Monday, October 22, 2007

கண்ணதாசனை பேச மறுத்தார் கவிஞர்(?) பா.விஜய்

சாவித்திரிகண்ணன்
காலத்தால் அழியாத திரைப்படங்களை காற்றில் மிதந்துவரும் காவியங்களாய் தமிழ் உலகிற்கு தந்து சென்றவர் கவியரசர் கண்ணதாசன். கவிஞரின் பாடல்களுக்கு இசை வடிவம் தந்த அவரது இணைபிரியாத நண்பரும், இசை அமைப்பாளருமான எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கவியரசர் பிறந்த தினத்தன்று விழா கொண்டாடி வருகிறார்.
இந்த ஆண்டு இவ்விழாவிற்கு கிருஷ்ணராஜ வாணவராயர் தலைமை தாங்கினார். துக்ளக் ஆசிரியர் சோ, ஏ.வி.எம்.சரவணன், மலேசியா பாண்டித்துரை, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் சாமி பழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு சிறப்பு பேரூரையாற்ற கவிஞர்(?) பா.விஜய் அழைக்கப்பட்டிருந்தார். கவனிக்கவும் அவர் மட்டுமே சிறப்புரை; ஆகவே, மேற்படி பெரியவர்களின் பேச்சுக்குப்பிறகு கவிஞர் பா.விஜய் சிறப்புரையாற்ற ஒலிபெருக்கி முன் வந்தார். முதலில் மேடையில் அமர்ந்திருக்கும் பெரிய வி.ஐ.பிகளின் மேல் தான் வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் விரிவாகப்பேசினார். பிறகு மேடைக்கு கீழே உட்கார்ந்துள்ள கவிஞர் வாலி உள்ளிட்ட வி.ஐ.பிகளையும் வியந்து புகழ்ந்தார். பிறகு தன்னைப்பற்றியும், தன்னுடைய சாதனைகள் பற்றியும் கூறினார். பிறகு முதல்வர் கருணாநிதி தனக்கு கவிஞர் கண்ணதாசன் விருது வழங்க இருப்பது பற்றியும் கூறினார். தான் நடிகராக அவதாரமெடுத்துள்ளதையும் கூறினார்.(நவீன ரஷ்ய இலக்கியத்தின் பிதாமகனான மக்சீம் கார்க்கியின் உன்னதமான புரட்சிகர நாவல் தாய். உலகில் அதிகபட்ச வாசக நெஞ்சங்களை வசீகரித்த இந்த நாவலை கவிதை நடையில் எழுதுவதாக, அது கவிதையாகவும் இல்லாமல், கட்டுகோப்பான கதையாகவுமில்லாமல் சிதைத்தார் கருணாநிதி அதை இப்போது சினிமாவாகவும் எடுத்து சீரழித்து திருவதென்று அதில் பா.விஜயையும் கதாநாயகனாக்கியுள்ளனர். இதை பிறகு விவாதிப்போம்)எப்போது இவர் கவிஞர் கண்ணதாசனைப் பற்றி உணர்வுபூர்வமாக சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் கூடிய நிலையில் ஒரு சிலவரிகளில் அவரைப் பற்றிப் பேசும் தகுதி எனக்கு இன்னும் இல்லை" என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டார். கவிஞர் பா.விஜய். தமிழ்நாட்டில் ரிக்ஷா தொழிலாளி தொடங்கி காய்கறிகாரக் கிழவி வரை கண்ணதாசன் பாடல்களால் தங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்களை, அனுபவரீதியாக, உணர்வுபூர்வமாக சர்வசாதரணமாக பேசிவிடுவார்கள். நாள்தோறும் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இன்றைய திரைப்பாடலாசிரியர்களில் யாருமே கவிஞர் கண்ணதாசனின் தாக்கம் இல்லாமல் பாட்டெழுத வந்திருக்கவே வாய்ப்பில்லை என்பது மறுக்கமுடியாத நிதர்சனம். அப்படியிருக்க பா.விஜய் அவர்களை கவியரசர் எப்படி பாதிக்காமல் போனார் என்பது பார்வையாளர்கள் அனைவரிடமிருந்தும் முணுமுணுப்பாக வெளிப்பட்டதைக் காணமுடிந்தது.
"அரிய ஒரு வாய்ப்பை இப்படி அலட்சியப்படுத்திவிட்டாரே.... "என்றனர் சிலர்.
"இவரு காரியக்கார மனுஷன். இருக்கிறவங்க அத்தனைப்பேரையும் 'ஐஸ்' வைத்து அழகாக பேசினார். தன்னைப்பற்றியும் 'பில்டப்' பண்ணிக்கிட்டாரு. இல்லாத கண்ணதாசனைப் பற்றிப்பேசி அவருக்கென்ன பிரயோஜனம்னு நினைச்சிருக்கலாம்..." என்றனர் மற்றும் சிலர்.
"கவிஞர் வைரமுத்துவையும் பேச அழைத்திருந்தோம். பா.விஜய் பேசும் மேடையில் நான் பேசவிரும்பவில்லை..." என வைரமுத்து கூறிவிட்டார்." என வருத்தப்பட்டுக்கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர். அந்தக்காலத்தில் கவிஞர். கண்ணதாசன் போன்றவர்களெல்லாம் இது போன்ற நெளிவு, சுளிவுகற்ற நிதர்சனமான மனிதராகத்தான் இருந்துள்ளனர்.
கவிஞர் உணர்ச்சிப்பிழம்பானவர். விளைவுகளைப்பற்றி கவலைப்படமாட்டார். லாப நஷ்டங்களை யோசிக்கமாட்டார்.
அவருடைய கோபத்திற்கு அன்றைக்கு திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், கலைவாணர் என்,எஸ்.கே,கலைஞர் கருணாநிதி.... என யாருமே விதிவிலக்கில்லை. தான் மிகவும் மதித்துபோற்றிய பெருந்தலைவர் காமராஜரிடம் வேறுபாடு ஏற்பட்ட போதிலும் கூட அதை வெளிப்படுத்த தயங்காதவராகவே வாழ்ந்தார் கண்ணதாசன்.
கவிதை என்றும் தொழில்நுட்பம் கைவரப்பெற்றவர்கள் எல்லோரும் கவிதை எழுதலாம். நிறைய வாய்ப்புகள் பெறலாம், சம்பாதிக்கலாம். ஆனால் உண்மையில் கவிதையாகவே வாழ்வது என்பது கண்ணதாசனுக்குத்தான் சாத்தியமானது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட காலத்தில் கூட இருவருக்குமிடையே ஆரோக்கியமான தோழமை நிலவியது.
'பாகப்பிரிவினை படத்தில் தனக்கு தாலாட்டுப்பாடல் எழுதவராது' என்ற பட்டுக்கோட்டை, "அண்ணன் கண்ணதாசன் தான் தாலாட்டை அழகாக எழுதுவார். அவரிடமே கேட்டு வாங்குங்கள்" என்றும் சொன்னார். "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ..
நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்பு..."
என்று கவிஞர் எழுதிய பல்லவியை பார்த்துவிட்டு, கண்ணதாசன் மீதிருந்த கோபத்தை, பழைய சச்சரவுகளை மறந்துவிட்டு அவரை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாராம் சிவாஜி.
இதற்குப் பிறகு தான் சிவாஜி படமென்றால் பாடல்கள் கண்ணதாசன் என்பது எழுதப்படாத விதியானது. இந்த பாலத்தை உருவாக்கிய பட்டுக்கோட்டையாரோ தன் பலத்தை மட்டுமே நம்பி இருந்தார். யார் வாய்ப்பையயும் கெடுத்து தனக்கு வாய்ப்பை உருவாக்கி கொண்டவரல்ல அவர்.
அதனால் தான் அவர் இறந்த போது கலங்கி மனம் துடித்து கண்ணதாசன் இப்படி எழுதினார்.
கல்யாண சுந்தரனே
கண்ணியனே! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள்
புரியாத பண்பினனே
தன்னுயிரைத் தருவதனால்
தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவால் ஏற்பட்ட சூனயத்தை, என்னைக் கொண்டே சினிமா உலகம் நிரப்பிற்று. அதில் எனக்கு ஆவணம் வரவில்லை.
ஆசையே பெருக்கெடுத்தது... என் ஆயுள் காலம்வரை மறக்க முடியாத பெயர் கல்யாணசுந்தரம். என்றவர் கண்ணதாசன்.
தமிழ் திரை உலகில் நீண்ட நெடிய வரலாற்றில் மதுரகவிபாஸ்கரதாஸ்,பாபநாசம் சிவன் தொடங்கி உடுமலை நாராயணகவி, மருதகாசி, தஞ்சைராமய்யாதாஸ், கு.மா. பாலசுப்பிரமணியன்,கே.பி,காமாட்சி, கம்பதாசன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, முத்துலிங்கம்... என எவ்வளவோ பிரபல பாடல்களை எழுதி குவித்தவர்கள் இருந்துள்ளனர்.
கவிஞர் வாலியும் கூட கண்ணதாசனைவிட அதிக பாடல்களை எழுதிவிட்டார். ஆனால் அவர் கண்ணதாசனின் நகல் போல வலம் வந்ததால், 'ஒரிஜினாலிட்டி' இல்லாதவராகவே அறியப்பட்டார்.
"மெட்டுக்கள் கருத்தரித்து மெல்லவே இடுப்புநோக துட்டுக்குத் தகுந்தவாறு முட்டையிடும் பெட்டைகோழி" என்று தன்னைத்தானே விமர்சிக்கவும் வாலி தயங்கியதில்லை. இந்த சுயம் உணர்தலே அவரை இவ்வளவுகாலம் வெற்றிகரமான திரைப்படலாசிரியராக்கியுள்ளது எனலாம்.
எவ்வளவு தான் வாய்ப்புகள் பெற்றாலும், புகழ் கிடைத்தாலும், விளம்பரங்களில் மிதந்தாலும் 'கவிஞன்' என்பதாக வெகுசிலரைத் தான் காலம் அங்கீகரிக்கிறது.

7 comments:

சுட்டிப் பையன் said...

Is it necessary to praise the poet who is no more? Is it necessary to criticise our period poet in such a manner? Savithri Kannan may reconsider his thoughts?

சுட்டிப் பையன் said...

Is it necessary to praise the poet who is no more? Is it necessary to criticise our period poet in such a manner? Savithri Kannan may reconsider his thoughts?

Anonymous said...

//அது கவிதையாகவும் இல்லாமல், கட்டுகோப்பான கதையாகவுமில்லாமல் சிதைத்தார் கருணாநிதி ///

hello savitrikannan, this line doesnt really suit your subject. sounds like this is written with some thought to degrade someone and doesnt have any role to play in this article..

Mukundhan

Anonymous said...

மறைந்த கவிஞரை வழிபாடு செய்யும் நீங்கள் வாழும் கவிஞரை வாழ்த்த வேண்டாமா?

Anonymous said...

well said mr.savithri kannan,thankal thiramaiai nambamal jaalra adikkum ikkala cinema pattukkarargalukku kannadasan perumai engaey theriya pogirathu.melum avarenna mudalammaichara ivargalukku elumbuthundu poduvatharkku.vijayan.

Baskar said...

savithri kannan, it doesn’t look like you are talking for kavi arasu kannadasan. It clearly says that you have taken this as a subject and talking against pa Vijay. I like to say some thing to vijayan who had made a comment here, pa Vijay is the one who believe his hand and make others also to believe the same through his poems and songs. He too knew well about kannadasan and his perumai, I know that kannadasan songs are also his favorite. I request you guys not to spread false information through media.

Anonymous said...

நல்ல பதிவு சாவித்திரி கண்ணன். பன்றிகளுக்கு முன் முத்துக்களைப் போடாதேயுங்கள் என்கிறது வேதாகமம்

பா.விஜய் போன்ற காரியக்கார கவிஞர்களை காலத்தால் அழியாத பாடல்களை இயற்றிய கன்னதாசனன் விழாவுக்கு அழைத்தது அவர்கள் தவறு.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலில் " நான் காவியமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரனமில்லை" எனப் பாடியவன் கன்னதாசன்..

கன்னதாசனைப் பற்றிப் பேசாதத்னால் இழப்பு கவிஞருக்கல்ல.. பா விஜய்க்குத்தான்..

ஜெயக்குமார்