-சாவித்திரிகண்ணன்
வங்கித்துறை சட்ட சீர்திருத்தம்
தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய
நான்கு வங்கி ஊழியர் அமைப்புகள் வேலைநிறுத்தம் செய்துள்ளன. இதனால் சுமார்
5லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிப் பணிகள்
ஸ்தம்பித்துள்ளன. பொதுமக்களும், நிறுவனங்களும் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிட்டது.
ஆனால் வங்கி ஊழியர்களோ இந்த வேலைநிறுத்த போராட்டம் எங்களுக்கானதல்ல, மக்கள்
நலனுக்கானது. நாட்டு நலனுக்கானது. என்கிறார்கள்.
வங்கித்துறையில் தனியார்
ஆதிக்கத்தை அதிகப்படுத்துவது, வெளிநாட்டு வங்கிகள் மேன்மேலும் வலுவாக காலூன்ற
வழிவகுப்பது, வங்கிக் கிளைகளை குறைப்பது, வங்கிப் பணிகளை Outsourcing செய்வது,
முன்பேர வர்த்தகத்தில் வங்கிகளை ஈடுபடுத்துவது, அப்படி ஈடுபடும்போது இதை
கண்காணிக்கும் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்களித்து கட்டற்ற
சுதந்திரத்தை வழங்குவது... போன்றவை இந்த வங்கித்துறை சட்ட சீர்திருத்த மசோதாவில்
இருந்தது. ஆனால் இடதுசாரி இயக்கங்கள், வங்கி ஊழியர் அமைப்புகளின் கடும் எதிர்பால்
வங்கிகளை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நமது
அரசாங்கம் செயல்படுத்திவரும் தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களின் ஓர் அம்சம்
தான் இந்த வங்கி துறை சட்ட சீர்திருத்த மசோதா!
இது சீர்திருத்ததிற்கானதா?
அல்லது சீர்கேட்டிற்கானதா? என்பது இன்று பெரும் விவாதமாகியுள்ளது.
இந்தியாவின்
மிகப்பெரிய பலமே சுமார் 53,000கிளைகளோடு செயல்படும் பொதுத்துறை வங்கிகளே!
ஏழுலட்சம் ஊழியர்கள், 60லட்சம் கோடி இருப்பு.... போன்றவை சாதாரணமானதல்ல. இதனால்
தான் மொத்த வங்கிசேவையில் 75% பொதுத்துறை வங்கிகளின் பொறுப்பில் உள்ளன. 31
தனியார் வங்கிகள் 18.2% சேவையையும் 38, வெளிநாட்டு வங்கிகள் 6.5% சேவையையும்
கொண்டுள்ளன.
2007ல் உலகளாவிய ஒரு பொருளாதார தேக்கம் ஏற்பட்ட சூழலில்
இந்தியாவின் 27 பொதுத்துறை வங்கிகள், நகர்புறங்கள்,மாவட்டங்கள், மாநிலங்கள் என
விரிந்து பரந்துள்ள கூட்டுறவு வங்கிகள் 197, பிராந்திய வங்கிகள் மற்றும் 6 பெரிய
பொதுத்துறை நிதி நிறுவனங்கள் போன்றவையே இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்க
காரணமாயிற்று. இந்த மசோதாவில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சி என்ற
வகையில் வங்கியில் பெரும் கடன் பெற்றிருப்பவரே வங்கியின் இயக்குநராகவும் வர
வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதானது பரந்துபட்ட அளவில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் பல்வேறு நிதிமோசடிகளால்
இழந்திருக்கும் தொகை 3,799கோடி! இது தவிர இந்திய வங்கிகளின் வசூலாகாதக் கடன்
தொகை மட்டுமே 1.23லட்சம்கோடி! இந்த நிலையில் கடன் பெறுபவர் கையிலேயே அதிகாரமும்
சேருமானால் நிலைமை என்னவாகும்? என்ற அச்சம் நியாயமானது.
பரிசிலனைக்குரியது.
வாராக்கடன் என்பது தனியார் வங்கிகளிலும் இல்லாமல் இல்லை.
ஆனால் ஒட்டுமொத்த தனியார் வங்கிகளின் வாராக்கடன் 14,778 கோடி தான்! தனியார்
வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு 150% செலவு
செய்கின்றன. அகவிலைப்படி, பெட்ரோல் அலவன்ஸ், வீட்டுவாடகைப்படி என ஏகப்பட்ட
சலுகைகளை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பெற்றாலும் வாடிக்கையாளர்கள் சேவை என்ற
விசயத்தில் பொதுவாக பின்தங்கியுள்ளனர் என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது.
எனவே வங்கி ஊழியர்கள் தங்களை சுயபரிசிலனைக்கு உட்படுத்தி வாடிக்கையாளர்கள் சேவையில்
மேம்பாடு காட்டினாலே கூட தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் காலூன்றுவதை
கணிசமாக குறைக்கலாம்.
வங்கி கிளைகளை குறைப்பதை தவிர்த்து கண்டிப்பாக
அதிகப்படுத்தவேண்டும். அதே சமயம் வங்கிப்பணிகள் சிலவற்றை Outsourcing முறையில்
செய்து வரவேற்கத்தக்கதே!
வெளிநாட்டு வங்கிகள் விஷயத்தில் அரசாங்கம் கறாரான
விதிகளை வகுத்து சற்று எச்சரிக்கையோடு அவர்களை
அனுமதிக்கவேண்டும்.
முன்பேரவர்த்தகத்தில் வங்கிகள் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லதே!
ஏனெனில் ஆபத்தான விவகாரத்தில் மக்கள் பணத்தை அள்ளி இறைப்பது
தேவையற்றது.
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
20-12-2012
No comments:
Post a Comment