Tuesday, November 25, 2014

உள்ளாட்சி இடைத்தேர்தல்கள்; ஐயோ பாவம் ஆளும்கட்சி!

 -சாவித்திரிகண்ணன் 

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தல் ஆளும்கட்சி அதிகார பலத்தை சகலபரிமாணங்களிலும் அராஜகமாக பிரயோகித்த நிகழ்வாயிற்று. 

அந்தரங்க செயல்திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள் என்ற பாணியிலேயே தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது அ.தி.மு.க அரசு. சட்டமன்றத்தில் இயல்பாக அறிவித்து, விவாதித்து நிறைவேற்ற வேண்டிய அநேக திட்டங்களை 110விதியின் கீழ் அறிவித்தே ஜனநாயகத்தை அவமானப்படுத்தி பழக்கப்பட்ட காரணத்த்தினாலோ என்னவோ, உள்ளாட்சி இடைத்தேர்தலும் எதிர்கட்சிகளுக்கு அவகாசம் தரயியலாத வண்ணம் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. 

செப்டம்பர் 18ந்தேதி என்று உள்ளாட்சி இடைத்தேர்தல் அவசரமாக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் செப்டம்பர் 20ல் ஜெயலிலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கிலான தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதும் ஒரு காரணமாக அரசியல் விமர்களால் பேசப்பட்டது. 

எளிய மக்கள் தங்கள் சுற்றத்தை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் இத்தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, பா.ம.க, வி.சி உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. உண்மையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் ஒரு கட்சியை உயிர்ப்போடு ஜிவிக்க செய்வது - ஒரு கட்சியை அடிமட்டம் வரையிலும் ஆளுமை பலத்தோடு திகழவைப்பது உள்ளாட்சி பதவிகளே! இதை பிரதான எதிர்கட்சிகள் புறகணிப்பதாக அறிவித்ததானது அந்தந்த கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் அதிகாரம் பெறும் வாய்ப்பை மறுப்பதாகத் தான் அர்த்தம். 

அதே சமயம் எதிர்கட்சிகள் புறக்கணிப்பதற்காக கூறிய காரணங்கள் சில அலட்சியப்படுத்த முடியாதவையாகவும் இருந்தன. 

அவகாசமில்லாமல் அதிரடியாக அறிவிக்கப்பட்டது, சம்பந்தப்ப்ட பகுதிகளில் அரசாங்க செலவில் இலவசத்திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றியது, ஆளும்கட்சிக்கு வேண்டட்டபட்ட அதிகாரிகளை இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் பணி அமர்த்திக் கொண்டது போன்ற திட்டமிட்ட அணுகுமுறையோடு இந்த இடைத்தேர்லை ஜனநாயகப்படி ஆளும்கட்சி ஒரு போதும் நடத்தாது எனபவையே! 

இதன்காரணமாக எந்த இடத்திலுமே ஜெயிக்காமல் போனால் அது பெருத்த அவமானத்தை தரும் என எதிர்கட்சித் தலைமைகள் பயந்தன. 

ஆனால், தொண்டர்கள் பயப்படவில்லை. ஏனெனில் தாங்கள் வாழும் பகுதியில் தங்களுக்கென்று இருக்கும் ஒரு சுயசெல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ள இதை விட்டால் வேறென்ன வாய்ப்பு நமக்கு? என்ற பாணியில் ஆங்காங்கே களத்தில் தன்னிச்சையாக நிற்கத்தான் செய்தனர். 

மேயர், நகராட்சித் தலைவர் தவிர மற்ற பதவிகளுக்கு காங்கிரஸ்காரர்கள் கணிசமாகப் போட்டியிட்டனர். கட்சியின் மாநிலத்தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யாரும் பிரச்சாரத்திற்கு வராவிட்டாலும் கூட கன்னியாகுமரி, திருச்சி, கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் களம் கண்டனர். 

கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொறுத்தவரை இழந்து போன தங்கள் செல்வாக்கை இழுத்து நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக கருதி உள்ளாட்சி தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொண்டனர். ஆளும்கட்சியின் அத்துமீறல்களும், அராஜகங்களும் கம்யூனிஸ்டுகளிடம் தொலைந்து போயிருந்த போராட்ட குணத்தை மீட்டெடுக்கச் செய்தன! 

இந்த உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கவனம் பெற்ற கட்சியாகத் திகழ்ந்தது பாரதிய ஜனதா கட்சி தான்! தமிழகத்தில் தக்க பலம் இல்லாவிட்டாலும் கூட, மத்திய ஆட்சி தங்கள் வசமிருக்கிறது என்ற காரணத்தாலும் பிரதான கட்சிகள் எதிர்க்க துணியாத போது தான் களம் காண்பது கவனம் பெறும் எனவும் தமிழக பா.ஜ.க தலைமை கருதியது. 

ஆனால், ஆளும்கட்சியான அ.தி.மு.க தங்கள் கண்களில் இந்த அளவுக்கு விரல்விட்டு ஆட்டுவிப்பார்கள் என அது எதிர்பார்க்கவில்லை. தமிழக பா.ஜ.காவால் களத்தில் இறக்கப்ட்ட நெல்லை மேயர் உள்ளிட்ட சுமார் 40% பா.ஜ.க வேட்பாளர்களை பணபலத்தாலும், அதிகாரபலத்தாலும் வாபஸ் பெற வைத்தது ஆளும்கட்சி. 

இது அ.தி.மு.கவின் அசிங்கமான அரசியலுக்கு அடையாளம் என்றாலும், பா,.ஜ.கவினரின் பலஹீனத்தையும் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

இந்த அவமானத்தை எதிர்க்கதக்க ஆக்ரோசம் அதனிடம் வெளிப்படாதது அதனிலும் அவலம். அதன் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மட்டும் தன்னிச்சையாக ஊடகங்களில் ஆத்திரமும், ஆற்றாமையும் வெளிப்பட பேசிக்கொண்டிருந்தார். அதன் மற்ற தலைவர்கள், நிர்வாகிகளிடையே அ.தி.மு.கவை எதிர்ப்பதில் - இந்த சவாலை எதிர்கொள்வதில் - வெளிப்பட்டிருக்க வேண்டிய ஒற்றுமை கானல் நீராகத்தான் போனது. 

அ.தி.மு.கவில் முதலமைச்சர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும், நிர்வாகிகளும் இந்த சொற்பமான உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றுவதில் ஏதோ உயிர்காக்கும் போராட்டம் போல களம் கண்ட நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர்களிடம் ஒருங்கிணைப்பும், உத்வேகமும், பிரச்சார வேகமும் வெளிப்படாதது பெரும் பின்னடைவே. 

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் பல இடங்களில் அ.தி.மு.க தவிர மற்றவர்களுக்கு வேட்பு மனுவே மறுக்கப்பட்டது. அப்படி மறுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் கடத்தப்பட்டனர், மிரட்டப்பட்டனர், பணம் தந்து பணிய வைக்கப்பட்டனர். அதிகார பலத்தால் வாபஸ் பெறும்படி நிர்பந்திக்கப்பட்டனர். இன்னும் சில இடங்களில் வேட்பு மனுக்கள் தக்க காரணமின்றி தள்ளுபடியாயின. வேட்பாளர்கள் துணிந்து களம் கண்ட இடங்களில் வாக்காளர்கள் பணம் தந்து வளைக்கப்பட்டனர். இவை போதாதென்று கள்ள ஓட்டு போட வெளியூர் ஆட்களை திரட்டிக் கொண்டுவந்து காவல்துறை பலத்தோடு கள்ள ஓட்டு மகாத்மியம் கச்சிதமாக நடந்தேறியது. இதை எதிர்த்த பா.ஜ.க வேட்பாளர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர், பொய்வழக்கு போடப்பட்டது. அராஜகத்தோடு அவமானப்படுத்தலும் எல்லைமீறிப்போனது. 
கோவையிலும், தூத்துகுடியிலும் நிகழ்ந்தவையே இதற்கு சாட்சி. தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துகொடுத்தே தமிழக பா.ஜ.க தளர்ந்து போனது. அளிக்கப்பட்ட புகார்களெல்லாம் அலட்சிப்படுத்தப்பட்ட நிலையிலோ அரண்டுபோனது. 

இந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் உருக்குலைந்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தங்கள் கட்சி தொண்டர்களே காவு கொடுக்கப்பட்ட நிலையிலும், மத்திய பா.ஜ.க தலைமை மௌனம் காத்தது. உள்துறை அமைச்ச்ர் ராஜ்நாத்சிங்கிற்கு இது உறுத்தவில்லை. தன்வெற்றிக்காக பாடுபட்ட தமிழக பா.ஜ.க தொண்டர்களின் பரிதாப நிலை கண்டு மோடி பதறியதாகத் தெரியவில்லை.
 தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் ஜெயலிலிதாவை சந்தித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு இதையெல்லாம் சட்டைசெய்ய நேரமில்லை பாவம்! 'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று எத்தனையோ முறை நீட்டி முழக்கி பேசியுள்ள வெங்கையா நாயுடு வெகுண்டு எழவில்லை. தேசியத்தலைவரும், உத்திரபிரதேசத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருப்பவருமான அமித்ஷா அலட்டிக் கொண்டதாகக் கூட தெரியவில்லை. குறைந்தபட்சம் ஏதெனும் ஒரு தேசியத் தலைவராது டெல்லியில் இருந்தவாறே ஊடகங்களை அழைத்து அ.தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுக்க க் கூட முன்வரவில்லை. 

இந்த வகையில் பா.ஜ.கவின் தேசிய தலைமைக்கும், ஏன் தமிழகத்தலைவர்கலேயே கூட சிலருக்கும் அ.தி.மு.கவிற்கும் உள்ள உள்ளார்ந்த ஒரு இணக்கம், பரஸ்பர புரிதல்கள் தான் தமிழகத்தில் பா.ஜ.க தலையெடுக்க முடியாதற்கான அம்சமாகவும் கருதலாம். 

இந்த விசித்திரமான நிலைமை தான் தமிழக பா.ஜ.கவின் கூட்டணிகட்சித் தலைமைகளை பா.ஜ.கவிடமிருந்து அந்நியப்படுத்திவருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவு என்று கூறியபோதும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தோ, பிரேமலதாவோ, ம.தி.மு.க தலைவர் வைகோவோ பா.ம.கவின் பிரதான தலைவர்களோ பா.ஜ.கவிற்கு பிரச்சாரம் செய்ய முன்வரவில்லை. ஏனெனில் ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க பா.ஜ.க தலைமையிலான அரசின் செல்வாக்கு பிரயோகப்படுத்தப்படுவதாகக் கூட தமிழக பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளிடையே ஒரு எண்ணம் நிலவுகிறது. 

தமிழகத்தின் ஜனநாயக அரசியலுக்கு ஒரு பேராபத்தான அறிகுறியைத்தான் இந்த இடைத்தேர்தல் உணர்த்தி சென்றிருக்கிறது. 1996ல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது மிக கண்ணியமாக உள்ளாட்சிக்கான அதிகாரபரவல் என்ற லட்சிய முழக்கத்தோடு அணுகப்பட்டது. 

சுயசெல்வாக்குள்ள அதிகமான சுயேட்சைகள் அத்தேர்தலில் வெற்றிக்காண முடிந்தது. பிறகு 2001ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தான் கணிசமான பணபலம் பிரயோகப்படுத்தப்பட்டது. கட்சிகளின் அதிகாரபலம் கண்கூடாக வெளிப்பட்டது. 2006 தி.மு.க ஆட்சியின் போது நடத்தப்பட்ட உள்ளாட்சி தேரதல் ஜனநாயகத்தை உருக்குலைய வைத்தது. அராஜகங்கள் அத்துமீறல்கள் அளவின்றி நடந்தேறின. 2011ல் அ.தி.முக ஆட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் அவ்வளவு மோசமில்லை என்றாலும் அராஜகங்கள், அதகார பலங்கள் பிரயோகிக்கப்படாமல் இல்லை. 

ஆனால், தற்போது நடந்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல்கள் அராஜகத்தின் உச்சம் என்று தான் சொல்லவேண்டும். 

தி.மு.க போன்ற பலமான எதிரியும் களத்தில் இல்லை அதுவும் போக சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அ.தி.முகவின் அதீத செல்வாக்கை வெளிபடுத்தி இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிக்கு ஓட்டுபோடுவதால் தங்கள் பகுதிகான அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்ற பொதுகருத்தும் வலுப்பெற்றுள்ளது. 

அப்படியிருக்க, அசூரமான அரசபலத்தை இந்த சிறிய இடைத்தேர்தலில் பிரயோகிக்க வேண்டிய தேவை என்ன? 

ஒரு வேளை தி.மு.க களத்தில் இருந்திருந்தால் கூட அ.தி.மு.கவின் இத்தனை அராஜகங்களும் அரசியல் விமர்சகர்களால், "தி.மு.க செய்யாததா? பதிலுக்கு பதில் தானே" என்று நியாயப்படுத்தப்பட்டிருக்கும். 

தி.மு.க அராஜகம் நிகழ்த்தியபோது, 'ஜனநாயகத்திற்கு ஆபத்து' என்று பொதுக்கூட்டம் போட்டு பேசிய அறிவு௨ஜூவிகள், சமூக ஆர்வலர்கள் பலர் தற்போது தங்கள் தார்மீகக் குரலை தொண்டைக்குள்ளே புதைத்துக் கொண்டு மௌனித்திருப்பதை என்னென்று சொல்வது? 
ஒரு மிகச்சிறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் இந்தளவு ஆட்சிதலைமையில் உள்ளவர்கள் அத்துமீறி மூக்கை நுழைப்பதற்கான அவசியம் என்ன? 

தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தடுத்தும், மறுத்தும் சில உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றியது அ.தி.மு.க இதில் புதுக்கோட்டை நகராட்சி உட்பட பல உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். 

நெல்லையிலோ பா.ஜ.க வேட்பாளரை மட்டும் போட்டியிட அனுமதித்தனர். மற்றவர்களின் வேட்பு மனுக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. பிறகு பா.ஜ.க வேட்பாளரை வாபஸ் பெற வைத்து முதலமைச்சர் முன்னிலையில் கட்சியில் இணைத்தனர். 

போட்டியின்றி தேர்வானவர்கள் 

மாநகர மேயர் -1, மாநகராட்சி உறுப்பினர்கள் -4 
நகராட்சி தலைவர்கள் -4 
நகராட்சி உறுப்பனர்கள் -30 
பேரூராட்சி உறுப்பினர்கள் -64 

திருச்சி மாவட்டத்தில் மட்டுமே 83இடங்களுக்கான உள்ளாட்சி பதவிகளில் 59பேர் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காஞ்சிபுரத்தில் மொத்தமுள்ள 65 உள்ளாட்சி பதவிகளில் 38பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் பாதிக்கு மேற்பட்டவை பணபலத்தால் விலைபேசி வாங்கப்பட்ட நிகழ்வும், ஏராளமான வேட்புமனுக்களை தகுதி நீக்கம் செய்து, போட்டியின்றி அ.தி.மு.கவினர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தமிழகம் இதற்கு முன் கண்டறியாத உச்சபட்ச அராஜகமாகும். 

இது முதலமைச்சர் சென்று பிரச்சாரம் செய்யவேண்டிய அவசியமில்லாத தேர்தல்! அத்தனை அமைசர்களும் ஏதோ போர்கால முதலுதவிப் பணிகளில் ஈடுபடுவதைப் போன்ற அக்கறை தேவைப்படாத தேர்தல் இது. கள்ள ஓட்டுப் போடுவதற்கு வெளியூர்களிலிருந்து ஆட்களை தருவித்து வெற்றி பெற வேண்டிய நிலை ஆளும் கட்சிக்கு அவசியமேயில்லாதது. 

பிறகென்ன வந்தது? ஏன் இப்படி நடந்தேறின...? எதிர்த்து நிற்பவர்கள் தோற்றால் மட்டும் போதாது, டெபாசிட்டும் இழக்க வேண்டும் என்பது ஆளும் கட்சித் தலைமையின் விருப்பமாம்.

 இந்த விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் அமைச்சர் பதவி அதிரடியாக பிடுங்கப்படும், கட்சிப் பதவியும் கைநழுவிவிடும்' என்ற எண்ணமே அ.தி.மு.க வினரை கண்ணுமண்ணு தெரியாமல் இயங்க வைத்துள்ளது என்பதே பெரும்பாலன ஊடகங்களின் பார்வையாக வெளிப்பட்டுள்ளது. 

'உள்ளாட்சி அமைப்புகளே ஜனநாயகத்தின் உயிர்நாடி' என்றார் காந்தி . ஒரு நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், அதன் பிரதிநிதிகள் இயங்கும் வழிமுறைகளைக் கொண்டே ஜனாநயகத்தை மதிப்பீடு செய்ய முடியும். 

அந்த உள்ளாட்சி அமைப்புகளை உலுத்துப்போன ஊழல் அமைப்புகளாக்கி, கட்சித் தலைமைகளின் காலில் விழும் அடிமைகளின் கூடாரமாக்கியுள்ளது தமிழகம். 

உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகளின் தலையீடுகளை முற்றிலும் களைந்தெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம். நமது தமிழக ஆளும்கட்சியிடம் அபரிமிதமான பணபலம் இருக்கிறது. அதீதமான அதிகார பலம் இருக்கிறது. ஐயோ பாவம்! ஆன்ம பலம் தான் அறவே இல்லை.

ஜெயலலிதாவின் கைதும், எதிர்வினைகளும்

 -சாவித்திரிகண்ணன் 

ஊழலுக்கு எதிரான ஒரு தார்மீகக் கோபம், 

அறம் சார்ந்த விழமியங்கள் 

தமிழகத்தில் அரிதாகிக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது. 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தமிழகத்தில் பரவலாக வெளிப்பட்ட எதிர்வினைகள் நேர்மையை நேசிப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது! 66கோடி சொத்து சேர்ப்பில் சுமார் 56கோடிக்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை என்பதே அவர் சிறைக்கு போனதற்கான காரணம்! 

ஆக, இதெல்லாம் ஒரு பெரிய தொகையா? இதை விட பல்லாயிரம் கோடி ஊழல் செய்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளவில்லையே..." 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் ஜெயலிலிதாவைக் குற்றம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? 

ஜெயலிலிதா எவ்வளவோ மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறார் அது தடைபட்டுவிடுமே.... 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் தமிழகத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிறைவேற்றுவதற்கு யார் ஒருவரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லையே... 
போன்ற சொல்லாடல்கள் தொடர்ந்து வெளிப்பட்டவண்ணமிருந்தன...! 

இவையாவும் அலட்சியப்படுத்தமுடியாதவை என்ற பிரச்சாரமும் எட்டுத்திக்கும் வேகம் பெற்றன. 
கட்டமைக்கப்பட்ட இந்தச்சூழலில் கண்ணுக்குத் தெரிந்த உண்மைகள், யதார்த்தங்கள் காணாமலடிக்கப்பட்டன. 

மேற்படி நான்கு வாதங்கள் குறித்து ஒவ்வொன்றாக அலசுவோம். 
இந்த நாட்டில் பெரிய தொழிலதிபர்கள் பல்லாயிரம்கோடி கடன்பெற்று வங்கியில் திரும்பச் செலுத்தாமால் உள்ளார்கள் என்பதற்காக ஒரு வங்கி மனேஜரிடம் ஒரு திருடன் மிரட்டிப் பணம் பறிக்கும் போது பிடிப்பட்டால் விட்டுவிட நினைப்போமா? அல்லது அந்த திருடனை போலீசில் ஒப்படைக்க நினைப்போமா? 

மற்றொரு உதாரணம் சொல்கிறேன். பக்கத்துவீட்டில் பெரும் நகை, பணம் சமீபத்தில் கொள்ளை போனது. தற்போது உங்கள் வீட்டில் வெறும் ஆயிரம் ரூபாயை அபகரித்து செல்பவனை நீங்கள் அனுமதித்து விடுவீர்களா...? அவன் பிடிப்பட்டால், "தொகை கொஞ்சம் தான் தேவையில்லை அவனைவிட்டு விடுங்கள்" என்பீர்களா? அவனிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்று, அவனை நான்கு நாட்களாவது ஜெயலில் தள்ள நினைப்பீர்கள் தானே! மேலும் ஒரு திருடன் திருந்தாதவரை அவனை சமூகத்தில் நடமாட அனுமதிப்பது ஆபத்தல்லவா.....? 

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை 18ஆண்டுகளுக்கு முன்பு அவர் தவறானவழியில் சேர்த்த ஒரு குறைந்தபட்ச தொகைக்காக பிடிபட்டிருக்கலாம். தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் பின்னும் அவர் அபரிமிதமாக பணம் ஈட்டாத தூய்மையான அரசு நிர்வாகத்தைத் தான் தந்தார் என்று ஒரு போதும் சொல்லமுடியாது. அதுவும் தற்போது அதிமோசமான உச்சபட்ச ஊழல் நிர்வாகத்தையே தமிழகம் கண்டுகொண்டுள்ளது. எனவே இவ்வளவு குறைந்த தொகைக்காக ஜெயலிலிதா தண்டிக்கப்படுவதா? எனக்கேட்பவர்கள் தற்போதைய யதார்த்தங்களை அலட்சியப்படுத்தக்கூடாது. 

மேலும் இந்த வழக்கில் 18 ஆண்டுகள் நீதித்துறைக்கு அவர் பெரும் சங்கடங்களை உருவாக்கி, வழக்கை இழுத்தடிக்க படுமோசமான பித்தலாட்டங்களை தொடர்ந்து அரங்கேற்றியவண்ணமிருந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அத்துடன் ஏற்கனவே கலர்டிவி ஊழல்வழக்கு, டான்சிவழக்கு, டிட்கோவழக்கு, பிளசண்ட் ஸ்டேவழக்கு, தெற்காசிய விளம்பரத்துக்கான வழக்கு, நிலக்கரி இறக்குமதி ஊழல், வருமானவரி ஏமாற்று, லண்டனில் சொத்து வாங்கிய வழக்கு போன்றவற்றை அதிகாரபலத்துடன், அபரிமிதமான பணபலத்தால் சட்ட வல்லுநர்களின் துணைகொண்டு, எல்லாவற்றுக்கும் மேலாக அக்கரஹார லாபி துணைகொண்டும் நீர்த்துப்போக வைத்த நிதர்சனத்தை புறந்தள்ளலாகாது. 

இவை அனைத்தையும் விட சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு ஆதரவான அதிசக்திவாய்ந்த அழுத்தங்கள் தரப்பட்ட வழக்கு இதுவாகத்தான் இருக்கும் என சட்டவல்லுநர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட அழுத்தங்களை பொருட்படுத்தாது, ஆசைகாட்டிய நிர்பந்தங்களுக்கு அடிபணியாது, சலனங்களுக்கு சற்றும் இடம்கொடாது அறக்கோட்பாட்டிலிருந்து அடி பிறலாது ஊழலுக்கு எதிரான ஒரு தீர்ப்பை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வழங்கியுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இனிவரக்கூடிய அனைத்து ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளிலும் மேற்கொள் காட்டப்படக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்த தீர்ப்பை திசைமாற்றும் முயற்சிகளும், திட்டிதீர்க்கும் ஆர்ப்பாட்டங்களும் ஜெயலலிதாவை மட்டுமல்ல, கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுக்குமே ஆதரவானது என்பது தான் உண்மை. 

இன்று ஜெயலலிதாவை காப்பாற்றும் முயற்சி, ஊழல் செய்துள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் நாளை காப்பாற்றி மீட்டெடுப்பதற்கான சுலபமான பாதையை சமைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

கருணாநிதிக்கும், சுப்பிரமணியசுவாமிக்கும் பிறர் ஊழலை சுட்டிக்காட்டும் தார்மீகத் தகுதி இல்லை என்பது உண்மை தான். ஆனால், அந்த காரணமே ஜெயலிலிதா செய்து கொண்டு போகும் அதீத ஊல்களுக்கு தந்த அங்கீகாரமாகிவிட முடியாது! ஒவ்வொரு ஊழல்வாதியும் தனக்கு எதிரான மற்றொரு ஊழல்வாதியை உதாரணம் காட்டியே தங்கள் பிழைப்பை மாற்றி, மாற்றி நடத்திக்கொண்டு போவதற்கு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும். கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் ஊழல்வாதிகள் என்பதால் புறக்கணிக்ப்பட்டதைப் போல ஜெயலிலிதாவையும் மக்கள் புறக்கணிப்பது தானே சரியானது. 

ஜெயலிலாதவின் மக்கள் நலத்திட்டங்கள் என்பவை பிரம்மாண்டப்படுத்தப்பபட்டுவரும் மாயை. இது குறித்த மிக விரிவான ஆழமான புரிதலை உள்ளடக்கிய கட்டுரைகளை நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். தமிழகத்தில் சுமார் 7000 டாஸ்மாக் மதுபான கடைகளையும் 4000 மதுபான பார்களையும் அரசாங்க பலத்தில் நடத்தி கொள்ளை இலாபம் ஈட்டமுடிந்த ஜெயலலிதா அரசுக்கு ஏன் 300க்கும் குறைவான அம்மா உணவகங்களை மட்டும்தான் திறக்கமுடிந்தது. இதை மிக சுருக்கமாகச் சொல்வது என்றால் டாஸ்மாக் மதுவின் மூலம் சுமார் 24,000கோடிகளை அள்ளும் அநீதியைச் சமன்செய்யும் பொருட்டே அவர் சில எழும்புத்துண்டுகளை விட்டெறிகிறார். இது குறித்து காந்திய மக்கள் இயக்கம் ஏற்கெனவே விரிவாக தந்துள்ள விபரங்களின் படி ஜெயலலிதா மது மூலம் மக்களிடம் அபகரிப்பதை ஒப்பிடும் போது மக்களுக்கு இலவசமென்றும், மானியம் என்றும் தருவது மிகக்குறைவே என்பது நிருபிக்கப்பட்ட உண்மை! இந்த இலவசங்கள், மானியங்கள் என்பவை மக்கள் உழைப்பை உதாசினப்படுத்தி, உள்ளத்திறனையும் ஊனப்படுத்தும் தந்திரங்கள் தான்! 

ஜெயலிலிதா இல்லாவிட்டால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட வெற்றிடத்திற்கான முழுமுதற்குற்றவாளியே ஜெயலிலிதா தான். திறமையாளர்களை, நேர்மையாளர்களை ஒரம்கட்டுவது அல்லது ஒழித்துகட்டுவது, கட்சியையும், ஆட்சியையும் அடிமைகளின் கூடாரமாக மாற்றியது எல்லாம் சாட்சாத் அவர்தானே! 

ஆரம்பம் தொடங்கி இன்று வரை பட்டியலிட்டால் பட்டியல் வெகுநீளமாகும். உதாரணத்திற்கு சில என்றால் க.ஆராசாராம், பண்ருட்டி ராமசந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், கே.ஏ.கிருஷ்ணசாமி, அரங்கநாயகம், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர், ரகுபதி, திருச்சி, கே.சௌந்திரராஜன், கோவைதம்பி, விஸ்வநாதன், பொன்னையன், முத்துசாமி... என பற்பலர். இது கட்சிக்குள் என்றால், ஆட்சி அதிகாரத்திலும் அவர் புறந்தள்ளிய நேர்மையான அதிகாரிகளின் பட்டியல் மிகப்பெரியது இறையண்பு, உ.சகாயம், உமாசங்கர்.... இப்படி ஏராளம்! 

ஒருவர் தக்கவர், தகுதியில்லாதவர் என்பது அவர் விட்டுச்செல்லும் எச்சத்தாற் உணர்ப்படும் என்றார் வள்ளுவர். ஜெயலிலிதாவின் எச்சங்கள் எனப்படும் இரண்டாம் கட்டத்தலைவர்களின் தகுதியின்மைய என்பது உண்மையில் அவர்கள் சம்பந்தப்பட்டதல்ல, அது ஜெயலிலிதாவின் தகுதியை உணர்ந்துகொள்வதற்கான முக்கிய அடையாளமாகும். சசிகலா போன்ற மன்னார்குடி குடும்ப வகையறாக்களைக் கொண்டே நாம் ஜெயலிலிதாவை மதிப்பிடவேண்டும். இன்றைய ஜெயலிலதாவின் வீழ்ச்சிக்கு வித்திட்ட அவரது கூட நட்பு கூட்டத்தின் மீதும், அந்த கூட்டத்தின் மீதான தன் நாட்டத்தை இன்று வரை விலக்ககொள்ள முடியாத ஜெயலலிதாவின் மீதும் மக்களுக்கு இயல்பாக எழும் கோபத்தை மடைமாற்றவே கருணாநிதியும், சுப்பிரமணியசுவாமியும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். 

"தீதும் நன்றும் பிறர் தரவாரா" 
என்பது அவரவரின் அனுபவங்கள் கற்பிக்கும் பாடமாகும். 

ஊழலுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை சமீபகாலமாக வெளிபடுத்தி வந்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு விரைந்து ஜாமீன் வழங்கியுள்ளது. 

ஜாமினில் வெளிவந்துள்ள ஜெயலிதாவை ஜெயா டிவி 'மக்கள் முதல்வர்' என்று புதுமையாக அழைத்தது. 'மக்கள் முதல்வரின் ஆணைக்கேற்ப....' என்றும் செய்திவாசிக்கிறது. 

ஆக, குற்றவழக்கில் தண்டனை பெற்று தற்காலிக நிவாரணம் பெற்றுள்ள ஜெயலிலதா தான் தமிழகத்தின் நிஜ முதல்வர். சட்டத்தின் பார்வைக்கு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தெரிவார். ஆனால் சமானியனுக்கும் புரியும் போயஸ்தோட்டமே உண்மையான தலைமையைக் கொண்ட செயலகம் என்பது! இது அனைவரும் அறிய அரங்கேறும் நாடகம்! 

தமிழக மக்கள் தங்களை பிறர் ஏமாற்ற அனுமதித்தது என்பது கருணாநிதியின் காலகட்டம். 
தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ள தயாராக்கப்பட்டுள்ளது என்பதே ஜெயலிலிதாவின் காலக்கட்டம். 

வெளிதாக்குதலில் வீழ்ந்தவர்களை மீட்டெடுப்பதைக் காட்டிலும் உள் தாக்குதலால் சுயமிழந்து நிற்பவர்களை மீட்டெடுப்பது என்பது மிக மிக சவால் நிறைந்ததாகும்! 

ஏனெனில், தாங்கள் வீழ்ந்துள்ளோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது ஆகப்பெரிய சவாலாகும்! வெளியிலுள்ள ஒரு எதிரியை அடையாளப்படுத்தி ஒருவனை வீறுகொள்ளவைப்பது சுலபம்.ஆனால் தனக்குள் இருக்கும் எதிரயை உணர்த்தி மீட்டெடுப்பது தான் மிகவும் கஷ்டம். இந்த தாக்கம் நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் எல்லையில்லா பாதிப்புகளை தந்துகொண்டிருக்கும்! 

பாக்ஸ் மேட்டர் 

ஊடகங்களின் பாரபட்சம் ஜெயலலிதா கைதில் நிகழ்ந்த எதிர்வினைகளுக்கு தமிழக ஊடகங்களுக்கு பெரும் பங்கிருக்கிறது. 

இந்த வழக்கு விசாரணை பற்றிய தகவல்களை தொடர்ந்து ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவந்தன. வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பில் சொல்லப்பட்ட பொய்கள், பித்தலாட்டங்கள், இழுத்தடிப்புகள், தடங்கல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் தற்போதைய ஜெயலலிதாவின் ஊழல் மலிந்த ஆட்சி செயல்பாடுகள் எண்ணற்றவற்றை மக்களின் பார்வைக்கு கொண்டுவராமல் ஊடகங்கள் கவனமாக மறைத்துவருகின்றன. 

ஆனால், அதே சமயம் இரண்டாம் அலைக்காற்றை ஊழல் தொடர்பான செய்திகளை பிரசுரிப்பதிலும், சொல்வதிலும் மிக சிறப்புடன் செயலாற்றுகின்றன. 
கருணாநிதி, ஜெயலலிதா தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதில் ஊடகங்களின் தொடர்ச்சியான பாரபட்ச செயல்பாடுகள் ஒரு மிகப்பெரிய சமூக ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியதாகும். இந்தச்சூழல்கள் நமக்கு பெரியாரியலின் பெரு முக்கியத்துவத்தை ஆழமாக உணர்த்துகின்றன.

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி!

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியாவையே உலுக்கிய இமாலய ஊழல்கள் 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை ஊழலும், நிலக்கரிச் சுரங்க ஊழலும்! 

இந்த ஊழல்களை விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற பொறுப்புள்ள ஒரே விசாரணை அமைப்பு சி.பி.ஐ எனப்படும் சென்ட்ரல் இண்டலிஜன்ஸ் பீரோ. 

ஆனால், இந்த அமைப்போ ஆட்சியாளர்களின் கை அசைவுக்கும், கண் அசைவிற்கும் காத்திருக்கும் ஏவல் நாய்! 

ஆக, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? தப்புவிக்கப்படுவார்களா? என்பதற்கு சாலமன் பாப்பையாவை அழைத்து பட்டிமன்றம் நடத்தித் தான் விடைகாணவேண்டும் என்பதில்லை. 

தற்போது இந்த இரண்டு இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களை தப்புவிக்க சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தன் வீட்டிற்கே அழைத்துப் பேரம் பேசிய விவகாரத்தைத் தான் உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார். 

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீடு என்பது புது தில்லியின் அதி முக்கிய பிரமுகர்களும், அமைச்சர்களும் குடியிருக்கும் ஜன்பத் சாலையில் தான் உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி வசிப்பது இந்த சாலையில் தான்! 

சி.பி.ஐக்கு புதுதில்லியில் மிக விஸ்தாரமான 11 அடுக்குகளைக் கொண்ட தனி அலுவலகம் சுமார் 200கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அதன் பிரதான அலுவலகத்திலும் 52கிளைகளிலுமாக சுமார் 5,600அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். 

சம்பந்தப்பட்ட யாரையும் அழைத்து விசாரிக்க நவீன வசதிகள் கொண்ட, ஏராளமான கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட்ட குளிர்பதன வசதிகள் கொண்ட தனி அறைகள் அந்த அலுவலகத்தில் நிறையவே உள்ளன. இந்த அமைப்புக்கென்று நமது மத்திய அரசு ஆண்டுக்கு சுமார் 400கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்திலிருந்து வாரி வழங்குகிறது. இவ்வளவு இருக்க, சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா இந்த இமாலய ஊழல்களில் சம்பந்தப்பட்ட முக்கிய தொழில் அதிபர்களையும், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களையும், அவர்களின் உதவியாளர்களையும் தன் இல்லத்திற்கு அழைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? 

ரஞ்சித் சின்ஹாவை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்ட அனில் அம்பானி தன் மனைவியுடன் சிலமுறை! அம்பானியின் வலது கரமான ஏ.என்.சேதுராமன் சுமார் 50முறைக்கும் மேல் ரஞ்சித் சின்ஹாவின் இல்லம் சென்றுள்ளார், ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்களும், நிர்வாகிகளும் சந்தித்துள்ளனர். 

நீராராடியா போன்ற இந்தியாவின் பிரபல அரசியல் தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் என சுமார் 52பேர் 329முறை அவரது இல்லம் சென்றுள்ளனர். 

மேற்படி தகவல்கள் சி.பி.ஐ அலுவலகத்திற்கு போட்டி அலுவலகமாக தன் இல்லத்தை ரஞ்சித் சின்ஹா மாற்றியுள்ளதைத் தான் உறுதிபடுத்துகின்றன. 

உண்மையான, அதிகாரபூர்வமான சி.பி.ஐ அலுவலகத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அரும்பாடுபட்டு ஊழல்புகார்களுக்கு ஆளானவர்கள் செய்த குற்றங்களுக்கான ஆதாரங்களை தேடி உழைத்துக் கொண்டிருப்பது ஒரு புறம் என்றால், அந்த ஆதாரங்களை கொண்டு தன் இல்லத்தில் ஊழல் பெருச்சாளிகளிடம் பேரம் நடத்தியுள்ளார் ரஞ்சித் சின்ஹா! 

இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். 

இத்தனை பெரிய துரோகச் செயல்பாடுகளை தன் இல்லத்தில் உட்கார்ந்து ஆற அமரச் செய்யும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது? யார் தந்தது? தனி ஒரு மனிதராக இதனை அவர் செய்யமுடியுமா? 

அதுவும் உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் இமாலய ஊழல்களுக்கு ஜன்பத் சாலை இல்லத்தில் உட்கார்ந்து கொண்டு சாமதி கட்டி வந்துள்ளார் என்றால், அவர் எப்படி சி.பி.ஐ இயக்குநராக முடிந்தது? அவரை சி.பி.ஐ இயக்குநராக்கியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்றும் நாம் ஆராய வேண்டியுள்ளது. 

2ஜி ஊழலிலும், நிலக்கரி சுரங்க ஊழலிலும் ஐ.மு.கூ அரசு மக்களிடம் அம்பலப்பட்டு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதன் ஊழல் செய்திகள் சரம்சரமாக வெளியாகிக் கொண்டிருந்த ஒரு சூழலில் தான் - நவம்பர் 2012ல் - சி.பி.ஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா நியமிக்கப்பட்டார். 

இவரது நியமனத்தை அன்றே ஊழலுக்கு எதிரான அமைப்புகள் எதிர்த்தன. சென்னையைச் சேர்ந்த முன்னாள் சி.பி.ஐ இன்ஸ்பெக்டரும், தியாகி ஜெபமணியின் மகனுமான மோகன்ராஜ் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் பிரமாண பத்திரத்தில் ரஞ்சித் சின்ஹா மாட்டுதீவன ஊழலில் இருந்து லாலுபிரசாத் யாதவை காப்பாற்ற உதவிய வகையிலும், அந்த வழக்கையே நீர்த்து போக செய்த வகையிலும், பெரும் பங்காற்றியதாக பீகார் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பதோடு, அவர் ரயில்வே துறையில் ஆர்.பி.எப்.பின் பொது இயக்குநராக இருந்தபோது ஏராளமான ஊழல்குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார். மோகன்ராஜின் இந்த வாதங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகவில்லை. 'ஏழையின் சொல் அம்பலத்தில் ஏறாது' என்பது இதில் உறுதிபட்டது. 

ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தை அன்றைய எதிர்கட்சியான பா.ஜ.க பெயரளவுக்குத் தான் எதிர்த்தது. பெரிய முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரஞ்சித் சின்ஹா ஒரு 'அக்மார்க்க பிராடு' என்பது அனைத்து வகையிலும் சந்தேகக்கிடமற்ற உண்மை. ரயில்வே பாதுகாப்புப் படையை பலஹீனப்படுத்தி, அதன் திறமைகளை, செயல்பாடுகளை சிதைக்குமளவுக்கு ரஞ்சித் சின்ஹாவின் ஊழல் கொடிகட்டிப் பறந்தது ஊரறிந்த உண்மை. அப்படிப்பட்ட அநீதி திலகத்தை அதி முக்கிய விசாரணை அமைப்பின் தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்த்தது என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நோக்கம் வேறொன்றுமில்லை. 

இனி திருடனிடம் சாவி கொடுத்தாயிற்று. எனவே இது வரை திருடப்பட்டது குறித்து அவன் கேள்வி எழுப்ப போவதில்லை. திருடியதில் பங்கு வேண்டி பிச்சை கேட்பதற்கே அவனது நேரம் விரயமாகும். பிச்சை போட்டுவிட்டால் எடுத்தவனுக்கும் விடுதலை, பெற்றவனுக்கும் சந்தோஷம். எனவே நமக்கு விசுவாசமிக்க ஏவல் நாய் வேண்டுமென்றால் அது இரைதேடுவதற்கு நாம் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? நாம் அமைத்த வேலி பயிரை பாதுகாக்க அல்ல, பயிரை நம்மோடு சேர்ந்து மேய்ந்து கொள்ளத்தான்! இந்த பரஸ்பர புரிதல் தான் ரஞ்சித் சின்ஹா சி.பி.ஐ இயக்குநராக சிம்மாசனம் ஏறக்காரணமாயிற்று. 

நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குலைத்துக் கொண்டு தெருவில் ஓடி குப்பையைக் கிளறித் தின்பதை விடாது என்ற பழமொழி உண்டு. அடிப்படையிலேயே கோளாறுள்ள ஒருவருக்கு ஆகப்பெரிய பதவியைக் கொடுத்தாலும் தன் இயல்பிலிருந்தும் குணத்திலிருந்தும் ஒரு போதும் அவர் விடுபடமாட்டார் என்பது ரஞ்சித் சின்ஹா பதவி ஏற்ற பிறகான அவரது ஒவ்வொரு அசைவிலும், பேச்சிலும் வெளிப்பட்டே வந்தது. 

சி.பி.ஐயின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ரஞ்சித் சின்ஹா பேசும் போது, "விளையாட்டுகளில் சூதாட்டத்தை தடுக்க முடியாவிட்டால் அரசே அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் தந்துவிடலாம். இதன்மூலம் அரசுக்கும் பலநூறு கோடி வருமானமாவது கிடைக்கும். பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து பெரிய அளவில் பேசப்படுகிறது. பெண்கள் பாலியல் பலாத்காரத்தை எதிர்க்க முடியாமல் போகும் தருணங்களில் அதை சந்தோஷமாக அனுபவித்து விடலாம்" என்றார். 

இந்த பேச்சு நாடெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகளும், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளும் போர்கோலம் பூண்டன. அதன் பிறகு ரஞ்சித் சின்ஹா, "நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று சமாளித்தார். 

நிலக்கரித் துறை ஊழல்குறித்து வரைவு அறிக்கை தயார் செய்த ரஞ்சித் சின்ஹா, அதை அன்றைய சட்ட அமைச்சர் அஸ்வாணிகுமாரிடமும், அத்துறையின் இரு அதிகாரிகளிடமும் காட்டியுள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கும் வரைவு அறிக்கை தந்துள்ளார். பிறகு ஆட்சியாளர்கள் செய்த திருத்தங்களை ஏற்று வரைவு அறிக்கையையே மாற்றிவிட்டார். 

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுவழக்கு தொடரப்பட்டபோது சி.பி.ஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஹரேல் ராவல் பிண்டே 'இப்படி எதுவும் நடக்கவேயில்லை' என அடித்துப் பேசினார். 

ஆனால், ரஞ்சித் சின்ஹா வரைவு அறிக்கையை திருத்தம் செய்தது உச்சநீதிமன்றத்தில் நிருபணமானபோது, அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, "இதனால் இந்த வழக்கிற்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறேன். இனி இதுபோல் யாருக்கும் காட்டமாட்டேன் என உறுதியளிக்கிறேன்...." என்று சமாளித்தார். நீதிபதிகள் அன்றே ரஞ்சித் சின்ஹாவை தண்டித்திருக்க வேண்டும். ஆனால் ரஞ்சித் சின்ஹாவின் சமாதானத்தை நீதிபதிகள் ஏற்று விட்டுவிட்டனர். 

இப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு விசுவாசம் காட்டி வந்த ரஞ்சித் சின்ஹா, 2014 தொடங்கி பா.ஜ.க பக்கம் நகரத் தொடங்கினார். அடுத்து பா.ஜ.க ஆட்சி தான் வரவுள்ளது. எனவே தனது கோக்கு மாக்குகளை தொடரவும், பதவியை பாதுகாக்கவும் பா.ஜ.கவின் பரிவு அவசியம் எனப்புரிந்து செயல்பட்டதோடு அவ்விதமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை. 

இஸ்ரத்ஜகான் என்ற கல்லூரி மாணவியும் அவளது நண்பர்கள் மூவரும் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல வழக்கில் அமித்ஷாவின் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் வேண்டுமென்றே விடுவித்தார் ரஞ்சித் சின்ஹா. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அமித்ஷாவின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இருந்திருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ந்திருக்கும்" என்றார். 

அப்படியானால் அமித்ஷாவின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லாததால் யார் மகிழ்ந்திருக்ககூடும் என்ற கணிப்பிலேயே ரஞ்சித் சின்ஹா காய் நகர்த்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கஷ்டமல்ல. 

எதைச் செய்தால் யார் மகிழ்வார்கள்? யார் வருத்தமடைவார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பது ஒரு சி.பி.ஐ இயக்குநரின் வேலையல்ல. அது அதிகார வர்க்க அடிவருடிகளுக்கு மட்டுமே தோன்றும் யோசனையாகும். 

இது மட்டுமின்றி, மற்றொரு விவகாரத்திலும் ரஞ்சித் சின்ஹாவின் உண்மை சொருபம் வெளிப்பட்டது. சி.பி.ஐக்கான கூடுதல் இயக்குநரை தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு குழு உள்ளது. அந்தக்குழு கூடுதல் இயக்குநருக்கு பரிந்துரைத்த பெயர் பச்சனந்தா. ஆனால் ரஞ்சித் சின்ஹா அதை புறக்கணித்து தமிழகத்தின் ஐ.பி.எஸ்ஸான 

அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமிக்க வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டார். மத்திய காங்கிரஸ் அரசு தமிழக அரசிடம் தகவல்கூட தராமல், மாநிலப் பணியிலிருந்து அவரை விடுவிக்கக் கூட கால அவகாசம் தராமல் சி,பி,ஐயின் கூடுதல் இயக்குநராக அரச்சனா ராமசுந்தரத்தை நியமித்தது. ஆனால், தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராடி அந்த நியமனத்தை முறியடித்தது. அர்ச்சனா ராமசுந்தரத்தை நியமித்ததின் பின்னுள்ள அரசியல் உள்நோக்கங்களே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் அர்ச்சனா ராமசுந்தரத்தை விடுவிக்க மறுத்து பிடிவாதம் காட்டியதற்கு காரணமாகும். முதலாவதாக சி.பி.ஐயின் கூடுதல் இயக்குநராகும் அளவுக்கான தகுதி படைத்தவரல்ல அர்ச்சனா ராமசுந்தரம். அடுத்தது, அவரது கணவர் ராமசுந்தரம் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகவும் வேண்டபட்டவர். 

பொதுபணித்துறை செயலாளராக ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் இருந்தபோது, அதில் புதையல் தோண்டி பொன்னெடுத்து விருந்து படைத்தவர் என்ற வகையில் கருணாநிதிக்கு நெருக்கமானவர். அண்ணா நூலக கட்டிட உருவாக்கத்திலும் அளப்பரிய ஊழல்களை அரங்கேற்றியவர். இதனால் முன் எச்சரிக்கை உணர்வுடன் அ.தி.மு.க ஆட்சி வருவதற்கு முன் விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டவர். எனவே 2ஜி ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கு ஆதரவாக காய்நகர்த்தவே அரச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐயின் கூடுதல் இயக்கநராக்கப்படுகிறார் என ஜெயலிலிதா சந்தேகித்தார். அதனாலேயே அதை மூர்க்கமாக தடுத்துவிட்டார் என்ற கருத்து காவல்துறை வட்டாரத்தில் முனபே பலவாறு விவாதிக்கப்பட்ட விவகாரம் தான்! 

ரஞ்சித் சின்ஹா போன்றவர்கள் தன் சகாவாக ஒருவரை விரும்புகிறார் என்றால் நிச்சயம் அது கிரண்பேடி ஐ.பி.எஸ் போன்ற ஒரு நேர்மையானவராக இருக்கமுடியாது என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. தன் பதவிக்காலம் முடிக்கு வந்த பிறகும் தன் தில்லுமுல்லுகளை தொடரவும், தன் செல்வாக்கை சி.பி.ஐக்குள் நிலை நிறுத்தவும் தக்க ஒருவரைத் தான் விரும்ப முடியும். ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது. 

இப்படியாக பயிரை மேய்வதற்காகவே வேலியை நட்டகதையாகத்தான் ரஞ்சித் சின்ஹா நியமனமும், அதைத்தொடர்ந்த நடவடிக்கைகளும் உள்ளன. தற்போது ரஞ்சித் சின்ஹாவின் உண்மைசொரூபத்தை பிரசாந்த்பூஷன் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதில் ரஞ்சித் சின்ஹாவை தண்டிக்கவோ, குறைந்தபட்சம் பதவிநீக்கம் செய்யவோ முன்வரவில்லை உச்சநீதிமன்றம். மாறாக, ரஞ்சித் சின்ஹா கேட்டுக் கொண்டதின் பேரில் அவரது வீட்டில் அவரைச் சந்திக்கச் சென்றவர்களின் வருகை பதிவேட்டை பிரசாந்த் பூஷனுக்கு தந்தது யார்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை நாட்டு மக்களுக்கு பெரும் அதிரச்சியை, ஆழ்ந்த வருத்தத்தையே ஏற்படுத்தி உள்ளது.

 ரஞ்சித் சின்ஹா மாதிரியானவர்கள் நீதிமன்றத்தால் மன்னிக்கப்பட்டாலோ, மரியாதைக்குரியவர்களாக நடத்தப்பட்டாலோ அது மக்கள் மனங்களை ரணப்படுத்திவிடும். பிறகு சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை சீர்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையே அடியோடு ஆட்டம் கண்டுவிடும். 

ரஞ்சித் சின்ஹாவின் வார்த்தைகளிலேயே அவரது செயல்பாடுகளை விளக்குவதென்றால், 'ஊழலை தடுக்க முடியாது என்பதால் சட்டபூர்வமாக அதை சரிகட்ட முயன்றேன். ஊழல்வாதிகள் வீடுதேடி வந்து விருந்து வைத்ததால் அதை விருப்பதோடு அனுபவித்து மகிழ்ந்தேன்'. 

ஆம், இது தான் ரஞ்சித் சின்ஹாவின் இயல்பு. 

உடல் சுகம் வேண்டும் காமுகர்கள் யாருமே பத்தினியின் வீடுதேடி பணம் கொண்டு தருவதில்லை தானே!

இருள் சூழ்ந்த சமூகம் - இளந்தலைமுறையின் அவலம்

 -சாவித்திரிகண்ணன் 

மாணவர்களிடையே அடிதடி, வெட்டு, குத்து, பதட்டமான சூழல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 

இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலிலும், கத்திக்குத்து சம்பவங்களிலும் சென்ற வருடம் சென்னையில் மட்டுமே 100க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு புறம் அரசு கல்லூரி மாணவர்கள் தினசரி அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது கூச்சலும், கலாட்டமாகவும் பயணிக்கிறார்கள்! 
பேருந்துகளை ஓங்கி தட்டிக்கொண்டு பாடுவது, மாணவிகளை சீண்டி கிண்டலடிப்பது, பெரும் கூச்சலெடுத்து பேசுவது, கெட்டவார்த்தைகளை பொது வெளியில் பிரயோகிப்பது... என அவர்கள் செய்யும் கலாட்டா உடன் பயணிப்பவர்களை அச்சுறுத்துவதாக உள்ளன. 

இதனால் எரிச்சலடைபவர்கள் கூட எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் மனம் புழுங்கி உள்ளுக்குள் வேதனைப்பட்டவாறு பயணிக்கின்றனர். ஏதேனும் கேட்டால் மாணவர் கூட்டம் தாக்கி விடுமோ என்ற அச்சுசசத்தால் பொதுமக்கள் காட்டும் சகிப்புதன்மை மாணவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிவிடுகிறது. 

இது போதாதென்று 'பஸ்டே' என்ற அடாவடிக் கொண்டாட்டங்கள் வேறு! 
சம்பந்தப்பட்ட நாளில் அந்த பேருந்து முழுவதுமே மாணவர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிடும். 
மேற்கூரையில் ஏறி நடனமாடுவார்கள் 'ஒ'வென்று பேரிரைச்சலோடு நகரை வளம் வருவார்கள்! 

எதிரில் வருபவர்கள் எலலாம் மிரண்டு விலகி செல்வதைக் கண்டு உள்ளுக்குள் உவகை கொள்வார்கள்..! 

பேருந்து பயணிக்கும் வழிகளில் உள்ள கடைகளில் புகுந்து அகப்பட்டதை அள்ளுவார்கள்! 
இதற்கு பயந்து கடைக்காரர்கள் மடமடவென்று ஷெட்டரை சாத்துவதும் நடக்கும்! 

'இந்த சம்பவத்திற்கு அனுமதி தரக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தடை ஆணை பிறப்பித்துள்ள போதிலும் இந்த 'பஸ்டே' கொண்டாட்டங்கள் அவ்வப்போது நிகழாமலில்லை. 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று மதுபழக்கம் மட்டுமீறி அதிகரித்துக் கொண்டுள்ளது. 
அத்துடன் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கமும் பரவி வருகிறது. 

மாணவ சமுதாயம் இப்படிப்பட்டதொரு இழிநிலையில் உலாவக் காரணம் என்ன? 
அவர்களின் இந்த நடத்தைகளுக்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? எந்த சமூகத்திலிருந்து அவர்கள் உருவானார்களோ, 
எந்த குடும்பக் கட்டமைப்பிலிருந்து அவர்கள் வெளிவந்துள்ளார்களோ 
அந்த சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் இதில் பங்கில்லையா? 

சமூகத்திலும் சரி,வீட்டிலும் சரி அவர்களுக்கு எப்படிப்பட்டவர்கள் ரோல் மாடல்களாக இருக்கிறார்களோ... 
அவர்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்க முடியும். நம் மாணவர்கள் வேற்று கிரகத்திலிருந்து குதித்த அதிசயப்பிறவிகளா என்ன? 
ஆனால் பாதிக்கப்படும் பொது மக்கள் அப்படித்தான் கருதுகிறார்கள்...! 

"சே...ஸ்டுடன்ஸா இதுங்க, பொறுக்கிங்க... இவனுகள எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடணும் சார்... 

"ஐயோ மோசமான கயவாளிப்பயலுக சார்! என்னா காட்டுமிராண்டித்தனம்... என்னா கூச்சலு... எல்லாம் கலிகாலம் தான் போங்க..."

 "படிக்கிற புள்ளிங்களா இதுங்க... கம்மனாட்டிப்பசங்க, சுத்த உதவாக்கரை தான்! இதுங்க வீட்டுக்கும் பாரம், நாட்டுக்கும் பாரம்..." 
என மக்கள் சகட்டுமேனிக்கு கொட்டித்தீர்த்துக் குமுறுகிறார்கள்...! 

ஆனால், இந்த மாணவர்கள் உண்மையில் பரிவோடு பார்க்கப்பட வேண்டியவர்கள்! 
ஏனெனில், இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அடிதட்டிலிருந்து முதன்முதல் கல்லூரியில் காலடிவைத்தவர்கள்! 

இவர்களின் குடும்பச்சூழலோ குடிகாரத்தகப்பன், கூலிவேலை செய்து படிக்க வைக்கும் அம்மா என்பதாகத் தான் இருக்கின்றது. 

பிள்ளைகள் பெரும்பாலும் தந்தையைப்பார்ப்பதே தங்களை தகவமைத்துக் கொள்வார்கள்! தனிமைப்பட்ட தாயின் அதீத பாசம் அவர்களை முரடர்களாக்கி விடுகின்றது. 

உலகத்திலேயே மிகவும் உன்னதமான பதவி தாயாகவும், தகப்பனாகவும் பொறுப்பேற்பது தான்! 

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் பெறும் ஞானம் என்பது ஒரு வகை என்றால், பெற்றோர்களின் பல்வேறு நடவடிக்கைகளில், அணுகு முறைகளில் பிள்ளைகள் கண்டடையும் கல்வி என்பது மற்றொரு வகை! 

பிள்ளை வளர்ப்பின் பரிணாம வளர்ச்சி என்பது பண்பட்டவர்களாக குழந்தைகளை உருவாக்குவது என்பது மட்டுமல்ல, பெற்றோர்களும் தங்கள் சகிப்புத்தன்மையாலும், பெருந்தன்மைகளாலும் தங்களை பண்படுத்திக் கொள்வதுமாகும்! 

ஆனால், நமது சமூக கட்டமைப்பில் குடும்பம் அதற்குரிய குணாதிசியங்களை இழந்து கொண்டிருக்கிறது. கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய களங்கள் அமைதி குலைந்து கந்தர் கோலமாக காட்சியளிக்கின்றன! 

மறுபுறம் சமூகத்தளமோ சகலவிதத்திலும் சீரழிந்துள்ளது. 
ஆசிரியர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் பார்த்து பின்பற்றத்தக்க வர்களல்ல. 
ஆன்மீக மையங்களோ ஆபத்தானவையாக மாறிவருகின்றன. 
தொண்டு செய்பவர்களாக கூறுபவர்கள் பொதுச்சொத்தை சூறையாடுகிறார்கள். 
வர்த்தகத்தில் தொழில்தர்மம் காணாமல் போய்விட்டது. கொள்ளை லாபம் வைத்து சம்பாதிப்பவர்கள் கெட்டிக்காரர்களாகப் புகழப்படுகிறார்கள்..!! 
அரசியல் என்பது அத்துமீறுவதற்காக கைகொள்ளப்படும் கருவியாகிவிட்டது. 
இந்தச்சூழலில் மாணவர்கள் மட்டும் சாதுவாக இருப்பது சாத்தியமேயில்லை. 
அவர்கள் அப்பாவியாக இருந்தாலுமே கூட நமது சினிமா, டி.வி.பத்திரிக்கைகள் அவர்களை அவ்வாறு தொடர அனுமதிப்பதில்லை. 
பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைப்பதே இன்று பெருமபாலான ஊடகங்களின் தொழில் தர்மமாகிவிட்டது. 

அரசு கல்லூரி மாணவர்கள் தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள...நாதியில்லை! 
அரசு கல்லூரிகளில் கலை, கலாச்சார விழாக்கள் இல்லை. 
ஒவ்வொரு இளம் உள்ளத்திலும் பீறிட்டு எழும் கலை, கலாச்சார படைப்பாற்றலை வெளிப்படுத்த களம் அமைத்துத் தருவதில்லை. 
அதனால் அவர்களே தான் தோன்றித்தனமாக மனம் போன போக்கில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமென ஆடித்தீர்க்கிறார்கள்..! 

இளம் பருவ ஆற்றலென்பது காட்டாற்று வெள்ளமாகும். 
அதை இருபுறமும் பண்பாடு, கலாச்சாரமெனும் பாதுகாப்பு தடுப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெள்ளத்தை தகுந்த வழியில் சென்று சேரவும், 
சமூகத்திற்கு பயன்படவும் செய்யவேண்டியது மூத்தோர் அனைவரது கடமையாகும்! 

நாம் அனைவருமே அக்கடமையை எந்த அளவுக்கு செய்கிறோம்..? 
குடும்பத்தோடு நிறுத்திவிடுவதும் குற்றம் தான்! 
நாம் பொதுத்தளத்தில் எவ்விதம் வெளிப்படுத்துகிறோம்..? 
பணம் சம்பாதிப்பதற்கானதாக மட்டுமே நம் உழைப்பு முழுமையும் தருகிறோமா? 
நம் கையில் கிடைக்கிற பணம் அதர்ம வழியில் வருகிறதா? அல்லது சமூகம் பயனடைய நாமும் பயன்பெறத்தக்க அளவில் வருகிறதா...? 

ஏனெனில், நாம் இளைய தலைமுறையினருக்கு வெறுமனே உபதேசம் செய்வதில் உபயோகம் ஒன்றுமில்லை. 
நம் செயல்பாடுகளும், வாழ்க்கையுமே அவர்களிடம் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைத்துக் கொள்வோமாக! 
நாம் சொல்லொன்றும், செயலொன்றுமாக வெளிப்பட்டால் நாம் சொல்வதெல்லாம் செல்லாக் கசாகிவிடும் இளைய தலைமுறையிடம்! 
ஆக, இந்த கட்டுரையின் அடிநாதம் இளைய தலைமுறையின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை எச்சரிப்பதல்ல...! எச்சரிக்கை பெரியோர்களுக்கே!

Thursday, September 18, 2014

தி.மு.க வீழ்த்தப்பட்டுவிட்டதா?

-சாவித்திரிகண்ணன் 

திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்த்தப்பட்டுவிட்டதா? இது அக்கட்சிக்கு வரலாறு காணாத தோல்வி" "தலித் இயக்கங்கள், இஸ்லாமிய இயக்கங்களை கூட்டணியில் சேர்த்தும் கூட இமாலய தோல்வியை கண்டுள்ளதே..." "மு.க.ஸ்டாலின் தலைமையை மக்கள் ஏற்கவில்லை... இனி தி.மு.கவின் எதிர்காலம் கேள்விக்குறி தான்..." என பலவாறான விமர்சனங்கள், அலசல்கள் வெளிபட்டவண்ணமுள்ளன! மேற்கூறப்பட்ட சொல்லாடல்களில் ஓரளவு உண்மைகள் இருக்கலாம்! ஆனால், முழு உண்மையில்லை. தமிழக மண்ணை, தமிழ்ச் சமுகத்தை, மக்களின் அரசியல் அணுகுமுறைகளை உணரமுடிந்தவர்கள் ஒரு உண்மையை மறுக்க முடியாது. தமிழகத்தில் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், மத்தியிலும் திராவிட இயக்கம் தோன்றி, நிலை பெறுவதற்கான சமூக காரணங்கள், தேவைகள் என்னென்ன இருந்தனவோ அவை தொடர்ந்து கொண்டிருக்கும் வரை தி.மு.க போன்ற ஒரு அரசியல் இயக்கத்தின் இருப்பும் தவிர்க்க முடியாததாகவே கணிசமான மக்களால் உணரப்படும். அப்படியானால், அன்றைக்கு நிலவியதைப் போலவா இன்னும் பிராமண மேலாதிக்கம் நிலவுகிறது..? இன்றைக்கென்ன தீண்டாமை பிரச்சனை இருக்கிறது...? பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும் இன்றென்ன வேலை...? என்று அடுக்கடுக்காக பல கேள்விகள் வைக்கப்படலாம்? எங்கே இல்லை பிராமண மேலாதிக்கம்...? ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இல்லையா? தமிழக கோயில்களில் பிராமண அர்ச்சகர்களைத் தவிர தீவிர சைவ, வைணவ தமிழ்ப்பற்றாளர்களுக்கும், தமிழ் மந்திரங்களுக்கும் இன்றேனும் இடம் கிடைக்கிறதா? ஜனநாயகத்தின் உன்னத உயர்ந்த பீடங்களாக நீதித்துறை, உயர் கல்வி துறை,நிர்வாகத்துறை என எல்லாவற்றிலுமே பிராமணலாபி பிண்ணிப் பிணைந்தருப்பதை மறுக்க முடியுமா? உடனே சில பேர் இத்துறைகளிலுள்ள பிராமணர்களின் எண்ணிக்கை சார்ந்த புள்ளி விபரங்களை பட்டியலிட்டு வானத்திற்கும், பூமிக்குமாக எகிறக்கூடாது... 'பிராமணலாபி' என்பது எண்ணிக்கை சார்ந்ததல்ல, எண்ணிங்களின் பலத்தால் கட்டமைக்கப்பட்டது. எந்த ஒன்றின் ஆதிகத்திற்கும் எதிர்வினை சமூகத்தில் இருந்தே தீரும் என்பதற்கான உதாரணங்கள் தான் பெரியாரிய இயக்கங்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற சமூக இயக்கங்களும் பிராமணர்களின் தீவிர இனப்பற்று, சுயநலம், உயர்ஜாதி மனோபாவம் அனைத்து நல்ல அம்சங்களையும் மற்றவர்களோடு பங்கிட்டுக் கொள்ளாமல் தாங்களே ஆக்கிரமிக்கும் போக்கு... போன்றவை சமூகத்தில் தொடருகின்ற வரை ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தின் தேவை சமூகத்தின் நிர்பந்திமாகிவிடும்! பிராமணமர்களில் முற்போக்குச் சிந்தனையாளர்கள், சுயநலம் துறந்தவர்கள், பரோபகாரிகள், அப்பாவி ஏழைகள்... ஏன் அதி தீவிர புரட்சியாளர்களே கூட இருக்கத்தான் செய்கிறார்கள்...! ஆனால், பாவம் அவர்களே அந்த சமூகத்தின் பெரும்பான்மையினாரல் விலக்கி வைக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டியுள்ளது. ஏன் தலித் இயக்கங்களும், இஸ்லாமிய இயக்கங்களும் தி.மு.க.வோடு ஓரணியில் நின்றன...! சென்ற தேர்தலில் அ.தி.மு.கவோடு இருந்த இந்த இயக்கங்களால் எதனால் தொடர முடியவில்லை? பொதுவுடமை இயக்கங்கள் கூட அ.தி.மு.க அணியில் அங்கம் வகிக்க முடியாத சூழலின் தாத்பாரியம் என்ன? இனி தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் யாரோடு கைகோர்க்க முடியும்? அனைத்து இந்துத்துவ இயக்கங்களும், இந்துத்துவ அநுதாபிகளும் அ.தி.மு.க தலைமையை ஆராதித்தப்பதற்கான காரணங்கள் என்ன? இந்த அம்சங்களோடெல்லாம் கலந்திருக்கும் சமூக காரணிகளே தி.மு.கவை உயிர்ப்போடு வாழ வைக்கப் போதுமானதாகும். இவை மட்டுமின்றி தற்போதைய தமிழக அரசு செயல்படும்விதமும் நோக்கமும் அதன் பிராமணிய சிந்தனைகளை அப்பட்டமாக நிலை நாட்டுகிறது என்பதற்கு சில உதாரணங்கள். சமச்சீர் கல்வியை சமாதியாக்க துடித்தது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகுவதற்கு தி.மு.க ஆட்சி செய்த முயற்சிகளை சீரழித்தது செம்மொழி நூலகத்தை சீரழிக்கவைத்தது சிதம்பரம் கோயிலை தில்லை தீட்ஷிதர்களுக்கு தாரை வார்த்தது இந்துதுவ சக்திகளோடு இணக்கம் பாராட்டுவது அடிமை கலாச்சாரத்தை அடிமட்ட தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்தது கல்விகோயிலாம் அண்ணா நூலகத்தை கருவருக்க துடித்தது தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றியது ஆட்சி தலைமை குறித்த அச்ச உணர்வை அனைத்து மட்டத்திலும் விதைப்பது சொத்து குவிப்பு வழக்கில் வரலாறு காணாத வாய்தாக்கள் பெற்று, நீதி துறையில் 'லாபி' செய்வது இதையெல்லாம் எதிரத்து போராட இன்றைய தினம் தி.மு.க போன்ற ஒரு இயக்கத்தின் தேவை தமிழர்களுக்கு இன்றியமையாததாகிறது. அதே சமயம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகளை எந்த அளவுக்கு தி.மு.க கடந்த காலங்களில் நிறைவேற்றியுள்ளது? நிறைவேற்றித் தவறியுள்ளது என்பதை நாம் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், தி.மு.க வை முற்றிலும் நிராகரிக்க முடியாது. ஏனெனில், இன்றைக்கு எந்த ஒரு அரசியல் இயக்கமும் ஜீவித்திருப்பதற்கு அதன் எதிர்ப்பு அரசியலே அடித்தளமாயுள்ளது. அந்த வகையில் தி.மு.கவின் தவறுகளே அ.தி.மு.கவை வாழவைக்கிறது! 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்த போது இரு அணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 23.43% இது, இன்றைய வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் அதிகமே! தி.மு.கவின் குடும்ப அரசியல், உள்கட்சிபூசல்கள் போன்றவை அந்த இயக்கத்தை கணிசமாக பலம் இழக்க வைத்துள்ளது உண்மை எனினும், தற்போதைய ஆட்சித்தலைமை, அடிமட்டத் தொண்டன் தொடங்கி அமைச்சர்கள் வரை ஸ்தாபித்துள்ள அடிமை கலாச்சாரம், சமூகத்தின் சகல தளத்திலும் ஆட்சித் தலைமை குறித்த அச்ச உணர்வை விதைத்திருக்கும் சர்வாதிகார போக்குகள் போன்றவை தி.மு.கவை அதன் பலஹீனங்களைக் கடந்து பலப்படுத்தக் கூடியதாகும். தி.மு.க வீழ்ந்து மண்ணோடு மண்ணாக வேண்டும் எனில், அதை வாழவைக்கும் சமூகக்காரணிகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாக சமாதியாக்கப்படவேண்டும். அல்லது தி.மு.கவைக் காட்டிலும் இந்த சமூகதேவைகளுக்கு வடிகாலாக பார்க்கப்படும் இன்னொரு பலமான இயக்கம் கண்டறியப்படவேண்டும்.

அம்மா திட்டங்கள்

 -சாவித்திரிகண்ணன் 

இந்தியா சுதந்திரமடைந்து 67ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், நம் ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மாண்புகளை பேண விரும்பாதவர்களாகவே உள்ளனர். ஜனநாயகம், சமத்துவம், கூட்டுச் செயல்பாடு போன்ற சொற்களே கூட அவர்களை எரிச்சலடைய வைக்கிறது. கட்சியானாலும், ஆட்சியானாலும் அது ஒற்றை அதிகார மையமாக மட்டுமே இங்கே இயங்குகின்றன. 

அதுவும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு சார்ந்த அணுகுமுறைகள் மன்னராட்சியின் நீட்சியாகவே வெளிப்பட்டுவருகின்றன.. 

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகான முதல் இருபதாண்டுகளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நாட்டு நிர்மாணத் திட்டங்கள் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டன. அதுவும் தமிழகத்தில் அக்காலகட்டத்தில் நிறுவப்பட்ட நீர் ஆதாரத்திட்டங்களும், மின் உற்பத்தி திட்டங்களும், தொழில்துறை திட்டங்களுமே இன்று வரை இவ்வளவு சீர்கேடுகளுக்கிடையிலும் தமிழகத்தை தமிழகத்தை தாங்கி நிற்கின்றன. 

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் ஆட்சிகளுமே தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்த பாப்புலிஸ்ட் என்ப்படும் வெகு மக்கள் திட்டங்கள் அனைத்துமே மக்களின் உணர்வுகளை வென்றெடுத்தால் போதும் அவர்களுக்கான உரிமைகளை மறுதலித்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. 

சென்ற தி.மு.க ஆட்சி, தான் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான காரணமே ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்ற அறிவிப்பும், இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அறிவிப்பும் தான் என உறுதியாக நம்பியது. 

அதன் வழியிலேயே அ.தி.மு.க தலைமையும் 20கிலோ அரிசி மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது. 

இந்த ரீதியான இலவச அறிவிப்புகள், மானியங்கள் என்பவை அரசாங்க நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு அம்சமே என்பதை கடந்து முழு அடையாளமாகவும் மாறிவருவது தான் பெரும் கவலையளிக்கிறது. 

இந்த நிதி ஆண்டிற்கான தமிழகத்தின் வரி வருமானம் 91,835 கோடி! 

இதில், இந்த வகை இலவசங்கள், மானியங்களுக்கான தொகை - 49,068 கோடி
அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஒய்வூதியத்திற்கான தொகை 51,740 கோடி 
இது வரை வாங்கிய கடனுக்காக திருப்பி செலுத்தும் வட்டி தொகை - 15,463கோடி. 

ஆக, வரி வருமானத்திற்கு மேல் இதற்கே பணம் தேவைப்படுகிறது. மத்திய அரசு தரும் நிதி, மேன்மேலும் பெறும் கடன்தொகைகள் ஆகியவற்றைக் கொண்டு தான் மற்றவற்றை சமாளிக்க வேண்டும். இந்நிலையில் அடிப்படை கட்டமைப்புகளை வளப்படுத்தும் செயல்திட்டங்களுக்கு ஏது நிதி? 

இந்தச் சூழலிலும் நாளும் பொழுதுமாக புதுப்புது கவர்ச்சி திட்டங்கள் அம்மா திட்டம் என்ற பெயரில் அணி வகுத்து வந்து கொண்டே உள்ளன. 

அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மாவிடுதிகள், அம்மா காய்கறிகனி அங்காடி, அம்மா மருந்தகங்கள், அம்மா விதைகள், அம்மாஇன்சூரன்ஸ் திட்டம், அம்மா வேலைவாய்ப்பு திறன் மற்றும் பயிற்சி திட்டம், அம்மா திரையரங்குகள், அம்மா பேபிகிட்ஸ், அம்மா சிறுவர்பூங்காக்கள், அம்மா பயிற்சி வகுப்புகள், அம்மா மாணவர் ஊக்குவிப்பு திட்டங்கள், அம்மா அரசுப்பணிதிட்டம், அம்மா பணிபாராட்டும் திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம், அம்மா திட்ட முகாம்கள்... என நீண்டுகொண்டே போகிறது. இத்தகு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பதிற்கிணங்க மாநில அரசின் அறிவிப்பாகவும், மாநகராட்சிகளின் அறிவிப்பாகவும் இடையறாது அறிவிக்கப்பட்ட வண்ண முள்ளன. 

இவை மகத்தான மக்கள் திட்டங்கள் என்றும், மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன.... என்றும் ஊடகங்கள் எழுதியும், பேசியும் வருகின்றன. இதில் ஒரு பகுதி உண்மை இல்லாமலில்லை. எந்த ஒரு தீமையை அரங்கேற்றுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்ள சில நன்மைகளை செய்வதும் ஒரு ராஜதந்திர அணுகுமுறை தானே! 

ஒரு ஜனநாயக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? 

குடிமக்கள் கண்ணியமாக உழைத்து வாழ்வதற்கான சூழல், நேர்மையான நிர்வாகம், தங்கள் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைக்கும் நிர்வாக அணுகுமுறை! கல்வி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், சாலைவசதிகள், மின்சாரம் போன்றவற்றை தடையின்றி பெறும் உரிமை! 

இதற்காகத் தான் அரசின் பல்வேறு துறைகள் நிர்வாக செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசு அலுவலகங்களில் மக்கள் சேவை பெற பெரும் தடைகள், அலைச்சல்கள்! 

இவற்றை களைவதற்காகாத்தான் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பபடுகின்றனவாம். இந்த திட்ட முகாம்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களை நாடி வந்து எல்லா பிரச்சனைகளையும் ஒரே நாளில் தீர்ப்பார்களாம்! இது எப்படி நடைமுறை சாத்தியமாகும்? பாதி மனுக்களை தட்டிக் கழிக்கிறார்கள், பெயரளவுக்கு சிலவற்றை நிறைவேற்றுகிறார்கள். ஒரு நாளில் இது தான் சாத்தியப்படும்! 

ஆனால், அதிகாரிகள் தங்களை நாடி வந்து குறை தீர்க்கிறேன் என பாவனை செய்வதை தவிர்த்து, தாங்கள் தேடிவரும் போது கனிவாக காதுகொடுத்து கேட்டு, மீண்டும், மீண்டும் அலைய வைக்காமல் தங்கள் கடமையைச் செய்தாலே போதும் என்று தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த மக்கள் சேவையை உறுதிபடுத்தத்தான் மத்திய அரசு சேவைப்பெறும் உரிமை சட்டத்தை 2011ல் கொண்டு வந்தது. இந்த சட்டம் ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு, ஜாதிச்சான்றிதழ்கள் தொடங்கி பாஸ்போர்ட் வரை ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட காலத்தை கறாராக நிர்ணயிக்க கோருகிறது. அதன்படி அச்சேவை வழங்காவிடில் தாமதப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் கட்ட அத்துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊழியர்களை நிரபந்திக்கிறது. இந்தச் சட்டத்தை இந்தியாவில் கேரளா, ஒரிசா, பீகார், மேற்குவங்கம், குஜராத், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், ஹரியானா, உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. ஆனால் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மக்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் வைக்கப்படும் வேண்டுகோளுக்கு தமிழக அரசு இன்று வரை செவி சாய்க்கவில்லை. 

இந்த சேவைபெறும் உரிமை சட்டத்திற்கு முன்பாகவே அரசு நிர்வாகத் தாமதங்களை தட்டிகேட்கவும், அதன் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மை கொண்டதாக்கவும் - கொண்டு வரப்பட்டது தான் தகவல் பெறும் உரிமைச்சட்டம். இந்தச்சட்டம் எந்த லட்சணத்தில் தமிழகத்தில் அமலாகிறது? தகவல் தரும் ஆணையம் தகவல்களை தர மறுக்கும் தகிடுதத்த ஆணையமாக உள்ளது.... என நாளுக்கொரு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஆயினும் பலனில்லை. ஆனால் கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தகவல் அறியும் ஆணையம் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. எத்தனை விண்ணப்பங்கள் வந்தன? எவற்றுக்கொல்லாம் தகவல்கள் தரப்பட்டுள்ளன..? எத்தனை தரவேண்டியுள்ளன போன்றவை வெளிப்படையாக அலுவலக போர்டிலும், இணையத்திலும் வெளியிடப்படுகின்றன. விண்ணப்பதாரருக்கு அவரது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தி வாயிலாக அவ்வப்போது தரப்பட்ட வண்ணுள்ளது. இங்கோ தகவல் பெறும் உரிமை தகவல் தரும் ஆணையத்தாலேயே தகனம் செய்யப்பட்டுள்ள அவலநிலை! 

அரசு நிர்வாகத்தில் இத்தனை அவலங்களை நிகழ்த்திக்கொண்டு ஏதோ ஒரு நாளில் அம்மா திட்ட முகாம் போட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு வருவது போல ஊடகங்களில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இந்த அரசின் மிகப்பெரிய வரவேற்பு திட்டமாக அம்மா உணவகங்கள் பேசப்படுகின்றன. மார்ச் 2013ல் 15 உணவகங்களாகத் தொடங்கி இன்று தமிழகம் தழுவிய அளவில் சுமார் 300 உணவகங்களாக வளர்ந்திருக்கிறது. மேலும் 360 உணவகங்கள் திறக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

மலிவு விலை உணவகம் என்பது ஏழை எளிய மக்களின் பசிப்பிணிதீர்க்கும் அறம் சார்ந்த ஓர் அணுகுமுறை! உணவுபடைத்தலில் அதீத கொள்ளை லாபமீட்டும் ஆயிரக்கணக்கான உணவகங்களின் செயல்பாட்டை கட்டுபடுத்த எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்வதற்கு ஒரு சிறிதும் முனைப்பு காட்டவில்லை. சரி, சுதந்திரப் பொருளாதாரயுகத்தில் அது சாத்தியமில்லை என்ற பட்சத்தில் அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஏற்கெனவே மலிவு விலையில் பலகாரங்களையும். மதிய உணவையும் வழங்கிக் கொண்டிருக்கும் சுயதொழில் முனைவோர்களான தள்ளுவண்டிக்காரர்கள், வீட்டு முற்றத்தையே உணவு தயாரிக்கும் கூடமாக்கியுள்ள ஏழை விதவைப்பெண்கள் போன்றவற்களையல்லவா ஊக்கப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், அம்மா உணவகங்கள் பல்லாண்டுகளாக இந்த எளிய சேவை செய்து, தங்களும் பசியாறி வந்த அந்த ஏழைக் குடும்பங்களையல்லவா நிலைகுலையவைக்கிறது...? 

அம்மா உணவகம் என்பது கிட்டதட்ட அரசின் இலவச உணவகம் தான்! 
இதற்காகும் செலவுகள் இதில் பெறப்படும் வருவாயைக் காட்டிலும் 200% த்திற்கும் அதிகமாக இருக்கிறது... என்பதே நடைமுறை உண்மை! இலவசமாகச் சாப்பிடுவது கௌரவக் குறைவு எனக்கருதும் மக்களை சமாதானப்படுத்தத்தான் ஒரு மிகக்குறைந்த தொகை பெறப்படுகிறது. சரி, போகட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இது வரப்பிரசாதம் தானே...! ஆமாம் சந்தேகமில்லை அப்படியானால், தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்குமே பலன் பெறும் விதத்தில் அல்லவா இது போன்ற ஒரு திட்டம் விரிவான தளத்தில் திட்டமிட்டிருக்க வேண்டும்? 

எனில், அது மாபெரும் மக்கள் பங்களிப்பில் அல்லவா அரங்கேறி இருக்க வேண்டும். இத்தொழிலில் ஏற்கெனவே சிறிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களையும், சுய உதவி குழுக்களிலுள்ள லட்சக்கணக்கான பெண்களையும் ஒருங்கிணைத்து கூட்டுறவு முறையில் உணவகங்களை அவர்களே நடத்த அரசு லைசென்ஸ், இட உதவி, வங்கிக்கடன் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்தால் அதில் எத்தனையெத்தனை ஏழைபெண்கள் சுயதொழில் முனைவர்களாகி இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும் வளம் பெற்றிருக்கும். கோடிக்கணக்கான ஏழைகளின் வயிறும் பசியாறி இருக்கும். இதில் ஒரு இட்லியின் விலை ஒரு ரூபாய்க்கு பதில் இரண்டு அல்லது இரண்டரை ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், சாப்பிடுபவர்களுக்கு நிச்சயமாக அது ஒரு சுமை இல்லை. மேலும் எந்த ஒரு திட்டமும் அரசை மட்டுமே முழுக்க, சார்ந்தியங்குவது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை. அது தன் சேவையால் தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்வதே சுதர்மம். 

ஏனெனில், ஒவ்வொரு நாளும் ஒரு உணவகம் தோராயமாக பத்தாயிரம் ரூபாய் இழந்து கொண்டுள்ளது. இதை ஆண்டு முழுவதுமாகவும், அனைத்து உணவகங்களுக்குமாகவும் கணக்கெடுத்து பார்த்தால் இழப்பு பல கோடிகளைத் தாண்டும். அரசு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் ஊழல், முறைகேடுகள் போன்றவற்றிற்கும் வழிவகுக்கும். 

அம்மா திட்டங்களில் காய்கனி அங்காடி முதலில் வரவேற்பு பெற்றது பின்னர் படுதோல்வி அடைந்துவிட்டது. முந்தைய ஆட்சியில் உழவர்சந்தைகள் பெற்ற வரவேற்பை இவை ஏன் பெறவில்லை, என ஆட்சியாளர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சம்மந்தப்பட்ட மக்களின் பங்களிப்போடு அரங்கேற்றப்பட்டது தான் அன்றைய உழவர் சந்தைகள் பெற்ற வரவேற்புக்கு காரணமாகும். 

இதே போல் ரூ 20கோடி செலவில் ஜீலை மாதத்தில் கொண்டுவரப்பட்ட 100அம்மா மருந்தகங்களும் வரவேற்பு பெறவில்லை. ஏற்கெனவே கூட்டுறவு துறையில் இயங்கி கொண்டிருக்கும் 210 மருந்தகங்களுக்கு வலு சேர்க்கும் திட்டமாவது தீட்டியிருக்கலாம். அதுவுமில்லை. 

அம்மா மருந்தகங்கள் ஏன் வரவேற்பு பெறவில்லை? அங்கே மக்கள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. எல்லா மருந்தகங்களும் அந்தந்த பகுதியிலுள்ள டாக்டர்களின் தயவால் மட்டுமே லாபகரமாகச் செயல்பட முடிகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது. மருந்தகங்களுக்கும் அருகாமையில் உள்ள மருத்துவர் நடத்தும் கிளினிக் மற்றும் மருத்துவமனைக்கும் உள்ள உறவு தான் மருந்தகங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக உள்ளது. 

இன்று தடுக்கி விழுந்தால் மருந்துகடைகளே என்ற அளவில் தெருவிற்கு தெரு பெருகி, பெரும் போட்டியை சந்திக்கும் அத்துறையில் அரசு மருந்தகங்கள் என்ன செய்யும்? அதுவும் மருந்து விலையில் 10% தள்ளுபடி என்பது ஏற்கெனவே சில மருந்தகங்கள் கையாளும் அணுகுமுறைகள் தான்! 

எனவே, தற்போது இல்லாத எந்த தேவையை ஈடுகட்ட அம்மா மருந்தகங்கள் முளைத்தன? 

இதற்கு பதிலாக அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகளை இருப்பில் வைத்து கொள்ள அக்கறை காட்டியிருக்கலாம்... "இந்த மருந்து இங்கே கிடையாது. போய் கடையில் வாங்கி வா..." என ஏழைகள் துரத்தப்படுவதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கலாம்... 

அதுவுமில்லாமல் மருந்து தயாரிப்பில் இன்று முன்னணியில் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் மருந்துவிலையை உற்பத்தி விலையைக் காட்டிலும் பற்பல மடங்கு லாபம் வைத்துக் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன... இதில் மருந்து மாத்திரை வாங்க இயலாமல் தடுமாறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரசே மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி, உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் நியாயவிலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகுத்திருக்கலாம். ஏற்கெனவே செயல்பட்டு இடையில் மூடப்பட்டுவிட்ட அரசு மருந்து உற்பத்தி செய்த தொழிற்சாலைகளையாவது புனரமைத்திருக்கலாம்! 

இந்த வருடம் ஜூன் மாதம் துவங்கப்பட்டது அம்மா உப்பு வியாபாரம். இதற்கு ஆரம்பத்திலிருந்த வரவேற்பு தற்போது இல்லை. மேலும் இதே விலையிலேயும், இதற்கும் குறைவான விலையிலும் உப்பு கிடைத்துக்கொண்டுள்ளது. உப்பு விற்பனையில் டாடா, இந்துஸ்தான், ஐ.டி.சி, நிர்மா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பிராண்டுகளோடு ஒப்பிட்டால் கூட மிக்குறைவான விலை வித்தியாசமே உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உப்பு கழகம் வாலிநோக்கம் என்ற இடத்தில் உப்பு தயாரிப்பில் ஈடுபட்டு சந்தை செய்கிறது. மரக்காணத்தில் ஏழை எளிய ஆத்திராவிடர்கள் இணைந்து நடத்தும் கூட்டுறவு உப்பளகம் மிக நலிந்து உள்ளது. மிகக் குறைந்த கூலி, அடிப்படை பாதுகாப்பற்ற தொழில் சூழல், இதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள், எதிர்காலம் என்னாகுமோ என்ற கேள்விக்குறி... என்று உழலும் இந்த உப்பளகங்களை புத்துயிருட்டி, அத்தொழிலாளர்களை வாழவைக்க என்ன செய்யலாம் என திட்டமிட்டிருந்தால் அது மிகப்பயனுள்ளதாயிருந்திருக்கும். 

"அம்மா உப்பு இல்லையென்றால் சோற்றில் உப்புபோட்டே உண்ணமாட்டேன்" என யாரும் சபதமிட்டுக் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுவிடவில்லை. 

உப்பை விடுதலை வேள்விக்கான கிரியா சக்தியாக அன்று உருவகப்படுத்தினார் மகாத்மா காந்தி. இன்று அரசியல் உள்நோக்கத்திற்காக அது கையிலெடுக்கப்பட்டிருக்கலாமோ என்னவோ...? 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றெல்லாம் மரபு ரீதியான கருத்தியலைக் கொண்டுள்ள தமிழகத்தில் மக்களை நேரடியாகத் தன்னை விசுவாசிக்க வைக்கும் முயற்சியாக ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா வகை திட்ட அணிவரிசையில் உப்புத் திட்டம என்னவோ தப்பாகித்தான் போனது. 

அம்மா படம் போட்ட குடிநீர் பாட்டில் விற்பனை பேருந்து நிலையங்களில் தனியாரின் 15ரூபாய் பாட்டிலை ஒப்பிடும் போது விலை மலிவு தான்! ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பிற்கு ஆகும் செலவு ஒரு ரூபாய்க்கும் குறைவு தான்! ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அந்த சுத்திகரிப்பு மெஷினை நிறுவ அதிக செலவாகாது. ஐந்துக்கு ஐந்தடி இடம் போதுமானது. பாட்டில் கொண்டுவருபவர்களுக்கு இரண்டு ரூபாயில் தந்தாலே அரசுக்கு நல்ல லாபம் தான்! 

இப்படி அம்மா பெயரில் ஜெயலலிதா படம் போட்டு ஏற்படுத்தப்படும் எல்லாதிட்டங்களுமே அத்தொழிலில் ஏற்கெனவேயுள்ள நிலவரங்களை கருத்தில் கொள்ளாது கொண்டுவரப்பட்டவையே! மேலும் ஏற்கெனவே வேறு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், அலுவலகர்களுக்கே இத்தகு புதிய திட்டங்களின் பொறுப்புகளும் திணிக்கப் படுகிறது. கள ஊழியர்கள் தான் தினக்கூலிக்கு எடுக்கப்படுகிறார்கள். 

ஒரு திட்டம் எதற்காகத் தொடங்கப்படுகிறது? அதன் சமூக தேவை என்ன? அதற்கான திட்டமதிப்பீடு என்ன? செயல்திட்டங்கள் என்னென்ன? அதை செயல்படுத்துவதற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்... போன்ற முக்கியமான எந்த யோசனைகளுமின்றி அந்த காலத்தில் மன்னருக்கோ, மகாராணிக்கோ இரவில் தோன்றும் கனவிற்கேற்ப அரசவையில் அறிவிக்கப்படும் அதிரடி அறிவிப்புகள் போல மக்களாட்சியிலும் அடுத்தடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏனென்றால் 'அம்மா' பெயர் கொண்டது, அம்மாவால் அறிவிக்கப்பட்டது என்ற ஒரே ஆணையில் அரசு நிர்வாகத்தை வருத்தி செயல்படவைப்பதின் எதிர்வினை அவர்கள் ஏற்கெனவே செய்து வந்த அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என்பது கண்கூடான நிதர்சனம். அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் இன்றென்ன அறிவிப்போ, நாளை என்ன வருமோ என கலங்கித் தவிக்கிறார்கள். 

இந்த ரீதியில் அம்மா திரையரங்குகள் சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 15 இடங்களில் அதிரடியாக கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ அம்மா திரையரங்குகள் கட்டாவிட்டால் குடியே முழுகிவிடும் என லட்சோபலட்ச மக்கள் ஒற்றைக் காலில் தவமிருப்பதை தாங்க முடியாத தவிப்பில் அறிவிக்கப்பட்டது போல் இருக்கிறது இந்த அறிவிப்பு. 

இந்த ஆட்சி பதவி ஏற்ற இந்த மூன்றாண்டுகளில் சென்னையில் எட்டு அரசு பள்ளிகள் மாணவர்கள் வருகைக் குறைவை காரணம் காட்டி இழுத்து மூடப்பட்டுள்ளன .இன்னும் சில பள்ளிகளும் மூடப்படவுள்ளதாக தெரிகிறது. கல்வி கூடங்கள் மூடப்பட்டுவருவதும், திரையரங்குகள் திறக்கப்பட்டு வருவதையும் சம்பந்தப்படுத்துவது சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால், மிகப்பரந்து விரிந்து கொண்டிருக்கும் சென்னையில் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எழுப்பூர் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றைத் தவிர இன்று குழந்தைகளுக்கான உருப்படியான மருத்துவமனை வேறில்லை. இந்த மருத்துவமனையில் காணப்படும் நெரிசலோ சகிக்க கூடியதன்று. கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை தகர்த்து, அங்கே சர்வதேச குழந்தைகள் மருத்துவமனை கட்டப் போகிறேன் என்றார் ஜெயலிலதா. எழுத்தாளர்களும், புத்தக ஆர்வலர்களும் நீதிமன்றம் சென்று இதற்கு தடை பெற்றனர். 

அதே சமயம் இந்த நூலகம் அருகிலேயே காலியாக உள்ள பெரும் நிலப்பரப்பை குழந்தைகள் மருத்துவமனை கட்ட பயன்படுத்தலாம் என ஆலோசனை தரப்பட்டது. 

அந்த ஆலோசனை பொருட்படுத்தப்படவில்லை. வேறு இடத்திலும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்படவில்லை. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள 'அம்மா கிட்ஸ்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேட்பது கிடைக்காது அல்லது தேவையானது மறுக்கப்படும். 
கொடுப்பதை பெற்றுக்கொள், தருவது என் அதிகாரம், பெறுவது உன் கடமை. 
இது தான் இன்றைய ஜெயலலிதா அரசின் அணுகுமுறையாக உள்ளது. 
அது சரி, திரையரங்குகள் கட்டுவது ஏதோ பாவச்செயல் போன்ற அர்த்தத்தில் போகிற போக்கில் சொல்லிவிட்டதாக நினைக்க கூடாது. 
மனிதன் எவ்வளவு வறுமை, பசி, நோய், துயரம் என்றிருந்தாலும் பொழுதுபோக்கும், ரசனை சார்ந்த லயிப்பும் வாழ்வில் இன்றியமையாத தேவையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். 
இன்னும் சொல்வதென்றால் பற்பலகலைகளை, கலைஞர்களை வாழவைத்துக் கொண்டிருப்பதே ஏழை எளிய மக்களின் ரசனை தான்! 

அதனால் குளு குளு திரையரங்கம், அதில் 25ரூபாய் கட்டணம் என்பது எதிர்ப்புக்குரியதல்ல. ஒரு வகையில் மிகவும் வரவேற்க வேண்டியதே. ஏனெனில் ஆண்டுக்கு சுமார் 150 படங்கள் தயாராகும் தமிழ் சினிமா உலகில் 50படங்களுக்கு மேல் திரையரங்குகளை காணாமல் பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. புதியவர்களின் படம், சோதனை முயற்சிகள் பல இதனால் வெளிவராமலே முடங்கி உள்ளன. இது போன்ற புதிய முயற்சிகளை, கலைபடைப்புகளை, மிகக்குறைந்த பட்ஜெட் படங்களை ஆதரிக்கும் திரையரங்கங்களாக இவை இருக்கும் பட்சத்தில் கை கூப்பி வணங்கி வரவேற்கலாம். ஆனால், முதலமைச்சரின் பழைய படங்களை ரீமேக் செய்து ஓடவிடுவதற்காகவோ அல்லது முதலமைச்சர் புகழ்பாடும் படங்களையோ தான் திரையிட அனுமதி என்றாகுமானால் என்னாவது? கலைத்துறையோ ஏற்கெனவே முதுகெலும்பில்லாதவர்களின் புகழிடமாக உள்ளது. ஏற்கெனவே அரசு கேபிள் நிர்வாகத்தால் சேட்டிலைட் சேனல்களின் குரல் வளைகள் நெறிக்கப்பட்டு இருப்பதற்கே விடிவு காணவழியில்லை... இந்தச் சூழலில் உருவாக்கப்படும் திரையரங்குகள் கலைத்துறையை எப்படி ஆட்டுவிக்குமோ தெரியவில்லை... அதுவும் அரசு திரையரங்குகள் எப்படி பராமரிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஏற்கெனவே மாவட்ட தலைநகரங்களில் உள்ள அண்ணா திரையரங்குகளின் அவலத்தை ஒப்பிட்டே இப்படி யோசிக்கத் தோன்றுகிறது. ஒரு வேளை 'அம்மா' என்ற பெயர் ஏற்படுத்தும் பயத்தால் அதிகாரிகள் சுத்தமாகக் கூட பராமரிக்கலாம். ஆனால் எக்கராணத்தை கொண்டும் அல்லது சலுகை கருதியும் கலைத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி விடுவது நல்லதல்ல. 

எல்லாமே அம்மா, அம்மா என்றே பெயரிட்டுக் கொண்டே போனால் இந்த சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்த சான்றோர்கள், தலைவர்கள் என்று யாருமே இல்லையா என்ன? கிட்டதட்ட அன்னதானத்திட்டம் போல நடத்தப்படும் அம்மா உணவகங்கள் வள்ளலார் பெயரை அல்லவா தாங்கியிருக்க வேண்டும்? 

இது ஒரு புறமிருக்க, இந்த ஒரு திட்டமானாலும் அதற்கான பணம் முழுமையும் மக்கள் தந்த வரிப்பணத்தை கொண்டே உருவாக்கி செயல்படுத்தப்படுகிறது. இதில் தனியொருவர் தன்னை முன்நிறுத்திக் கொள்வது ஏற்புடையதல்ல. அதுவும் அப்படி முன்நிறுத்திக் கொள்ளும் ஒற்றை நோக்கத்திற்காகவே திட்டங்கள் உருவாக்கப்படுவது மக்கள் பணத்தை தவறாக கையாளும் அபகீர்த்தியில் தான் கொண்டு சேர்க்கும்.

Wednesday, September 3, 2014

மோடியின் அமைச்சரவை உணர்த்தும் செய்தி என்ன?

-சாவித்திரிகண்ணன் 

அதிக எண்ணிக்கையை தவிர்த்திருப்பது, பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தந்திருப்பது என்ற வகையில் நரேந்திரமோடியின் புதிய அமைச்சரவைக்கு ஒரு வசீகரம் கிடைத்துள்ளது. 

அதே சமயம் அமைச்சரவை என்பது எண்ணிக்கை சார்ந்தோ, பிரதிநிதித்துவம் சார்ந்தோ மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. 

பொறுப்பு ஏற்றுள்ளளவர்களின் நேர்மை, திறமை, கடமை உணர்வு, சமூக அக்கறை சார்ந்ததுமாகும். 

அப்படியானவர்களுக்கு பா.ஜ.கவில் ஒன்றும் பஞ்சம் வந்துவிடவில்லை. இதற்கு வாஜ்பாய் அமைச்சரவையே அத்தாட்சி. 

மோடியின் அமைச்சரவையில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இளையவர்களின் பங்கேற்பு நல்லது தான்! 

ஆனால், தகுதி இல்லாதவர்களின் பங்கேற்பு ஆரோக்கியமானதல்ல. 

உயர்கல்வித்துறையை நிர்வகிக்க ஸ்மிருதி இராணி' என்ற சினிமா, டி.வி.சீரியல் பிரபலத்தை தவிர வேறு யாருமே கிடையாதா? 

சமூக ஆர்வலரும், பெண் உரிமைப் போராளியுமான மதுகிஷ்வார் எழுப்பியுள்ள கேள்விகள் கவனத்திற்குரியவை...! 

கல்லூரிகள், ஐ.ஐ.டிகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், துணைவேந்தர்கள் போன்றவற்றை எதிர்க்கொள்ளவும், பலதரப்பட்ட மாற்று கருத்துகளை உள்வாங்கி நடைமுறைக்குகந்த முடிவு எடுக்கவுமான ஆளுமை வேண்டாமா? அத்தகு திறமையாளரா ஸ்மிருதி இராணி? 

இது நாள் வரையிலான அவரது கலைத்துறை பங்களிப்பில் இருந்து கூட நாம் பெரிதாக ஒன்றும் கண்டடைய முடியவில்லையே? 

அகடமிக் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் அலட்சியப்படுத்த வேண்டியவர்கள் என்ற நிலைபாட்டிலும் நமக்கு உடன்பாடில்லை. 

அகடமிக் தகுதியில்லாத அநேக சமூக சீர்த்திருத்தவாதிகளை, எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை இந்த உலகம் கண்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் பட்டியல் வெகு நீளமானது. 

ஆனால், அவர்கள் சுயம்புவாக வளர்ந்தவர்கள். எந்த தனிநபர் தந்த சலுகைகளாலோ, பதவிகளாலோ அடையாளம் காணப்பட்டவர்களல்ல. மாறாக, தங்களின் சுய சிந்தனைகளால், ஆற்றல்களால் அகிலத்தையே அதிரவைத்தவர்கள். ஸ்மிருதி இராணியை அவர்களோடு ஒப்பிட்டு அப் பெரியோர்களுக்கு அநீதி இழைக்கக்கூடாது. 

மிகச்சதாரணமான நடைமுறைக்குகந்த அறிவு சார்ந்து விவாதிப்போம். 

பள்ளிக்கூடமே போகாதவருக்கு வாத்தியார் வேலை இல்லை. கல்லூரி பக்கமே போகாதவர் பிரின்ஸ்பால் ஆக முடியாது. பல்கலைக்கழகமென்றால் என்னவென்று தெரியாதவர் துணைவேந்தராக முடியாது. 

ஆனால், எந்தத் தகுதியுமில்லாவிட்டாலும் கட்சித்தலைமை ஆதரவை பெறுவதாலேயே, ஒருவர் கல்வி மந்திரியாக முடியுமென்றால், அது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாகாதா? 

இந்தப் பொறுப்பை ஏற்க ஆளில்லாமல் போய்விட்டதா அக்கட்சியில்? அதுவும் அமேதி தொகுதியில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை கொண்டுவந்து அரியணையில் ஏற்றிவைக்கும் அளவிற்கு அதிதிறமைசாலியா? 

முரளிமனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த்சின்ஹா அருண்ஷோரி, அத்வானி.... போன்ற பல திறமைசாலிகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனரே! 

தகுதியானவர்களை சரியான முறையில் பயன்படுத்தும் பக்குவம் பெற்ற ஆளுமையே தலைமைப் பண்பாகும். பெருந்தலைவர் காமராஜ் பொற்கால ஆட்சி தமிழகத்திற்கு தர காரணமானவர்கள் கட்சியில் அவருக்கு எதிரணியில் இருந்த சி.சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன் போன்றவர்களே. காமராஜ் ஆட்சியின் சாதனைகளை சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே! 

தன்னை மையப்படுத்தி சிந்திக்காமல் நாட்டு நலனை, வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிந்தித்த தலைவர்கள், மாற்று கருத்தாளர்களை மதித்து அங்கிகரித்தார்கள் என்பதே வரலாறு. 

நேருவின் அமைச்சரவையில் அவரது ஆளுமைக்கே சவால்விடக்கூடிய மாற்றுக்ககருத்தாளர்கள் அம்பேத்கார், ஷியாம் பிரசாத் முகர்ஜி, ஷண்முகம் செட்டியார் பொன்றோர் இடம்பெற்றது தானே இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தியது. 

ஆனால், தன்னைத்தானே மறைத்து சமூகத்திற்கு பொய்தோற்றம் தரும் வண்ணம் தன் கல்வித் தகுதி பற்றி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு விதமாக பேசியவராயிற்றே ஸ்மிருதி ராணி. 
இப்படிபட்டவர்களை அமைச்சராக்கினால், 'பொய்சொல்வதுதான் அமைச்சராவதற்கான தகுதி' என புரிந்து கொள்ளப்படுமே! 

இது மட்டுமின்றி, ஸ்மிருதி இராணியின் உண்மையான கல்விதகுதி சான்றிதழ் வெளிவருவதற்கு காரணமான தில்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது எதை உணர்த்துகிறது...? இது போன்ற தருணத்தில் தார்மீகக்குரல் எழுப்பும் தகுதியை கடந்த கால கல்விதுதறை செயல்பாடுகளால் காங்கிரஸ் இழந்துவிட்டது..... என்பது உண்மை தான்! 

ஆனால், அநீதிக்கு மாற்றாக நீதியை நிலைநாட்டவே மக்கள் தீர்பளித்துள்ளனரேயன்றி, மீண்டும் அநீதிகளை அரங்கேற்றுவதற்கு அல்லவே!

(May2014)

கடலில் கலக்கும் காவேரி! - கண்ணீர் கடலில் விவசாயி

 -சாவித்திரிகண்ணன் 

இந்த ஆண்டு ஆகஸ்டு 10ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது காவேரி டெல்டா பகுதி முழுவதும் தண்ணீரோடு மிகழ்ச்சி வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சாத்தியமென்று நம்பலாம். 

தற்போதெல்லாம் தமிழகத்தில் குறுவை சாகுபடி பெரும்பாலும் பொய்த்துப் போகிறது. சுமார் 4லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து கொண்டிருந்தது படிப்படியாகக் குறுகி, ஒன்றேமுக்கால்லட்சம் என்றாகி வறட்சி காலங்களில் அதுவும் குறைந்துவிடுகிறது. 

அடுத்து வரும் சம்பா பருவத்திலாவது சரிவை நிமிர்த்திவிடலாம் என சங்கல்பத்துடன் காத்திருக்கும் விவசாயிகள் சம்பாவும் சாத்தியப்படாமல் போகும் போதோ சாகும்படியான துன்பத்தில் உழல நேர்கிறது...! 

காவேரி ஆறு என்பது கிட்டதட்ட சரிபாதி தமிழக விளைநிலங்களின் பயிராதாரம். எனவே பெரும்பான்மையான விவசாயிகளின் வாழ்வாதாரம்! இது மட்டுமின்றி, சென்னை தொடங்கி இராமநாதபுரம் வரையிலான தென்கிழக்கு பகுதியில் வாழும் மக்களுக்கும், கோவை தொடங்கி நாகை வரை மேற்கிலிருந்து கிழக்கு வரையில் வாழும் இடைப்பட்ட பகுதியிலுள்ள அத்தனை ஊர்மக்களுக்குமான குடிநீர் ஆதாரம்! 

இவற்றிற்க்கெல்லாம் மேலாக காவேரி தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த கலாச்சார அடையாளம்! ஆனால், துரதிஷ்டவசமாக தற்போது காவேரியை கலகத்தின் அடையாளமாற்றிவிட்டது தமிழக அரசியல் அணுகுமுறைகள்... 

காவேரி பிரச்சினையில் கர்நாடகம் நமக்கு அநீதி இழைக்கிறதா என்றால், 'ஆமாம்' என்று சிறுகுழந்தையும் சொல்லும்! சந்தேகமேயில்லை. ஆனால், காவேரி தண்ணீரைப் பயன்படுத்தும் அணுகுமுறையில் நாம் நமக்கு நாமே அநீதி இழைத்துக் கொள்கிறோம் என்பதை அதிகாரத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களும் உணரமறுப்பது தான் தமிழக விவசாயிகளின் ஆகப்பெரும் துயரம்! 

ஆண்டுக்காண்டு பயிர்சாகுபடி காலங்களிலெல்லாம் கர்நாடகாவிடம் கெஞ்சியும், போராடியும் நீர் பெற்றுவருகிறோம். மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் மீண்டும் மீண்டும் அணுகுகிறோம். வழக்குகள், தீர்ப்புகள், மீண்டும் வழக்குகள்... என ஒயாமல் போராடிப்போராடித் துவழ்கிறோம். ஆனால் நமக்கு கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்தாமல், அதற்கு முறையான செயல்திட்டங்களை வகுத்து பாதுகாக்காமல் இழந்து கொண்டிருக்கிறோம். 

மேட்டூர் அணை பிரட்டிஷ் பேரரசு நமக்கு கட்டித்தந்த அணை, கல்லணை தொடங்கி களிங்கராயன் வரையிலான நீர்பாதுகாப்பு ஆதாரங்கள் மன்னராட்சி காலத்தவை. கீழ்பவானி, அமராவதி, புள்ளம்பாடி, கீழ்கட்டளைகால்வாய் காமராஜர் காலத்தவை! 

தடையில்லாமல் காவேரி வந்து கொண்டிருந்த காலத்திலேயே மிகுந்த அக்கரை எடுத்து நம் முன்னோர்கள் கட்டி வைத்த நீர்பாதுகாப்பு ஆதாரங்களே இன்றளவும் தமிழகத்தை தாங்கி நிற்கிறது. ஆனால் காவேரிக்குத் தடை ஏற்படத்தொடங்கிய பிறகாவது கிடைக்கும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பையே காட்டாதது தான் சோதனைக்களுக்கிடையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேதனை. 

1970கள் தொடங்கி கர்நாடகா தொடர்ந்து பெரிய, சிறிய நீர்தேக்கங்களை ஏராளமாக கட்டிய வண்ணமுள்ளது. குறிப்பாக கபினி, ஹேமாவதி, சாரங்கி, யாகச்சி போன்ற பெரிய அணைகளையும், ஸ்வர்ணவதி, மங்கலா போன்ற சுமார் 20 சிற்றணைகளையும், மற்றும் ஏராளமான கதவணைகள், தடுப்பணைகள், நீரேற்றும் திட்டங்கள், புதிய பாசனகால்வாய்கள் ஆகியவற்றை செயல்படுத்தி மைசூரில் சுமார் 25,000ஏரிகளும். எண்ணற்ற குளம் குட்டைகளும் நீர்வசதி பெறவழிவகுத்துள்ளது. இவை யாவும் மத்திய நீர்வள ஆணையம், காவேரி கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றின் அனுமதியின்றி அத்துமீறிக் கட்டப்பட்டவை. 

ஆனால் நமக்கு அனுமதிக்கப்பட்ட தண்ணீரை பாதுகாக்க நாம் அணைகள், சிறிய நீர்தேக்கங்கள் கட்டுவதற்கு எந்தத்தடையுமில்லை. இன்னும் சொல்வதென்றால் நம் இரு மாநில பிரச்சனைகளை ஒட்டி காவேரி டெல்டா பகுதிகளை கள ஆய்வு செய்த நீர்வள நிபுணர்களும், நடுவர்களுமே கூட காவேரி தண்ணீரை தமிழகம் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 

உதாரணத்திற்கு மேட்டூர் அணையை பாதுகாப்பதிலேயே கூட நாம் கோட்டை விட்டுள்ளோம். கடந்த 40 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் சேகரித்துக் கொள்ள முடியாமல் சேதாரமாக வெளியேறிவரும் தண்ணீர் அளவு மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 75டி.எம்.சி! இந்தவகையில் நாம் இழந்துள்ளது 3000த்திற்கும் அதிகமான டி.எம்.சி தண்ணீரை! இதை தவிர்க்க நாங்கள் தெரிவித்த திட்டங்களெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கானது. மேட்டூர் அணையில் உயரம் 120அடி. இதில் சுமார் 28% பரப்பளவில் வண்டல் மண் குவிந்துள்ளது. இவை பல்லாண்டுகளாக நீரில் அடித்துக் கொண்டுவரப்பட்டு சேர்ந்தவை. இதனை அள்ளி எடுத்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்த கட்டிடப் பணிகளுக்கான மணல் தேவைக்கு சுமார் ஐந்தாண்டுகள் பயன்படும். அணையில் கூடுதல் தண்ணீரை சேமித்துவைக்கலாம்..." என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தலைவர் அ.வீரப்பன். 

சரி, அப்படி மிகைத்தண்ணீர் வெளியேறும் போது அதை சரியாக பயன்படுத்தவோ, பாதுகாக்கவோ நாம் என்ன முயற்சி எடுத்துக் கொண்டோம்...? 

காவிரியில் கொள்ளிடம் வரை சுமார் 16கதவணைகள் கட்டவேண்டும். அத்துடன் ஏராளமான காவிரியின் உப நதிகளான அமராவதி, பவானி, நொய்யல்.... போன்றவற்றில் நூற்றுக்கணக்கான தடுப்பணைகள் தேவை. காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, அரசலாறு, மகிமலையாறு... போன்ற 22 ஆறுகளிலும் குறைந்தபட்சம் 60தடுப்பணைகள் அவசியம் தேவை. காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள சுமார் 1870 ஏரிகளின் தற்போதைய நிலையோ மிகப்பரிதாபகரமாக உள்ளது. இவற்றிலும் வண்டல்மண் படிந்துள்ளது. இதற்கு தண்ணீர் வந்து சேர்க்கக் கூடிய சுமார் 23,000 கால்வாய்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை தாட்சண்யமில்லாமல் அகற்றவேண்டும். அத்தோடு அக்கால்வாய்களை அகலப்படுத்தவேண்டும். இந்த ஏரிகளை குறைந்தது ஒரு சில மீட்டர் அளவு ஆழப்படுத்தினாலே கூட சுமார் 150டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீரைப் பெறமுடியும். 

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்று பொதுவான ஒரு கருத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. ஏனெனில் ஆண்டுக்கு சராசரியாக தமிழகத்திற்கு கிடைக்கும். மழைநீர் அளவு 925 மி.மீ. 

ஆனால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ நம்மை விடக்குறைவான மழை நீரே கிடைக்கிறது. அதுவும் குறிப்பாக கர்நாடகத்தில் 732மி.மீ மழை நீர் தான் கிடைக்கிறது. இதை கருத்தில் கொண்டு தான் மன்னாரட்சி காலங்களில் மிகத்திறம்பட நீராதாரத்திட்டங்களை செய்துள்ளனர். ஏரி, குளம் இல்லாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை. இன்று தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கிறதென்றால் அது தமிழகத்திற்கு நம் முன்னோர் தந்த கொடைகள். அன்று பெய்யும் மழை, அவை வழிந்தோடிச் சேரும் திசை ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து இவை ஏற்பட்டுள்ளதை நினைத்தால் இப்போதும் மெய்சிலிர்க்கிறது. 

ஆனால், இந்த ஏரிகளை நாம் அக்கரையோடு பராமரிக்கத் தவறியதின் விளைவாக இன்று இவற்றால் பெறவேண்டிய பயன்பாட்டில் 20சதவிகிதத்தைத் தான் பெறுகிறோம். 

இப்போதும் கூட மத்திய அரசுகளையோ, மாநில அரசுகளையோ நம்பாமல் அந்தந்த கிராம உள்ளாட்சிகளே கூட தங்கள் கிராமத்தில் வெறும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் சிறுசிறு பண்ணை குட்டைகளை அமைத்து அற்புதமாக நீரைச்சேமிக்கலாம். ராமநாதபுரம் போன்ற இடங்களில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இச்சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. 

எல்லாவற்றிற்கும் மேலாக காவேரி கரையோரங்களில் நிகழும் மணல் கொள்ளையை உடனே முடிவுக்கு கொண்டுவராவிட்டால் தமிழகத்தின் எதிர்காலமே சூனியமாகிவிடும். அந்த அளவுக்கு காவேரி படுகைகளெல்லாம் பள்ளதாக்குகளாகியுள்ளன. 

இதன் காரணமாக நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. இதனால் காவேரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அந்தத் தண்ணீர் பல பகுதிகளை எட்டுவதே இல்லை. திருவாரூரில் உள்ள கோரையாறுக்கு கூடத் தண்ணீர் செல்வதில்லை. நகரத்தில் பிரியக் கூடிய வாய்க்கால்களோ மிக மோசமாக உள்ளன. பன்னெடுங்காலமாக காவேரி ஆற்றுத்தண்ணீரை பெற்றுவந்த ஏராளமான ஊர்கள் தற்போது காவேரி தண்ணீரை கண்டு 25வருடங்களாகிவிட்டன... என்பது ஒரு கசப்பான உண்மை. 

எனவே காவேரியில் நாம் முறையாக திட்டமிட்டுச் செயல்புரியாததால் தான் நமது விளை நிலங்களை இழந்து ரியல் எஸ்டேட்டுகளுக்கு விலை போகும் நிலங்களாக்கி வருகிறோம். 

1924லே கர்நாடகாவில் காவேரி பாசனப்பகுதிகளில் 1,23,000ஏக்கர் நிலங்களில் தான் விவசாயம் நடந்தது. அது 1956ல் 5,65,400ஏக்கரானது. 1971லோ, 6,68,000 ஏக்கரானது. தற்போதோ 22லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடக்கிறது. 

ஆனால் தமிழகத்தில் 1971ல் 28லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக இருந்த காவேரி டெல்டா பகுதி விவசாயம் தற்போது சரிபாதிக்கும் கீழாகக் குறைந்துவிட்டது. கர்நாடகத்தின் அநீதியை மட்டுமே இதற்கு காரணமாக்குவது நம்மை நாமே ஏமாற்றிக் கொல்வதற்கு வேண்டுமானால் உதவலாம்! 

தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களான ந.நடராஜன், சி.எஸ்.குப்புராஜ், டி.எஸ்.விஜயராகவன், மோகனகிருஷ்ணன், அ.வீரப்பன் போன்றவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே தண்ணீர் பாதுகாப்பு திட்டங்களை அரசுக்கு சமர்பித்துள்ளனர். அதை செயல்படுத்தினாலே அண்டை மாநில அநீதிகளையெல்லாம் மீறி தமிழக விவசாயத்தில் தன் நிறைவு பெறலாம். 

காவேரியில் தண்ணீர் கரைபுரண்டுடோடுகிறது. 

காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நீங்கா துன்பம் 
தண்ணீர் வராவிட்டாலும் கண்ணீர், தண்ணீர் வந்தாலும் கண்ணீர்! 
தண்ணீர் வராத காலங்களில் வறட்சி நிவாரணம்..... 
வந்துவிடும் நேரங்களில் வெள்ள நிவாரணம்... 

இந்த நிலையை மாற்ற அவர்கள் நீண்ட நாட்களாக கேட்கும் கோரிக்கை தான் கதவணைகள். இது சுமார் அரை நூற்றாண்டு கோரிக்கை! மக்கள் தண்ணீரை தடுக்க கேட்டதோ, கதவணைகள் 

ஆனால், ஆட்சியாளர்கள் மக்கள் கோரிக்கை குரல்கள் தங்கள் காதுகளில் விழாமல் இருக்க ஏற்படுத்திக் கொண்டதோ காதணைகள்! 

எனவே தான் இந்த கோரிக்கை இது நாள் வரை செவிடன் காதில் ஊதிய சங்கானது. 
ஆனால், இப்போது தான் ஆட்சியாளர்கள் சற்றே அசைந்துகொடுத்தள்ளனர். சமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, "காவேரியின் பிரதான வெள்ளநீர் போக்கியான கொள்ளிடம் ஆற்றில் கீழணை தவிர எந்த ஒரு பாசனக் கட்டுமானமும் இல்லாததால், மழைகாலத்தில் தண்ணீர் கடலில் விரையமாகிறது. 
இதை தடுக்க 400கோடி செலவில் 0.6டி.எம்.சி கொண்ட கதவணை கட்டப்படும்" என தெரிவித்துள்ளார். இது யானைப்பசிக்குப் போடப்பட்டுள்ள சோளப்பொறி போல என்றாலும் கூட, இதனால் காட்டு மன்னார் கோவில், மயிலாடுதுறை, சீர்காழின்னு பல ஊர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். 

ஆனால், இத்துடன் நின்று விடாமல் கீழணைக்கு மேலே 7கதவணைகள் கட்டப்படும் போது தான் அது காவேரி டெல்டா விவசாயிகளின் கண்ணீருக்கும் அணை கட்டியதாக இருக்கும். இந்த ஏழு கதவணைகளால் காவேரி டெல்டாவில் கடலில் கலக்காமல் காப்பாற்றபடும் தண்ணீர் மட்டுமே சுமார் 50டி.எம்.சிக்கும் அதிகமாகும்! எனவே, அணிவகுத்து வரும் கவர்ச்சியான அம்மா திட்டங்களுக்கு தரும் முக்கியத்துத்தில் ஒரளவாவது கதவணைத் திட்டத்தில் காட்டினால் வரலாறு முதல்வரை நிரந்தரமாக நினைவில் வைக்கும்.

(Aug2014)

ஜல்லிகட்டு காளையா? சல்லிக்காசு காளையா...?

-சாவித்திரிகண்ணன் 

ஜல்லிகட்டு சுப்ரீம்கோர்ட் தடைவிதித்தாலும் விதித்தது..., 
தமிழர்களுக்கு இது நாள் வரை இல்லாத ரோஷம் எப்படி வந்ததோ தெரியவில்லை...! 

"தமிழர்களின் வீரவிளையாட்டுத் தடைவிதிப்பதா...?" 
"மறத்தமிழன் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்குமா...?" 
"இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால்..." என ஆளாளுக்கும் வானத்திற்கும், பூமிக்குமாக எம்பிக்குதிக்கிறார்கள்....! 

இப்படி தமிழன், வீரம், தன்மானம், இனஉணர்வு... பேசிட்டா மூச்.... தமிழ்நாட்ல அதுக்கு மாற்று கருத்து சொல்றதுக்கே யாருக்கும் தைரியம் வராது பார்த்துக்கிடுங்க...! ஆனா, நம்ம மனசு கேட்பனாங்குது..! 

எது வீரம்...? 
சிவனேன்னு புல்லையும், புண்ணாக்கையும் தின்னுட்டுக் கெடக்கிற வாயில்ல அந்த சாதுவான ஜீவனிடம் கூட்டம் கூட்டமா சேர்ந்து விழுந்து மோதறது தான் வீரமா...? 
அது யாருகிட்டேயாவது வந்து, "வாங்கடா மோதி பார்க்கலாம்னு கூப்பிட்டதா?" 
வாடிவாசல்ல இருந்து அத ஜல்லிகட்டு மைதானத்திற்கு அனுப்புவதற்குள்ள அது, "ம் கூம் மாட்டேன்.. என்னை விட்டுடுங்க" அப்படின்னு முரண்டு பிடிக்கிறதா பாக்குற யாருக்குமே "ஐயோ பாவம்... பாவி மக்கா அத விட்டுட மாட்டீங்களா? அப்படின்னு தான் கேட்கத் தோன்றும்...! 

ஆனா, மாட்டுவாலை முறுக்கிவிட்டு, அதவிடாப்பிடியா நெறித்து தள்ளி வாடிவாசலுக்கு தள்ளி விடுவீக.. அதுல சில மாடுகள் வெளியில வந்ததுமே நிக்குற கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓட்டம் கின்னிடும் பாருங்க... 

இன்னும் சில மாடுகளோ, 'எதுக்காக இந்த பாவி மக்கா நம்மள புடிச்சு இப்படி தள்ளிவிட்டாய்ங்க.. அப்படின்னு புரிபடாம மலங்க மலங்க முழிச்சு நிக்குமே.. அப்ப அது தான் சாக்குன்னு ஆளாளுக்கு அதோட கொம்ப பிடிக்கிறதும், திமிலை பிடிக்கிறதும், எகிறி மேல விழிகிறதும்னு பாடா படுத்துவாக.. உடனே அது ஐய்யோ சாமி வேண்டாம்பா இந்த இம்சைன்னு தட்டுகெட்ட மாடா தறிகெட்டு ஓடுமே.. அப்ப யாராவது ஒருத்தன் அதோட திமிலையும், கொம்பையும் பிடிச்சா மாதிரி ஒரு முப்பது நாப்பதடிதூரம் கூடவே போவான் ஒடனே அவஞ்ஜெயிச்சதா அறவிக்கப்படும்.... இதுல என்ன வீரமிருக்கு..?

 சொளை சொளையா லஞ்சம் வாங்கின அரசியல்வாதிகள் ஓட்டுகேட்டு வர்றப்ப ஐநூறு, ஆயிரம்னு கொடுத்து ஓட்டை விலை பேசும் போது, 'டே படுவா எங்க பணத்தை கொள்ளையடிச்சு எங்க கிட்டயே தரவந்தியான்னு வராத கோபம்...ரோஷம்...வீரம்... 
தேர்தல் வந்தா மட்டுமே மக்கள் ஞாபகம் வந்து 'ஷோ' காட்டிவிட்டுப் போடும் தலைவர்களிடம் வாரத ரோஷம்... 

இலவசமாக ஒத்த ரூபா சாக்லெட் கிடைத்தாலும் கூட, அதை முட்டி மோதி உருண்டு பிரண்டு, பிச்சுப் பிடுங்கி முக்கு விடைக்க, முழிகள் தெறிக்க வாங்கும் போது வராத தன்மானம்... 

இப்படி வீரவசனங்கள் பேசும் போது மட்டும் தமிழனுக்கு விறைச்சிகிட்டு வந்துடும் போல...! 

ஜல்லிகட்டு என்பது தமிழனின், தமிழ் இனத்தின் பண்பாட்டு அடையாளமாம்! 

சில முரட்டுக் காளைகள், "டேய் வேண்டாங்கடா, விட்டுருங்க... என்ன எம் போக்குல போகவிடுங்கன்னு நின்னு நிதானிச்சு மொறைக்கும்..." 

அப்பத்தான் நம்மாளுங்க ஓஹோ முறைக்கிறியா... சரி வா பாத்திடுவோம்னு எகிறி பாய்வான்...." 
இதுல, சிலபேரு குடல் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா சாவான், 
இன்னும் சில பேருக்கு தொடைகிழியும்... 
இன்னும் சில பேருக்கு படக்கூடாத இடத்துல பட்டுடும்... 
அப்புறம் அவன் கல்யாணத்திற்கே தகுதியில்லாதவானகப் போறதும் உண்டு. 

கதையில, சினிமாவுல வர்றாப்ல இன்னைக்கு எந்தப் பொண்ணும்
"நீ முதல்ல இந்த மாட்டை அடக்கி காட்டு. அப்பதான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு" ஒத்த கால்ல நிக்குறதுமில்ல..... 

'இந்தக்காளைய அடக்குகிறவனுக்குத்தான் எம்பொண்ணுன்னு' எந்த தகப்பனும் கூறுவாறில்லாம அறிவிக்கிறதுமில்ல... 
பெறகு எதுக்கு இந்த விவேகமில்லாத வெத்துவீரம்... 

இதுல நானும் காளைய அடக்க நின்னேனாக்கும்னு ஒப்புக்குச் சப்பாக போய் நிற்பவயங்களும் உண்டு. 
இந்த அப்பாவிகளின் நிலை சில நேரங்களில் அதோ கதியாகிப் போவதுண்டு...மேலும் இதில் பார்வையாளர்காளக நின்னு பலியானவங்களும், காயம்பட்டவர்களும் கணக்கிடலங்காது...! 

இது மட்டுமில்ல, சல்லிக்காசு பொறாத போலி ஜாதிப்பெருமை, குலப்பெருமை, குதர்க்க மனோபாவங்கல்லாம் இந்த ஜல்லிகட்டு சமாச்சாரத்துல பொதைஞ்சி கெடக்கு...! 

இப்படி நாலுப்பேரக்குத்தி கிழிச்சி, இரண்டு பேரை பலிவாங்கிருச்சுன்னா அந்த கொலைக்காரக் காளைக்கு கெடைக்குற மரியாதையே தனிதான்! 

மாலை என்ன..! மரியாதை என்ன..! ஆரத்திகள் என்ன..! 

மனுஷன மனிஷன் குத்திக் கிழிச்சாலோ, கொலை பண்ணினாலோ தான் குற்றம். அதுக்கு ஜெயிலு, தண்டனை எல்லாம்...! 

ஆனா, மனுஷன் மாட்டை ஏவிக்கொன்னா அதுக்கு பேரு பா....ரம்பரிய விளையாட்டு...! 

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் 'பாரத்தை யார் சுமப்பா...? ன்னு யாரும் கேட்டு தொலைச்சிடக்கூடாது...! 

அப்படி கேட்பவன் கேணைப்பயல்! அவன் தமிழர்களின் பாரம்பரியப் பெருமை தெரியாத பண்ணாடை! அரை லூசு... இன்னும் என்னவெல்லாம்மாகவோ வெல்லாம் பார்க்கப்படுவான்! என்னமோ நமக்கு ஈரமனசு கேட்கமாட்டேங்குது...! 

இது மனுஷங்க படறபாடுன்னா... தோத்துப் போன காளைகள் அதாவது அடக்கப்பட்டுவிட்டாதாக கருதப்படுகிற காளைகள் அந்தந்த குடும்பங்களல் நடத்தப்படற விதமே ஒரு தினுசாத்தான இருக்கும் பாருங்க... 

அந்தந்த வீட்டுபெண்டு பிள்ளைக மொதக் கொண்டு அதை ஏசியும் பேசியும் தூற்றுவாக.. 
"தண்டக் கருமாந்திரம்.. ஒனைப்போயி இத்தனை நாளா படாதபாடு பட்டு செலவழிச்சு கவனிச்சேன் பாரு..ன்னு" புறக்கணிக்கப்படும்! 

அது பாவம் அதுக்கு என்ன தெரியும்...! அதுக்கு இத்தனை நாளா தனக்கு கிடைச்ச அன்பு, பரிவு, அக்கரைக்கொல்லாம் என்னா அர்த்தம்னு தெரியாது. 

இப்ப ஏதோ கொலைக்குற்றவாளி போல உதாசினப்படுத்துவதற்கான அர்த்தமும் தெரியாது...! 

அதாவது, தான் கொலை செய்யாததைத் தான், தன் எஜமான் வீட்டில குற்றமாக கருதுறாங்கன்னு அந்த சாதுவான ஜீவனுக்கு எப்படித்தெரியும்...? 
இதுல சில காளைகள் மன உளைச்சலுக்களாக்கி பெறகு புண்ணாக்கு, புல்லு தண்ணி எதிலும் ஆர்வம்காட்டாமல் மெலிஞ்சு துரும்பாகி வெகுவிரைவில் மாட்டுச்சந்தையில் கறிக்காக அடிமாட்டு விலைக்குப் போவதுமுண்டு. 

காலமெல்லாம் தன் குடும்பத்துக்கு பாலை கொடுத்து ஜீவனத்துக்கும் காரணமாயிருந்த பசுக்களையே பால் வற்றியதும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு தோளில துண்டைப்போட்டுகிட்டு வருகிற மனுஷப் பராம்பரியம் மல்லவா நம் பாரம்பரியம்...! 

இதுல வீரத்தை காட்டுவதற்குன்னு ஊட்டச்சத்துகள் தந்து வளர்க்கப்பட்ட காளை சோரம் போனபிறகு எப்படி வளர்ப்பான்மனுஷப்பய...? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுகிற வள்ளலார் மனசு எல்லாருக்கும் இருந்தா அப்புறம் வாடிப்பட்டி மாட்டுச்சந்தைக்கு வேலையே இல்லை....! 

இப்பக்கூட பாருங்க, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடை விசிச்சதுன்ன உடனே வாடிப்பட்டி மாட்டுச்சந்தையிலே ஜே....ஜேன்னு மாடுகள் குவிஞ்சுருச்சு.. முன்ன வீரக்காளையாக பாரக்கப்பட்டு ஐம்பதாயிரம், ஒரு லட்சம்னு விலைப்பேசப்பட்ட மாடுகளெல்லாம் இன்னைக்கு எடைமதிப்பிடப்பட்டு ஆறாயிரம், ஏழாயிரம் ரூபாய்க்கு விலையோயிருக்கு...! 

உழவுக்கு நீர் இறைத்து, ஏர் இழுத்து பாடுபட்டு தன் உணவுக்கு காரணமாயிருக்கும் காளைகளையே கூட காலப்போக்கில் அதன் உடல்பலம் குறையும் போது அடிமாட்டு விலைக்கு விற்றுச்செல்லும் நன்றி கெட்ட மனுஷஜாதி நாம்! இதில் உழைக்கத் தெரியாத ஜல்லிக்கட்டு காளையென்றாலும் சல்லிக்காசுக்காவது உதவட்டுமேன்னு தான நினைக்க தோணுது. 

அது மாடப்பொறந்தது குத்தம். 

நாம மனுஷனாப் பொறந்தது அதவிட மாபாதகம்!

(May-2014)