமிழ்முழக்கமும் ,தேசிய முழக்கமும் செய்யும் இதழாக இது வெளியானது. சமஸ்கிருதம் கலந்த மணிப் பிரவாள நடையிலேயே மற்ற பத்திரிக்கைகள் அன்று வந்து கொண்டிருந்த சூழலில் தனித்தமிழை, பழகு தமிழாக்கி மக்களிடையே பரவவிட்டார் திரு.வி.க. தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும் தொழிலாளர்களிடையே தமிழ்ப்பற்று, தேசப்பற்று வளர்வதற்கும் திரு.வி.க 'தேசபக்தன்' வழியாக தீவிர பணியாற்றினார். பிறகு 1920 தொடங்கி 1941 வரை 'நவசக்தி' என்ற வார இதழை திரு.வி.க நடத்தினார். அப்போது திரு.வி.கவின் குருகுலத்தில் உருவானவர்களே வெ.சாமிநாதசர்மா, கல்கி, கி.வா.ஜகந்தாதன் போன்றோர்.

மற்றொரு தேசபக்தரான வ.வே.சு ஐயரவர்களும் திரு.வி.க விற்கு பிறகு சிறிது காலம் 'தேசபக்தன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். இவர் திரு.வி.கவை விடவும் தீவிரமாகத் தனித்தமிழை கையாண்டவர். பத்தரிக்கையின் பக்க எண்களைக் கூட தமிழ் எண்ணிலையே குறிப்பிட்டார் வ.வே.சு ஐயர். சேலம் மருத்துவர். வரதராஜூலு நாயுடுவால் நடத்தப்பட்ட தமிழ்நாடு இதழுக்கு தமிழ் இதழியல் வரலாற்றில் தனி முக்கியத்துவமுண்டு. 1923-ல் வார இதழாக ஆரம்பிக்கப்பட்டு 1926ல் நாளிதழாக்கப்பட்டு 1931வரை வெளியான தமிழ்நாடு இதழ், சுதேசிமித்திரனுக்கு போட்டி இதழாக பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. இந்த இதழ் பல முன்னோடி இதழலாளர்களை தமிழ் இதழ் உலகிற்கு தநதது. 'பேனா மன்னன்' என்றழைக்கப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், மணிக்கொடி சீனிவாசன், வ.ரா, தி.ஜ.ர , 'தமிழ் மணி' ரெங்கசாமி, 'வந்தேமாதரம்' சீனிவாசன், கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பலர் இந்த இதழிலிருந்து உருவானார்கள். மருத்துவர் வரதராஜூலுநாயுடு தான் முதன் முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஆந்திரபிரஜா ஆகிய இதழ்களை ஆரம்பித்தார். டி.எஸ். சொக்கலிங்கம் 'தமிழ்நாடு' இதழுக்குப் பிறகு 'காந்தி' என்ற வாரமிருமுறை இதழை 1931ல் ஆரம்பித்தார். காலாணாவிலைக்கு விற்பனையான இவ்விதழ் காலப்போக்கில் நாளிதழானது. இவ்விதழ் நின்றபிறகு 1934ல் தினமணி ஆரம்பிக்கபட்டபோது அதன் ஆசிரியரானார். பாரதியின் நினைவுநாளான செப்டம்பர்11ல் ஆரம்பிக்குப்பட்ட தினமணி 'பாரதியின் கனவை நிறைவேற்றுவதே இதழின் லட்சியம்' என்று பிரகடனப்படுத்தியது.

தினமணி ஆசிரியர்குழுவிலிருந்த அத்தனை பேருமே தேசபக்தர்களாகவும், சிறந்த எழுத்தாளர்களாகவுமிருந்தனர். இதில் சிலர் சுதந்திர போராட்டத்தில்சிறையும் சென்றுள்ளனர். ஏ.என். சிவராமன், புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி... போன்றோரை துணை ஆசிரியர்களாக கொண்டு சொக்கலிங்கம் ஆசிரியராகப் பணியாற்றிய காலம் தினமணியின் வரலாற்றில் ஓர் பொற்காலமாகும்.

பிரபல பத்திரிக்கையாளர் சதானந்த்தால் ஆரம்பிக்கப்பட்ட தினமணி பிறகு ராம்நாத்கோயங்காவின் கைக்குமாறியது. அதற்கு பிறகு ஏற்பட்ட நிர்வாக அணுகுமுறைகள், அவர்கள் ஆசிரியர் குழுவினரை நடத்தியவிதம் போன்றவற்றில் அதிருப்தியுற்று சொக்கலிங்கம் தினமணியிலிருந்து வெளியேறி 'தினசரி' என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்தார். அவருடனேயே வெளியேறியவர்களில் புதுமைபித்தன், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி குறிப்பித்தக்கவர்கள். பொருளாதார நெருக்கடிகளால் 'தினசரி' திணறி நின்றுபோனது. பிறகு ஜனயுகம்,பாரதம்,நவசக்தி போன்ற பல பத்திரிக்கையும் நடத்தினார் சொக்கலிங்கம்.

பொதுவாகவே அந்நாளில் பத்திரிக்கையாளர் பலர் தேசபக்தர்களாக இருந்தனர். அந்திய துணிக்கடை எதிர்க்கும் மறியலில் "சுயராஜ்ஜியா" பத்திரிக்கை ஆசிரியர் சுப்பாராவ் மற்றும் நிருபர் ஓ.பி.ராமசாமி இருவரும் போலிஸ்சாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்கும் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

1920கள் வரை பத்திரிக்கைகளின் விற்பனை அதிகபட்சம் ஆயிரத்து சொச்சம் என்ற அளவில் தான் இருந்தது. இப்படியான நிலையிலிருந்த இதழியல் துறை மகாத்மாகாந்தியின் அரசியல் நுழைவு ஆரம்பமான பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டது. மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்கம், போன்றவைகளின் போது இதழ்கள் ஒரளவு விற்பனை கூடியது. உப்புசத்தியாக்கிரக போராட்டத்தின் போதோ மிகவும் உச்சபட்ச விற்பனையை எட்டின அன்றைய இதழ்கள்!

1930ல் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட 'சுதந்திரச்சங்கு' பத்திரிக்கை உலகில் ஒரு சூறாவளிபோல் சுழன்றது. எஸ்.கணேசன் என்ற தேசபக்தரால் நடத்தப்பட்ட சுதந்திரசங்குவின் ஆசிரியர் 'சங்கு'சுப்பிரமணியன். கதர்பிரச்சாரம், தீண்டாமை ஒழிப்பு, காந்தியின் பிரசங்கங்கள்..... போன்றவற்றை பிரசுரித்தே இப்பத்திரிக்கை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்பனையானது. இதன் மக்கள் மொழியிலான நடை, எள்ளலும், துள்ளலுமான தலைப்புச் செய்திகள் போன்றவை மக்களிடம் பெரும்வரவேற்புபெற்றது. அந்தாளில் சுதந்திர போராட்டத்தில் சிறைசென்றுவெளியான தியாகிகள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 'சுதந்திரச்சங்கு' அலுவலகம் சென்று அருகிலுள்ள கதர் கடையில் அலுவலக கணக்கில் ஒரு ஜோடி கதர் துணிமணிகளைப் பெறுவதும். அடுத்திருந்த உணவுவிடுதியில் பசியாற இரண்டு வேளை இலவசமாக உணவருந்திச் செல்வதும் வழக்கமாயிருந்துள்ளது. சுதந்திர வேள்வியில் சுடர்விடும் அக்கினிக் குஞ்சாக வெளிவந்த 'சுதந்திரச்சங்கு' 1938ல் அஞ்சாத வாசம் கண்டது.

