Sunday, February 24, 2008

ஒப்பந்தமில்லை அடமானம்

சாவித்திரி கண்ணன்

"அமெரிக்கா வாங்குவதற்கு இந்தியா என்ன விற்பனை பண்டமா...?" என்று கேட்டவர் தான் மன்மோகன் சிங். 2005-ஜூலை 18ல் இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா புறப்பட்ட போது, அது தொடர்பாக இந்தியாவில் எழுந்த சர்ச்சைகளுக்கு சவுக்கடி தரும் விதத்தில் தான் நிருபர்கள் கூட்டத்தில் நெருப்பாகப் பேசினார் பிரதமர் மன்மோகன்சிங். உண்மையில் பிரதமர் இந்தியாவை விற்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

ஆனால், "அடகு வைத்து விட்டார்" என்று பா.ஜ.க பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவதை அலட்சியப்படுத்த முடியாது "இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும்...." என்ற குரல்கள் எதிர்கட்சிகளிடமிருந்து குமுறி வெடித்தபோது, "நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வெளியுறவு கொள்கைகள் அணு ஆயுத ரகசியங்கள் போன்றவற்றை பாராளுமன்றத்தில் விவாதிக்க கோருவதே அபத்தம்...." என்றது காங்கிரஸ். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அணுசக்தி உடன்பாடு தொடர்பான இந்திய அரசின் முழுநிலைபாடுகளும், எதிர்பார்ப்புகளும், வாக்குறுதிகளும் அக்குவேறு. ஆணிவேராக அமெரிக்காவின் செனட் சபையிலும், பிரதிநிதித்துவ சபையிலும் இரண்டாண்டுகள் தீவிரமாக விவாதிக்கப்பட்ட பிறகே அமெரிக்க அதிபர் புஷ்ஷிக்கு அந்நாட்டின் பாராளுமன்றம் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்ய அனுமதித்தது.

"இந்தியாவிற்கு இன்னின்ன சலுகைகளெல்லாம் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தில் இன்னும் சில கட்டுபாடுகளை சேர்க்க வேண்டும். இந்தியா வருங்காலத்தில் அணு ஆயுதத்தில் வல்லரசாக அமெரிக்கா அடித்தளம் அமைத்துவிடக் கூடாது..." என்று ஒப்பந்தத்தில் ஏகப்பட்ட திருத்தங்களை இந்த இரண்டாண்டு இடைவெளியில் நிறைவேற்றியது அமெரிக்க பாராளுமன்றம்.

இப்படியாக, அமெரிக்க பாராளுமன்றத்திடம் பகிரங்கப்படுத்திக் கொண்ட நம்நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களைத் தான் நமது 'இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது' என்று விராப்பாக பேசிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு.

ஒரு பண்ணையாருக்குள்ள மனோபாவத்தில், "நான் சொன்னத அப்படியே கேட்டுக்கொள். வேறெதையும் பேசாதே..." என்று மத்திய அரசு மழுப்புவதற்கான காரணங்கள் என்னவென்று அறிய வந்தால் சொரனையுள்ள எந்த இந்திய குடிமகனும் துடித்துப்போவான்...!

"இது அமெரிக்காவுடனான ஒப்பந்தமா.... இல்லை அடிமை சாசனமா.." என்று இதயம் பொறுக்காமல் இந்தியவிஞ்ஞானிகள் பி.கே.அய்யங்கார், ஹோமி என்.சேத்னா, ஏ.என். பிரசாத், டாக்டர். அனில்கோத்ரா, எம்.ஆர்.சீனிவாசன்....... உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளும் சென்ற ஆண்டே சீறிப்பாய்ந்தனர். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் இந்தியாவின் இறையாண்மைக்கே உலைவைக்கும் அம்சங்களாக இந்திய விஞ்ஞானிகள் குறிப்பிடடவை இவை தாம்;

  • இந்திய அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளையும், தொழில்நுட்பத்தையும் தருவதோடு அமெரிக்கா நின்றுவிடாது. அது தொடர்பான அனைத்து அம்சங்களும் அமெரிக்காவின் பார்வைக்கு வர வேண்டும். தேவைப்பட்டால் சர்வதேசகுழுவை அனுப்பி சோதனை செய்வோம்.
  • அணு சக்தியால் மின் சக்தி பெறப்பட்ட பின்பு எஞ்சிய யுரேனியம் முதலியவைகளை செறிவூட்டி மறுசுழற்ச்சிக்கு பயன்படுத்த கூடாது.
  • இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விசயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும் போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களைத்தான் மிக மும்முரமாக எதிர்த்தனர் நமது விஞ்ஞானிகள்.

"ரஷ்யாவிடம் கூடங்குளம் அணுஉலை போன்றவற்றிற்கு நாம் உதவிகள் பெற்ற போது இது போன்ற நிர்பந்தங்கள் இம்மியளவும் கிடையாது. நமது அணுஉலைகளை அமெரிக்கா பார்வையிட அணுமதிக்ககூடாது. அமெரிக்காவின் அணுஉலைகளை எப்படி மற்றவர்கள் அண்டமுடியாதோ ... அதுவே நமக்கும் பொருந்தும்.

மின்சக்தி போக எஞ்சிய அணுகழிவுகள் தான் அணுஆயுதம் தயாரிக்க இந்திய ராணுவத்தை பலப்படுத்தப் பயன்படுகிறது. அதை தடுக்க நினைக்கிறது அமெரிக்கா "என்றனர் நமது விஞ்ஞானிகள். இந்திய விஞ்ஞானிகளின் இடையறாத நெருக்குதலைத் தொடர்ந்து இந்தியா மீண்டும் அமெரிக்காவிடம் பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

இதன் மூலம் ஏற்பட்ட ஒரே அனுகூலம், மின் உற்பத்திபோக எஞ்சிய அணுகழிவுகளை இந்தியா மறு சுழற்ச்சிக்கு பயன் படுத்தலாம் என்பது தான்.

இதைத் தான் இந்திய அரசு தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இறுமாப்புடன் பறைச்சாற்றி கொண்டுள்ளது. இதையெடுத்து அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' தனது தலையங்கத்தில் "இந்தியாவின் வற்புறுத்தலுக்கு வாஷிங்டன் பணிந்து விட்டது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வெடிப்பொருள் உருவாக்கத்திற்கும், அணு ஆயுத பரவலுக்கும் அமெரிக்கா ஏன் அணைப்போடவில்லை" என எழுதியது.

ஆனால், 'இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. நமது கண்காணிப்பின் கீழ்தான் எல்லாம் நடக்க இருக்கிறது. சர்வதேச கண்காணிப்பு குழுவை மீற இந்தியாவிற்கு எந்த சாத்தியமும் தரப்படவில்லை. அப்படி இந்தியா மீறுமானால் இந்தியாவிற்கு எல்லாம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்பமும் திரும்பப் பெறப்படும்" என்று விளக்கமளித்துள்ளார் அமெரிக்க அயலுறவு அமைச்சக அதிகாரி நிக்கோலஸ் பான்ஸ்.

ஆக, நாம் அமெரிக்காவை மீறிச்செல்ல அணுவளவும் வாய்ப்பில்லை என்பது ஒரு கொடுமை என்றால் அதை விட பெரிய ஆபத்தான அம்சம் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் நாம் உதவ வேண்டும் என்பது! அதாவது அமெரிக்க ஒப்பந்தம் இந்தியாவை அடியாளாக்க செயல்படக் கோருகிறது.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ராணுவ நடவடிக்கைகளுக்கு நாம் உடன் பட முடியாது. 2003ல் அது ஈராக்கில் போர் தொடுக்க முனைந்த போது அதற்கு இத்தாலி, ஜப்பான் உதவியதைப்போல இந்திய ஒத்துழைப்பையும் எதிர்பார்த்தது. அப்படியான நிர்பந்தம் நமக்கு அமைந்திருந்தால் இதுவரை அமெரிக்கா, ஈராக்கில் கொன்று குவித்துள்ள சுமார்.75,000 உயிர்களுக்கு இந்தியாவும் பழி சுமந்திருக்கவேண்டும்.

இப்போது மறுபடியும் கட்டுரையின் ஆரம்பத்திற்கே வருகிறேன். இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாப்பு கருதி அணு ஆயுத விவகாரங்களை இந்தியா பேசாதாம். ஆனால் இனி, இந்திய அணுசக்தி உலை நிர்மாணங்களில் அந்நிய நிறுவனங்கள் நுழையக்காத்திருக்கின்றன. சுமார் 200கோடி பில்லியன் டாலர்கள் இதற்காக அவை ஒதுக்கியுள்ளன. நம்ம ஊர் டாடா, ரிலையன்ஸ் கூட அணுசக்தி துறையில் ஆதிக்கம் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

அமெரிக்காவின் நலன்களுக்கேற்ப இந்தியாவின் ராணுவச்செலவுகள் இரட்டிப்பாகவும் வாய்ப்புள்ளது ஆக, அமெரிக்காவின் அணு ஆயுத வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்கிக்கொள்ளவும், இந்தியாவை தன் இரும்புப்பிடிக்குள் இசைவாக வைத்துக்கொளளவும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.

'இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமெரிக்கா வந்து உதவும்'. என்ற நோக்கத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் இதுவென இந்திய அரசு வியாக்கியானம் செய்துள்ளது அந்த அச்சுறுத்தலே அமெரிக்காதானே!

**********************

{இந்த இறுதி ஒப்பந்தம் குறித்த இந்திய விஞ்ஞானிகள் சிலரின் கருத்துகள்; கல்பாக்கம் அணுமின் சக்தி இயக்குனர் பல்தேவ்ராஜ், "அணு எரிப்பொருள் மறு ஆக்க தொழில் நுட்பத்தில் 1960களிலிருந்தே நாம் முன்னோடி நாடு. இந்த தன்னகரில்லா தொழில் நுட்பம் 100 சதவிகிதம் சுயசார்புடையது. இதில் வேறெந்த நாட்டையும் நாம் சார்ந்திருக்கவேண்டியதில்லை. அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், "சில அம்சங்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லாதது வருத்தமே!" }

1 comment:

கானகம் said...

நல்ல பதிவு. ஆனால் முதுகெலும்பில்லாத பிரதமர் இருக்கும் வரை ஒன்றும் நடக்கப்போவதில்லை. காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தியதற்கு இந்தியர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்