Thursday, August 30, 2012

அமெரிக்காவின் பேராசை


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

அமெரிக்கா அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

"இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் வருவது தொடர்பான தயக்கம் இருக்கிறது. சில்லறை வர்த்தகம் தொடர்பான பல அந்நிய முதலீடுகளை இந்தியா தடுத்தவண்ணம் உள்ளது. இந்தியா வளர்ச்சி பெற வேண்டுமெனில் இதை அனுமதிக்க வேண்டும்.
இந்தியாவில் கடுமையான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்...."

ஒபாமாவின் இந்த பேச்சு அமெரிக்க முதலாளிகளின் விருப்பம்! அவர்கள் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டியது அந்த நாட்டு அதிபரின் கடமையும் கூட!

அதேபோல இந்தியாவிலுள்ள சுமார் 4கோடி சிறுவியாபாரிகளின் தொழில் பாதுகாப்பை பேண வேண்டிய கடமை இந்திய அரசுக்குள்ளது.

1990களுக்குப் பிறகு இந்திய அமெரிக்க வர்த்தக உறவுகள் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. 1991ல் அமெரிக்காவில் இந்தியர்களின் நேரடி முதலீடு என்பது வெறும் ஒரு கோடியே 13லட்சம் டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போதோ 300கோடி டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. மேலும் இந்தியப்பொருளாதாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு மென்பொருள் துறையில் இந்திய நிறுவனங்கள் செய்கின்ற வேலைகளும், பலன்களும் ஒரு முக்கிய அங்கமாயியுள்ளது. அதோடு சர்வதேச அரங்கில், ஐ.நா.சபையில் இந்தியாவின் முக்கியத்துவத்திற்கும் அமெரிக்க உதவி என்பது இன்றியமையாதது.

எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டே நாம் அமெரிக்க அதிபரின் அறிவுரையை அல்லது எதிர்பார்ப்பை பரிசீலிக்க வேண்டியவர்களாயுள்ளோம்.

அதிபர் பதவி ஏற்ற பின்பு இந்தியாவிற்கு இரண்டு முறை விஜயம் செய்தார் ஒபாமா. இதன்மூலம் அமெரிக்க முதலீடுகள் இந்தியாவிற்கும், இந்திய முதலீடுகள் அமெரிக்காவிற்குமான வர்த்தக பரிவர்த்தனைகள் கணிசமாக வளர்ந்தது.

2010-11-ல் மட்டும் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் 1.17 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தன. 2010 வரையிலும் கணக்கெடுத்தால் இந்தியாவில் அமெரிக்கர்களின் முதலீடு 48.75 பில்லியன் டாலர்களாகும்! இதனால் இந்தியப்பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோதிலும் சில விரும்பதத்தகாத விளைவுகளும் அரங்கேறவே செய்தன.

தற்போது அமெரிக்காவின் ஐ.டி.சி நிறுவனம் இந்தியாவில் தானியக்கொள்முதல் செய்கிறது. பங்கு வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் பல பாதிப்புகளை நாம் பாரத்துவருகிறோம்.

'ஆன்லைன்' வர்த்தகத்தால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இந்திய மக்களை விழி பிதுங்க வைத்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே நமது நாட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் பெரும்பாலானவை அந்நிய நாட்டு நிறுவனங்களுடையது தான்! சோப்பு, பற்பசை தொடங்கி குளிர்பானங்கள் வரை இந்திய உற்பத்தி சந்தைகளை அந்நிய நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன. தற்போது அதை இந்திய மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பையும் அமெரிக்க நிறுவனங்களே ஆக்கிரமித்துகொள்ளத் துடிக்கின்றன.

இந்த விசயத்தில் நாம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுரையை ஏற்பது தற்கொலைக்கு ஒப்பாகும்!

வாங்கும் திறன் அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. எனவே தான் அந்நிய வியாபாரிகள் இந்தியாவை ஆக்கிரமிக்க துடிக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் சென்ற ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் அந்நிய முதலீட்டை 51 சதவிகிமாக்க மத்திய அரசு முயற்சித்தது.

ஆனால் எதிர்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப்பால் நாடாளுமன்றமே ஒன்பது நாள் ஸ்தம்பித்தது. இந்தியா முழுமையும் இதற்கான மக்கள் கிளர்ச்சி போராட்டங்கள் மாபெரும் அதிருப்தியை பதிவுசெய்தது. எனவே அரசு பின்வாங்க வேண்டிய கட்டாயம் நிகழ்ந்தது.
அதே சமயம் அமெரிக்க முதலாளிகள் நமது அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி தந்து கொண்டிருப்பதின் தொடர்ச்சியாகத்தான் ஒபாமாவின் பேச்சும் அமைந்துள்ளது.

அந்நிய முதலீட்டை வரவேற்போம்! -அவை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்சத்தில்! எச்சரிக்கையோடு இருப்போம் - அவை இந்திய பொருளாதாரத்தை ஏப்பம் விடாத வகையில்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
16-7-2010

Monday, August 27, 2012

மலை - இயற்கை தந்த வரம்




                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ஒசோன் படலத்தில் ஓட்டை விழுந்து கொண்டிருக்கிறது
பூமி வெப்பமயமாகிக்கொண்டு வருகிறது.

காற்று அசுத்தமாகிறது,
நாட்டில் வறட்சி வாட்டி வதைக்கிறது
என்றெல்லாம் நாம் அடிக்கடி பேசுகிறோம், அனல்பறக்க விவாதிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் நமக்கு இயற்கை அன்னை தந்த பெரும் அருட்கொடையான மலைவளம், காடுவளம் போன்றவற்றை காப்பாற்றத் தவறியது தான்!

இது குறித்த நமது அறியாமைகள் அகன்று அக்கரைகள் மிகும் வண்ணமாக நமது மேற்கு தொடர்ச்சி மலையை உலகின் பாரம்பரியமிக்க இயற்கை பிரதேசமாக ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்காக இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்த ஐ.நாவின் இயற்கை சுற்றுச்சூழல் நிபுணர்கள், "மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை எழில்வளம் தங்களை பெருவியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆம். நாம் அறியத் தவறிய பாரம்பரிய உன்னதங்கள் பலவற்றை நமக்கு வெளிநாட்டார் தான் அவ்வப்போது அறியச் செய்கின்றனர்.

நாம் அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய மற்றும் அற்புத தகவல்கள் மேற்குதொடர்ச்சி மலை குறித்து உள்ளன.

1600கி.மீ நீளமும், 1,74,700 சதுர கீ.மீட்டர் பரப்பளவும் கொண்ட மேற்குதொடர்ச்சி மலை குஜராத் மாநில எல்லையான தப்தியில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, வழி தமிழகம் வந்து கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
இந்த மலையிலிருந்து இந்திய மக்களுக்கு நீர் ஆதாரமாகத் திகழும், மக்களின் உணவுக்கு உத்திரவாதமளிக்கும் நதிகளான நர்மதா, தப்தி, கிருஷ்ணா, கோதாவரி, காவேரி போன்றவைகளும், தாமிரபரணி, பவானி, வைகை, பெரியாறு, மணிமுத்தாறு, அமராவதி.... போன்ற பல ஆறுகளும் உற்பத்தியாகின்றன.

இந்த மேற்குத்தொடர்ச்சி மலையில் அற்புதமான அரியவகை தாவரங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அதில் பல மருத்துவக்குணம் கொண்ட மூலிகை தாவரங்களாகும்!
மேலும் 600வகை பறவையினங்கள், 800வகை மரப்பாசிகள், 600வகை பூஞ்சைகள் நூற்றுக்கு மேற்பட்ட பாலூண்ணிகள் நூற்றுக்கு மேற்பட்ட நீர்நிலம் வாழும் உயிர்கள், சிங்கம்,புலி, யானை, மான், வரையாடு போன்ற விலங்குகள், இலை உதிர்காடுகள், ஊசி இலைகாடுகள்.... போன்றவை உள்ளன. ஆகவே தான் இது உலக அளவில் பல்லூயிர் வளம் மிக்க இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் 10க்கும் மேற்பட்ட தேசியவனப்பூங்காக்கள் அமைக்கப்பட்டு, விலங்கினங்களுக்கான சரணாலயங்கள் உள்ளன. மூணாறு, கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலாதளங்களும், ஆனைமலை, அகத்தியமலை போன்றவைகளும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தான் வருகின்றன.

நாம் முக்கியமாக உணரவேண்டியது என்னவென்றால் இந்த மேற்குதொடர்ச்சி மலை இல்லையென்றால் இப்பகுதியில் மனித இனமே வாழமுடியாது என்பது தான்!

பருவமழையை தருவிக்கும் ஆற்றல், மிதமான வெப்ப நிலையை - அதாவது உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலையை பராமரிக்கும் ஆற்றல் கொண்டது இம்மலை!

புல், பூண்டு, பூச்சி, தாவரங்கள், பறவையினங்கள், விலங்குகள் போன்ற உயிரின பரவல் முறை இருந்தால் தான் இந்த பூமி மனித இனம் வாழ்வதற்கே தகுதிபடைத்ததாகும்!

இயற்கையின் பேராற்றலையும், பேரழகையும் இங்கே நாம் காணும் போது இது தான் இறைவனின் சாம்ராஜ்ஜியமோ என்ற பிரமிப்பு நமக்கு ஏற்படும்!
எனவே கிடைத்தற்கரிய இந்த இயற்கை பொக்கிஷத்தை நாம்பாதுகாக்க வேண்டும்.

இப்பகுதிகளில் அடிக்கடி சமூகவிரோதிகாளல் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ ஈடு செய்யமுடியாத இழப்புகளை உருவாக்குகிறது.
மேலும் விலங்குகள், பறவையினங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன. பாலித்தீன், பிளாஷ்டிக் கழிவுகள் மண்வளத்தை பாதிக்கின்றன.
ஐ.நாவின் அறிவிப்பு இது குறித்து விழிப்புணர்வை நமக்கு ஏற்படுத்தட்டும். காடுவாழ்ந்தால் தான் நாடும், நாமும் வாழமுடியும்!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                                9-07-2012



குழந்தைகளை அடிக்காதீர்


                                                                                                                      -சாவித்தரிகண்ணன்



ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது' என்று நமது உச்சநீதிமன்றம் 2000த்தில் அறிவித்தது.
இதன்படி இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மாணவர்கள் உடல் மற்றும் உளரீதியாக தண்டிக்கப்படுவதற்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளன.

2007 ல் தமிழக அரசு இதை சட்டமாக்கியது. நமது மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் நான்காவது அத்தியாத்தில் 17வது பிரிவு மாணவர்கள் மீதான எந்தவகை தாக்குதலையும் முற்றிலுமாக தடைசெய்கிறது.

சரி அதனாலென்ன...?
சட்டம்போட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
'சரியாகாது' என்பதற்கான உதாரணம் தான் கல்கத்தாவில் சாந்திநிகேதன் நிர்வாகத்திற்கு சொந்தமான ஒரு பள்ளியில் நடந்த சம்பவம் சொல்கிறது.

அந்தச் சின்னஞ்சிறு மாணவி இரவில் படுக்கையை நனைத்துவிட்டாள்! இதற்காக சிறுநீர் கழிக்கப்பட்ட
அந்த படுக்கையை நக்கும்படி அம்மாணவி விடுதியின் காப்பாளரால் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறாள்.

உடல்நிலை சரியில்லாதபோது குழந்தைகள் இவ்விதம் படுக்கையை நனைப்பது ஒரு சாதாரண சம்பவமே! ஒவ்வொரு குடும்பத்திலும் அடிக்கடி நிகழும் நிகழ்வே!

மேற்படி சம்பவம் விடுதி காப்பாளரின் சகிப்பின்மையை வெளிப்புடுத்துகிறது. அதோடு எதிர்க்க வலுவில்லாத குழந்தைகளின் மீது தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கும் யாருமே கடைந்தெடுத்த கோழைகள் தான்!

குழந்தைகளை நெறிப்படுத்த - மாணவர்கள் விதிகளை மீறும்பொது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர - பற்பல அணுகுமுறைகள் உள்ளன. இதற்கு அன்பும், ஆளுமைத் திறனும் அவசியமாகிறது.

அவர்கள் செய்யும் தவறை அவர்களே உணர்ந்து திருந்தும் படி எடுத்துச் சொல்லலாம். மீண்டும் தவறிழைக்க நேர்ந்தால் அதற்கு அவர்களையே பொறுப்பேற்கச் செய்யலாம்!

அன்பால் முடியாதது எதுவுமில்லை!

அன்பும், ஆளுமைப் பண்பும் கொண்ட ஆசிரியரின் ஒரே ஒரு வார்த்தை அல்லது ஒரே ஒரு பார்வை மாணவர்களை நெறிப்படுத்த போதுமானதாகிறது.
தன்நிலை இழந்து கோபப்பட்டு தண்டிக்கும் போது அந்த ஆசிரியர் உண்மையில் தோற்றுப்போகிறார்!

அடிப்பது, தண்டிப்பது மாத்திரமல்ல, பலர் முன்நிலையில் மாணவர்களை இழிவாகப்பேசுவதும் பெரும் குற்றமாகும்!

ஆசிரியர்களின் அவமான சுடுசொற்களை தாங்கமுடியாமல் பள்ளியை விட்டு நின்ற மாணவர்கள் அநேகம்! இதற்கு கணக்கு வழக்கே இல்லை!

நம்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 8,000மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு முழுக்க, முழுக்க பெற்றோர்களும், ஆசிரியர்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

உலகில் முன்னேறிய நாடுகள் பலவற்றில் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பது ஒரு குற்றநடவடிக்கையாக - கடுமையான குற்றமாக - அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நமது நாட்டிலோ
'அடியாதமாடு படியாது' 'அடி உதவுகிறார் போல் அண்ணன்தம்பி கூட உதவமாட்டான்'..என்றெல்லாம் கூறி குழந்தைகளை விளாசும் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே அதிகம்!

அச்சுறுத்தியும், பயப்படும்படியாகவும் வளர்க்கப்படும் குழந்தைகள் வருங்காலத்தில் முட்டாள்களாக, செயலற்றவர்களாகிவிடுகிறார்கள் குழந்தைகளின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதே அதர்மம்!

கட்டுப்பாடு, விதிகள், சட்டங்கள், ஒழுக்கமுறைகள்...இவை குழந்தைகளை பொறுத்தவரை விதிவிலக்குகளே!
பயமறியா காளைகளாக, சுதந்திரமாக அவர்கள் வளரவேண்டும். அது அதற்கான வயதில் அவர்கள் அறியவேண்டியதை அறியச் செய்து நெறிப்படுத்தினால் போதுமானது!

குழந்தைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கே தகுதியற்றவர்களாகிறார்கள்


                                                                                                                              NDTV -THE HINDU,
                                                                                                                              EDITORIAL VOICE,
                                                                                                                              10-7-2010

Sunday, August 5, 2012

அண்ணாஹசாரேவின் அரசியல் பிரவேசம்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


"அரசியலில் ஈடுபடப்போகிறோம்" என்ற அண்ணாஹசாரேவின் அறிவிப்பு சிலருக்கு ஆனந்தத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் அவ்வியக்கதிற்குள்ளே ஏற்படுத்தியுள்ளது.
அவரது எதிரிகளை ஏளனம் கொள்ளவைத்துள்ளது.
ஒரு இயக்கம் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தங்களுக்குள் பரந்துபட்ட விவாதத்தை நடத்தியிருக்கவேண்டும். இயக்கத்தில் உள்ளவர்களின் பலதரப்பட்ட கருத்துகள் பரிசிலிக்கப்பட்டு, ஆழமான புரிதலுக்கு வந்திருக்கவேண்டும். அதுமட்டுமின்றி எந்த மக்களுக்காக அரசியல் இயக்கம் தொடங்குகிறார்களோ அந்த மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன? அவர்கள் நடத்திகொண்டிருக்கும் போராட்டங்கள் என்னென்ன? அவர்களின் துன்பதுயரங்கள் எத்தகையது? எதிர்ப்பார்ப்புகள் என்ன? என்பதுபற்றியெல்லாம். விவாதித்து அதற்கேற்ப கொள்கைகள், இலட்சியங்கள், இலக்குகள் ஏற்படுத்திருக்கவேண்டும்.

தங்களது பலம் என்ன? பலவீனங்கள் என்ன? என்று சுயமதிப்பீடு செய்திருக்கவேண்டும். பலத்தை அதிகரித்துக்கொண்டு, பலவீனங்களை கலைவதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்திருக்கவேண்டும்.
இவை எதுவுமே நடைபெறவில்லை. தனது உண்ணாவிரதத்தின் மூலமாக எந்த வெற்றியும் ஏற்படவில்லை என்று அவசரப்பட்டு ஆவேசமாக எடுத்த தீர்வாக அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது. இது வரை அண்ணாஹசாரே ஊழலுக்கு எதிராக நான்கு முறை உண்ணாவிரதப்போராட்டங்களை மேற்கொண்டார். இந்த போராட்டங்களை ஆரம்பத்திலிருந்த எழுச்சியும், மக்கள் திரளும் படிபடியாக குறைய ஆரம்பித்தன. அண்ணா குழுவினரின் ஆவேசமான அறிக்கைகள் காங்கிரஸ் மீதான அவர்களின் தாக்குதல்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தான அவர்களின் விமர்சனங்கள் போன்றவை அனைத்துகட்சிகளிலும் அவர்களுக்கு எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்தது. அதுவும் குறிப்பாக காங்கிரஸிக்கு எதிரான தீவிர தாக்குதல்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்த அண்ணாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான அனுதாபிகளை கூட அந்நியப்படுத்தி விட்டது. மக்களும் மெல்ல, மெல்ல பின்வாங்க தொடங்கினர்.

அண்ணாஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு என்ற இலட்சியத்திற்கு இன்றைய பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிரிகள் தாம். ஆனால் அந்த எதிர்களை விடவும் அண்ணாஹசாரே குழுவினரின் எண்ணங்களும், நடவடிக்கைகளுமே அவர்களுக்கு பெரும் எதிரியாகி விட்டிருக்கின்றன. இந்த உண்மையை அவர்கள் உணர்ந்தறியாதவரை அவர்களின் எந்த புதிய முயற்சிகளும், போராட்டங்களும் பலனளிக்காது.


அறப்போராட்டம் என்பதின் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக் கொள்ளாமல் உண்ணாவிரதத்தை எதற்கு பயன்படுத்தவேண்டும். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை உணராமல் அண்ணாஹசாரே குழுவினர் இயங்கியதால் வந்த விளைவுகள் இவை. உண்ணாவிதம் என்பது முதலில தன்னைத்தானே தூய்மைப்படுத்தி கொள்வது, ஆன்மபலத்தை அதிகரித்துகொள்வது, தன்னுடைய நோக்கங்களை யாரையும் காயப்படுத்தாமல் அவர்களின் மனதை உலுக்கிச் சிந்திக்கசெய்வது, இதன்மூலம் படிப்படியாக ஒரு மனமாற்றத்தை அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் ஏற்படுத்துவது என்பதேயாகும். எக்காரணம்கொணடும் உண்ணாவிரதபோராட்டம் என்பது எவரையும் நிர்பந்திக்கவோ, அச்சுறுத்தவோ பயன்படலாகாது. இவை தாம் காந்தி கடைப்பிடித்த உண்ணாவிரதப் போராட்டங்களின் அடிநாதமாய் இருந்தது.

ஆனால் அண்ணா குழுவினரோ பொறுமை இழந்துவிட்டனர். தங்களுக்கு திரண்ட பெரும் கூட்டத்தை கண்டு ஆளும் தரப்பு அடிபணியவேண்டும் என்று எதிர்ப்பார்த்தனர். ஒரே மாதத்திலோ, ஒரு வருடத்திற்குள்ளோ ஒரு வலுவான லோக்பால் சட்டம் உருவாகி அது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகிவிடும் என்று நம்பினர்.

உண்மையில் அண்ணா குழுவினர் தந்த அழுத்ததால் தான் மத்திய அரசு ஒரு லோக்பால் சட்டம் இயற்றவேண்டிய நிர்பந்ததிற்கு தள்ளப்பட்டது. ஊழல் புகார்கள் தரப்பட்டால் அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் கூட மூன்று மாதத்தில் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் தருவதென்ற முடிவுக்கு வந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஓரளவு அச்சங்கள் கூட ஏற்படலாயிற்று. ஆனால் அரசுகொண்டுவந்த லோக்பால் மசோதாவில் சில பலவீனங்கள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதை வலப்படுத்துவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு நிச்சயம் அமையும். அது வரை மக்கள் எழுச்சியையும், போராட்டத்தையும் அணையாமல் வளர்த்தெடுக்க வேண்டியது அண்ணா குழுவினரின் பொறுப்பாகும்.

ஆனால் தங்களுக்கு கூடிய கூட்டத்தின் பலமும், தங்களுக்கு இணையதளத்தில் கிடைத்துக்கொண்டிருக்கும் மாபெரும் வரவேற்பும் அண்ணா குழுவினரை நிதானமிழக்க வைக்கவிட்டதுபோலும். ஆளும் தரப்பு தங்களை கண்டு பயப்படவில்லை என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த அணுகுமுறை தந்த ஏமாற்றம். அவர்களை ஆளுங்கட்சியின் மீதான வெறுப்புக்குத்தள்ளி யது. ஏமாற்றத்திற்கு, விரக்திக்கு வழிவகுத்தது முடிவில் திடிரென்று எழுந்த ஆவேச உணர்வில் அரசியல் இயக்கமாக மாறப்போகிறோம் என அறிவித்துவிட்டனர். இது அரசியல் இயக்கம் குறித்த புரிதல்கள் அண்ணா இயக்கத்தினருக்கு அறவே இல்லை என்பதையே காட்டுகிறது.

ஓர் அரசியல் இயக்கத்திற்கான ஆழமான அடித்தளம், அசாத்தியமான உழைப்பு, அனைத்து தரப்பு மக்களையும் வசீகரிக்கும் பக்குவம், இந்த நாட்டுமக்களின் பிரதானமான பிரச்சனைகள் பற்றிய புரிதல்கள் ..... போன்ற எந்த அம்சங்களும் இல்லாமல் மக்களிடமிருந்தே அரசியல் இயக்கத்திற்கான கொள்கைகளை, இலட்சியங்களை எழுதியனுப்புங்கள் என்று கேட்ககூடிய பலவீனமான தலைவர்களால் எப்படி வெற்றிகரமான அரசியல் கட்சியை கட்டி எழுப்ப முடியும்?.

மகாத்மா காந்தி காங்கிரஸுற்கு தலைமை ஏற்பதற்கு முன்பு தன்னை ஒரு மக்கள் தொண்டனாக பாவித்து, இந்தியாவின் மூளைமுடுக்கெல்லாம் பயணப்பட்டு, பலதரப்பட்ட மக்களை பார்த்து பேசி, அம்மக்களை மிக ஆழமாக புரிந்துகொண்டார். பிரிட்டீஷ் ஆட்சியில் பிரதிநிதித்துவம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸை அரசியல் அதிகாரத்திலிருந்தே அந்நியப்படுத்தி தீண்டாமை ஒழிப்பு, ஹரிஜனசேவை, கிராமபுறநிர்மாணத்திட்டம், கதர் உற்பத்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமை... போன்ற பலதரப்பட்ட களப்பணியில் ஈடுபடவைத்தார் காந்தி
இப்படியாக அரம்பத்திலிருந்த காங்கிரஸின் அடையாளத்தையே மாற்றினார். அதே சமயம் எந்த கட்சியில் இருப்பவரும் காங்கிரஸுக்கு வந்து பணியாற்ற தடையில்லை என்ற ஜனநாயகத்தையும் ஏற்படுத்தினார். அதனால் தான் அக்காலக்கட்டத்தில் காங்கிரஸிலிருந்தே இருந்த ஒரு பிரிவினர் சுயராஜ்யா என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். மேலும் கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், இந்துமத ஆதரவு இயக்கத்தினர், முஸ்லீம்கள் போன்ற பலதரப்பட்ட கருத்து நிலைக்கொண்டவர்களும் காந்தி தலைமையிலான காங்கிரஸில் இருந்தனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு காங்கிரஸே நேரடி அரசியலில் ஈடுபட அனுமதித்தார் காந்தி.

ஆனால் தற்போது அண்ணா குழுவினர் காங்கிரஸை கடுமையாக எதிர்த்தன் மூலம் காங்கிரஸ் கட்சியிலுள்ள ஊழல் எதிர்ப்பாளர்களை தங்கள் இயக்கத்திற்குள் இணைந்து இயங்க முடியாமல் செய்துவிட்டனர். அனைத்து அரசியல் இயக்கங்களையும், அரசியல்வாதிகளையும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததன் மூலம் அவர்களிடமிருந்தும் அந்நியப்பட்டுவிட்டனர். இந்நிலையில் தங்கள் இயக்கத்தை மிகவும் சுருக்கிக்கொண்டனர்.

இது வரை ஊழல் எதிர்ப்பு என்ற உன்னதநோக்கத்திற்கானவர் என்ற அடையளத்தை மட்டுமே கொண்டிருந்த அண்ணாகுழு, அரசியல் களத்தில் உள்ள மற்ற கட்சிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் அளவுக்கும், நெலிவு சுளிவுகளோடு இயக்கத்தை வழிநடத்தி செல்லும்அளவுக்கும் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளவில்லை.

அண்ணா குழுவினர் டெல்லி, மும்பை, சென்னை போன்ற மாநகரங்களின் படித்த மேல்தட்டு மக்களிடம் மட்டுமே ஆதரவு பெற்றுள்ளனர். இது வரை இவ்வியக்கம் பரந்துப்பட்ட இயக்கமாகவோ, பாமரர்கள் பங்கெடுத்த இயக்கமாகவோ வளர்க்கப்படவில்லை. பெருநகரங்களை தவிர்த்து சிறுநகரங்கள் சிற்றூர்கள், கிராமங்கள், என மக்களை சந்தித்ததில்லை.

அதோடு ஊழலுக்கு அப்பால் இந்தியாவை அலைகழிக்கும் ஜாதி, மத துவேஷங்கள், மதுகொடுமைகள், மக்களை கொள்ளையிடும் வர்த்தகபோக்குகள், விவசாயிகளின் பிரச்சனை, சிறுகுறுந்தொழில்கள் நசிவு, வறுமை, வேலையின்மை.... போன்ற மக்களின் அடிப்படை வாழ்வாததிற்கான போராட்டங்களை பற்றி இவர்கள் இது வரை அக்கரைக்காட்டியதில்லை. இவை குறித்து இவர்கள் கொண்டுள்ள கருத்து நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியதில்லை.

காந்திய அரசியல் இயக்கத்திற்கான பண்புகள் சில உள்ளன.
ஃ அது எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தனிநபர்களையோ எதிரியாக பாவிக்காது. துவேஷமாகவோ வெறுப்பாகவோ பேசாது.

ஃ எல்லா அரசியல் இயக்கங்களுக்குள்ளும், பலதரப்பட்ட தனிநபர்களுக்குள்ளும் தன்செயல்பாடுகளால் தொடர்ந்து நல்அதிர்வுகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்திய வண்ணமிருக்கும். இந்த நோக்கங்களுக்கு மாறானவர்களிடம் கூட ஒரு போதும் துவேஷம் பாராட்டாது. அதோடு பாமரமக்களிடம், ஏழை எளியோரிடம் உறுதியான பிணைப்பை கொண்டிருக்கும்.

ஃ எத்தகைய எதிர்ப்பையும், அவமானத்தையும், துன்பத்தையும் இன்முகத்துடன் ஏற்கும்.
மேற்படி பண்பு நலன்கள் தங்களுக்கோ, தங்கள் இயக்கத்திற்கோ இருக்கிறதா? என்ற சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டு அதற்குபிறகு அரசியலுக்குள் நுழையட்டும் அண்ணாஹசாரே குழுவினர்.


                                                                                                                                                05-08-2010




Friday, August 3, 2012

இயற்கைவேளாண்மைக்கான கதவுகள் திறக்கிறது



                                                                                                                        -சாவித்தரிகண்ணன்
"தமிழ்நாட்டில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு ஆண்டுக்காண்டு நமக்கு தரும் உரத்தை மேன்மேலும் குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது"

என்று நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிற்கு - குறிப்பாக பிரதமருக்கு - கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்திற்கு மாத்திரமல்ல, எல்லா மாநிலங்களுக்குமே கடந்த இரண்டாண்டுகளாக மத்திய அரசு உர ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. காரணம் என்ன?

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இயற்கை விஞ்ஞானிகள், இயற்கைவேளான்துறை சமூக ஆர்வலர்கள்... போன்ற தரப்பிலிருந்து நமது மத்திய அரசுகக்கு ஒரு எச்சரிக்கை தொடர்ந்து தரப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்கை உர வேளாண்மைக்கான தேசியதிட்டம் ஒன்றை அறிவித்தது. இது மேற்படி அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

"பசுமை புரட்சி என்ற பெயரில் நமது நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க நிலங்களில் கோடிக்கணக்கான டன் ரசாயண உரங்களை கொட்டினோம். இதனால் உற்பத்தி அதிகரித்த தென்னவோ உண்மை! ஆனால் நிலவளம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. விளைநிலங்கள் பல மலட்டு தன்மை கொண்டவைகளாகிவிட்டன! சுற்றுச்சூழல் மாசுப்பட்டுவிட்டது. எனவே ரசாயண உரப்பயன்பாட்டை படிப்படியாக குறைக்காவிட்டால் இந்திய வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே இனி ரசாயண உரங்களுக்கு மானியம் குறைக்கப்படும்! இயற்கை உரத் தயாரிப்புகள் ஊக்கப்பபடுத்தப்படும்" என்றது மத்திய அரசு.

இதைத் தொடர்ந்தே தற்போதைய நிலைமைகள்!

இந்தச் சூழலை தமிழக அரசு சாதகமாகப் பயன்படுத்தி இயற்கை உர உற்பத்தியில் சாதனை படைக்கவேண்டும். அதற்கான சூழல் வெறெந்த மாநிலத்தை விடவும் தமிழகத்தில் தான் சாதகமாக உள்ளது.
ஆம்.! இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்விலும், இயற்கை உரத்தயாரிப்பிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.
தமிழக அரசு இனி உரம் வேண்டும் என்று மத்திய அரசிடம் மடிப்பிச்சை கேட்கும் நிலை அடியோடு மாறி, இங்கேயே இயற்கை உர உற்பத்தியில் தன் நிறைவு பெற வேண்டும்.

தமிழகத்தில் 93-94 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி 25% மாக இருந்தது. அது தற்போது 11% மாக குறைந்துள்ளது. காரணம் ஆண்டுதோறும் சுமார் 30லட்சம் மெட்ரிக் டன் ரசாயண உரங்களை நமது நிலங்களில் கொட்டி நமது நிலத்தை நாம் பாழ்படுத்தி விட்டோம்.
ரசாயண உரங்கள் பெட்ரோலிய பொருட்களில் இருந்தும் கந்தகம், பாஸ்பரஸ், நைட்ரஜன் போன்ற தாதுக்கலவைகளாலும் தயாரிக்கப்படுகிறது.
இவற்றை வெளிநாட்டிலிருந்து அதிக விலைகொடுத்து வாங்கி நமது விளைநிலங்களில் போடுகிறோம். இதனால் மண்ணிலுள்ள மண்புழு போன்ற விவசாயத்திற்கு தேவையான நுண்ணுயிர்கள் அழிந்து, விவசாயம் பாழானது தான் நாம் கண்ட பலன்! அத்துடன் சுற்றுச்சூழல் பெரிதும் கெட்டு, விவசாயத்திற்கு நன்மை செய்யும் பூச்சிகள், பறவையினங்கள் கூட அழிந்துவருகின்றன.

இந்தியா மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவையும் தற்போது இயற்கை உர உற்பத்தியில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.
உணவக கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பதில் சீன அரசு மும்மரம் காட்டுகிறது. அது போல் நாமும் உணவகக்கழிவுகள், காய்கறி, பழங்களின் கழிவுகள் ஆடு.மாடு, கோழி போன்றவற்றின் கழிவுகள், இழை,தழை, சருகு, தானியங்கள் போன்றவற்றிலிருந்து தொழு உரம், பசுந்தாள் உரம், தென்னைநார் கம்போஸ்ட் உரம், பிண்ணாக்கு உரம், உயிரி உரங்கள்... போன்றவைகளை செலவில்லாமலும் அல்லது மிகக்குறைந்த செலவிலும் உருவாக்கலாம்.

இதற்காக அரசு திட்டங்கள் தீட்டட்டும். கூட்டுறவு முறையில் இயற்கை உர உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்கப்படுத்தட்டும்! இயற்கை கழிவுகளை உரமாக மாற்றினால் சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் தீரும். ரசாயண உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவிடப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்! உரத்திற்கான பெரும் செலவுகள் குறைந்தால் விவசாயிகள் கடனாளியாக மாட்டார்கள். தற்கொலைகள் தவிர்க்கப்படும்! இயற்கைவழி வேளாண்மைக்கான காலம் கனிந்துவிட்டது!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                               JULY 2012

விலைப்பேசப்படும் மருத்துவக் கல்வி


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 16.
200க்கு 199, மற்றும் 198 பெற்றவர்களோ இன்னும் அதிகம்!
இதனால் மருத்துவக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.

இரண்டாயிரத்து சொச்சம் இடங்களுக்கு 40,000 விண்ணப்பங்கள்!
மிக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதினும் அரிது.
அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை மொத்தம் 18 தான்!
அதில் உள்ள மொத்த இடங்கள் 1,823 தான்
இதில் பொது பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 198.50
பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 197.50
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 196
தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு கட் ஆப் மதிப்பெண் 192
இதில் அரை மார்க் குறைந்தாலும் அரசு கல்லூரியிலே இடம் கிடைக்காது.

அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 12 ஆயிரத்து சொச்சம் வாங்கப்படுகிறது.
அதுவே தனியார் கல்லூரிகளில் 2,30,000த்திலிருந்து 2,80,000வரை ஆண்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இது தவிர லேப் கட்டணம் போன்ற சில பிரிவுகளிலும் தனி கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன.
ஆக, தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படித்து முடிக்க ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த கட்டணம் ரூ 20 லட்சம் ஆகும்.

இந்த வருடம் நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு தனியார் மருத்துவகல்லூரி கட்டணத்தை அதிரடியாக 30,000 ரூபாய் உயர்த்தி உள்ளது.
உயர்த்தப்பட்ட கட்டணம், படித்துக் கொண்டிருக்கும் பழைய மாணவர்களையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.
ஆக, ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் கட்டணங்களை மனதில் கொண்டு மருத்துவகல்வி முடிக்க ஒரு மாணவர் ரூ 20லட்சத்திற்கும் மேலாக செலவிட வேண்டும்!

இதில் கொடுமை என்னவென்றால் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேரும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அப்படியென்றால் அரசு ஒதுக்கீடு என்ற ஒன்றிற்கான அவசியம் தான் என்ன? என்ற கேள்வி எழலாம்!

இந்த கேள்விக்கு அரசாங்கத்தால் நேர்மையாக பதில் சொல்ல முடியாது! காரணம் - நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் ரூ 25 லட்சத்திலிருந்து 50லட்சம் வரை நன்கொடை பெறப்படுகிறது. இப்படி பெறுவது சட்டப்படி குற்றம். ஆயினும் அனுமதிக்கப்பட்டே வருகிறது. இந்த நன்கொடையிலிருந்து அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் விதிவிலக்கு பெறுகிறார்கள்.
எப்படிபார்த்தாலும் இன்று கோடீஸ்வர குடும்பத்து பிள்ளைகளே தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க முடியும் என்பதே யதார்த்தம்!

இந்தச் சூழலில் இப்படி பணத்தை கொட்டித் தந்து படிப்பவர்களிடம் தேசிய கிராமப்புற சுகாதாரதிட்டத்தின் படி ஒராண்டு கட்டாய கிராமப்புற சேவையை அரசு எப்படி வலியுறுத்த முடியும்?
அல்லது நகரங்களிலே பணியாற்றினாலே கூட மனிதாபிமான மருத்துவ சேவையைத் தான் எதிக்க முடியுமா?
இவர்கள் போட்ட பணத்தை எடுக்க மனிதாபிமானமற்ற வழிமுறைகளை மருத்துவ சேவைகளில் கையாள மாட்டார்கள் என்பதற்கு யார் உத்திரவாதம் தர முடியும்? இப்போதே இதற்கு பல உதாரணங்கள் உள்ளன!
நினைத்தாலே நெஞ்சம் பதை பதைக்கிறது.
மருத்துவ கல்வி கிடைத்தற்கரிய கல்வியாக இருப்பதால் தான் இந்த நிலைமைகள்!
இந்தியா முழுமைக்குமே மொத்தம் 355 கல்லூரிகள் தான் உள்ளன. இதில் உள்ள மொத்த இடங்கள் 45,569.
ஒரு வேளை கூடுதல் மருத்துவ கல்லூரிகள் துவங்க தனியார்களை அனுமதித்தால் கல்விகட்டணங்கள் வெகுவாக குறையும். அதே சமயம் கல்வித் தரமும் குறைந்து விடும். இதனால் மருத்துவ துறையின் மாண்பும் கெட்டுப்போகும்!

ஆக அரசே கூடுதல் மருத்துவகல்லூரிகளை துவக்க வேண்டும். தற்போதுள்ள கல்லூரிகளைக் காட்டிலும் இரு மடங்கு கல்லூரிகள் தேவை! அவற்றில் எம்.பி.பி.எஸ் மட்டுமின்றி மாற்று மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, அக்குபஞ்சர்... உள்ளிட்ட அனைத்து மருத்துவகல்விக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்! இயன்றவரை மருத்துவகல்விக்கு தனியார் முதலாளிகளிடமிருந்து பாதுகாப்பளிக்க வேண்டும்!



                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                               6-07-2012

பவானி ஆறு


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

மற்றும் ஒர் ஆற்று பிரச்சினை - இதுவும் நம்
மலையாள சகோதரர்களிடமிருந்தே வருகிறது.

முல்லைபெரியாறு அணைக்கு முட்டுக்கட்டை கொடுத்து கடந்த நாற்பதாண்டுகளாக தென்மேற்கு தமிழகத்தை திணற அடித்துக் கொண்டிருக்கும் கேரளா தற்போது பவானி ஆற்றின் ஒட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்த திட்டம் தீட்டுகிறது.

பவானி என்பது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஆறாகும்! அதுவும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. சுமார் 217 கிலோமீட்டர் பயணிக்கும் பவானி ஆறானது 87% தமிழகத்திலும் 9% கேளத்திலும் 4% கர்நாடகாவிலும் ஒடுகிறது.

நீலகிரியிலிருந்து பாலக்காடு மாவட்டத்திற்குள் நுழைந்து அங்குள்ள கேரளமக்களின் தாகத்தை தணித்துக் கொண்டிருக்கும் பவானியை நாம் இதுவரை தடுத்து நிறுத்த நினைத்ததில்லை. நாம் பக்தவச்சலம் சாகரில் ஒரு தடுப்பணை கட்டினால் பாலக்காடு பரிதவிக்க நேரிடும்! ஆனால் அப்படி ஒரு எண்ணம் கூட நமக்கு எழுந்ததில்லை.
தற்போது பாலக்காடு அருகில் அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணைகட்ட மும்மரம் காட்டுகிறது கேரளா! 30 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20கோடி செலவில் இப்படி ஒரு திட்டத்தை கேரளா முன்வைத்த போதே தமிழகம் அதை எதிர்த்து தடுத்து நிறுத்தியது.

முதலாவது அங்கே ஒர் அணைகட்டி தண்ணீர் எடுக்கவேண்டிய தேவையே இல்லை கேரளாவிற்கு! ஆனால் மின்சாரம் தயாரிக்கப்போகிறோம் என்கிறது கேரளா! அதோடு பவானி ஆற்றை பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிடும் நோக்கும் அதற்குள்ளது.

"அட்டப்பாடியில் அணை அவசியமில்லை" என கேரளாவின் சுற்றச்சுழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அப்பகுதியின் வனவளம் பாதிப்படையும். ஆதிவாசிகள் இடம்பெயர நேரிடும்! ஆனாலும் இதை பொருட்படுத்தாமல் அங்குள்ள ஆதிவாசி குடும்பங்களை அப்புறப்படுத்தி வருகிறது கேரள அரசு.

இப்படி ஒரு அணை கேரளா கட்டிவிடுமானால் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாநகராட்சிகளும் பல நகராட்சி, பேரூராட்சிகளும் குடிநீருக்கே வழியின்றி வறண்டுவிடும். இத்துடன் இப்பகுதியில் ஒடும் சிறுவாணி ஆறு சிறைவைக்கப்பட்டுவிடும். பவானிசாகர் பாலைவனமாகிடும். பவானி ஆற்றை நம்பியிருக்கும் பல இலட்சம் ஏக்கர் நிலங்களிலுள்ள பயிர்கள் பாதிக்கப்படும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் கேரளாவின் இத்திட்டத்தால் சர்வநாசமாகிவிடும்!

குடிதண்ணீரும், உணவுதரும் விவசாயமும் தான் ஆற்றுநீரில் மனிதகுலத்திற்கு முக்கிய தேவையாகும்! அதற்குப் பிறகு தான் மின்சாரத்தேவை - அதுவும் உபரித்தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யவேண்டியதாகும்!

கேரளா தனக்கான மின்தேவையை அது மேற்குநோக்கி கடலுக்கு வீணாக தாரைவார்க்கும் ஆயிரக்கணக்கான டி.எம்.சி நீரிலிருந்து தயாரிக்கும் வாய்ப்பு பல உண்டு.
இது ஏதோ தேவையில்லாமல் தமிழக மக்களை அச்சப்படுத்தவும், ஆத்திரப்படுத்தவும் செய்யும் திட்டம் போலவே தெரிகிறது..!

இப்படி ஒவ்வொன்றிலும் பிரச்சினை, முட்டுகட்டை என நம் அண்டை மாநில சகோதரர்கள் அச்சுறுத்துவார்களேயானால்
தேசிய ஒற்றுமை கேள்விக்குள்ளாகிவிடும்.
இந்திய இறையாண்மையை இருள் சூழ்ந்துவிடும்!
மனித உறவும், நாகரிகமுமே மலினப்பட்டுவிடும்...

இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ஜ.க போன்ற தேசிய இயக்கங்கள் ஒட்டு அரசியலைத் தவிர்த்து ஒற்றுமைக்கும், உண்மைக்கும் துணை நிற்க வேண்டும்.
இந்திய அரசு இதே வேடிக்கை பார்க்காமல் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்!

                                                                                                                               NDTV -THE HINDU,
                                                                                                                               EDITORIAL VOICE,
                                                                                                                                July 2012.