அப்பழக்கற்ற தலைவராகவும், ஆளுமைமிக்க பேச்சாளராகவும், ஆற்றல்மிக்க இலக்கிய பேராசானாகவும் கருதப்பட்ட பா.ஜூவானந்தம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'ஜனசக்தி'வார இதழ் ஆரம்பத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் கருத்துகளை பரப்பியது. பிறகு 1942 செப்டம்பர் 30முதல் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தது. ஏகாத்திய எதிர்ப்பில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டியதில் ஜனசக்திக்கு தனியிடமுண்டு.

1930ல் ஆனந்த விகடன் இதழ் ஆங்கில அரசால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சில காலம் வெளிவராமல் தடைப்பட்டது. இந்தியாவிற்கு தமிழகம் தந்த தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் சதானந்தம் குறிப்பித்தக்கவராவார். தினமணியை ஆரம்பித்து வைத்த சதானந்தம் அதற்கும் முன்பே, முதன்முதலில் இந்திய அளவிலான செய்தி நிறுவனமாக 'அசோசியேட் பிரஸ் ஆப் இந்தியா'வை ஆரம்பித்து திறம்பட நடத்தியவர். ஆந்திரகேசரி பிரகாசத்தின் 'சுயராஜ்ஜியா' மகாத்மாகாந்தியின் 'யங் இந்தியா' ஆகியவற்றலெல்லாம் பணியாற்றியவர் சதானந்தம். 1939- 'பாரததேவி' என்ற பெயரில் நாளிதழ் மற்றும் வாரஇதழ் தொடங்கி நடத்தினார். இந்த பாரததேவியில் ஆசிரியராகப் பணியாற்றிய பக்தவத்சலம் பின்னாளில் தமிழகத்தின் முதலமைச்சரானார். மும்பையில் 'ப்ரீ பிரஸ் ஜெர்னல்' என்ற பிரபல ஆங்கில இதழையும், 'நவபாரத்' என்ற மராட்டிய இதழையும் சதானந்தம் கொண்டுவந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு மஹாராஷ்டிர அரசு 'ப்ரி பிரஸ் ஜெனரல் சாலை' என்று பெயர் சூட்டியுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு மணிமகுடமென திகழ்ந்த மணிக்கொடி டி.எஸ். சொக்கலிங்கம், வ.ரா, ஸ்டாலின் சீனிவாசன் ஆகிய மூம்மூர்த்திகளால் 1937ல் தொடங்கப்பட்டது. பல இலக்கிய முன்னோடிகள் இந்த இதழால் தமிழ் இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டப்ட்டனர்.

புதுச்சேரியிலும் பல இதழ்கள் விடுதலை வேட்கையுடன் வெளியாயின அவற்றில் மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் சுதந்திரம் இதழ் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாகாந்தி அவர்களால் நடத்தப்பட்ட 'யங் இந்தியா' இதழுக்கு அவர் சிறை சென்ற தருணங்களிலெல்லாம். ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சி.ராஜகோபாலச்சாரியாரும், மதுரையைச்சேர்ந்த ஜார்ஜ் ஜோசப்பும் தான் என்பது ஒரு பெருமையான செய்தியாகும். அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த காந்தியபொருளாதார நிபுணரான ஜே.சி.குமரப்பா காந்தி சிறை சென்ற காலங்களிலெல்லாம் 'ஹரிஜன்' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றவராவார். 1942ல் 'தந்தி' என்ற தமிழ் நாளிதழை தேசிய இதழாக தொடங்கினார் சி.பா.ஆதித்தனார். அதற்கு முன்பே தமிழன் என்ற பெயரில் பத்திரிக்கை நடத்தி விடுதலை வேட்கையை பரப்பினார் ஆதித்தனார்.நேதாஜிக்காக நிதித் திரட்டி அவரது இந்தியதேசிய இராணுவத்திற்கு உதவியது 'தினத்தந்தி'.

இவை தவிர காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகுரலாகவும், ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் சூரியோதயம் (1869), பஞ்சமன்(1871) 'திராவிடமித்ரன்'(1885) இரட்டை மலை சீனிவாசனாரால் நடத்தப்பட்ட 'பறையன்'(1893) அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ஒரு பைசா தமிழன் (1907) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

மதுவிலக்கு கொள்கையை மக்களிடையே பரப்ப இராஜாஜியால் கல்கி கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ் 'விமோசனம்'. இதே போல காந்தியின் கதர் பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்கென்றே அந்தாளில் கணக்கற்ற சிற்றிதழ்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இதே வகையில் தீண்டாமைக்கு எதிராகவும் ஏராளமான சிற்றிதழ்கள் தமிழில் ஆரம்பித்து நடத்தப்பட்டன.

பொதுவாக நாட்டைபாதிக்கும் முக்கிய பிரச்சினைகள், போராட்டங்கள் வெடிக்கும் போது மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருகிறது. மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவும், சில சமயங்களில் மக்களிடையே கருத்தாங்கங்களை உருவாக்கவும் இதழ்கள் பெரும் பணி ஆற்றியுள்ளன.

இதழியலானது மக்களிடையே ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை அறிந்தே அன்றைய தினம் பெரும் தலைவர்களெல்லாம் இதழ்களை தொடங்கி நடத்தினார்கள். திலகர், கோபாலகிருஷ்ணகோகலே, அரவிந்தர், அபுல்கலாம் ஆசாத், வி.எஸ்.சீனிவாசாச்சிரியார்.

ஆந்திரகேசரி பிரகாசம், ராஜாஜி, ஜவஹர்லால்நேரு, மதன்மோகன் மாளவியா, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தேசிய தலைவர்கள் இதழியல் பொறுப்பேற்று மக்கள் திரளை தங்கள் கொள்கைகள், கருத்துகளுக்கேற்ப அணிதிரட்டினர்.

இவ்விதமே தமிழ்நாட்டிலும் ஜீவா 'ஜனசக்தி'யையும், ஈ.வே.ரா பெரியார் 'குடியரசு', 'விடுதலை' போன்றவற்றையும் சி.என்.அண்ணாதுரை 'ஹோம்லேண்ட்', திராவிடநாடு, காஞ்சி போன்ற இதழ்களையும், பிரிட்டிஸ் பேரரசை ஆதரித்து திராவிட இயகத்தினர் திராவிடன் நாளிதழையும், நீதிக்கட்சி தலைவர் டி.எம்.நாயர் 'ஜஸ்டிஸ்' ஆங்கில இதழையும் நடத்தினார்கள். இவ்விதழ்கள் பிரிட்டிஷ் பேரரசை தீவிரமாக ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டதை கண்டித்தன.

அந்தாளில் தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் பிராமணர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் பிரமணரல்லாதோரில் பலர் தங்களுக்கு காங்கிரஸில் உரிய முக்கியத்துவம் இல்லை என கருதி காங்கிரஸுக்கு எதிராக இயக்கம் கண்டனர். மேலும் காங்கிரஸில் பிராமணர்களின் ஆதிக்கத்தால் பழமை, பிற்போக்கு சிந்தனைகள் சமூக சீர்கேடுகள் பாதுகாக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆங்கில அரசின் ஆதரவால் விதவைமறுமணம். தேவதாசி ஒழிப்புச்சட்டம், இட ஒதுக்கீடு சட்டம் போன்றவற்றை நீதிக்கட்சியின் ஆட்சி நிறைவேற்றியது.

திராவிட இயக்கத்தின் வருகையால் தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இவை பாமர மக்களிடையே படிக்கும் பழக்கத்தையும், விவாதிக்கும் ஆற்றலையும் வியக்கத்தக்க அளவில் வளர்த்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரதேசமொழிகளில் பிரசவமான இதழியல் துறை வளர்ச்சி 20ஆம் நூற்றாண்டின் அரசியல், சமூக சூழல்களால் இணையற்ற வளர்ச்சிகண்டன. இப்போது 21ஆம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப புரட்சி இணைய இதழ்களின் சகாப்தத்தை முன்னேடுத்துச் செல்கிறது.

-புதிய பார்வை (மார்ச் 16 ,2007)