Thursday, April 11, 2013

புறக்கணிக்கப்படும் சிசுக்கள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு...
ஒவ்வொரு உயிரும் இறைவனின் அம்சம்...!
ஆனபோதிலும் பிறந்து சில மணிநேரங்களிலோ, சிலநாட்களிலோ, ஒரு சில வருடங்களிலோ கைவிடப்படும் குழந்தைகளின் கணக்கு பிரமிக்க வைக்கிறது. இந்த குழந்தைகள் படும் துயரங்களோ நெஞ்சில் ரத்தம் கசிய வைக்கிறது!

சென்னையில் கடந்த இரண்டரை மாதத்திற்குள் அடுத்தடுத்து பிறந்து சில மணிநேரங்களேயான சிசுக்கள் குப்பை தொட்டியில், ரோட்டில் கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் பத்து நடந்துள்ளன. இதில் இரண்டு சிசுக்களே உயிரோடு இருந்துள்ளன.

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க இது போன்ற சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் நிகழ்கின்றன... எப்பாவமும் அறியாத சிசுக்கள் தூக்கி எறியப்படும் துர்சம்பவங்களை அறிய நேர்கையில் ஈரமுள்ளவர்கள் நெஞ்சம் பதைக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை 60,000என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இவற்றில் 2500முதல் 5000குழந்தைகளே முறைப்படி தத்தெடுக்கப்படுகின்றன.

தற்போது இந்தியாவில் குழந்தையில்லா தம்பதிகள் பல லட்சம்உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் குழ்ந்தைவரம் வேண்டி கோயில் கோயிலாக சென்றும் பலனின்றி விரக்தியிலுள்ளனர்.
தத்தெடுக்க விரும்புவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை! ஆனால், இவர்களில் பெரும்பாலோருக்கு தத்தெடுக்கும் வாய்ப்பும் அமைவதில்லை.
தத்து கொடுக்கும் மையங்களோ பல்வேறு வகைப்பட்டவை! ஒரு சிலர் இதை லாபகரமான வியாபாரமாகச் செய்கின்றனர்.

வேறுசிலர் இதை சர்வாதிகார மையமாக நடத்துகின்றனர் வெகுசிலர் இதை புனிதமான, தூய்மையான தொண்டாக செய்பின்றனர்.
பத்துமாதம் கருவை சுமந்து ஈன்றெடுக்கும் தாய்மையின் பணி இறைவனின் படைப்பாற்றலுக்கு நிகரானது. ஆனால் அங்கிகாரமில்லாத குழந்தை பிறப்பு எனும் அவலத்தை சந்திக்க துணிவின்றி அந்த தாய் தன் குழந்தையை துறக்கிறாள். இப்படி கைவிடப்படும் சிசுக்களில் இரு பாலினமும் உண்டெனினும் பெண் சிசுக்களே 70% என்பது கவலையளிக்கிறது.

இப்படியாக கைவிடப்பட்ட குழந்தைகள் சேற்றிலும், புழுதியிலும் புரண்டு யார், யாரோ உதவியால் எப்படியெப்படியோ வளர்கின்றனர்.
இன்றைய இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 1கோடி 10லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. வாழ இயலாமல் மடிந்தவர்களின் எண்ணிக்கையோ கணக்கு வழக்கில்லை. பல கோடியைத்தாண்டும்!

இவர்களில் பலர் கடத்தப்படுவது, விற்கப்படுவது துன்புறுத்தப்படுவது, குழந்தை தொழிலாளர்களாக கடினமான வேலைகளைச் செய்து சமூக விரோத சக்திகளால் வழிநடத்தப்படுவது, பிச்சையெடுப்பது..... என பற்பல கொடிய துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் முன்பு தொட்டில் குழந்தை திட்டம் அமல் படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கி பிறகு படிப்படியாக அவை முக்கியத்துவமிழந்துவிட்டன.

கைவிடப்படும் சிசுக்களுக்கான முதல் காரணம் காதலன் அல்லது கணவனால் கைவிடப்படும் பெண்களின் நிலை தான்!
ஆகவே, அப்படிபட்ட பெண்கள் கர்பவதியாகும் போது கைவிடப்படும் நிலையில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சுகப்பிரசவம் செய்யும் சரணாலயங்கள் உருவாக்கப்படவேண்டும்.

இதனால் தாயும், சேயும் ஒரு சேரக் காப்பாற்றப்படும்.
சேயை அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தை தேவைப்படும் பெண் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைக்காக ஏங்கும் - தம்பதிகளுக்கு சட்டப்படி தத்து கொடுக்கலாம்.
அந்த தாய்மார்களுக்கு சத்துணவுமையங்கள், அங்கன்வாடிமைய பணிகளில் வாய்ப்பளிக்கலாம்.
அதே சமயம் பெண்களை கர்பவதியாக்கி கைவிடும் ஆண்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தவேண்டும்
நம் முதல்வரம்மா அவர்கள் திட்டம் தீட்டி மேலும் செழுமைபடுத்தி இதனை செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
14-3-2013

No comments: