Friday, August 30, 2013

உன்னத பதவிகளில் வேண்டாம் அரசியல்


அரசியல் சட்ட வரைமுறைகள், நிர்வாக விதிமுறைகள் போன்றவை இருப்பதால் தான் இந்தியா இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

உயர்ந்த பதவிகளில் உன்னதமான மனிதர்கள் உட்காரும் போது மேற்படி அம்சங்கள் அவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. அதே இடங்களில் மோசமான மனிதர்கள் வரும்போது அவர்கள் வரம்பு மீறி போகாத வண்ணம் நாட்டை காப்பாற்றுவது சட்டங்களும், நிர்வாக விதிமுறைகளுமே!
இந்திய தேர்தல் ஆணையர், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, தகவல் ஆணையர் போன்றவர்களை நியமிப்பதில் பிரதமர், சட்ட அமைச்சர், தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு முடிவெடுக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தி.மு.க தலைவர் கருணாநிதி ஆதரித்துள்ளார்.

மேற்படி மூன்று உயர்பதவிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான பதவிகள். இவை மூன்றுமே அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அமைப்புகள்!
இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி இருக்கும் அமைப்புகள் இந்திய தேர்தல் கமிஷனும், ‘CAGஎனப்படும் தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமுமாகும்! இதன் தலைவர்களை பிரதமர் பரிந்துரைக்க, குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பிற்பாடு சமீபத்தில் உருவானது தகவல் அளிக்கும் ஆணையமாகும். இதன் தலைவரை பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினேட் அமைச்சரோடு கலந்து ஆலோசித்து நியமிக்கிறார்.

இதுவரையிலுமான இந்த மூன்று அமைப்புகளின் செயல்பாட்டில் அரசியல் குறுக்கீடுகள், அத்துமீறல்கள், அநியாயங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்பதை எவரும் ஒத்துக் கொள்வர். இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக முதல்முதலாக பதவிஏற்ற சுகுமார்சென் தொடங்கி ஆர்.கே.திரிவேதி, பெரிசாஸ்திரி, டி.என்.சேஷன், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.கோபால்சாமி, தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய் குரேஷி வரையிலுமானவர்களில் நவீன் சாவ்லாவை தவிர்த்து அனைத்து ஆணையர்களும் அப்பழுக்கற்ற யோக்கியமானவர்கள்! மக்களிடம் மரியாதை பெற்றவர்கள்!
 அதேபோல் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரிகள் வரிசையில் டி.என்.சதுர்வேதி தொடங்கி வி.என்.காகுல் தற்போதுள்ள வினோத்ராஜ் வரையுள்ள 11 ஆணையர்களுமே பரிசுத்தமானவர்கள். எந்தக் குற்றச்சாட்டிற்கும் ஆட்படாதவர்கள்!

இதில் தலைமை தகவல் ஆணையரை எதிர்கட்சித் தலைவரை ஆலோசித்து தேர்ந்தெடுப்பதன் மூலம் எந்த புரட்சியும், புதிய நம்பிக்கையும் பிறந்ததாகச் சொல்ல முடியாது! ஆனால் இதில் ஒரு ஜனநாயக மரபு கடைபிடிக்கப் படுவது வரவேற்கத் தக்கதே!

 தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் நியமனத்தில் எதிர்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பு அலட்சியப்படுத்தப்பட்டு, கே.சி.தாமஸ் நியமிக்கப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற தலையீட்டால் பதவிவிலக நேர்ந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணன், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாயிருந்த தினகரன் போன்றவர்கள் ஊழல் புகார்களுக்கு உள்ளாகியுள்ளதையும் மறுக்க முடியாது! அத்வானி கூறிய அந்தக் குழுவில்  அபிப்ராய பேதங்கள் உருவாகி, அரசியல் மேலோங்கி, அவலங்கள் நிகழவும் வாய்ப்புள்ளது. அப்போது ஆளும் தரப்பின் ஈகோ மேலெழுந்து அரசியல் உள்நோக்கங்கள் அரங்கேறுவது தவிர்க்க முடியாததாகிவிடும்!

ஆகவே, இப்போது இருக்கும் நடைமுறையில் இல்லாத அரசியல் தலையீடுகள், புதிய நடைமுறையில் புகுந்துவிடும் வாய்ப்புமுள்ளது. பா.ஜ.க ஆளும் கட்சியாக இருந்து ஆட்சியை நடத்தியபோது தோன்றியிராத யோசனையை அல்லது செயல்படுத்தாத ஒரு திட்டத்தை, இப்போது கூறுவது ஏற்புடையதல்ல! அத்வானி அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று கூறும் கருணாநிதி தமிழக தலைமை தேர்தல் ஆணைய நியமனத்தில் எதிர்கட்சித் தலைவரை புறக்கணித்து தன்னிச்சையாக ஒரு தகவல் ஆணையரை எல்லோர் எதிர்ப்புகளையும் ஏகோபித்து பெற்ற ஒரு தகவல் ஆணையரை நியமித்தவர் என்பதை எங்ஙனம் மறக்க இயலும்?

6.6.2012

கட்சிகளுக்கு நிதி, தேர்தல் ஜனநாயக சதி



எஸ்.ஓய்.குரேஷி விடைபெற்றுவிட்டார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக சம்பத் பொறுப்பேற்றுள்ளார். நேர்மையாகவும், சிறப்பாகவும் தன் எல்லைகளுக்குட்பட்டு செயல்பட்டவர் குரேஷி. விடைபெறும் தருவாயில் அவர் கூறிய சில விஷயங்கள் ஆழ்ந்த பரிசீலனைக்குரியவை.

தேர்தலின் போது பணபலத்தை தடுக்கமுடியவில்லை இது பெரும் சவால்!
பணத்திற்காக செய்தி வெளியிடும் ஊடகங்களின் போக்கு நேர்மையான தேர்தலுக்கு ஒரு நவீன அச்சுறுத்தல்!
ஓட்டுப்போடாத வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லை!
ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறுவது சாத்தியமில்லை.

இந்த கருத்துக்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதலில் பண பலம். இந்தியாவில் தேர்தல் என்பது 1919 முதல் அறிமுகமானது. அன்று தொடங்கி பணபலம் தேர்தலில் பிரயோகிப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது. அதுவும் நீதி, தர்மம், நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய ஆட்சி அதிகார மையத்தில் இருப்பவர்களே அடாவடியாக இன்றைய தினம் பணபலத்தை பிரயோகிக்கிறார்கள்.

ஒரு வகையில் தேர்தல் அரசியல் ஒரு ஜனநாயக மீட்டெடுப்பு என்பது ஒரு பக்க உண்மையென்றால், பற்பல ஜனநாயசீர்குலைவிற்கும் தேர்தல் அரசியலே வித்திடுகிறது என்ற உண்மையை நாம் புறந்தள்ள முடியாது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் தலைமைகளும், வேட்பாளர்களும் பெறக்கூடிய வெளிப்படையில்லாத நன்கொடைகள் பல எதிர்காலத் தீமைகளுக்கு வித்திடுகின்றது.

இதை தடுக்கும் சக்தி அல்லது அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்கிற நிலைமையில், தேர்தலில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தை தொடக்க நிலையிலேயே தடுக்க முடியாத சமூக அரசியல் சூழலை எவ்வாறு மாற்றப் போகிறோம் என்பதே நமது தொடக்க புள்ளியாக இருக்க வேண்டும்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே
என்கிற புகழ்பெற்ற பொன்மொழியின்படி, தேர்தலில் முதலில் பணபலம் யாசகம் பெறும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் ஆட்டுவித்து, அவர்களின் வழியாக கடைசியாக மக்களையும் ஆட்டுவிக்கிறது.

அடுத்ததாக, இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்டு நீதி நிலைநாட்டப்பட துணைபுரிய வேண்டிய ஊடகங்களும் இந்த அநீதி நாடகத்தின் ஒரு அங்கமாக மாறிவருவது உண்மையிலே பெரும் கவலையளிப்பதாகும்!
அதோடு எப்போதும் ஓட்டுப்போடப்போவதில்லைஎன்பதாக வாழும் சுமார் 30 முதல் 45 சதவிகிதம் வரையிலான வாக்காளர்கள்! இதில் படித்த மேல் தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே கணிசமானவர்கள்! இவர்கள் தங்களின் பொறுப்பற்ற அலட்சியபோக்கால் பெரும் அநீதிகளுக்கு மறைமுகமாக துணைபோகிறார்கள்.

மேற்படி மூன்று விவகாரத்திலும் முக்கியமாக சம்பந்தப்பட்டிருப்பது படித்தவர்கள், அறிவுத்துறையினரே! எனவே இவர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டிய குறள் ஒன்றுண்டு.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை?
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி செயல்படாத ஒருவன், தான் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?
இப்படி பற்பல தரப்பினரும் அவரவர் பங்கிற்கு தேர்தல் ஜனநாயத்தை சீர்குலைத்துவிட்டு எல்லாவற்றையும் தேர்தல் கமிஷன் பார்த்துக்கொள்ளும் என்று ஒற்றை பொறுப்பாக்கிவிட முடியுமா? அது நியாயமா? எனவே தேர்தல் ஜனநாயகத்தை திடப்படுத்துவதற்கு அனைவரின் பங்களிப்புமே அவசியமாகிறது.

சரியான அரசியல்கட்சி, பொறுப்பான வேட்பாளர், கடமை தவறாத வாக்காளர்கள், நேர்மையான ஊடகங்கள்... என எல்லாம் ஒழுங்குபெறும் போது, அங்கே ஊழலில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைக்கே அவசியமில்லை. அப்படியே ஊழல் மக்கள் பிரதிகள் உருவானாலும் அவர்களை திரும்பப்பெறுவது என்பது நடைமுறை சாத்தியமில்லை. பொறுத்திருந்து தான் தீர்வு காணவேண்டும்.
அந்த நாளும் வந்திடாதோ என்று
ஏக்கத்துடன் காத்திருக்கிறது காந்திதேசம்.

ஜுன்-2012

அதிகரிக்கும் கல்விக் கட்டணங்கள்...



மீண்டும் ஒருமுறை கல்விக் கட்டணங்கள் அதிகரிக்கும் வகையில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கண்விழி பிதுங்க வைக்கும் கல்வி கட்டணங்களால் ஏற்கெனவே ஏழை, எளிய, நடுத்தரவர்க்க குடும்பங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது தனியார் பள்ளி கல்வி வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்! உண்மையில் இந்தக் கல்வி கட்டண உயர்வின் நதிமூலம் அரசியல் தான்! தனியார் பள்ளிகளின் வரம்பு மீறிய கல்வி கட்டண கொள்ளைகளால் கதிகலங்கி கொண்டிருந்த ஏழை எளிய நடுத்தர பிரிவினரின் கோபக்குமுறல்களை, ஆதங்கங்களை ஆதாய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு முந்தைய தி.மு.க அரசு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண ஒழுங்குமுறை சட்டம் ஒன்றை 2009-ல் கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து கல்விகட்டணங்களை நிர்ணயித்தது. இந்த அணுகுமுறை படுதோல்வியில் முடிந்தது. பொருளாதார பலம் படைத்த பள்ளி நிர்வாகங்கள் இக்கட்டணத்தை கேள்விகுள்ளாக்கி மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களை அணுகியதும், நீதிபதி கோவிந்தராஜனே விரக்தியடைந்து கமிட்டியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகியதும், அடுத்தடுத்து கல்வி கட்டணங்கள் இந்த மூன்றாண்டுகளில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளால் உயர்த்தப்பட்டதும், அதை அடுத்து அமைந்த நீதிபதி ரவிராஜன் கமிட்டிஅவற்றை அங்கீகரித்ததும் நாடறிந்த உண்மைகள். மொத்தமுள்ள 11,000 பள்ளிகளில் மேல்முறையீடு செய்த 6,000க்கு மேற்பட்ட பள்ளிகள் சுமார் 100% வரை கட்டண உயர்வை பெற்று திருப்தி அடைந்தபோதிலும் 318 பள்ளிகள், அதிலும் திருப்தி அடையாமல் நீதிமன்றம் சென்று தற்போது கூடுதலாக மேலும் 15% கட்டண உயர்வை வசூலிக்க வாய்ப்பு பெற்றுவிட்டன!

அப்படி ஒரு சட்டமும், அடுத்தடுத்து கமிட்டிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு மோசமான கல்விகட்டண உயர்வை நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான பெற்றோர்கள் குமுறுகிறார்கள்!

காரணம் என்ன?
இந்த சட்டத்தினால் கல்வித்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள அதிகாரிகள், ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நிர்பந்தங்கள் எங்களுக்கு உருவாயிற்று. அரசாங்கம், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்என கொண்டுவந்த சட்டம் தனியார் பள்ளி நிர்வாகங்களை ஒன்றுபட வைத்தது. ஒற்றுமையும், தொடர் போராட்ட முயற்சிகளும் தந்த தைரியங்களால் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு விட்டது. இதுதான் தனியார் பள்ளி நிர்வாகத் தரப்பினரின் விளக்கம்!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணங்களை ஒரு வரைமுறைக்கு கொண்டு வர அரசு உளப்பூர்வமாக நினைத்திருந்தால் அதை மிகுந்த பொறுப்புணர்வுடன் கையாண்டிருக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களை மதித்து, அரவணைத்து அதே சமயம் அரசின் அதிகாரபலத்தையும் சூசகமாக உணர்த்தி, ஒரு மாரல் கிரவுண்டில்அவர்களையும் உள்ளடக்கிய அரசு கமிட்டி அமைத்து ஒரு இணக்கமான தீர்வுக்குத்தான் வந்திருக்க வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது?
கல்வி அமைச்சரும், முதலமைச்சரும் பொதுமக்களிடம், ‘சபாஷ்பெற்றுக்கொள்ளும் நோக்கில், ‘எச்சரிக்கை’, ‘ஜாக்கிரதை’, ‘இனி நடக்காதுஎன்று தனியார் பள்ளிகளுக்கு அறிக்கை விடுத்தனர். அறிக்கை விடுபவர்கள் எப்போதுமே, எதையுமே சாதிப்பதில்லை!
சில தருணங்களில் சட்டங்களைக் காட்டிலும் சாதுரியமே பலன்தரும்!
அதிகார பலத்தை அகத்தூய்மையோடு, பொதுநலன் சார்ந்து பிரயோகிக்கும் போது நிச்சயம் பலன் தரும்!

எந்த ஒரு வியாபாரத்திற்கும் சில நெறிமுறைகளும், தர்ம நியாங்களும் அவசியமானவையாகும்! ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இவை இல்லாமல் இருப்பது தான் பிரச்சினை! வரம்புமீறிய கல்விக் கட்டணங்கள், நிர்பந்த நன்கொடைகள், கல்வியல்லாத பிற சீருடை, பஸ்கட்டணம், புத்தகம், நோட்டு... என இத்யாதி வகைகளில் பிடுங்கும் வசூல்கள்... போன்றவை வியாபாரத்தைக் கடந்த சூரையாடல்களாகவே பெற்றோர்களால் கருதப்படுகின்றன!

தனியார் பள்ளிகளுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான்!
கொஞ்சம் உங்கள் மனசாட்சிக்கு மதிப்பளியுங்கள்
மனசாட்சியோடு செயல்படும் பள்ளி நிர்வாகங்கள்
மக்களின் மரியாதைக்கு உரியவையாகும் என்பதே உண்மை!

11.6.2012

மத்திய அரசும், மாநில அரசுகளும்!



சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கிடையே இருக்க வேண்டிய இணக்கமான உறவு பிணக்கமாகிக் கொண்டு வருகிறது.
மாநில அரசுகள் கூடுதல் அதிகாரங்களை எதிர்பார்க்கின்றன. மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து பேசி விவாதித்து திட்டம் தீட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
மத்திய நிதி தொகுப்பிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஆதாரங்களை எதிர்பார்க்கின்றன.

இவை யாவும் நீண்டகால எதிர்பார்ப்புகளே! இவை எதுவும் புதிதல்ல!
நமது நாடு Fedaral என்று சொல்லக்கூடிய கூட்டாட்சி தத்துவத்தின் சில கூறுகளையும், Unidary என்று சொல்லக்கூடிய மையப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பின் சில கூறுகளையும் உள்ளடக்கிய கலவையாகும்! இதன்படி மத்திய அரசு சில அதிகாரங்களையும், மாநில அரசு சில அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அத்துடன் இரு அரசுகளுக்குமே பொதுவான சில அதிகாரங்களையும் கொண்டு செயல்படுகின்றன.

உலகம் இந்தியாவை மதிக்கவேண்டுமெனில் ஒரு வலுவான மத்திய அரசு தேவை என்பதும், மக்களின் அடிப்படைத் தேவைகளும், அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமெனில் சில நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட சுதந்திரமான மாநில அரசுகள் தேவை என்பதுமே நிதர்சனம்!
இதில் மத்திய அரசை வலுவிழக்கச் செய்வதும் ஆபத்து!
மாநிலங்களின் சுதந்திரமான நிர்வாகத்தை சீர்குலைப்பதும் ஆபத்து!
ஆனால், துர்ரதிர்ஷ்டவசமாக இன்று இந்த இரண்டுமே இந்தியாவில் அரங்கேறி, விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கி வருகின்றன.

மத்திய திட்டக்கமிஷனிடமிருந்து ரூ.28,000 கோடி நிதியை நமது மாநில முதல்வர் எதிர்பார்த்தார். கேட்டார், கிடைத்தது. அந்த வகையில் மகிழ்ச்சியே! இதோடு இன்னும் சில கூடுதல் எதிர்பார்ப்புகளும் நமது மாநில அரசுக்கு இருப்பதையும் கூறியுள்ளார். அவற்றை சீர்தூக்கிப் பார்த்து தக்க முடிவெடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குள்ளது.
பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி தரும் போது வளர்ச்சி திட்டம் சார்ந்த பணிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதே சமயம் மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த மானியங்கள், இலவசங்களுக்கு அதிக நிதி தர விரும்புவதில்லை.

நமது மாநில அரசை பொறுத்தவரை தனது மொத்த நிதியில் சுமார் 40% த்தை மானியங்கள், இலவசங்களுக்கே செலவழிக்கிறது. எனவே வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி இல்லாமல் போகிறது.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச அரிசி, பள்ளி இறுதி மாணவர்களுக்கு இலவச லேப் டாப்! அனைத்து குடும்பத்தினருக்கும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி இத்யாதி இத்யாதி.... என சமூக நலன் மேம்பாடு என்ற தலைப்பில் நமது மாநில அரசு செலவிடும் நிதியை பொதுவாக மத்திய திட்டகமிஷன் அங்கீகரிப்பதில்லை!

இந்திய தணிக்கை துறை தமிழகத்தை பற்றி குறிப்பிடும் போது, பல திட்டப் பணிகளில் முடக்கம், ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு செலவினங்களுக்கு பயன்படுத்துவது, மீதமான நிதியை திருப்பி அனுப்பாதது, தேவையில்லாமல் கடன்களை தள்ளுபடி செய்வது, எதிர்பாரா செலவுகள் என்ற தலைப்பில் ஏகப்பட்ட செலவுகளை செய்வது, எல்லாவற்றிற்கும் சிகரமாக இஷ்டப்படி இலவசங்களை அள்ளி இறைப்பது போன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
இவற்றை உணர்ந்து தன் தவறை சரி செய்வது தமிழக அரசின் கடமை, பொறுப்பு!

வளர்ச்சி திட்டங்களையும், தமிழக முதல்வரின் கோரிக்கையில் உள்ள நியாயத்தையும் மதித்து, தமிழக முதல்வர் கேட்கும் தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டங்கள்- குறிப்பாக காவிரி - குண்டாறு இணைப்பு மற்றும் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கான நிதிச்சுமையை பகிர்ந்துகொள்வது, கூடன்குளம் மக்களுக்கான மறுவாழ்வு திட்ட நிதி போன்றவை அத்தியாவசியமானவை! எனவே இரு அரசுகளும் இணக்கமாகச் செயல்பட்டு தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்!


5.6.2012

அசாஞ்சே; உலக ஊடக நாயகன்



புலனாய்வு ஊடகச் செயல்பாடுகளில் உலகையே  அதிரவைத்த செய்திகளை அம்பலப்படுத்தியவர் வீக்கிலீக்ஸின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே!

இந்த காரணங்களுக்காகவே இப்போது அவர் உலக வல்லரசு நாடுகளால் வேட்டையாடப்படுகிறார். கடந்த இரண்டாண்டுகளாக இலண்டனில் தஞ்சமடைந்திருந்த அசாஞ்சேவை, தற்போது ஸ்வீடன் அரசு கேட்டதற்கிணங்க நாடு கடத்திவிடும்படி இலண்டன் சுப்ரீம் கோர்ட் உத்திரவிட்டுள்ளது. இந்த செய்தி உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களை மட்டுமின்றி, சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.!

சுமார் 200 ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி கொண்ட உலக ஊடக வரலாற்றில் அசாஞ்சே அளவுக்கு பெரும் அதிர்வலைகளை, உலகநாடுகள் ஒவ்வொன்றிலும் ஏற்படுத்தியவர் என்று சொல்ல வேறொருவரில்லை!

 2006 தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் உலகின் அதிகாரமையங்களை அதிரவைத்து, கலக்கத்தில் ஆழ்த்திய மாபெரும் ஊடகப்புயலாக அசாஞ்சே உருவெடுத்தார். எனவே தான் உலகின் மிகப் பிரபலமான அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ்இலண்டனிலிருந்து வெளிவரும் தி கார்டியன்உள்ளிட்ட ஐந்து உலகப் பெரும் ஊடகங்கள் அவரது விக்கிலீக்ஸ் அச்சு ஊடக பாகஸ்தர்களாயினர்.

ஆரம்பகாலங்களில் அசாஞ்சே, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளின் ஊழல்களை, அரசியல் அதிகாரமையங்களின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியபோது அதை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அதிகார மையங்கள் ஆர்வத்தோடு கவனித்தன.
2008-ல் அசாஞ்சே கென்ய அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை தோலுரித்தபோது அம்னெஸ்டிக் இண்டர்நேஷனல்அமைப்பு அவரை விருது வழங்கி கௌரவித்தது.

சீனா, பாகிஸ்தான், சௌதி அரேபியா ஆகிய நாட்டு அரசுகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல் அநியாயங்களை அசாஞ்சே அம்பலப்படுத்தியபோது, உலகமே அதை பதற்றத்தோடு பார்த்தது!

இந்திய அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளை அசாஞ்சே துல்லியமாக அம்பலப்படுத்தியபோது இந்தியா ஏழைகளை சுரண்டிவாழக்கூடிய பெரும் பணக்காரர்கள்  ஆளும் நாடு என்பதை அகிலத்திற்கே உணர்த்தியது.

இதையெல்லாம் விட, அசாஞ்சே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ராணுவ அத்துமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் பதிவு செய்ததும், உலக நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள், அந்நாட்டு அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் குறித்து உளவுபார்த்து தன் நாட்டிற்கு அனுப்பிய  தகவல்களை அம்பலமாக்கிய போதும் தான், அவர் உலகப்பெரும் வல்லரசுகளின் பெரும் எதிரியாகிப் போனார்.

 இந்தப் பதிவுகளில் மூன்றாம் உலக நாடுகளில் தனது வல்லாதிக்கத்தை நிகழ்த்த, அமெரிக்கா நிகழ்த்தும் அத்துமீறல்கள், சர்வாதிகார ஊழல்.. தலைமைகளை ஊக்குவிப்பது, தனக்கு ஒத்துவராவிட்டால் எவ்வளவு நல்ல அரசாயினும் ஆட்டுவிப்பது போன்றவை அம்பலப்பட்டன.
இதனால் தான், அமெரிக்காவிலும், இலண்டனிலும் உள்ள அரசியல்வாதிகள் அசாஞ்சேவை, ‘கொல்லவேண்டும்என்ற அளவுக்கு வெளிப்படையாகப் பேசுகின்றனர்.

இந்தச் சூழலில் தான் சட்டரீதியான பாதுகாப்பும் தற்போது அவருக்கு கேள்விக்குள்ளாகியுள்ளது. எனினும் அசாஞ்சே மேல்முறையிடு செய்ய உள்ளார். உலக மக்கள் குறிப்பாக ஊடக, சமூக, அரசியல் தளங்களில் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்கள் அசாஞ்சேவின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுக்கின்றனர்.

ஒரு மாபெரும் வீரனை, மிக மலிவான பாலியல் சூழ்ச்சியில் கைது செய்து முடக்க பார்க்கும் உலக வல்லரசு நாடுகளின் எண்ணம் தோற்பது திண்ணம். ஏனெனில் மறைக்கப்படும் உண்மைகளின் வாயிலாக கட்டமைக்கப்பட்ட மாயைகள் கலகலத்து உதிர்வதை, மக்கள் இன்னும், இன்னும் எதிர்பார்க்கிறார்கள். தவறு செய்பவர்கள் திருந்தட்டுமே!

ஊரக வேலைவாய்ப்பா? ஊழலில் மக்கள் பங்கேற்பா?



மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்றொரு மிக பிரம்மாண்டமான திட்டம், நமது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. உலகத்திலேயே இது போல் அதிக மக்கள் பயன்பெறும் ஒரு திட்டம் வேறொன்று உதாரணத்திற்கு கூட கிடையாது.
சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.

தற்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.யான தம்பித்துரை வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “சென்ற ஆண்டு இத்திட்டத்தில் தமிழகத்திற்கு 2,900கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு 5,800 கோடி ஒதுக்கப்படும்என்று அறிவித்துள்ளார். இந்த திட்டம் பிப்ரவரி 2006 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு முக்கிய நோக்கங்கள் இதற்கு சொல்லப்பட்டன. ஒன்று, எளிய, ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 100 நாட்களாவது உத்திரவாதப்படுத்தி, வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது. மற்றொன்று இத்திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வாறுவது, கால்வாய்வெட்டுவது போன்ற வேலைகள் தரப்பட்டு, அதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாப்பது.

நோக்கங்கள் உன்னதமானவை. ஆனால்  இந்த ஆறாண்டுகால அனுபவத்தில் இது எந்த அளவு நடைமுறை சாத்தியமாகி உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
முதல் ஓரிரு ஆண்டுகள் ஓரளவு சிறப்பாகவே இத்திட்டம் அமலாகி, பற்பல ஆக்கபூர்வமான வேலைகள் நடந்தேறின. ஆனால் தற்போதோ, தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் மேற்கொண்ட ஆழமான ஆய்வில், செலவழிக்கப்படும் பணத்திற்கு 10 சதவிகித வேலை நடந்தேறினாலே அதிசயம் தான் என்ற நிலை தோன்றியுள்ளது.
காரணங்கள் என்ன?
இதில் நடக்கும் அபரிமிதமான ஊழல்கள், அதாவது, மஸ்டர் ரோல் ஊழல்!
* நூறு பேருக்கு வேலை தந்து, 150 பேருக்கு தந்ததாக எழுதும் கணக்கு.
* ரூ 100க்கு பதில் குறைவான ரூபாய் தந்து, மக்களை ஏமாற்றும் போக்கு.
* ஓட்டு வங்கி அரசியலுக்காக மக்களை, பேருக்கு அழைத்து வேலைவாங்குவது போல் பாவ்லா காட்டி உழைப்பில்லாமல் பணம் தருவது... போன்ற அம்சங்கள் இத்திட்ட அமலாக்கத்தில் காணப்படுகின்றன.

இதனால் ஒழுங்காக மனசாட்சிபடி வேலை செய்ய வேண்டும் என்ற உணர்வே மக்களிடமிருந்து விடுபட்டு கவர்மெண்ட் பணம், சும்மா தந்தா என்ன?’ என்ற மனநிலையே பரவலாக காணப்படுகிறது.
இது மிகவும் ஆபத்தானது.

தங்கள் கிராமத்திற்கு, தாங்கள் பயன் பெறுவதற்கான ஒரு திட்டத்திற்கு, பணம் பெற்றுக் கொண்டும் வேலைசெய்ய ஆர்வமின்றி மக்கள் மனநிலை இருக்கிறதென்றால், ஊழல் நிர்வாகம் மற்றும் ஓட்டுவங்கி அரசியலின் விளைவாகத் தான் இதை கருதவேண்டும்.
ஏழை எளியமக்களின் ஒரே மூலதனம் உழைப்புதான்!
உழைப்பே கௌரவம்! உழைப்பு ஒன்றே அவர்கள் சொத்து!
உழைப்பு என்பது வாழ்க்கை நெறி!
இதிலிருந்து மக்கள் மனநிலை பிறழ்ந்து போவதற்கா ஆண்டுக்கு சுமார் 70,000 கோடி செலவிடப்பட வேண்டும்..?

 எனில், இந்தியாவின் எதிர்காலம் என்னாவது?
ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் எண்ணம் தலைமைக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் உழைக்கும் எண்ணம் மக்களுக்கு வரும். மகாத்மா காந்தியின் பெயரால் இத்திட்டம் அமலாகிறது. காந்தியின் கட்டளை ஏற்று, அன்று நாடெங்கும் மக்கள் தங்கள் உழைப்பை சிரமதானம் என்ற பெயரில் உற்சாகமாகத் தந்தனர். அதில் எத்தனையெத்தனையோ உன்னத காரியங்கள் நடந்தேறின. வறுமை தாண்டவமாடிய அன்றைய காலகட்டத்தில் கூட பணம் தேவைப்படாமல் உழைக்கும் மனம் இருந்தது!
யோசிப்போம்!
* திட்டத்திற்காக மக்கள் என்பது தவறு.  எப்படியாவது செலவழித்து கணக்கு காட்ட வேண்டும் என்ற நிலைமாறி,
மக்களுக்காக திட்டம், திட்டத்தினால் நாடு பெறும் நன்மைகள்என்ற கண்ணோட்டம் உறுதி பெற வேண்டும்.

அபரிமிதமான நிதி, அளப்பறிய மக்கள் சக்தி இரண்டையும் முறையாக கையாளும் அரசியல் அறமும், நிர்வாகத்திறமும் இணைந்தால், இத் திட்டத்தால் இந்திய நாடே இமலாயப் பலன்களைப் பெறும் என்பது உறுதி!
கூடுதல் நிதியை தமிழகத்திற்கு கேட்டுப்பெற்றது வரவேற்கத்தக்கது என்றாலும், உரிய பலன்கள் நாடும், மக்களும் பெறும் வண்ணம் தமிழக முதல்வர் இத்திட்டத்தை அமலாக்க வேண்டும்.


17.5.2012