Wednesday, January 2, 2013

கூட்டுறவுசங்கங்கள் - மானியங்கள்



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை சீராக்க ரூ 72 கோடியை மானியமாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

2011ம் ஆண்டு இதே போல் ரூ 82கோடியே 55லட்சம் மானியமாக தரப்பட்டது.
இந்த அரசு பதவி ஏற்றவுடன் விவசாயிகளுக்காக வட்டியில்லா பயிர் கடனாக ரூ 3,282 கோடி வழங்கப்பட்டது.
இப்படியான கடன்களும், மானியமும் தொடர்ந்து தேவைப்படக்கூடிய அமைப்புகளாக நமது கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன என்பது கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.

தமிழகத்தில் 10,442 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. வேளாண்மை, நெசவுத்தொழில்கள், பால், வீட்டுமனை, சர்க்கரை ஆலைகள் என பலதரப்பிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவையாவும் ஒரு காலத்தில் மிக லாபகரமாக இயங்கியவை. சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தியவை. ஆனால் இவை தற்போது நலிந்து கிடக்கின்றன. ஆண்டுக்காண்டு அரசின் மானியத்தை எதிர்பார்த்துக் காத்துகிடக்கின்றன. பல கூட்டுறவு வங்கிகள் ஊழியர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாமல் திணறுகின்றன.

இவையணைத்திற்கும் காரணம், கூட்டுறவுகள் எந்த லட்சியங்களுக்காக ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டதோ அதிலிருந்தது வெகுதூரம் விலகிச் சென்றதேயாகும்.

அரசாங்கத்தின் தயவுகளின்றி கூட்டுறவு பலத்தால் சுயசார்புடன், பொதுநலக் கண்ணோட்டத்துடன் செயல்பட்ட காலங்களில் கூட்டுறவு அமைப்புகள் தலைதோங்கின.

பிறகு கடந்த 45 ஆண்டுகளாக கூட்டுறவு அமைப்பில் அரசியல் தலையீடுகள் ஆரம்பித்ததில் இருந்து, அதன் கட்டமைப்பு குலைந்து உன்னத நோக்கங்கள் சிதறிப்போயின.

கூட்டுறவு சங்கதேர்தல் நடத்தப்படும் விதமே தில்லுமுல்லுகள், அராஜகங்கள் கொண்டதாக மாறிப்போனது. இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளில் பொறுப்பேற்றவர்கள் அதை பலப்படுத்த உழைக்காமல், பலஹீனப்படுத்தி தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டனர்.

கூட்டுறவு சங்கதேர்தல்கள் அரசில் மயப்பட்டும், அராஜகமயப்பட்டும் போன காரணத்தால், நமது தமிழக முதல்வர் கடந்த ஆட்சிகாலங்களில் கூட்டுறவு தேர்தல்களையே முற்றாகத் தவிர்த்து, தனி அலுவலர்களின் தலைமையில் கூட்டுறவு அமைப்புகளை நிர்வகிக்கச் செய்தார்.

கூட்டுறவு அமைப்புகள் பலஹீனமடைந்ததற்கு முக்கிய காரணம், தேர்தல் காலங்களில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நடைமுறையாகும். ஓட்டு அரசியலின் விளைவாக, 'விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகத் தானே போகிறது. நாம் ஏன் முறையாக கட்டி ஏமாறவேண்டும்' என்று விவசாயிகள் நினைக்கத் தொடங்கினார்கள்.

'திருப்பிச் செலுத்தவேண்டாத கடன்' என்ற அம்சம் பெறுபவர்களையும், தருகிற அதிகாரிகளையும் ஒரு சேர பொறுப்பற்றவர்களாக்கியது என்பதே கடந்த கால கசப்பான அனுபவங்கள் கற்றுதந்த பாடமாகும்!

இந்தச் சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துத் தான் மத்திய அரசாங்கம் கூட்டுறவு அமைப்புகள் அரசிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு சுயசார்புடன், தன்னாட்சி அதிகாரத்துடன், வெளிப்படையான ஜனநாயகத்துடன் செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் பிப்ரவரி 2012ல் 97வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்தது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவுசங்கதேர்தல்கள் கண்டிப்பாக நடத்தப்பட்டேயாக வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறியது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கதேர்தல்கள் நடத்தும் அறிவிப்பு வெளியானவுடன், ஆளும் கட்சியினர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களை புதிதாகச் சேர்க்கத் தொடங்கியது பிரச்சினையானது. இதனையடுத்து கூட்டுறவு தேர்தல்கள் நடத்துவதற்கென்றே தனி ஆணையம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது. இதனால் நவம்பரில் நடந்து முடிந்திருக்க வேண்டிய தேர்தல் தள்ளிப்போனது.

பிப்ரவரி 15க்குள் தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டாக வேண்டும். அப்படி நடந்தால் தான் நபார்டுவங்கி மற்றும் மத்திய அரசின் நிதி உதவிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கு கிடைக்கும். இந்த வகையில் ஒரு நேர்மையான, ஜனநாயகமான தேர்தல் நடந்தேறி, புதிய சட்டதிருத்தத்தின் படி கூட்டுறவு அமைப்புகள் பலப்படுமேயானால் அவை அடுத்த ஆண்டு அரசின் மானியத்தை எதிர்பார்க்காத நிலை தோன்றும் அதுவே கூட்டுறவு வெற்றிபெற்றதற்கான அத்தாட்சியாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
31-12-2012

No comments: