Tuesday, March 19, 2013

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

பா.ஜ.க தலைவர் அருண்ஜேட்லி, நிதின்கட்கரி, விஜய்கோயல் உள்ளிட்ட 60பேர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெங்கையாநாயுடு அ.தி.மு.கவின் மைத்ரேயன், கம்யூனிஸ்டு தலைவர்கள் டி.ராஜா, சீதாராம்யெச்சூரி போன்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார்ஷிண்டே, "தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படவில்லை. ஆனால் தொலைபேசிகளுக்கு வந்த அழைப்புகள் குறித்த தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சேகரிப்பில் ஈடுபட்ட தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக்கூறியுள்ளார்.

"இந்த பதிலில் திருப்தி அடையாத வெங்கையாநாயுடு, "அந்த தனிநபர்களின் நோக்கம் என்ன? அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விபரங்கள் தேவை. காங்கிரஸ் அரசின் தூண்டுதல் இல்லாமல் இவை நடைபெற்றிருக்க முடியாது..."
எனக் குமுறியுள்ளார்.
வெங்கையாநாடுவின் கோபம் நியமானது தான்!
ஆனால், இந்த தொலைபேசி ஒட்டு கேட்பு புகாருக்கு ஆளாகாத அரசாங்கங்களே இல்லை. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளின் மீதும் இந்த புகார்கள் உள்ளன. "பா.ஜக.க ஆட்சி செய்த இமாச்சல பிரதேசத்தில் 2007 - முதல் 2012 வரை 1000தொலைபேசி ஒட்டுகேட்புகள் நடந்துள்ளன" என்று வீரபத்திரசிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் தொலைபேசி யாராலும் ஒட்டுகேட்கப்படாது என்று இன்றைய தினம் எந்த அரசியல்வாதியும் அல்லது முக்கிய வி.வி.ஐ.பியும் நம்பத் தயாரில்லை. ஏனெனில் எந்த ஒரு அரசும் உளவுத்துறை இல்லாமலோ, ஒற்றர்கள் இல்லாமலோ செயல்பட்டதாக சரித்திரமே இல்லை. எனவே உலகம் முழுமையும் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்கள் அடிக்கடி எழுந்து விவாதிக்கப்பட்டு வருவதை நாம் புறந்தள்ள முடியாது.
தொலைபேசி ஒட்டுகேட்பு என்பது இல்லாவிட்டால் இந்தியாவின் புகழ் பெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலமாகியிருக்க வாய்ப்பில்லை.

அரசியல் தரகர் நீராராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இந்திய அரசியலில் ஏற்படுத்திய அதிர்வுகள் மறக்க கூடியதல்ல.
அப்போது பிரதமர் மன்மோகன்சிங், "வரி ஏய்ப்பு, நிதிமுறைகேடுகள் போன்றவற்றை கண்டறிய தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுகேட்பு தவிர்க்க முடியாது. அதேசமயம் அவை கவனமாக பதிவு செய்யப்படவேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 2012ல் தொலைபேசி உரையாடல் மற்றும் இணையதள சேவையை சட்டப்படி ஒட்டுகேட்கும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த தொலைபேசி ஒட்டுகேட்பை அனைத்து முக்கிய தலைவர்களின் மீதும் நிகழ்த்துவதை நியாயப்படுத்திவிடமுடியாது. ஜனநாயகத்தில் தனிநபருக்குள்ள 'பிரைவேசி' - அரசியல் சட்டத்தால் உறுதிபடுத்தப் பட்டதாகும் இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-3-2013

Monday, March 18, 2013

இந்து மலர்ச்சி மாநாடும் - துறவிகளின் கடமைகளும்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

மார்ச் 2,3 தேதிகளில் திருச்சி கொள்ளிடக்கரையில் இந்து மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் 200க்கும் அதிகமான மடாதிபதிகளும் 2000க்கும் மேற்பட்ட இந்து மதத்துறவிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பல்கலைக்கழகங்கள் இல்லாதிருந்த அந்த காலகட்டங்களில் தமிழகத்தில் சைவ, வைணவ ஆதினமடங்களே அன்று தமிழ் ஆய்வை வளர்த்தன.
திருவாவடுதுரை ஆதினத்தின் உதவியால் தான் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கரையானுக்கு பலியாகவிருந்த ஒலைச்சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டடைந்து பதிப்பித்து சங்க இலக்கியங்களை சாகா இலக்கியமாக்கினார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்களெல்லாம் தமிழர்களின் மீள்பார்வைக்கு வர உ.வே.சாவும் அவருக்கு உதவிய ஆதினகர்த்தர்களுமே காரணம்!

பக்தியை, வளர்க்கவும், கோவில்களை பராமரிக்கவும், கல்விச்சாலைகளை நடத்தவும், இலக்கியங்களை பாதுகாக்கவும், புலவர்களை போற்றி போஷிக்கவும் ஒரு காலத்தில் சைவ, வைணவ மடாலயங்கள் ஆற்றிய தொண்டு மறக்க கூடியதல்ல.

தற்போது நடக்கவுள்ள இரு நாள் மாநாட்டில் சாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கும் இந்து சமயத்தை ஒற்றுமைபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

நல்லது, வரவேற்கத்தக்கது.
மற்றொரு நோக்கமாக சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சலுகைகள், முக்கியத்துவம் இந்துக்களுக்கு வேண்டும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை நியாயமானதா? நியாயமற்றதா? என்ற விவாதத்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.

ஆனால் 'அரசியல்' கோரிக்கையை ஆன்மீகவாதிகளும் பேசவேண்டுமா? 'அடுத்து இனி ஒரு பிறவியே வேண்டாம்' - என்று நினைப்பவர்களை கடைத்தேற்ற வேண்டிய கடமை ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ளது.

இன்னும் நாம் நம்மையே சுயபரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என இந்துக்கள் முயன்றால் மாற்று மதங்கள் பரவியதால் ஏற்பட்ட நிர்பந்தங்களே பல பிரிவினராய், பல நம்பிக்கைகளை கொண்டவர்களாய் இருந்த மக்களை இந்து மதமென ஒற்றை கொடையின் கீழ் ஒன்று படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தடைகளும் விலகி கோவில் பிரவேசங்கள் நடந்தன.

2000க்கு மேற்பட்ட துறவிகள், ஆன்மீகவாதிகள் கூடும் புனிதமான மாநாடு மக்களுக்கு ஆன்மீகச் சிந்தனை தழைத்தோங்க உதவட்டும்.

ஆதினங்கள் தங்கள் பழைய பாரம்பரியத்தை மீட்டெடுத்து மீண்டும் ஆன்மீகத் தொண்டாற்றட்டும்.

ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக தமிழகத்திலுள்ள சுமார் 40க்கு மேற்பட்ட ஆதினங்களில் பெரும்பாலானவர்கள் கோயில், வழிபாடு என்றிருந்த நிலைமை மாறி கோர்ட், கேஸ் என்று அலைந்த வண்ணம் உள்ளனர்.
'தனக்குற்ற துன்பத்தை பொறுத்தலும், மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாதிருத்தலுமே துறவின் அடையாளம்' என்கிறார் திருவள்ளுவர்.
இப்பண்புகள், குணநலன்கள் ஆன்மீகவாதிகளிடமிருந்து அல்லல்படும் மக்களுக்கு கிடைக்கவேண்டுவதாக!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-2-2013

ரயில்வே பட்ஜெட்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டாயிற்று..
சில எதிர்பார்ப்புகள், பல ஏமாற்றங்கள் கலந்த கலவை தான்! எப்படி பார்த்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இதற்கு மேல் சிறப்பான ஒரு ரயில்வே பட்ஜெட்டை தந்துவிட முடியாது.
புதிய ரயில்கள் விடப்படுமா? ஆம், 94 புதிய ரயில்கள் விடப்பட உள்ளன.

ஆனால், இது நடைமுறைக்கு எப்போது வரும் என்பதை சொல்லமுடியாது. சென்ற ஆண்டு 175 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அறிவிக்கப்பட்டதில் பாதி கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனாலும், பட்ஜெட்டுக்கு பட்ஜெட் மக்களுக்கு தாற்காலிகமாகவேனும் ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதை பாராட்டத்தான் வேண்டும்!
இந்தியாவில் ரயில்வே துறை என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாம் பெற்ற பெரும் பலனாகும். 1853ல் ஆரம்பித்து 1947வரை அவர்கள் உருவாக்கித் தந்த அடிப்படை கட்டமைப்புகளின் மேல் தான் நாம் பெருமளவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த 65 ஆண்டுகளில் புதிய ரயில் பாதைகளை 20 விழுக்காட்டிற்குமேல் நம்மால் அதிகரிக்க இயலவில்லை. ஆனால் பயணிகள் எண்ணிக்கையோ 2000விழுக்காடாகிவிட்டது!

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் புதிய நில ஆர்ஜிதமில்லாமல் புதிய ரயில்பாதைகள் சாத்தியமில்லை. அது வரை குண்டுசண்டிக்குள் குதிரை ஒட்டுவது போல் ஜிகினா அறிவிப்புகள் தான் தர முடியும்.

1,52,000 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்கிறார் ரயில்வே அமைச்சர். ஆனால் ரயில்வேயில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களோ இதைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாயுள்ளன. ஆனால்,வேலைவாயுப்புகளில் 47,000பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு என்பதை மனம் திறந்து பாராட்டித்தான் ஆகவேண்டும்!

வெளிநாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பே அதிவேக புல்லட் ரயில்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால் இப்போது தான் நாம் இதற்கு ஆரம்ப கட்ட வேலைகளை செய்யவுள்ளோம். மற்ற நாடுகளில் 500கி.மீ வேக ரயில்கள் இயங்கும் போது இங்கே 160கி.மீ வேகமே சாதனையாக பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் பயணிகள் கட்டணம் ரூ 12,000 கோடிஉயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தாது அதிசயமல்ல. அதே சமயம் சூப்பர் பாஸ்ட் ரயில்கள், தக்கல் முறை போன்றவற்றிற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சரக்கு கட்டண உயர்வு சகல விலை உயர்வுக்கும் அடித்தளமிடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1856ல் உருவாக்கப்பட்ட முதல் ரயில்வே ஸ்டேசன் - வடசென்னை ராயபுரத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்தும் - இன்னும் நவீனப்படுத்தப்படாமல்அலட்சியப்படுத்தப்பட்டுவருவது அநீதியாகும்!

ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும் என்பது தீர்வாகாது. ஒன்று ஆட்களை நியமிக்கவேண்டும் அல்லது நவீனமயப்படுத்தப்பட்ட தானாக மூடித்திறக்கும் கேட்கள் நிறுவப்படவேண்டும். நவீனப்படுத்த வேண்டிய சிக்னல்கள், கம்யூனிகேஷன்கள், இண்டர்லாக்கிங்சிஸ்டம் போன்றவை வரும் போது தான் மக்கள் பலனடைய முடியும்.

அடிக்கடி நிகழும் ரயில்விபத்துகள், உயிர்பலிகள் போன்றவை குறித்த சுயபரிசிலனை ரயில்வேதுறையிடம் எதிர்பார்க்க முடியாது. இதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டிகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. பாதுகாப்பான பயணத்திற்கான உத்திரவாதம் எல்லா பட்ஜெட்டிலும் இருப்பது போல் இந்த பட்ஜெட்டிலும் இருக்கிறது. அவ்வளவே! நாளொன்றுக்கு இரண்டரைகோடி பயணிகளை பெற்றுள்ள ரயில்வேதுறை அதற்கு தக்க லாபத்தில் ஏன் செயல்படமுடிவதில்லை? 10,40,000 பணியாளர்களைக் கொண்டுள்ள ரயில்வே 10,000கோடி லாபத்தைகூட ஈட்ட முடியவில்லை. என்பது ரயில்வே நிர்வாகத்திறன் போதாமையைத் தான் உணர்த்துகிறது.

12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரயில்வேக்கு தேவைப்படும் தொகை இரண்டரை லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேவைக்கும் யதார்த்த நிலைமைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாகும்!
இந்திய மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தை தான் மிகவும் விரும்புகின்றனர். அப்படி விருப்பப்படும் அனைவருமே பயணப்படத்தக்க வகையில் ரயில்வே துறை விருத்தியாக வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-2-2013

குண்டுவெடிப்புகள் -என்ன செய்யவேண்டும்?


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தீடீர் தீடீரென அரங்கேறும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்...
குற்றுயிராய் குலைந்து போன சடலங்கள்...
குருதி வழிய உயிருக்கு போராடும் மனிதர்கள்...
நிச்சயமில்லாத வாழ்க்கை தான் மனிதனுக்கு, என்றாலும் அது நிம்மதியற்ற வாழ்க்கையாகவும் 1990க்குப் பிறகு மாறிக்கொண்டிருக்கிறது - இந்தியாவில்!

மதவாத அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதிலிருந்து நாட்டில் பயங்கரவாதச் செயல்களுக்கு பஞ்சமில்லை என்றாகிவிட்டது.

பயங்கரவாதத்தை கையிலெடுத்தவர்கள் மதத்தையும் தொலைத்து விடுகிறார்கள், மனிதத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.
உளவுத்துறையின் பலவீனமா? என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே உளவுத்துறை எச்சரித்துள்ளதை பா.ஜ.கவின் வெங்கையா நாயுடுவே பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அப்படியானால் காவல்துறையின் கவனக்குறைவா?
மாநில அரசின் அலட்சியப் போக்கா? என்றால்,
"இல்லை நாங்களும் கவனமாகத் தான் செயல்பட்டோம்" என்கிறார் ஆந்திரமுதல்வர். இத்தகைய தொடர்குண்டு வெடிப்பு நிகழ்வுகள் பாகிஸ்தானுக்கு பழக்கமானது. இப்போது இந்தியாவுக்கு பழக்கமாகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சமேற்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் 20க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை இந்தியா அனுபவித்து விட்டது.

20 ஆண்டுகளில் இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத மாநிலமே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமைதி பூங்காவான தமிழகம் 1998ல் கோவை தொடர்குண்டுவெடிப்பைக் கண்டது. அதற்குப் பின் அசம்பாவிதங்கள் இல்லை என்பது ஒரு ஆறுதல்.

ஓட்டுவங்கி அரசியல் தான் பயங்கரவாதச் செயல்களுக்கான விதையைத் தூவுகிறது.

இப்படி ஓட்டுவங்கி அரசியல் செய்பவர்களே. இந்த உண்மையை ஒப்புக்கொண்டாலும், "அதை நாங்கள் செய்யவில்லை
அவர்கள் தான் செய்கிறார்கள்" என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விடுகிறார்கள்.

இரு கைகளும் சேர்ந்து தட்டும் போது தான் சத்தம் ஏற்படுகிறது என்பது மக்களுக்கு புரியாமலில்லை.

"பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும், ஒழிக்கவேண்டும்" என்று ஆக்ரோஷமாகப் பேசிப்பேசி வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும் சூது நிறைந்த அரசியலே இந்திய அரசியல்!

ஆயிரம் துப்பாக்கியால் சாதிக்க முடியாததை அறிவின் பலத்தோடு சாதிக்க முடியும். அருள் நிறைந்த இதயத்தால் சாதிக்க முடியும்.

வேகவேகமாக நிறைவேற்றப்பட்டு வரும் தூக்குதண்டனைகள் நியாயமா? அநியாயமா? என்ற விவாதித்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை!
ஆனால் விவேகமானது தானா? என்று கண்டிப்பாக மறுபரிசிலனை செய்தாக வேண்டும்.

அறம் சார்ந்த அரசியலை குழிதோண்டிப் புதைக்கும் மோசமான அரசியலை நடத்திக்கொண்டு 'பயங்கரவாதத்தை ஒழித்துகட்டுவோம்' என்பது வெறும் பாசாங்காகவே பார்க்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிராகவோ அல்லது பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியோ வெளிப்படும் உணர்ச்சிகரமான சொல்லாடல்களை தவிர்த்துவிட்டு மனிதநேயத்தோடு சுயபரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள்.

தற்போதைய தேவை - நிதானமான - பாரபட்சமற்ற அரசியல் நிர்வாகச் செயல்பாடுகளே!

வெறுப்பு, பகைமை, துவேஷத்தை தவிர்த்த விவேகமான அரசியல் தலைமையால் தான் பயங்கரவாதத்தால் உண்டாகியிருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
22-2-2013



குடியரசுத்தலைவர் உரை

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்பமாக மத்திய அரசின் நிலைபாட்டை விளக்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரிவான உரையாற்றியுள்ளார்.

மூன்று மாதங்கள் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சர்ச்சைகுரிய 71 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்...
எத்தனைமுறை சபை நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்படக்கூடும் என்பதெல்லாம் விரைவில் தெரியவரும்.

அடுத்த ஆண்டு தேர்தலை, சந்திக்கவுள்ள நிலையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள பட்ஜெட் மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது என நாம் நம்புவதற்கே வாய்ப்பில்லை.

ஏனெனில், நிர்வாகத்திறமையின்மை, ஊழல், அலட்சியம் காரணமாக நமது பொருளாதாரம் 8.5% வளர்ச்சியிலிருந்து படிப்படியாக இறங்கி சென்ற ஆண்டு 6.2% இருந்தது. தற்போது 5% பொருளாதார வளர்ச்சியைத் தான் மிகவும் கடினப்பட்டு எட்டமுடிந்துள்ளது. இதை 5.4% மாக உயர்த்துவதற்கே கூட அரும்பாடுபட்டாக வேண்டியுள்ளது எனில், சிற்சில கடுமையான பொருளாதார நிலைபாடுகளை எடுப்பது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு சொல்லக்கூடும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற நேரடி மானியம்
நில ஆர்ஜித மசோதா
உணவு பாதுகாப்பு மசோதா
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
போன்ற பலவற்றால் நாட்டில் இன்னும் ஒராண்டில் ஏற்படும் தாக்கங்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது.
மத்திய அரசு அடுத்த தேர்தலை கருதியே திட்டங்களைத் தீட்டுவதும், கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதுமாக செயல்பட்டுவருவதால் தான் நாட்டில் சொல்லிக் கொள்ளதக்க அளவில் வளர்ச்சி ஏற்படாமல் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் 5கோடி மக்கள் வாழ்க்கையே மாற்றமடைந்துவிட்டது என குடியரசு தலைவர் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிராமங்களின் நீராதாரத்தை வலுப்படுத்த, நிலங்களை வளப்படுத்த உதவியாக மத்திய அரசால் கூற முடியவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஊழல் மலிந்தும், ஊதாரித்தனங்கள் நிறைந்தும் இத்திட்டம் செயல்பட்டு வருவதை பல ஆய்வுகள் கூறியும் மறுபரிசிலனையே இல்லை.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு 1,23,580கோடி 12வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருமிதப்பட்டுள்ளார் குடியரசுத்தலைவர்.
ஆனால் யூனிசெப் தகவலின்படி இந்தியாவில் ஊட்டச் சத்துகுறைவால், நோயால், பசியால் மடியும் குழநதைகளின் எண்ணிக்கை 16லட்சம்!

2011-12ஆம் ஆண்டில் மட்டும் காணாமல் போய் மீட்க முடியாமல் போன சிறுவர்கள் 35,000த்திற்கும் அதிகம்!

இது போன்ற மாற்றமுடியாத நிலைமைகள் ஆண்டுக்காண்டு மோசமடைந்து வருவதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் பட்ஜெட்டில் ஒரு பெருந்தொகை ஒதுக்கிவிட்டதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக அரசாங்கள் கருதலாகாது

'உணவுதானிய உற்பத்தியில் தன்நிறைவு அடைந்துள்ளோம்' என பெருமைப் பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி. ஆனால் இந்த பெருமைக்கு காரணமாக உள்ள விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கை குறித்த நினைவை தவிர்க்க முடியவில்லை.

கூடன்குளத்தில் ஏற்கெனவே இருக்கும் இரண்டு அணு உலைகளுக்கான மக்கள் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் மேலும் இரண்டு அணு உலைகள் அங்கு உருவாக்கப்படும் எனத் தெரிக்க்ப்பட்டுள்ளது.

காகிதத்தில் அச்சிடப்பட்டு வாசிக்கப்படும் கவர்ச்சிகரமான உரைக்கு மக்கள் மயங்கிய காலங்களும், மலைத்துப்போன சம்பவங்களும் இருந்தன.
ஆனால் நிதர்சனத்தில், அனுபவத்தில் தாங்கள் உணர்ந்ததைக் கொண்டே மக்கள் தீர்ப்பு அமையும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
21-2-2013



Saturday, March 9, 2013

மது எதிர்ப்பு போராட்டங்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுமையிலும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் பெருந்திரளான ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத வகையில் இந்த ஆர்பாட்டங்களுக்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் மது எதிர்ப்பு கோஷம் எழுப்பி தங்கள் உணர்வை எழுச்சியோடு வெளிபடுத்தி உள்ளனர்.

அந்த அளவிற்கு மதுவின் ஆதிக்கம் பெண்களின் நிம்மதியை குலைத்துள்ளது. குடும்பங்களை சிதைத்துள்ளது..!

காந்திய இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்த நிலைமாறி இன்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளாக மதுவிற்கு எதிராக இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன என்றால், அது மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் நிர்பந்தங்கள், அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

தமிழகத்தில் மதுவிற்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, பற்பல போராட்டங்களை நடத்தியுள்ளது. பா.ம.க தந்த நிர்பந்தத்தால் சென்ற ஆட்சியில் மதுவிற்பனை நேரம் சிறிதளவு குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் பழைய நிலைமையே மீண்டும் அமலாகிவிட்டது.

இதன்பிறகு தமிழருவிமணியனின் காந்திய மக்கள் இயக்கம் மதுஎதிர்ப்பை மக்கள் நலன் சார்ந்து முனைப்பாக மேற்கொண்டது. இதன் விளைவாக ம.தி.மு.கவும், மனிதநேய மக்கள் கட்சியும் மது எதிர்ப்பில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன.

வைகோ மிக நீண்ட நடைபயணத்தை தன் தொண்டர்களுடன் தென் தமிழகத்தில் நடத்தியபோது மக்களின் மகோன்னத ஆதரவு மதுவிற்கு எதிராக வெளிப்பட்டது.

"தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்ற சம்பத்தில் மதுவின் பின்ணணி இருக்கிறது" என்று வைகோ கூறுவதை அலட்சிப்படுத்த முடியாது.
மதுவால் குடும்பத்தகராறு, வறுமை, குழந்தைகளின் பசி, பட்டினி கொடுமைகள், படிப்பு பழாவது... குடும்ப வன்முறை கொலையில் முடிவது, குழந்தைகள் அநாதைகளாவது... என எண்ணற்றதீமைகள் அரங்கேறுகின்றன.

இதனால் தான் நீதிநூல்கள் அனைத்திலும் மதுவை தவிர்க்கும் படி கூறப்பட்டுள்ளது.

"தீமைகள் அனைத்திற்கும் தாயான தீமை - போதை தரும் மதுவே" என நபிகள் கூறியுள்ளார்.

மதுவிற்பனையின் அதிகரிப்பு அதற்கு இணையாக சாலைவிபத்துகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காந்தியப்போராட்டங்களால் 'மதுகுடிப்பது பாவகரமானது' என்ற எண்ணம் சமூகத்தின் பொது மனசாட்சியிடம் இருந்தது. மதுவிலக்கு தளர்த்தப்பட்டு அரசாங்கமே மது விற்பனையில் ஈடுபடத் தொடங்கியது முதல் குடிப்பழக்கம் சமூக கலாச்சாரமாக மாறியது. சிறுவர்களும், பெண்களில் சிலரும் கூட மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர்.



தமிழகத்தில் சுமார் 7,000மதுபானக் கடைகளும், சுமார் 4,000 மதுபார்களுமாக திரும்பிய திக்கெல்லாம் தென்படுவதால் - பார்ப்பவர் மனதில் சலனமும், சபலமும் தோன்றி குடிப்பழக்கம் வேரூன்றுகிறது.
அரசாங்கத்திற்கான வருமானம் என்பது மக்களின் வருமான இழப்பாக குடும்பங்களின் பசி, பட்டினி, வன்முறை வேதனையாக - கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூகத்தீமையாக - மொத்தத்தில் மக்கள் நலனுக்கே தீமையாக - உருமாறி வருவது கண்ணுக்கு புலப்படும் யதார்ததமாக உள்ளது.

எனவே, உடனடியாக பூரணமதுவிலக்கு சாத்தியமில்லை என்றாலும், படிப்படியாக மதுவிற்பனையை மட்டுப்படுத்துதல், மதுக்கடைகள், பார்களை குறைத்தல், மதுவிற்பனை நேரத்தை குறைத்தல் ... என அமல்படுத்தப்படுமானால் கூட அதில் தமிழ் சமூகம் அளப்பரிய நன்மைகள் பெறும்! குறிப்பிடத்தக்க அளவு தீமைகள் குறையும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
18-2-2013

மாநிலகட்சிகள் வளரட்டும் - தேசிய உணர்வுகள் சிதையாமல்!



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா போகிற போக்கில் ஒரு சரவெடியை இன்று கொளுத்தி போட்டுள்ளார்.

"தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தேசியகட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது!"

இந்த கருத்தில் இப்போதைய நிலைமையில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்!

இதே நிலை தான் இப்போது ஏறத்தாழ தேசிய அளவிலும் உள்ளது. இனி தேசிய கட்சிகள் தலைகீழாக நின்றாலும் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது.

கடந்த 20ஆண்டுகளாக தேசிய கட்சிகள் நாளுக்கு நாள் தேய்பிறையாகி, கூட்டணி அமைப்பதன் மூலமே மத்திய அரசில் அதிகாரத்திற்கு வர முடிகிறது. வரப்போகும் 2014 தேர்தலில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் தற்போது தங்களுக்கிருக்கும் எண்ணிக்கை பலத்தை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத சூழலே நிலவுகிறது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் வளர்ச்சி காங்கிரசுக்கு பெரும் பின்னடைவைத் தரும். அதே போல் கர்நாடகாவில் எடியூரப்பாவின் கட்சி பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்கும்.

ராஜஸ்தானிலும், கோவாவிலும் காங்கிரஸுக்கு முன்பிருந்த பலம் தற்போது குறைந்துள்ளது. அசாமில் அந்நிய ஊடுருவலை தடுக்க சக்தியற்ற ஆட்சி காரணமாக காங்கிரஸ் ஆட்டம் கண்டுள்ளது.

இதேபோல் பா.ஜ.கவும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம் போன்றவற்றில் பலம் குறைந்து வருகிறது.
ஆனால், மாநில கட்சிகள் தற்போது வளர்ந்து வருகின்றன.

தேசியகட்சிகளில் ஏற்படும் பிளவே மாநில கட்சிகள் பிறப்பதற்கும், வளர்வதற்கும் வழி கோலுகிறது.

தமிழகத்திலும், பஞ்சாபிலும் 1967க்குப் பிறகு இழந்த ஆட்சியை காங்கிரசால் மீண்டும் மீட்டெடுக்க முடியவில்லை. 

1970களின் ஆரம்பத்தில் மேற்குவங்கத்தில் பறிகொடுத்த ஆட்சியை காங்கிரஸால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. 

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ்கட்சி ஆகியவற்றிற்க்கு அடுத்த நிலையில் தான் காங்கிரசும், பா.ஜ.கவும் வருகிறது. 

பீகாரில் நிதிஸ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளமும், ஒரிசாவில் நவீன்பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளமும், பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அசாலிதளமும், 
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணமுள் காங்கிரசும் 
தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.திக என மூன்று மாநிலகட்சிகளும்
காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளன.

தேசியகட்சிகளின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணங்கள்; அதன் தேசிய தலைமைகள் அதிகாரங்களை குவித்துக் கொண்டு மாநிலங்களில் மக்கள் ஆதரவுபெற்ற தலைமை வளராமல் தடுத்ததாகும்.

அடுத்ததாக, தெலுங்கானா பிரச்சினை, காவிரி பிரச்சினை உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையிலும் மக்கள் நலன்சார்ந்த உறுதியான முடிவெடுக்க முடியாத கோழைத்தனமான தலைமைகள் இருப்பது.
மேலும் தேசியகட்சிகளின் தலைமைகள் அந்தந்த மாநிலங்களுக்கேயுள்ள பிரச்சினைகள், மாநிலமக்களின் உணர்வுகள் இவற்றை புரிந்துகொள்ளக் கூட அக்கரைப் படாமல் மிகவும் அந்நியப்பட்டு போனதாகும்.

எனவே, தமிழக முதல்வர் பேசியுள்ளதை ஒரு விரிந்து, பரந்த தளத்தில் பார்க்கும் போது இனி இந்தியாவில் மாநிலகட்சிகளின் சகாப்தம் தான்! மாநிலகட்சி தலைமைகளால் தான் தேசிய அரசியலே தீர்மானிக்கப்படும்.

இந்தியாவில் தேசியகட்சிகள் சிறுத்துப் போகலாம் ஆனால் தேசிய உணர்வும், தேசிய நீரோட்டமும் சிறுத்துப் போய்விடலாகாது. 30க்கு மேற்பட்ட தேசிய இனங்கள், நூற்றுக்கணக்கான தெய்வநம்பிக்கைகள், விதவிதமான பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், ஏராளமான மொழிகள்...
என அனைத்தையும் சுதந்திரப்போராட்டத்தில் மகத்தான தியாகங்களே ஒன்றுபடுத்தி பாரத தேசத்தை கட்டமைத்தது.
இதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேசிய கட்சிகளுக்கானது மட்டுமல்ல மாநிலகட்சிகளுக்கும் தான்!நிச்சயம் காப்பாற்றப்படும் என நம்புவோம்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
15-2-2013 

வளர்ச்சி அரசியலா? வாக்குவங்கி அரசியலா?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

இந்திய தலைநகர் தில்லியில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் நரேந்திரமோடி வாக்கு வங்கி அரசியல் என்ற பாதையை தவிர்த்து வளர்ச்சி அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பேசியுள்ளார்.

சமீப காலமாக இது போல் எந்த அரசியல்வாதியும் பேசத்துணியவில்லை. நரேந்திரமோடி மீது நமக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருந்த போதிலும் அவருடைய இந்தப்ேப்ச்சும், கடந்த காலங்களில் குஜராத் மாநில நிர்வாகத்தில் அவர் கடைபிடித்த அணுகுமுறைகளும் உண்மையில் வரவேற்க வேண்டியவையே!

வாக்குவங்கி அரசியல் என்பது 1960களின் பிற்பகுதியில் தான் அறிமுகமாகியது தமிழ்நாட்டில்! அதே போல் இந்திய அரசியலில் வாக்கு வங்கி அரசியலை முதன்முதாலாக கையில் எடுத்தது இந்தாரகாந்தி காலத்தில் தான்!

வாக்குவங்கி அரசியல் அறிமுகமாகியில்லாத தமிழ்நாட்டில் ஒமந்தூரார் ராமசாமி, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர்... போன்றோர் ஆட்சியில் தான் தமிழகம் நிலைத்த பயனைப் பெற்றது.

வைகை,கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புல்லம்பாடி, பரம்பிக்குளம், நொய்யாறு, ஆழியாறு போன்ற அணைகளைக் கட்டி பாசனவசதி, குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதெல்லாம் 1967க்கு முன்பு தான்! 

காவேரி டெல்டா இன்று உயிர்புடன் வாழ்வதற்கு மேட்டூர் அணையும், தென்மேற்கு பகுதியில் வறட்சி பிரதேசங்கள் வளம்பெறக் காரணமான பெரியாறு அணையும் பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு தந்த கொடைகளாகும்!!
மேற்படி அணைகள் இல்லையென்றால் இன்று தமிழகத்தில் வேளாண்மையே இல்லை. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் சிறப்பாக தூர்வாறப்பட்டு பராமரிக்கப்பட்டன. அந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க புதிய அணைகள் உருவாகவில்லை.
அதே போல இன்றைக்கும் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, பெரம்பூர் இணைப்புரயில்பெட்டி தொழிற்சாலை, திருச்சி பெல் ஆலை, மணலியில் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் போன்றவை சுதந்திரத்திற்கு பிறகான முதல் இருபதாண்டுகளில் உருவாக்கப்பட்டவையே. 
இதையெல்லாம் விட கிராமங்கள் தோறும், நகரங்களின் மூலைமுடுக்கெல்லாம் கல்விச்சாலைகள் பல உருவானது காமராஜர் காலத்தில் தான்!

இந்த வளர்ச்சி அரசியலை மக்கள் உரிய வகையில் மதித்து போற்றி இருந்தால், வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சி பெற்று இருக்காது.

'ரூபாய்க்கு இரண்டுபடி லட்சியம் ஒரு படி நிச்சயம்' - என அரிசியில் ஆரம்பித்த வாக்கு வங்கி அரசியல் 2007ல் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று வந்து 2011ல் முற்றிலும் இலவசம் என்றாகிவிட்டது. இதனால் தமிழகத்தில் வேளாண்மையே வீழ்ச்சியடைந்துவருகிறது.

இலவச டிவியில் தொடங்கி தற்போது, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி... என வளர்ந்து கொண்டேபோகும் வாக்கு வங்கி அரசியல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இன்று மக்கள் திரளை மதுபோதைக்கு அடிமையாக்குகிறது.
விவசாயத்திற்கு தண்ணீர், ஏழைகளுக்கு மருத்துவம், உழைப்பதற்கு வேலை... போன்றவற்றிற்க்கு உத்திரவாதம் தருவதே வளர்ச்சி அரசியல்.

லஞ்சலாவண்ய மற்ற நிர்வாகம், தடைகளற்ற தொழில்வளர்ச்சி, அச்சமற்ற சமூகச் செயல்பாடுகள், புதிய முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் போன்றவற்றை உறுதிபடுத்துவதே வளர்ச்சி அரசியல்.

வளர்ச்சி அரசியல் மக்களை கண்ணியமாக மதிப்பது! அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பது, நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பை உத்திரவாதப்படுத்துவது.

வாக்கு வங்கி அரசியல் என்பது கானல்நீர். வாக்கு வங்கி அரசியலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கும், ஊழலில் ஊறித்திளைக்கும் அதிகாரவர்கத்திற்குமே சாத்தியப்படும். ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாவார்கள்.
வாக்குவங்கி அரசியலுக்கு மயங்காத, வளர்ச்சி அரசியலை வேண்டுகின்ற வாக்களர்களை தயார்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-2-2013

கந்துவட்டித் தற்கொலைகள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

சமீபத்தில் தமிழக சட்டசபையில் பேசிய தே.மு.தி.க எம்.எல்.ஏபார்த்தீபன், "கந்துவட்டியை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கந்துவட்டி ஒழிந்த பாடில்லை.... கந்துவட்டி கொடுமை தாங்காமல் ஏழை எளிய மக்கள் கதறுகிறார்கள்.." என பேசியுள்ளார்.

தொழில் அதிபர் தற்கொலை, விவசாயி தற்கொலை, குடும்பத்தோடு தற்கொலை... என வெளியாகும் செய்தியின் மூலத்தை தேடினால் அது கந்துவட்டியில் சென்று முடிகிறது.

2003-லேயே தமிழக முதல்வர் கந்துவட்டியை ஒழிக்க அவசரசட்டம் ஒன்றை கொண்டுவந்தார். தற்போதைய அரசும் கந்துவட்டி வசூலிப்போர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படுவர் என அறிவித்தது.

ஆனால் கந்துவட்டி கொடுமைகள் குறைந்தபாடில்லை.
அதிலும் பெரும்பாலும் ஏழை எளியமக்களே இதில் சிக்கி மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

நமது நாட்டில் விவசாயிகள் பலர் வாங்கிய கடனுக்கு நிலத்தையே பறிகொடுத்துள்ளனர். இது போல் வீட்டை, நகைகளை, சொத்துகளை இழந்தோர் எண்ணிக்கை சொல்லிமாளாது. பல சமயங்களில் இருப்பதையெல்லாம் பறித்துக் கொண்டாலும் கூட கந்துவட்டி கும்பல் திருப்தி அடையாமல் தொடர்ந்து மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கந்துவட்டிகளில் இருந்து பெண்களை விடுவிக்கும் வாய்ப்பாக மகளிர் சுய உதவி குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் கந்துவட்டி கொடுமைகள் கணிசமாக குறைந்த தென்னவோ உண்மை தான்!
ஆனால் சில மகளிர் குழுக்களே கந்துவட்டி வசூலிப்பவர்களாகவும், கந்துவட்டியில் சிக்கித் தவிப்பவர்களாகவும் செய்திகள் வருகின்றன.

அவசரத்தேவைகளுக்கு மக்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவ முன்வருகிறார்கள் கந்துவட்டிகாரர்கள்! சில சமயங்களில் அவர்களே சிலருக்கு எமனாகிப் போகிறார்கள்!
காய்கறிகடை, பழக்கடை, இளநீர்வியாபாரம், பெட்டிக்கடை, தள்ளுவண்டி, கூலித்தொழில்... போன்ற தரப்பினர் கந்துவட்டியைப்பெற்று கஷ்டப்பட்டு தொழில் செய்கின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்பது போல இதில் வட்டிகட்டத் தவறும் பட்சத்தில் விரும்பத்தகாத விளைவுகளை அனுபவிக்கின்றார். விபத்து, மருத்துவம், கல்வி, திருமணம், விஷேசம் போன்றவற்றிக்கு கடன்பெற்றவர்கள் ஒழுங்காக திரும்ப செலுத்தாத பட்சத்தில், பெரும் அவமானங்களை சந்திக்கின்றனர்.

வட்டி, வட்டிக்குவட்டி, ஸ்பீடுவட்டி, மீட்டர்வட்டி, ரன்வட்டி, தண்டல்வட்டி, வாரவட்டி, தினவட்டி... என பலதரப்பட்ட வட்டி முறைகள் சந்தையில் நிலவுகின்றன...! இந்த வட்டியை தருபவர்களும், பெறுபவர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பலனடைந்து கொள்ளும் போது பிரச்சினை இல்லை.

ஆனால், பிளாக்மெயில் செய்வதற்கென்றே கடன் கொடுப்பவர்கள் உண்டு.
வட்டியும், அசலும் வந்த பிறகும் தொல்லை கொடுப்பார்கள் சிலர்! இதில் தான் தற்கொலைகள் சம்பவிக்கிறது.

'கந்துவட்டி கடும் குற்றம்' என பார்வையில் படும்வகையில் பல இடங்களிலும் அரசாங்கம் விளம்பரப்படுத்தவேண்டும்.

'உழைப்பில்லாமல் வட்டியில் ஈட்டும் பணம் பாவத்தின் சம்பளம்' என்றே இந்து, இஸ்லாம், கிறிஸ்த்துவம் உள்ளிட்ட மதநூல்கள் கூறுகின்றன!
பிறரின் துயரத்திற்கு, சாவிற்கு குடும்பத்தின் அழிவிற்கே காரணமாகும் கந்துவட்டிகாரர்களை கடும் தண்டனைக்கு உட்படுத்தவேண்டும். 

அதே சமயம் எந்த சட்டத்தாலும், தண்டனைகளாலும் கந்துவட்டியை தடுத்துவிடமுடியாது.
தருபவர்களின் மனசாட்சியும், பெறுவர்களின் விழிப்புணர்வும், விவேகமுமே இதற்கு தீர்வாக முடியும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
12-2-2013

Friday, March 8, 2013

'விவசாயக் கடன் ரத்து'


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

"விவசாயிகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள ரூ 70,00கோடி ரத்து செய்யப்படலாம். இதன்மூலம் விவசாயிகள் நலனில் அக்கரை கொண்ட அரசு தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை நீங்கள் உணரவேண்டும்"

மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஹரியானாவில் நடந்த விவசாயிகள் பேரணியில் இவ்விதம் பேசியுள்ளார்!

2014 தேர்தலை மனதில் வைத்து பேசப்பட்ட பேச்சு தான் இது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2008ல் இதே போல் ரூ 52,000கோடி விவசாயக் கடனை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்தது. இந்த விவசாயக்கடன் ரத்து தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை நமக்கு சுட்டிக் காட்டியது.

இந்த கடன் ரத்தால் பலனடைந்த பல லட்சம் பேர் விவசாயத்திற்கே சம்பந்தமில்லாதவர்கள். மற்ற பல லட்சம் பேரே ஒரளவு விவசாயதம்தில் தொடர்புடையவர்கள் எனினும் கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்கள்.

விவசாயக்கடன் வழங்கல் தொடர்பான கணக்குகளை ஆராய்ந்ததில் சுமார் 20,000க்கு மேற்பட்ட கணக்குகளில் ஆவணமோசடி நடந்துள்ளன.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான உண்மையான விவசாயிகளுக்கு இந்த கடன் தள்ளுபடி குறித்த செய்தியே தெரியவில்லை. தெரிய வந்த நிலையில் உண்மையான விவசாயிகளுக்கு குறைவான கடனே தள்ளுபடியாகியுள்ளது.

இப்படி ஒரு மத்திய தணிக்கை துறையின் அறிக்கைக்குப் பிறகும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், "சென்ற முறை விவசாயக் கடன் ரத்தானதில் விவசாயிகள் பெருமளவு பலனடைந்துள்ளனர்" என்று பேச முடிகிறதென்றால் மக்கள் அறியாமையின் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தான் அது உணர்த்துகிறது.

நாட்டின் எந்த பகுதியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேவை என்ன? என்ற புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஒட்டு மொத்த விவசாயக்கடன் ரத்து என்பது யாரைத் திருப்திபடுத்த? இப்படியான அரியல் உள்நோக்கம் கொண்ட அறிவிப்பால் நபார்டு வங்கி மேன்மேலும் நலிந்து போவது தான் நடக்கிறது. கடன் பெறும் போதே, 'கட்டவேண்டாம் தேர்தல் வரும் - கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்ற எண்ணமே விவசாயிகளுக்கு ஏற்படும். சில சமூகவிரோத சக்திகள் விவசாயத்தின் பேரில் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஆதாயமடையவே இது போன்ற அறிவிப்புகள் வழிவகுக்கின்றன.

சமீபத்தில் தான் நமது பிரதமர் மன்மோகன்சிங், "விவசாயத்தை குறைவான மக்கள் சார்ந்திருக்கும் போது தான் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்" என திருவாய் மலர்ந்தார். இதன்பொருள் சிறுகுறு விவசாயிகள், விவசாயத்திலிருந்து வெளியேறட்டும். குறிப்பிட்ட சிலகார்பரேட் நிறுவனங்கள் நவீன கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்யட்டும் என்பது தான்!

'ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சமீபத்திய ஆட்சியில் சுமார் ஒன்றரைகோடி விவசாயிகள் விவசயாத்திலிருந்து வெளியேறியுள்ளனர்' என்ற தகவலை ஒரு அரசுத்துறை நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

இத்துடன் நாளொன்றுக்கு சுமார் 50விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இன்றைய இந்தியா திகழ்கிறது.

"2004தொடங்கி தற்போது வரையிலுமான ஆட்சியில் இந்தியா முழுமையிலும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என்று தேசிய குற்ற ஆவண ஆணையம் தெரிவிக்கிறது.
மற்றொரு தகவல் இந்தியாவில் 50சதவிகித விவசாயிகள் வறுமையின் காரணமாக தங்கள் நிலங்களை அடகுவைத்துள்ளனர் மற்ற சிலர் விற்றுள்ளனர் என தெரிவிக்கிறது. இந்த நிலங்களெல்லாம் தற்போது யார் வசம் இருக்கின்றனவோ அவர்களெல்லாருமே இந்த விவசாயக் கடன் தள்ளுபடியால் அமோக பலனடைவார்கள்!

எனவே, விவசாயக்கடன் தள்ளுபடி என்பது வறுமையில் வாடும் சிறுகுறு விவசாயிகள் மட்டுமே பலன் பெறத்தக்கதாக அமையவேண்டும். அதே சமயம் விவசாயம் சிறக்க திட்டமிட்ட நீர்நிர்வாக மேலாண்மையும், நிலவளத்தை மேம்படுத்த இயற்கை வேளாண்மைக்கான செலவில்லாத உரத்தயாரிப்புகளுமே இன்றைய காலத்தின் தேவையாகும்.

தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகள் ஒரு புறம் பசி, பட்டினி, வறுமை, நீரின்மை, இயற்கை இடர்பாடுகளால் நொந்து, வெந்து வாட, மற்றொரு புறம் அவர்களின் பெயரால் யார்யாரோ பல்லாயிரம் கோடி பணத்தை 'அபேஸ்' பண்ணுவதற்கு 'விவசாயக்கடன் தள்ளுபடி' என்ற அறிவிப்பு உதவிவிடக்கூடாது என்பதே மக்களின் தவிப்பு! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-2-2013

காவல்துறை மக்களுக்கானதாகட்டும்


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

காவல்துறை என்பது யாருக்காக?
ஆட்சியாளர்களுக்கு அனுகூலமாக இயங்கவா?
பொதுமக்களை பாதுகாக்கவா?
என்ற கேள்விகள் மக்கள் மனங்களில் அடிக்கடி தோன்றி மறைகின்றன.

'பொதுமக்களின் நண்பனாக காவல்துறை விளங்கவேண்டும்' என்று நம் ஆட்சியாளர்கள் பேச்சளவில் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ஆட்சியாளர்கள், அதிகாரமையத்தில் இருப்பவர்களின் சேவைக்காகத் தான் காவல்துறை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என நமது மத்திய உள்துறை அமைச்சகத்தின் BPRD வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரியவருகிறது.

2010ஆம் ஆண்டில் மட்டுமே 50,059 காவல்துறையினர் 16,778 வி ஐ பிக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மட்டுமே இவ்வளவு பணியாளர்களும் மக்கள் வரிப்பணமும் செலவாகிக் கொண்டிருக்கிறது.

இவை தவிர, இது போன்ற வி.ஐ.பிக்களின் பொதுகூட்டங்கள், அவர்கள் முக்கிய இடங்களுக்குச் செல்லும் போது வழிநெடுக நிறுத்தப்படும் காவலர்கள்..., என்று கணக்கிட்டால் ஏறத்தாழ காவல்துறையின் பெரும்பகுதி அதிகாரமையத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பிற்கே பயன்படுகிறது என தெரியவருகின்றன.

சில சமயங்களில் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்கச் சென்றால் அங்கே அதை பெற்றுக் கொண்டு விசாரித்தறிய யாரும் இருப்பதில்லை.

அப்படியே இருந்தாலும் அப்புகாரின் மீதான நடவடிக்கைகளில் ஈடுபட காவலர்கள் இல்லை.

செல்வாக்கானவர்கள் புகார்கள் தந்தால் கூட சில சமயங்களில் தொடர்ச்சியாக அந்த புகாரில் புலனாய்வுகள் மேற்கொள்ள காவலர்களுக்கு நேரம் அனுமதிப்பதில்லை. இத்தனைக்கும் பணிநேர வரை முறையில்லாமல், விடுமுறையில்லாமல் காவலர்கள் வேலைவாங்கப்படுகிறார்கள் என்பதும் கவனத்திற்குரியது.

இதனால் குடும்பத்திற்கும் - காவலர்களுக்குமுள்ள உறவே விரிசலடைகிறது. அதேபோல் பொதுமக்களுக்கும் - காவல்துறைக்குமான இடைவெளியும் அதிகரித்துவிட்டது.

இந்த கொடுமை போதாது என்று 'ஆர்டர்லி' என்ற உயர்அதிகாரிகளின் வீட்டுவேலைக்கு காவலர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது பல காலமாகத் தொடர்கிறது.

இதனால் தற்போது தமிழகத்தில் வருடத்திற்கு 20,000திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன.

சென்ற ஆண்டு மட்டும் 1747 கொலைகள் நடந்துள்ளன.

இவை தவிர வழிப்பறி கொள்ளைகள், அடிதடிகள், பாலியல் வன்முறைகள், கோஷ்டிமோதல்... போன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நிகழ்கின்றன...
'சட்டம் - ஒழுங்கு என்ன செய்துவிடும்?' என்ற தைரியம் குற்றவாளிக்கு ஏற்பட வாய்ப்பளித்து விடக்கூடாது.

காவல்துறையின் போதாமைகள் கொஞ்சநஞ்சமல்ல. காவல்துறை நவீனப்படுத்தப்பட்டால் மட்டும் போதாது.

காவல்துறை ஆட்சியாளர்களை அதிகம் சார்ந்திராமல் தன்னாட்சி அதிகாரத்துடனும் சுயப்பொறுப்புடனும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.

காவல்துறை தொடர்பான ஆட்சியாளர்களின் பார்வை அடியோடு மாறவேண்டும். காவல்துறையினர் கண்ணியமாக நடத்தப்பட்டால் தான், காவல்துறையினர் மக்களை கண்ணியமாக நடத்துவார்கள்! 
பிரிட்டிஷ் ஆட்சியில் 1888ல் உருவாக்கப்பட்ட நிலையிலேயே - ராஜவிசு வாசத்தை பேணும் வகையிலேயே - இன்னும் நம் காவல்துறை வைக்கப்பட்டிருக்கிறது!

சமீபத்தில் ஒரு வழக்கில் சென்னை உயர்நிதமன்றம், 'சென்னை காவல்துறை ஆணையர் ஒன்றும் சென்னைக்கு மன்னரல்ல, மக்கள் பணிசெய்யக்கடமைப்பட்டவர் என்பதை உணரவேண்டும்' எனக்கூறியது.

யாருக்கேனும் அடிமையாக இருக்க நிர்பந்திக்கப்படுவர்கள், காலப்போக்கில் தாங்களும் சிலரை அடிமைப்படுத்திப் பார்க்க ஆசைப்படுவார்கள்.
நமது காவல்துறையின் இன்றைய நிலை இப்படித்தான் இருக்கிறது! அவர்களை ஆட்சியிலிருக்கும் குறிப்பிட்ட சிலரின் விசுவாசத்திலிருந்து மீட்டெடுத்து மக்களின் விசுவாசியாக - ஜனநாயக காவலர்களாக மாற்றவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
08-2-2013

காணாமல் போகும் குழந்தைகள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கால் ஒரு பூகம்பத்தின் அதிர்வுக்கு இணையான குலைநடுங்க வைக்கும் குழந்தைகள் கடத்தல் செய்தி அம்பலமாகியுள்ளது.

நமது நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகின்றன. அதுவும் குறிப்பாக ஏழை,எளிய குடும்பத்தின் குழந்தைகளே இவ்விதம் காணாமல் போகின்றனர்...! காணாமல் போகும் குழந்தைகள் கடத்தப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காணாமல் போகும்குழந்தைகளில் மிகச்சிலரே கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் இணைகின்றனர் என்பதே அந்தச் செய்தியாகும்!

நமது அரசுகள் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக மிகுந்த அலட்சியத்தை காட்டுகின்றன என்பது இதை விட அதிர்ச்சி தருவதாகவுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு ஜனவரி 17ல் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சம்மந்தப்பட்ட கோவா, ஒரிசா, தமிழ்நாடு, குஜராத், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் - பிப்பரவரி -5ல் நேரில் ஆஜராகவேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், தமிழ்நாடு, குஜராத், அருணாசலபிரதேச தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் உச்சநீதிமன்றம், "சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்தமுறை ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்" என கடுமையாக எச்சரித்துள்ளது.

குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நமது ஆட்சியாளர்கள் ஏன் இவ்வளவு அக்கரையின்மையுடன் இருக்கிறார்கள்...? ஒருவேளை அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லாதது கூட ஒரு காரணமோ...? தெரியவில்லை!

ஆனால், உச்சநீதிமன்றம் குழுந்தைகள் விஷயத்தில் காட்டும் தீவிர அக்கறை, புண்பட்ட இதயங்களுக்கு ஒரு அருமருந்தாகவுள்ளது!

இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவைச் சுற்றிலுமுள்ள நாடுகளில் மட்டுமே 2011-12-ஆம் நிதியாண்டில் கடத்தப்பட்ட குழந்தைகளில் மீட்டெடுக்கப் பட்டவர்கள் 1,26,321. மீட்டெடுக்கப்படாத சிறார்களோ பல லட்சம்!
அதுவும் குறிப்பாக கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் மட்டுமே 50,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். தினசரி சராசரியாக 100 குழந்தை களேனும் காணாமல் போகின்றனர்..!

இதெல்லாமே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்!

காணாமல் போகும் குழந்தைகளில் பெற்றோர், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களும் கணிசமானவர்கள். 

வறுமை, பெற்றோர்களின் முறைகேடான பாலியல் உறவுகள் போன்றவை குழந்தைகளை நிர்கதியற்றவர்களாக்குகின்றன.

இப்படி நிர்கதியான குழந்தைகளை சமூக விரோத சக்திகள் கடத்தி, குழந்தை தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக, பிச்சைகாரர்களாக மாற்றி விடுகின்றனர்!

இவை தவிர, படிக்க மறுக்கும் சிறார்கள், குடும்ப வன்முறைக்கு இலக்காகும் சிறார்கள் தாங்களே வீட்டை விட்டு ஓடிப்போய் பல்வேறு இக்காட்டுகளில் மாட்டிக் கொள்கின்றனர். 

சென்ற ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சிறார்களின் எண்ணிக்கை மட்டுமே 8000 என்பது நாம் குழந்தைகளை வீடுகளிலும், கல்விக் கூடங்களிலும், பொதுதளங்களிலும் எவ்வாறு நடத்துகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகும்!

வருங்காலத் தலைமுறையை உரியமுறையில் வளர்த்தெடுக்காத சமூகம் - குழந்தைகளின் நலனை, உரிமைகளை காப்பாற்றத் தவறிய ஒரு சமூகம் - சாபத்திற்குரியது.

குழந்தைகள் என்பவை குறிப்பிட்ட இரு பெற்றோருக்கு பிறந்திருக்கலாம். ஆனால், அவர்களை பேணி வளர்ப்பதில் அரசுக்கும், ஓட்டு மொத்த சமூகத்திற்கும் உள்ள பொறுப்பு மிகவும் முக்கியமானது. அனைத்து குழந்தைகளுமே நாட்டின் சொத்து. மனித குலத்தின் மகத்தான பொக்கிஷங்கள்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
06-2-2013

உணவு பாதுகாப்பு மசோதா


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

உணவுப்பொருள்களை ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகக்குறைந்த மானிய விலையில் வழங்குவதிலும், உணவுப்பொருட்களை கடைகளில் விநியோகம் செய்வதில் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதிலும் பல ஆண்டுகால அனுபவங்களை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது உணவு பாதுகாப்பு மசோதா.

இந்த மசோதா இன்று சில அரசியல்கட்சிகளாலும், வியாபார அமைப்புகளாலும் எதிர்க்கப்படுகிறது. 

மற்றொரு பக்கம் சமூக ஆய்வாளர்களாலும், பொதுநலன் விரும்பிகளாலும் வரவேற்கப்படுகிறது.

இம்மசோதா என்ன தான் சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம்.
இது வரையிலுமான பொது விநியோகத்திட்டம் அதிக செலவுகளையும், அதிக விரயங்களையும் கொண்டுள்ளது. இவற்றை சீர்செய்து உரிய பயனாளிகள் பயன்பெறும் வகையிலும், இந்தியாவில் யாரும் பசியால் மடிந்தார்கள் என்ற பழியிலிருந்து தப்பவும் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் அதிகமாகப் பயன்பெறவும், மானிய உதவி தேவைப்படாதவர்களை விலக்கி, வழங்கப்படும் உதவி உரியவர்களுக்கு சென்று சேர்வதை உறுதிபடுத்துகிறது.

ஆனால், இந்தியாவில் பொது விநியோகத்திட்டத்தை, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அரசியல் சுயலாபத்திற்கு குறிப்பாக ஓட்டு அறுவடைக்கு பயன்படுத்திவரும் அரசியல் கட்சிகள் இம் மசோதாவை கடுமையாக எதிர்காவிட்டால் தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்.

வறுமையில் உழல்பவர்கள், ஓரளவு வாங்கும் வசதியுள்ளவர்கள் என இரு பிரிவாக மக்களை பிரிக்க கூடாதாம்! அனைவருக்கும் ஓட்டு மொத்தமாக மானியங்களை அள்ளித் தந்துவிடவேண்டுமாம்.
இது தான் அரசியல் கட்சிகள் வைக்கும் வாதம்! அடுத்ததாக வியாபார அமைப்புகளின் எதிர்ப்புகளை பார்ப்போம்.

உணவு தானிய விநியோகத்தில் நிகழும் கடத்தல், கலப்படம், தரக்குறைவு, காலாவதியானவற்றை விற்பனைசெய்வது போன்றவைகளை தடுக்கும் விதமாக இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனைவளாகங்களும், அதன் சுற்றுப்புறங்களும் சுத்தமாக இருப்பது, உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடமும், உணவு உற்பத்தி செய்யப்படும் இடமும் வெளிச்சமாக, காற்றோட்டமாக, எலிகள், பூச்சிகள் இல்லாதவகையில் இருக்க வேண்டி வரையறுக்கிறது இம்மசோதா.

உணவுக்கு பயன்படுத்தும் தண்ணீர் மாசில்லாமல் இருக்கவேண்டும். சூடான உணவுபொருட்களை பிளாஷ்டிக், பாலீதீன் பைகளில் 'பேக்' செய்வதையும் இம்மசோதா தடுக்கிறது. அத்துடன் சமைப்பவர்கள் நோயாளிகளாக இருக்ககூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறது.

நமது நாட்டில் இவையெல்லாம் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
எனவே இவற்றை கடைபிடிப்பது ஆரம்பத்தில் நமக்கு மிகச்சிரமமாக இருக்கும். ஆனால் இவை அவசியமானவை என்பதில் யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது.
அதனால் தான் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்க முடியாது என நீதிபதி சந்துரு உறுதிபட தெரிவித்துவிட்டார்.

அதே சமயம் இது அமல்படுத்தப்படுவதற்கான கால அவகாசத்தை அதிகப்படுத்தலாம். அதிலிருந்து விலக்கு பெற விரும்பும் சிறு வியாபாரிகளின் கோரிக்கையை பரிசிலீக்கலாம். நமது நாட்டில் சிறு வியாபாரிகளையும், சிறிய 'கேட்டிரிங்' அமைப்புகளையும் முறைப்படுத்துவது எளிதான விஷயமல்ல.

எனவே, உணவு பாதுகாப்பு மசோதாவின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் நிறுவனங்களை அங்கீகரித்து அடையாளப்படுத்தலாம். அதன் மூலம் தரமான உணவுப்பொருட்களை வாங்க விரும்புவர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும்.
நல்ல சீர்திருத்தங்கள் எதிர்பபுகள் இல்லாமல் அமலாவதில்லை. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
05-2-2013

அதிகரிக்கும் அரசியல் படுகொலைகள்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக தமிழகத்தில் அரசியல் படுகொலை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிரச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி - 31-ல் மட்டுமே மதுரையில் சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷூம், சென்னை அருகே தி.மு.க ஊராட்சி தலைவர் சங்கரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை பொட்டு சுரேஷ் தனது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி தலைவர் சங்கர் காரில் சென்றபோது வெடிகுண்டு வீசப்பட்டு, அதிலிருந்து தப்பி அவர் ஓடியபோது வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

இது போன்ற படுகொலைகள் - அதுவும் மிகுந்த செல்வாக்குள்ளவர்கள் படுகொலைக்களாவது - சமூகத்தளத்தில் பெரும் பதற்றத்தையே தோற்றுவிக்கிறது.

சென்னையில் எம்.கே.பாலன், திருச்சியில் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, தா.கிருஷ்ணன், தி.மு.க பிரமுகர்கள் பூண்டிசெல்வன், வெங்கடாச்சலம், தலித் இயக்க தலைவர்கள் பசுபதிபாண்டியன், பூவை மூர்த்தி.. போன்றவர்களின் கொலைகள் ஊடகங்களில் மிக அதிகமாக விவரிக்கப்பட்ட போதிலும், இவை ஏன் நிகழ்கின்றன? இதில் உண்மை குற்றவாளிகள் ஏன் பிடிபடுவதில்லை? என்பது மக்களுக்கு புதிராகவே உள்ளது.

பெரியகட்சிகளின் அதிகாரமையங்களோடு அடையாளப்பட்டு வலம்வருபவர்களே பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது.
அரசியல் அதிகாரத்தை கொண்டு அதீதமாக பணம் ஈட்டும் வகையிலும், அதில் சட்டவிதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக சிலருக்கு வாய்ப்பளித்தும், சிலரது வாய்ப்பை தட்டி பறித்து செயல்படும் வகையிலுமே இந்த வித அரசியல் படுகொலைகள் நடக்கின்றன.

இன்னும் சில இடங்களில் அத்துமீறிய அதிகாரமையமாக செயல்படும் அரசியல் சக்திகளை எதிர்த்ததால் தங்கள் இன்னுயிரைச் சிலர் இழந்துள்ளனர். இதில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியின் கொலை மிகவும் முக்கியத்துவமானது. மக்களுக்காக நீதி கேட்டவகையில் அவர் அநியாயமாக கொலையுண்டார்.

இதேபோல தர்மபுரி அருகில் தளி சட்டமனற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரனின் சட்டவிரோத செயல்பாடுகளை தட்டிகேட்டவகையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பிரமுகர் பழனிச்சாமி படுகொலைசெய்யப்பட்டார். மிகச்சமீபத்தில் இந்தப்பட்டியலில் மக்களுக்காக தொண்டாற்றிய தமிழ் தேசிய இயக்கத்தின் மோகன்ராஜ் சேர்ந்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க பெரிய பலமான அரசியல்கட்சியல்ல. ஆயினும் அந்த கட்சியைச் சேர்ந்த நாகை புகழேந்தியும், மருத்துவர் அணியின் அரவிந்தும் சமீபத்தில் படுகொலையான போது தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன' என எச்சரிக்கை மணியடித்தார்.

டிசம்பர் - 20ந்தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில், "தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 928 கொலைகள், 768 கொள்ளைகள், 956 வழிப்பறிகள் நிகழ்ந்தன" என பட்டியலிட்டார்.

இந்த சமூகம் கொலைகள், கொள்ளைகள் மலிந்து, சமூக மதிப்பீடுகள் சிதைந்து போவதற்கு, 'அரசியலை தொண்டு செய்வதற்கானது' என்ற அறப்பார்வையிலிருந்து அகற்றி, சட்டவிரோதமாக சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிய அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே பொறுப்புள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமைச்சராயிருந்த ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவின் மரணம் ஏற்படுத்திய மர்மம் இன்றுவரை விலகவில்லை..! 

அரசியல் அறம் நிலை குலைந்து பொதுப்பணத்தை சூறையாடுவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது என்று மாறிப்போனபிறகே இப்படிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் அதிகரிக்கின்றன என்பது தான் உண்மை!

சட்டங்கள், கா வல்துறை, நீதித்துறை, அரசாங்கம் போன்றவற்றால் இது போன்ற படுகொலைகளை ஒரளவுக்கு மேல் கட்டுபடுத்த முடியாது.
இந்த சமூகம் இன்று ஓரளவுக்காவது அமைதியாய் இருப்பதற்கு காரணம், மிகப்பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்வதாலும், அதில் கிடைத்ததை கொண்டு திருப்தி பெறுவதாலும் தான்! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-2-2013