-சாவித்திரிகண்ணன்
தமிழக விவசாயக்களம் தடுக்க முடியாத
தற்கொலைகளை தற்போது கண்டு வருகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரம்,
மத்தியப்பிரதேசம், ஆந்திரம், கர்நாடகா போன்றவையே இது வரை விவசாயிகள் தற்கொலையை
அதிகமாக கண்ட மாநிலங்கள்!
மொத்த விவசாயிகள் தற்கொலையில் 3 -ல் இரண்டு இந்த
மாநிலங்களில் மட்டுமே நடந்தேறுகிறது.
இப்போது இந்தப்பட்டியலுக்கு தமிழகமும்
தயாராகி கொண்டு வருகிறதோ... என்ற அச்சமே மேலோங்குகிறது...
'காவிரி தென்பெண்ணை
பாலாறு தமிழ்
கண்டதாம் வைகை பொருணைநதி - என
மேவிய ஆறு பல ஓடத் திருமேனி
செழித்த தமிழ்நாடு!'
என பாரதி பாடிய தேசம் இன்று பாழ்பட்டு
நிற்கிறது.
விவசாய விளை நிலங்கள் சுருங்கி வருகின்றன....
ஆறு, குளம்,
கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளான
வடி நிலபகுதிகளால் வற்றிக்
கொண்டிருக்கின்றன.
இவற்றை தூர்வாறுவதற்காக ஆண்டு தோறும் ஒதுக்கப்படும்
பல்லாயிரக்கணக்கான கோடி நிதியால் இந்த நீர்நிலைகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதே
இல்லை.
அரசின் ஏட்டு கணக்குப்படி தமிழகத்தில் 41,262 ஏரிகள் உள்ளன.
மேட்டூர் அணையின் நீர் கொள்ளவில் மூன்றில் ஒரு பகுதி பல்லாண்டுகளாக
அடித்து வரப்பட்ட மணல் குவியல்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு
கனஅடி மணல் மூன்று கன அடி நீரை உறிஞ்சவல்லது!
இதனால் மேட்டூர் அணையில் வந்து
விழும் தண்ணீரின் பெரும் பகுதியை அங்கு மலைக்குன்றுகளாய் குவிந்திருக்கும் மணல்
உறிஞ்சிவிடுகிறது.
இதனால் நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல லட்சம்
ஏக்கர் பரப்பளவுகள் வஞ்சிக்கப்படுகின்றன. இதை சரி செய்ய எந்த நடவடிக்கை
ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை
காவேரியிலிருந்து நமது மேட்டூர் அணைக்கு
வந்து சேரும் நீரைப்பயன் படுத்துவதில் நாம் படுமோசமான நீர் மேலாண்மை நிர்வாகத்தை
பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் கடைபிடித்து வருகிறோம் என்பது மிகவும் கசப்பான
ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகவுள்ளது.
சமீபத்தில் குறுவை விவசாயமும்
குலைந்து சாம்பா நடவும் பொய்த்து நிலத்தடி நீரும் அதல பாதளத்துக்கு இறங்கிய
நிலையில் போர்போட்டாலும் பயனில்லாமல் போகும் அதிர்ச்சியை விவசாயிகள் தாங்க
முடியாமல் தற்கொலைக்களாகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பருவ மழைகளில்
பொழியும் ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் பயன்படுத்தும் நீர் மேலாண்மை
நிர்வாகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமாகிறது.
நீர்மேலாண்மை
நிர்வாகத்தில் நம் பண்டைகால தமிழ் சமூகம் இன்றைய பல்கலைக் கழகங்களே வியக்கும்
வித்திலான பட்டறிவை கொண்டிருந்தது.
ஆனால் நமது இன்றைய நுகர்வு கலாச்சார
அணுகுமுறைகள், ஆறு, குளம், கண்மாய்களின் நீர்வடிநிலப் பகுதிகளையெல்லாம் பட்டா
நிலமாக்கி கான்கிரிட் கட்டிடங்களை எழுப்பிக்
கொண்டிருக்கிறது.
சமீபகாலங்களில் சுமார் 50சதவிகித விவசாயிகள் நிலங்களை
விற்பது அல்லது அடகு வைப்பது என்ற நிலையெடுத்துள்ளனர்!
மற்றவர்களுக்கு படி
அளந்து கொண்டிருந்த விவசாயிகள் அரசின் இலவச திட்டங்களை எதிர்நோக்கி கையேந்தி
நிற்பவர்களாக மாற்றப்பட்டிருப்பது நெஞ்சு பொறுக்காத அநீதியாகும்!
தேசிய
அளவில், மாநில அளவில் போடப்படும் மையபடுத்தப்பட்ட திட்டங்கள் பல லட்சம் கோடி
நிதிகள் கடைக்கோடி விவசாயிகளை சென்றவடைவதில்லை.
காரணம் - நமது அரசுகள் மக்களை,
பெற்றுக்கொள்ளும் பயனாளிகளாக கருதி மட்டுமே திட்டங்களை தீட்டி தங்கள் அதிகாரத்தை
நிலை நிறுத்துகின்றன.
மக்களை பங்கேற்பாளர்களாக பாவித்து அந்தந்த மாவட்ட, தாலுகா,
பஞ்சாயத்துகள் தலைமையில் திட்டங்கள், செயல்பாடுகள் நடந்தேறும் போதே முழுப்பயனையும்
அவர்கள் பெற இயலும்!
காந்தி காட்டிய கிராம சுயராஜ்ஜியம் தான் நாம் கடைத்தேறும்
வழியாகும்!
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
9-1-2013
No comments:
Post a Comment