Thursday, January 31, 2013

சேவை வரி



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

சேவை வரியை எதிர்த்து நடிகர் நடிகைகள், சினிமா, டி.வி தொழில்நுட்ப கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

ஏற்கெனவே தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 30 முதல் 40% வரை வருமானவரியாக கட்டி வருபவர்களிடம் இந்த ஆண்டு முதல் மேலும் 12.3% சேவை வரி என்பதாக பிடித்தம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறியதன் விளைவே இந்த உண்ணாவிரதம்.

"வரிக்கு மேல் வரி என வரிகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால் கறுப்பு பண புழக்கம் தான் அதகிமாகும். இதைத்தவிர்த்து இருக்கும் வரியை கறாராக வசூலித்தாலே போதும்..." என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது நியாயமானதே!

சேவை வரி என்பது எல்லா நிலையில் உள்ள மக்களுக்கும் தற்போது தாங்க முடியாத சுமையாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏற்கெனவே சுங்கவரி, கலால்வரி, விற்பனைவரி, உற்பத்திவரி வருமானவரி என பல முனைகளில் வரி வசூலிப்பது போதாது என்று 1994ல் முதன்முதலாக 3 துறைகளுக்கு மட்டுமே சேவை வரி அறிமுகமானது.

தொலைபேசி, பங்குவர்த்தகம், இன்சூரன்ஸ் என்ற மூன்று துறைகளின் மூலமாக அன்று அரசு பெற்ற சேவை வரி 410கோடி தான்!

அறிமுகமானபோது 5சதவிகிதமாகத் தான் அறிமுகமானது.
பிறகு 2009ல் 10%மாகவும், 2012ல் 12.3% மாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. அதேபோல முதலில் மூன்றே மூன்று துறைகளுக்கு மட்டுமே என்று அறிமுகமாகி 2000ல் 26 துறைகளாகி, 2002-2003 நிதிஆண்டில் 52துறைகளாகி 2006-2007 நிதிஆண்டில் 99 துறைகளாகி, தற்போது 119 துறைகளுக்கு சேவை வரி விரிவுபடுத்தப்பட்டு விட்டது.

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் எந்த பொருளை வாங்கினாலும்,

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டாலும் அல்லது கடையில் ஒரு ஸ்வீட்காரம் வாங்கினால் கூட இன்று சமானிய மக்கள் விற்பனை வரியோடு சேவை வரியையும் தர நிர்பந்திக்கப்பட்டுள்ளார். உண்மையில் இந்த சேவை வரி மக்களிடம் மிகக்கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக சேவை வரி மூலமாக தற்போது நமது அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 1,15,000கோடியை ஈட்டுகிறது.
இந்த சேவை வரியிலிருந்து நீதிமன்றம், வங்கி, லாட்டரி, சூதாட்டம், அரசியல்கட்சிகள், தொண்டு, மத அமைப்புகள் பெறும் நன்கொடைகள் போன்றவை விலக்களிக்கப்பட்டுள்ளன. இப்படி விலக்களிக்கப்பட்ட துறைகள் 38. சேவை வரியால் விலங்கிடப்பட்டுள்ள துறைகளோ119.

சேவை வரி என்பது தேவையற்றது. மக்களை கசக்கி பிழிவது, கறுப்புபணத்திற்கு வழிவகுப்பது என்பதெல்லாம் சத்தியமான உண்மாகளாகும்!

இந்த சேவை வரி இல்லாமலே அரசாங்கம் சிறப்பாக இயங்கலாம்.
இப்படியெல்லாம் வசூலித்து சுமார் 5 லட்சம் கோடிகளுக்கு மேல் இலவசதிட்டங்ளில் பணத்தை வகைதொகையின்றி வாரி இறைக்கிறது. மத்திய அரசு.

இந்த லட்சணத்தில் 'உங்கள் பணம் உங்கள் கையில்' என நேரடிமானிய திட்டம் வேறு அமலாக்கம்.

இதற்காக அடுத்த ஆண்டு இன்னும் சேவை வரி உயர்த்தப்படலாம்.

எங்கள் பணத்தை எங்கள் பையிலிருந்து பறித்துக்க கொண்டு 
'உங்கள் பணம் உங்கள் கையில்' என்று திருப்பித் தருவதாகவே தோன்றுகிறது.
மக்களிடமிருந்து நாட்டிற்கான சேவையைப் பெறுவதற்கான திட்டங்களை தீட்டட்டும் அரசு. மக்கள் தங்கள் நேரடி சேவையை நாட்டு முன்னேற்றத்திற்கு நல்குவார்கள்.

ஆனால் சேவை வரி என்பது தங்கள் பணத்தை இழப்பது போன்ற வலியைத் தான் சகலதரப்பு மக்களுக்கும் ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த சேவை வரியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்.

சேவை வரி அரசாங்கத்திற்கு பெருமளவு சென்று சேர்வதில்லை. இதில் மிகப்பெரிய வரி ஏய்ப்பு நடந்து கொண்டுள்ளது என வர்த்தகதுறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்!

சேவை வரி ஆண்டுக்காண்டு அதிகரிப்பதை தவிர்த்து அதை அறிமுகப்படுத்திய போது 5% த்தை நிலையாகக்கொள்ளலாம்.

அதே போல் சரியாக வரி வந்து சேரக்கூடிய குறிப்பிட்டதுறைகள் வரை அறிமுகப்படுத்தியதோடு நிறுத்தலாம்!

தேவை- மறுபரிசிலனை
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
7-1-2013

No comments: