Monday, October 22, 2007

வாழ்க நம் அடிமை ஜனநாயகம்

சாவித்திரிகண்ணன்
எதிர்பாத்தபடியே பிரதீபா பட்டீல் குடியரசுத் தலைவராகிவிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதார மோசடிகள், கொலைகாரரை காபாற்றியவர் இவரா குடியரசு தலைவர் ....? என பலரும் கொதித்தும், குதித்தும், எழுதியும், பேசியும் ஒன்றும் நடக்கவில்லை
அப்படி எதுவும் நடக்காது, அதுதான் இந்திய சமூகம்!
இதை விட மோசமான குற்றச்சாட்டுகள் கொண்டவர்களை நாம் அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், பிரதமர்களாகவும் ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறோம்.
இதற்கும் மேலாக, "அகத்தை தூய்மைபடுத்தவேண்டிய ஆன்மீக குருவே கூட யோக்கியமானவராக இருக்கவேண்டும்" என்று நம் சமூகம் எதிர்பார்ப்பதில்லை. "என் வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி அந்த குருவுக்கு இருக்கிறது..." என்ற நம்பிக்கை ஒன்றே போதுமானதாகி விடுகிறது.
முதலமைச்சர்களும், பிரதமர்களும் நாட்டின் தலை எழுத்தையே தீர்மானிக்க கூடியவர்கள். ஆனால் குடியரசு தலைவரோ தன்னுடைய தலையெழுத்தையே தீர்மானிக்க முடியாதவர். அப்படியிருக்க பலரும், 'ஐயோ இப்படியாகிவிட்டதே' என புலம்புவதை பார்க்கும் போது ஆச்சிரியமாக இருக்கிறது.
நல்லவேளை காந்தியவாதியான நிர்மலாதேஷ்பாண்டே போன்றவர்கள் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே பாதுகாக்கப்பட்டுவிட்டனர். அவரை போன்றவர்களின் சமூகத்தொண்டு இந்த தேசத்திற்கு இன்னும் தேவைப் படுகிறது.
தேட்டத்தில் பூஞ்செடிகளை ரசித்து மகிழ்வது, நடனசிகாமணிகள், வித்வான்கள், கவிஞர்கள் போன்றோரின் கலை ஆற்றலை, ரசித்து கொண்டிருப்பது, அவர்களோடு போட்டோவுக்கு போஸ்கொடுப்பது, நாட்டில் எப்படிப்பட்ட அநீதிநடந்தாலும் அதை பற்றி வாய் திறக்காமல் மௌனிப்பது ...போன்ற வகையில் வாழ்வதற்கு ஒருவேளை நடைதளர்ந்த முதியவர்கள் வேண்டுமானால் ஆர்வம் காட்டலாம்.
இதனால் தான் பிராணாப் முகர்ஜியின் பெயர் பிரயோகிக்கப்பட்டபோது, "ஐயோ அவர் எவ்வளவு பெரிய திறமைசாலி, அவர் சேவை நாட்டிற்கு தேவை" என சோனியா மறுத்தார்.
இதன் மூலம், 'திறமையும், பொறுப்பும் தேவையில்லாத பதவி இது' என தீர்மானித்திருந்தார் சோனியா. அதில் நியாயமில்லாமலில்லை. வேலையே இல்லாத, பொறுப்பு சுமைகளற்ற அலங்கார அரசபதவியே அது. நமது சட்டமன்ற, பாராளுமன்றத்திற்கு போட்டியிட விண்ணப்பிக்கும் வேட்பாளர்களிடம் கூட, 'சொத்து எவ்வளவு?, கடன்காரனாக இருக்கிறாயா?, உன் மீது வழக்குகள் உண்டா?' என கேள்விகள் கேட்கப்படுகிறது ஆனால் அப்படி எந்தவித ஆய்வுமின்றி அளிக்கப்படும் பதவிகள் தான் கவர்னரும், குடியரசு தலைவரும்! எப்போதோ அரசியல் நெருக்கடி ஏற்படும் தருவாயில் தான் இவர்களின் தேவை உணரப்படும்.
'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையா?' என்றார் அறிஞர் அண்ணா. 'கவர்னரை ஆடு என்றால் குடியரசுத்தலைவர் பூம்பூம் மாடு தானே' என்று புரிந்து கொண்டுள்ளனர் நம் அரசியல் வாதிகள்!
மன்மோகன்சிங்கும், பிரதீபா பட்டீலும் பெயர் அளவுக்கு தான் பதவியை சுமக்கிறார்கள். இந்த நிழல்களுக்கு பின்னிருந்து நிஜமாக இயங்கிக்கொண்டிருப்பவர் சோனியா தானே!.
குடியரசுத்தலைவர் பதவி என்பது 1969வரை ஆரோக்கியமாகத்தான் இருந்தது. பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு முறை'பிரதமரை காட்டிலும் எனக்குதான் அதிக அதிகாரம்' என பிதற்றியபோது அன்றைய பிரதமர் நேரு அதை அமைதியாகச் சமாளித்தார். பாபு ராஜேந்திர பிரசாத்தும், டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஜாகிர்உசேனும் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்பட்டனர்.
இந்திராகாந்தி தான் குடியரசுத்தலைவருக்குரிய மதிப்பீடுகளை குலைத்துப்போட்டவர். தியாகத்தலைவர்களிடமிருந்து திசை மாறி பயணித்து, வி.வி.கி.ரியை வீராப்பாக வெற்றி பெறச் செய்து முதன் முதல் குடியசுத் தலைவர் பதவியை சர்ச்சைக் குள்ளாக்கியவர் இந்திராகாந்தி.
"இந்திராகாந்தி சொன்னால், துடைப்பமெடுத்து தரையை பெருக்குவேன்" என்றார் ஜெயில்சிங்! அன்றைக்கே வீழ்ந்து விட்டது அந்த பதவியின் கௌரவுமும், மரியாதையும். இந்திராகந்தியின் கண் அசைவுகளுக்கேற்ப காரியங்களை நிறைவேற்றினார் பக்ருதீன் அலிஅகமது. அந்த வரலாற்றின் நீட்சியாகத்தான் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கவேண்டும்.
கே.ஆர். நாராயணன் என்ற மாபெரும் திறமைசாலி, நேர்மையாளர் குடியரசுத் தலைவரானதால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தழைத் தோங்கி விடவில்லை.
அப்துல்கலாம் என்ற அணு விஞ்ஞானி அதிகார உச்சத்தை அடைந்ததால் சிறு பான்மை சமூகம் சிறப்புபெற்று விடவில்லை. அதேபோல் பிரதீபாபட்டீல் என்ற பெண், முதல் குடிமகளாய் வந்துவிட்டதால் பெண்குலத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடைக்க வழியில்லை.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1948 ஜீன் வரை மௌண்ட்பேட்டனையே கவர்னர்ஜெனரலாக இருக்கும்படி கைப்கூப்பி வணங்கியவர்களல்லவா நாம்!
அடிமை தளையிலிருந்த அறுப்பட்டு 60 ஆண்டாக போகிறது இந்திய தேசத்திற்கு! ஆனால் நாம் இன்னும் அடிமை மனோபாவத்திலிருந்து அகலாமல் 'பிரிட்டீஷ் வெஸ்ட் மினிஸ்டர்' பாணி அரசியல் அமைப்பை பின்பற்றி, 'இங்கிலாந்தில் அரசர் எப்படியோ அப்படியே இந்திய குடியரசுத்தலைவர்' என்று செயல்படுகிறோம்.
சுதந்திரமாக செயல்படமுடியாத சுதந்திர இந்தியாவின் முதல் குடிமகனுக்கோ அல்லது குடிமகளுக்கோ நாம் சூட்டியுள்ள பெயர் தான் குடியரசுத்தலைவர்.
வாழ்க நம் அடிமை ஜனநாயகம்.
மன்னராட்சி மாண்புகள்
கோடான கோடி மக்கள் ஒண்ட குடிசையின்றி, ஒட்டி வயிர்களுடன் பிளாட்பாரவாசிகளாய் வாழும் இந்தியாவில் குடியரசுத்தலைவர் வாழ்வதற்குரிய மாளிகையின் பரப்பளவு 330ஏக்கர்! அவருக்கு அங்கே சேவை செய்ய 1500 பணியாளர்கள். மன்னராட்சியின் மாண்புகளை நினைவு கூர்வோமாக.

No comments: