Tuesday, December 14, 2010

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

_ சாவித்திரி கணணன்

மச்சீர் கல்வி குறித்து கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

''அடடா இந்தக் கல்வி திட்டம் வந்தால் பிள்ளைகளின் கல்விப் பிரச்சனைகள் தீர்ந்தது. இனி பிள்ளைகளை சேர்க்க அப்ளிகேஷன் வாங்குவதற்காக நீண்ட க்யூ வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. சிபாரிசுக்கு அலைய வேண்டியதில்லை. டொனேசனுக்கும், பீஸுக்கும் நகைகளை அடமானம் வைப்பது, கடன் வாங்குவதெல்லாம் இனி இல்லவே இல்லை'' என இலட்சக்கணக்கான பெற்றோர்கள் பரவசமாக காத்திருந்தனர். எளிய நடுத்தர வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் இப்படியென்றால் அரசு பள்ளிக் கூடங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களோ இனி நம்ம குழுந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக் கூடங்களெல்லாம் தனியார் பள்ளிகளின் தரத்துக்கு உயரப் போகிறது. ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கத்தினர் தனியாக வாத்தியார்களை வேலைக் கமர்த்தி சம்பளம் அழ வேண்டியதில்லை பள்ளிக்கூடங்களுக்கு கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் வந்துவிடும். டேபிள், சேர், போர்ட் எல்லாம் பிரமாதமாக இருக்கும். இஸ்டத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு வரலாம், போகலாம், விருப்பம் இருந்தால் வகுப்பறைகளுக்கு போய் பாடம் எடுக்கலாம் இல்லாவிட்டால் சும்மாவது உட்காரலாம் என்ற ரக ஆசிரியர்கள் இனி இருக்கமாட்டார்கள் என கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள்.

பல ஆண்டுகளாக சமச்சீர் கல்விக்கு குரல் கொடுத்த கல்வி ஆர்வலர்களோ ''அட, சுமார் நாற்பது வருஷ கனவு இப்போதாவது நிறைவேறினால் மகிழ்ச்சி தான். நடக்கபபோவது வரலாற்று சாதனை தான்..'' என அக மகிழ்ந்தனர்.

ஆமாம் சமச்சீர் கல்வி என்றால் இந்த நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தரமான சமமான கல்வி உறுதிபடுத்தப்படும். பணமோ, அந்தஸ்தோ கல்வி தரத்தை தீர்மானிக்காது. வீட்டுகருகிலுள்ள பள்ளிக் கூடத்திற்கு சென்று படிப்பது என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்குமான அடிப்படை உரிமை என்பது தான் எளிமையான அர்த்தமாகும். இவை இன்றைக்கு தமிழக அரசால் அறிமுகப்படுத்தி அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறும் 'சமச்சீர் கல்வி' யில் சாத்தியப்பட்டுள்ளதா? இனி சாத்தியப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளாவது தென்படுகிறதா? என்பது தான் இன்று அனைவரும் உரக்க எழுப்பத் தொடங்கியுள்ள கேள்வியாகும்.

2006 - தேர்தலில் சமச்சீர்கல்வியை அறிமுகப்படுத்துவோ என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! முத்துக்குமரன் கமிட்டி இதற்காக அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியும் பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டே, அரசை அனுசரித்து ஒரு அறிக்கை தந்தது. அந்த அறிக்கையானது தற்போதைய கல்வித் திட்ட அமல் முறையில் உள்ள குறைபாடுகள் எனனென்ன? அவற்றை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் மூலம் எவ்வாறு சீர்படுத்தலாம் என்பது பற்றி மூச்சு கூட விடவில்லை. குறிப்பாக கல்வி கட்டணங்கள் தொடர்பாக பெற்றோர்கள் மத்தியிலுள்ள குமுறல்கள், அரசு பள்ளிகளின் அவலநிலை குறித்த பெற்றோர்களின் கடும் அதிருப்தி... இவை பற்றியெல்லாம் கவனமாக தவிர்த்து விட்டது. பாவம் முத்துக்குமரன்! தன் அறிக்கை குப்பை கூடைக்கு போய்விடக்கூடாது என்று அவர் கவலைப்படக் கூடாதா என்ன?

ஆனாலும் கூட முத்துக்குமரன் கமிட்டி சில பயனுள்ள ஆய்வுகளைச் செய்து நல்ல சில ஆலோசனைகளைத் தந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதையும் கூட ஏற்றுக் கொள்ள மனம் வேண்டுமே தமிழக அரசுக்கு?

தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமலாக்கப் போகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கற்பது உரிமை என்பதை சட்டமாக்கியுள்ளது. இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி சமச்சீர் கல்வி அமலாக்கத்தை தமிழக அரசு விரைவுபடுத்தலாம். ஆனால் அப்படி ஒரு அக்கரை இருந்தால் தானே....!

மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வி என்பதை தங்களுக்கு தோண்டப்படும் சவக்குழிகளாகப் பார்க்கிறார்கள்.ஆனால் உண்மையில் தமிழக அரசு தனியார் பள்ளிகளை பகைத்துத் தான் சமச்சீர் கல்வியை அமலாக்கம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் பெற்றே அமல் செய்யலாம்.

முதலாவதாக மக்கள் நம்பிக்கையைப் பெற்று செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு உரிய மரியாதை தந்து அவர்களை சமச்சீர்கல்வி அமலாக்கத்தின் பங்காளிகாக மாற்ற வேண்டும். இது நடக்க முடியாதது அல்ல. இதற்கு பொறுமையுஃம், ராஜதந்திரமும் தேவை. கூடவே அரசின் நம்பகத் தன்மையும், நோக்கமும் சந்தேகத்கிடமின்றி இருக்குமானால் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்தே தீரும்!

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது. கோவிந்தராஜன் கமிட்டியை அமைத்து தனியார் பள்ளிகளின் கட்டணத்தை தமிழக அரசு வரையறை செய்தது. நடைமுறையில் இது படுதோல்வியில் முடிந்துவிட்டதோடு பள்ளிக் கல்விச் சூழலையே சீர்கெடுத்துவிட்டது. இவை தனியார் பள்ளிகளை அரசுக்கு எதிராக ஒற்றுமை கொள்ளச் செய்ததுடன் பொதுநலன்களுக்கு எதிரான நிலையில் நிறுத்தி விட்டது. அக்கரையுடனும், பொறுப்புடனும் கையாளப் படவேண்டிய கல்விக் கட்டண அணுகுமுறையை சட்டம், அதிகாரம் சாத்தியப் படுத்த முடியாது.

தற்போதைய கல்வி ஆண்டிற்கு தமிழக அரசு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான சமச்சீர் கல்வி பாடத்திட்டதை மட்டுமே அமல் படுத்தியுள்ளது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் இரண்டிலுள்ள இந்த வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை விதமான பாடத்திட்டத்தை கற்கிறார்கள் என்பதற்கு மேல் திருப்தி பட்டுக்கொள்ள இதில் ஒன்றுமில்லை அதிலும் கூட பல தனியார் பள்ளிகள் அரசு தந்த பாடத்திட்டத்தை அமலாக்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியிருக்க இனி அடுத்த ஆண்டில் மேலும் சில பாடத்திட்டங்களை வடிவமைப்பதன் மூலம் கல்வித் துறையில் என்ன பெரிய மாற்றத்தை உருவாக்க இயலும்?

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு மதிப்பீடு செய்தால் சமச்சீர் கல்வி என்பது நமக்கு வெகுதூரம் இருப்பதாகத் தான் உணரமுடிகிறது. அது பூமிக்கும் நிலவுக்குமான தூர இடைவெளியா? அல்லது பூமிக்கும் நட்சத்திரத்திற்குமான தூர இடைவெளியா? என்பதை நாம் பட்டிமன்ற பேச்சாளர்களிடம் விட்டுவிட்டு அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு பல நூறுகோடிகள் ஒதுக்கிறது. மாநில அரசும் வரிவருவாய் மூலம் கல்விக்கான பெறும் நிதியைப் பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் கல்விக்காக பெரும் நிதியை வரி மூலமாக வசூலிக்கிறது. இவை முறையாக கல்விக்காக அக்கரையுடன் செலவழிக்கப்பட்டால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது. அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்! அடுத்ததாக தரமான கல்விக்கும், பொறுப்பான ஆசிரியர்களுக்குமான உத்திரவாதமே தேவைப்படுகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் தரம் உத்திரவாதப்படுத்தினால் தனியார் பள்ளிகள் பற்றிய கவலையை அதை நடத்துபவர்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டு விடலாம்!

தனியார் பள்ளிக் கூடங்களை விட தரமான சிறந்த கல்விச்சூழலை அரசாங்கத்தால் தரக்கூடும் என்ற நிலைமை தான் வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் இப்படியானதொரு நிலையைத்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், ஐ,ஐ,டி போன்றவை அரசாங்கத்தால் தானே நடத்தப்படுகின்றன. அப்படியிருக்க பள்ளிக் கல்வித்துறையை மட்டும் சிறப்பாக்க முடியாதா என்ன?

2 comments:

Anonymous said...

excellent review

Anonymous said...

pl post your jaya tv interview in youtube or rapidshare and give link in your blog