Tuesday, January 1, 2013

சீரழிக்கப்படும் நீர் ஆதாரங்கள்




                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

இந்தியாவின் பலமே வேளாண்மை தான்!
120கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் நம் அன்னைபூமியும், அதற்கு ஆதராமாகச் செயல்படும் நதி மற்றும் ஆற்றுநீர் படுகைகளுமே வேளாண்மைக்கு துணையாகும்.

இத்தனை ஆண்டுகளாக - பூமி தோன்றி நாகரீகம் மலரத்தொடங்கிய நாளிலிருந்து - நதிகளே மனிதகுலத்தை வாழ்வித்து, வளர்த்தெடுத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தடையின்றி உயிர்களை, பயிர்களை செழிக்க வைத்த நதிகளை தற்போதைய தலைமுறையில் அழிக்க செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தமது சமீபத்திய கள ஆய்வில் தெரிவித்துள்ள தகவல்கள் நம்மை பதறவைக்கின்றன.

இந்தியாவின் புண்ணிய நதிகளிளெல்லாம் தற்போது குடிக்கவோ, குளிக்கவோ கூட தகுதியற்ற தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை நதி பற்பல கழிவுநீர் கால்வாய்களின் சங்கமமாகிவருகிறது. யமுனை நதி தொழிற்சாலைக் கழிவுகளால் நாற்றமெடுக்கிறது. வருணா, கண்டாக் போன்ற நதிகளின் நிலைமைகளையோ வர்ணிக்க வார்த்தைகளில்லை. வருத்தமே மேலோங்குகிறது. 

இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் நீர், நில சுற்றுப்புறச் சூழல்களில் பல அசாதாரணமான அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் அனில் ஜோஷி.

இத்தகைய சூழல்கள் தமிழ்நாட்டிலும் நிலவுகின்றன. 

தமிழ்நாட்டில் பவானி ஆற்றுப்படுகைகள் ஈரோட்டிலும், திருப்பூரிலும் சாயப்பட்டறைகளால் பாழ்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் விவசாயம் பெரும் வீழ்ச்சி கண்டுவருகின்றன. குடிதண்ணீரிலெல்லாம் நச்சு மிதக்கின்றன.

திண்டுக்கல் பகுதியின் தோல் தொழிற்சாலைகளால் அப்பகுதி நிலத்தடி நீர் தீண்டத் தகாதவைகளாக மாறிவருகின்றன. வைகை நதியின் தண்ணீர் வரத்துகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதால் வறண்டு வருகின்றன.

தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரை பன்னாட்டு குளிப்பான நிறுவனங்கள் உறிஞ்சி கொண்டிருக்கின்றன.
கோவைவாசிகள் தூய தண்ணீர் என்று சிலாகித்து பேசிடும் சிறுவாணித் தண்ணீர் இன்று மாசடைந்து வருகிறது.

அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த ஆற்றுத் தண்ணீரை விட்டுவைக்கப் போகிறோமா? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ஒரு போர்கால நடவடிக்கையாக நமது நதி, நீர், ஆற்றுநீர் படுகைகளை நாம் காப்பாற்றவேண்டும். இதற்காக ஒரு அதிகாரபூர்வ அமைப்பு உருவாக்கப்படவேண்டும். உள்ளாட்சிகளின் உதவியோடு இது செயல்படவேண்டும்.
ஆற்றுபடுகைகளில் மணல் கொள்ளைகள் தொடர்வதால் தண்ணீரை இனி சேமிக்க முடியாது. மணல்கள் தாம் தண்ணீரை பாதுகாக்கும் வங்கிகள்.

நமது அணை கட்டுகளில் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்தினால் அவை தமிழகத்தின் சில வருடக் கட்டுமான பணிகளுக்கு கைகொடுக்கும். அத்துடன் நீர் கொள்ளவும் அதிகமாகும்.

பழந்தமிழர்களால் பாதுகாக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகளை மீண்டும் புனரமைக்க வேண்டும்.

இதற்காக மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, விவசாயிகளைக் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்திய ஆறு மற்றும் நதிநீரின் 80% வேளாண்மைக்கும், குடிதண்ணீரிருக்குமே பயன்படுகிறது.
நீரின்றி அமையாது உலகு. இதை நினைவில் கொள்ளவேண்டிய தருணம் இதுவே! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-12-2012

No comments: