Tuesday, January 1, 2013

பாலியல் கொடுமைக்கு எதிரான தார்மீக ஆவேசம்



                                                                                                                -சாவித்திரிகண்ணன்

இவர்கள் ஊதியம் கேட்டுப்போராடவில்லை....
கட்சிவிசுவாசத்திற்காக களம் காணவில்லை....
சுயநலம் சார்ந்த கோரிக்கைகளுக்காக அணிதிரளவில்லை....
ஆனால் தாங்கள் முன்பின் பார்த்தறியாத ஒரு இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூர பாதிப்பு இவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. போலீசாரின் தடியடியையும், தண்ணீர் பாய்ச்சலையும் தடைதாண்ட வைத்துள்ளது. 
இந்தியச் சமூகம் இதயம் மரத்துப்போகவில்லை.
அது உயிர்ப்போடு, சகமனிதரின் மீதான கரிசனையோடு தான் இருக்கிறது. என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.
இந்த இளைஞர்களை ஒன்று படுத்தியதில் நவீனதகவல் - தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தான் பெரும்பங்கிருக்கிறது. சமூக வளைத்த தளங்களின் மூலமான கருத்து பரிமாறல்களே இந்த படித்த இளைஞர்கூட்டம் அணிதரளவும், போராடவுமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அண்ணாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் முன்முதலாக இது வெளிபட்டது. பிறகு இதை அரவிந்த் கேஜ்ரிவலும் பயன்படுத்தினார். இந்த தார்மீக ஆவேசம் தலைவணங்கப்படவேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இலக்கில்லாத பயணம் பயனற்றது. எந்தப் பிரதிபலும் பாராமல் இந்த இளைஞர்கூட்டம் போராடுவதை எப்படி தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவது என்பதில் எதிர்கட்சிகள் ஆதாயம் அடையக்கூடும்.

இந்த தார்மீக ஆவேசத்திற்கு செவிமடுப்பது போல் பாவணைகாட்டி, பற்பல அறிக்கைகள் வெளியிட்டு, மக்கள் உணர்வுகளை பிரதிபலிப்பதில் ஆளும் கட்சி தொடங்கி அனைத்து அரசியல்கட்சிகளுமே போட்டி போடுகின்றன.

தொலைநோக்குப் பார்வையும், அனைவரையும் தொடர்ந்து ஒன்றுபடுத்தி இயக்கும் தலைமையும் இல்லாத பட்சத்தில் இந்தப்போராட்டங்கள் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும்.

அண்ணாஹசாரேவிற்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இன்று படிப்படியாக குறைந்ததே இதற்கு உதாரணமாகும். ஆனால் ஒரு மாற்று அரசியலும், மனிதநேயமிக்க சமூகபார்வையும் தேவைப்படும் நாட்டில் இந்த போராட்டங்கள் இவற்றை நிறைவேற்றுமா? 
படித்தவர்களிடம் மட்டும் எழுந்துள்ள இந்த தார்மீக ஆவேசம் பாரமரர்கள் வரை சென்று சேருமா? அப்படி சென்று சேர்க்கும் தலைமை அங்கிருந்து தோன்றுமா? என்பது கேள்விக்குறியே!

ஏனெனில் ஏற்கெனவே அரசியல் கட்சிகள் 'போலியான அறச்சீற்றத்தை' தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காட்டியதில் அறுவெறுத்து நம்பிக்கை இழந்துள்ளனர் பெரும்பாலான மக்கள்.

தாங்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டுக் கொண்டிருப்பதை எதிர்க்கமுடியாமல், உணவு, உறைவிடம், உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக நாளும் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுக்காகவும் குரல் கொடுத்து அரவணைக்கும் போது தான் ஒன்று திரட்ட முடியும்.

அண்ணாஹசாரே, அரவிந்த்கேஜ்ரிவால் போன்றவர்களால் இன்னும் சாமனியமனிதர்களை அணிதிரட்ட முடியவில்லை. அப்படி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தன்னை அர்பணிக்கக் கூடிய ஒரு அரசியல் தலைமையே இந்திய சமூகத்தின் தேவையாகவும், எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
24-12-2012

No comments: