Tuesday, January 1, 2013

விவசாயிகளை கருவறுக்கும் பிரதமர்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

"இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறவேண்டும் விவசாயத்தை குறைவான மக்கள் சார்ந்திருக்கும் போது தான் விவசாய வருமானம் அதிகரிக்கும் ". 

இப்படி பேசியிருப்பவர் அமெரிக்க அதிபரல்ல, உலக வங்கித் தலைவருமல்ல - நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்!

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து பேசிய நமது பிரதமர், நமது நாட்டு விவசாயிகளுக்கு இப்படி ஒரு ஆலோசனை வழங்கியிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியல் ஆழ்த்தி இருக்கிறது.

எவ்வளவு தான் நவீன வளர்ச்சியடைந்தாலும் அடிப்படையில் இந்தியா இன்றும் ஒரு வேளாண்மை நாடு தான்!

உணவு உற்பத்தி தான் நமது பலம். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறியதும், அந்த கிராமப்பொருளாதாரமும், உணவு உற்பத்தியுமே இந்தியாவை வாழ்விக்கிறது என்றதும் இன்றைக்கும் பொருந்துகிறது. என்றென்றைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
இன்றைக்கும் இந்தியாவில் விவசாயமே அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறது. அவர்கள் விவசாயத்தை நிறுத்திவிட்டால் அனைவருக்குமான உணவுக்கு என்ன செய்வது?
கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரைலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது எதனால்?

அப்போதெல்லாம் விவசாய வருமானம் குறித்து கவலைப்படாத பிரதமர் இன்று அந்நிய நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் கால்பதிக்கத் தொடங்கிய நிலையில் விவசாயவருமானம் குறித்து அக்கறைப் படுவதும், விவசாயிகளை தொழிலிருந்தே விலகச் சொல்வதும் ஏன்? என்பதை பாமர மக்களும் உரண முடியும் 

உழைப்பும், சேமித்து வைத்த விதைகளும் இயற்கையாக கிடைக்கும் உரங்களும் பெருக்கெடுத்துவரும் தண்ணீரும் மட்டுமே விவசாய முதலீடாக இருந்த காலத்தில் விவசாயிகள் தற்கொலை நிகழவில்லை. விவசாயத்தில் ரசாயண உரங்களை அறிமுகப்படுத்தி, வீரியவிதைகளை வற்புறுத்தி திணித்து, பூச்சிமருந்து உயிர்கொல்லிகளை பழக்கபடுத்தி விவசாயத்தை பெரும் முதலீடு தேவைப்படும் தொழிலாக மாற்றியது நமது அரசாங்கமே.

அதன் விளைவுகளே விவசாயத் தற்கொலைகள்.
விவசாய உற்பத்தியை தேவைக்கும் அதிகமாகச் செய்வது உணவு தானியக் கிடங்குகளில் பல கோடி டன் உணவு பொருட்களை வீணடித்து விவசாயிகளல்ல. இப்போதும் நமது உணவு கிடங்குகளில் 7கோடி டன் இருப்பு இருக்கிறது. இதில் 50 சதவிகிதமாவது வீணாக்கப்படும் என்பதே நிதர்சனம்!

கடந்த ஆண்டில் 1கோடி டன் அரிசியும் தலா 25 லட்சம் டன் கோதுமையும் சர்க்கரையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியானது. இதன்மூலம் இந்தியாவில் பெரும் அந்நிய செலவணியும் கிடைத்தது. கந்துவட்டி கொடுமை, மழையின்ன என இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி கொணிடருக்கும் இந்திய விவசாயிகளை 'உங்கள் தொழிலை கைவிடுங்கள்' என பிரதமர் கூறுவது அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லாமல் வேறெதற்கு?

விவசாயத்திற்கு வேண்டிய நீராதாரங்ளை போற்றிப் பாதுகாத்து, இயற்கை பேரழிவுகளிலிருந்து விவசாயத்தை காப்பாற்றி, கடன் தந்துவட்டி கொடுமைகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து விவசாயப்பொருட்களை உயிர்போல் பத்திரப்படுத்தி, உரிய வகையில் அதை விநியோகிக்க வேண்டியது தான் அரசின் கடமை!
விவசாயத்தை அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விவசாயிகளை தொழிலில் இருந்தே அப்புறப்படுத்துவதல்ல. உலகில் அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவர்.

உலகம் எத்தனை தொழில்கள் செய்தாலும் உலகத்தார் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் உழவுத்தொழிலே தலை சிறந்தது என்றார் வள்ளுவர்.
விவசாயத்தை பாதுகாப்போம். இதில் அந்நிய நிறுவனங்களின் ஊடுருவலை வேரறுப்போம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-12-2012

No comments: