Thursday, April 11, 2013

கையூட்டுகளை கருவறுக்கும் மசோதா



-சாவித்திரிகண்ணன்

65ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அவலங்களுக்கு முடிவுரை எழுதத்தொடங்கும் ஒரு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

The rights of citizens for time bound delivery of goods & servive and redressel of their grivences Bill 2011 என்ற பெயரிலான இந்த மசோதா தமிழில் குடியுரிமை அடிப்படையில் தாமதமாகும் விநியோகம், சேவை மற்றும் குறை தீர்ப்பு மசோதா என்றழைக்கப்படுகிறது.

ரேஷன்கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் ஜாதி சான்றிதழ்கள், பென்ஷனுக்கான கோரிக்கை... என எதுவாக இருந்தாலும் அவற்றை பெறுவது சுலபமல்ல என்பதே நமது அரசு அலுவலகங்களில் மக்கள் பெற்று வரும் அனுபவம்.

மிகவும் அலைகழிக்கப்பட்டே எந்த ஒரு சேவையையும் பொது மக்கள் பெறுவதாயிருந்தால் அதற்கு பெயர் சேவையல்ல. இம்சை!

இப்படி பொதுமக்களை அலைகழிக்கும் இந்த இம்சை அரசர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் முதன் முறையாக இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இந்த மசோதா அறிமுகமாகியுள்ளது.

இதுவும் சாதாரணமாக வந்ததல்ல! அண்ணா ஹசாரே குழுவினரின் அயராத போராட்டம் இந்த மசோதா கொண்டு வருவதற்கான நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு ஏற்படுத்தியது என்பது உண்மை. லோக்பாலின் உள்ளே இருக்கும் ஒரு அம்சமாக இதை விட்டுவிடாமல் தனிமசோதாவாக அறிமுகப்படுத்தவேண்டும் என்றார் அண்ணாஹசாரே முதலில் இதற்கு உடன்பட மறுத்த அரசாங்கம் பிறகு ஒத்துக்கொண்டது.
ஆனபோதிலும் வலு குறைந்தாக அறிமுகப்படுத்தியது. இதனால் அண்ணாஹசாரே ஆவேசப்பட்டு போராட்டத்ததை அறிவித்தார்.

இதன் பிறகு உச்சநீதிமன்றமே இதில் தலையீட்டு மக்களுக்கு மிகவும் அவசியமான இந்த மசோதா நீர்த்து போகாத வகையில் அமல்படுத்த ஆணையிட்டது.

இந்த வகையில் 15 மாத கால தாமதத்திற்கு பிறகு இந்த மசோதா தற்போது அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ளது.

அரசு அலுவலகங்களில் காலதாமதப்படுத்தும் தந்திரத்தின் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் இனி மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் என்பது,

  • அரசாங்கத்தின் சேவையை நம்பகத்தன்மை மிக்கதாகவும், மக்களுக்கு நண்பனாகத் திகழும் வகையிலும் மாற்றி அமைப்பது.

  • நிர்வாகம் வெளிப்படைத் தன்மையாகவும், தகவல் அறியும் பொதுமக்களின் உரிமையை நிலைநிறுத்தவுமாக செயல்படுவது.

  • பொது நிறுவன சேவைகளில் தூய்மையான செயல்பாடுகளை நிறுவுவது,

  • அரசாங்கத்தின் பங்குதாராக பொதுமக்களை கருதுவது

  • நிர்வாகத்திற்கும், சேவை பெறுபவருக்குமான காலவிரயத்தை தவிர்ப்பது.

'இந்த சேவைகளை பெறுவது பொது மக்களின் அடிப்படை உரிமை, வழங்குவது அரசின் கடமை' என்பதே இம் மசோதாவின் சாராம்சமாகும்.
இனி இதற்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் தங்கள் தேவை காலதாமதமாவதற்கான பதிலை மக்கள் பெறுவதற்காகவே அதிகாரியும் அலுவலர்களும் நியமிக்கப்படவேண்டும்.

இவர்கள் பதில் சொல்லத் தவறினால் அடுத்தடுத்த கட்டங்களில் இதை தட்டி கேட்க மேலமைப்புகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
எனவே மக்கள் தரும் புகார்களை உடனே பதிவு செய்து, இரண்டு நாட்களுக்குள் ரசீது தரவேண்டும், புகார் எண் SMS அல்லது மெயிலில் அனுப்பபடவேண்டும் புகாரின் பேரிலான நடவடிக்கைகளை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் 30 நாட்களுக்குள் பிரச்சினை முழுமையான தீர்வை எட்ட வேண்டும். என்று மசோதா தெரிவிக்கிறது.

காரணமில்லாத காலதாமங்களுக்கு ரூ 250முதல் ரூ 50,000வரை அரசு ஊழியரின் சம்பளத்திலிருந்தே அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த அருமையான மசோதா விரைவாக மத்திய, மாநில அரசு நிர்வாகங்களில் அமல்படுத்தப்படவேண்டும்.
நடைமுறைரீதியில் இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு மேன்மேலும் இம்மசோதாவை மக்கள் பயன்படும் விதத்தில் வலுப்படுத்தலாம்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-3-2013

No comments: